13 பிப்ரவரி 2014

மரியாட்டு

   

     அந்தப் பெண்ணின் வயது வெறும் பதினொன்றுதான். சின்னஞ்சிறு பெண். அப்பெண்ணை, ஒரு பாறையை ஒட்டி இழுத்து வந்தான் ஒரு பையன். அப்பெண்ணின் வலது கையைப் பிடித்து இழுத்து, பாறையின் மீது படுத்த வாக்கில் வைத்தான். இன்னொரு பையன் கத்தியை ஓங்கினான். அச்சின்னஞ்சிறு பெண் பயத்தில் கண்களை மூடிக் கொண்டாள். திடீரென்று மயான அமைதி. ஒரு நொடி அப்பெண், கண்களைத் திறந்தாள். அப்போதுதான் கத்தி அதிவேகமாக, அவள் கையை நோக்கி இறங்கியது.

     முதல் வெட்டு, வலது கையின் மணிக்கட்டுக்கு, கொஞ்சம் மேலே விழுந்தது. அந்த வெட்டு எலும்பைக் கடந்து போகவில்லை. எலும்பு வெளியே தெரிய, இரத்தம் பீரிட்டுக் கிளம்பியது.

     கத்தி மீண்டும் ஒருமுறை வேகமாய் இறங்கியது. இந்தத் தடவை கத்தி தனது வேலையை சரியாகச் செய்தது. அவளது வலது கை, பாறையின் மீதிருந்து மெதுவாக உருண்டு, தரையில் விழுந்தது. நரம்புகள் நீட்டிக் கொண்டிருந்த அந்தக் கை, சிறிது நேரம் துடித்து அடங்கியது.

     மீண்டும் அதே பையன், இடதுகையையும் அதே போல் பிடித்து இழுத்து பாறையின் மீது வைத்தான். நிச்சயமாக அந்தப் பையன் அவளை விட வயதில் குறைந்தவனாகத்தான் இருப்பான்.

     இப்பொழுது அந்தப் பெண்ணுக்குக் கதறவோ, கெஞ்சவோ சத்தியேயில்லை. அவளது இடதுகையில், வாட்ச் கட்டும் இடத்திற்கு சற்று மேலே, கத்தி வேகமாய் இறங்கியது. மூன்று முறை வெட்டியதும், இடது கையும் தனியே மண்ணில் விழந்தது.

     அப்பெண்ணால் வலியை அப்பொழுது உணரமுடியவில்லை. கால்கள் துவண்டன. வெட்டிய கத்தியைத் தன் உடையின் மீது, தேய்த்துத் துடைத்தபடியே, அந்தப் பையன் நடந்து போவதைப் பார்த்தாள்.

     நீ வளரும்போது உனக்கு விரல்கள் இருக்கக் கூடாது. கைகள் இருக்கக் கூடாது. ஏனென்றால் நீ எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்துக்கு ஓட்டுப் போடக் கூடாது. உன்னைப் போன்றவர்களை நாங்கள் கொல்ல மாட்டோம். கைகளைத்தான் வெட்டுவோம். அப்பொழுதுதான், நாட்டை ஆளுகின்ற அராஜக அதிபருக்கு, நீ ஓட்டுப் போட முடியாது என்று ஒருவன் கத்தியது, அப்பெண்ணின் காதில் விழுந்தது.

     அப்பெண்ணின் நினைவு நழுவத் தொடங்கிய, அந்நொடியில், அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
அதிபர் என்றால் என்ன? ஓட்டு, ஓட்டு என்கிறார்களே, ஓட்டு என்றால் என்ன?

     

    நண்பர்களே, இது கதையல்ல. மனதைப் பதறச் செய்யும் நிஜம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வும் அல்ல இது. சமீபத்தில், மிகச் சமீபத்தில்...

     நண்பர்களே, அந்தப் பெண்ணின் பெயர் மரியாட்டு கமாரா. ஆப்பிரிக்காவின் மேற்குக் கரையோரம் இருக்கும், சியாரா லியோனி நாட்டைச் சேர்ந்தவள். சியாரா லியோனி நாட்டின், மிகச்சிறிய கிராமங்களில் ஒன்றான மேக்பரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவள்தான் இந்த மரியாட்டு.

     1991 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டுவரை, கொடூரமான உள்நாட்டு யுத்தத்தில் சிக்கிய தேசம்தான் சியாரா லியோனி. ரெவல்யூசனரி யுனைடெட் ஃப்ரண்ட் (Revolutionary United Front) என்னும் ஆயுதமேந்திய புரட்சி இயக்கம், கிராமம் கிராமமாகப் புகுந்து, அப்பாவி மக்களின் வீடுகளைச் சூறையாடியது.

     வயது பாராமல் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டனர். பல ஆயிரக் கணக்கானப் பெண்களும், குழந்தைகளும் கொன்று குவிக்கப் பட்டனர். ஏராளமான குழந்தைகளின் கைகள் வெட்டி வீசப்பட்டன.

     சமூகம், குடும்பம், பெண்கள் மீது பெரு மதிப்பு எனப் போற்றிய பாரம்பரிய  கலாச்சாரம் கொண்ட இந்நாடு, அடியோடு மாறிப் போய்விட்டது. காரணம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம்.

     மரியாட்டுவிற்கு நினைவு திரும்பியபோது, அங்கு யாரும் இல்லை. வெட்டப் பட்ட கைகளைத் தரையில் ஊன்றி எழ இயலவில்லை. வலி உயிர் போய்விடும் போலிருந்தது. மெதுவாக அப்படியும், இப்படியுமாக உருண்டு, முதலில் முழங்காலிட்டு அமர்ந்தாள். அதன்பின் ஒரே மூச்சாக எம்பி எழுந்தாள்.

நான் உயிரோடிருக்கிறேன்.... இனியும் உயிரோடு வாழ்வேன்
மனதிற்குள்ளாகத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே ஓடத் தொடங்கினாள்.

     வழியில் சிறு சிறு கிராமங்கள். பயந்து, பயந்து, ஒளிந்து, ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த அக் கிராம மக்கள் மரியாட்டுவிற்கு உணவு வழங்கி, கைகளுக்குக் கட்டுப் போட்டு விட்டனர். தொடர்ந்து நடந்தாள். போர்ட் லோகோ என்னும் சிற்றூரை அடைந்தாள்.

     போர்ட் லோகோவின் அரசு மருத்துவ மனையில், மரியாட்டுவின், வெட்டுக் காயத்தைக் கவனித்த செவிலியர்,  உன் காயத்துக்கு முழு சிகிச்சை அளிப்பதாற்கான வசதி இங்கே இல்லை. நம் நாட்டின் தலைநகரான,  ஃப்ரி டவுனுக்கு, இன்னும் சிறிது நேரத்தில், ஒரு ராணுவ வண்டி கிளம்புகிறது. உன்னைப் போன்ற இன்னும் பல நோயாளிகளையும், அழைத்துக் கொண்டு போய், அங்குள்ள கனாட் மருத்துவ மனையில் சேர்க்க இருக்கிறார்கள், நீயும் அவர்களுடன் போ என்றார்.

     கனாட் மருத்துவமனையில் மரியாட்டுவிற்குச் சிகிச்சை அளிக்கப் பட்டது. கைகள் வெட்டப் பட்ட நூற்றுக் கணக்கானவர்கள் அங்கிருந்தனர். மரியாட்டு சிந்தித்தாள், என்னைப் போன்ற அதே தலைவிதியைச் சந்தித்தப் பலரும், தளர்ந்து விடாமல் வாழ முயன்று கொண்டிருக்கிறார்கள். நானும் வாழ்வேன், வாழ்ந்து காட்டுவோன்.

     கைகளே இல்லாமல் குளிக்கவும், சாப்பிடவும், உடை மாற்றிக் கொள்ளவும் பழகிக் கொண்டாள். கை முனையில் போடப்பட்டிருந்த கட்டின் இடையே, டூத் பிரஷ்ஷைச் சொருகிப் பல் விளக்கவும், சீப்பைச் சொருகி தலை வாரவும் கற்றுக் கொண்டாள்.

       நண்பர்களே, மருத்துவ மனையில் இருந்தபோது, மரியாட்டுவைப் பரிசோதித்த மருத்துவர், ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். மரியாட்டு நீ கர்ப்பமாக இருக்கிறாய்.

      வியப்பாக இருந்தது மரியாட்டுவிற்கு. எனக்கு ஒரு குழந்தை வரப்போகிறதா. குழந்தை என்பது பெண்களின் தொப்புள் ஓட்டையிலிருந்துதான் வெளி வரும் என்று எனக்குச் சொல்லியிருந்தார்களே. பிள்ளை உண்டானவளின் வயிறு, வாத்து மாதிரி வீங்கிக் கொண்டே போவதையும், திடீரென்று ஒரு நாள்  வலியில் துடிக்கும் பெண்கள், வைத்தியக்காரியின் குடிசைக்குள் ஓடுவதையும் பார்த்திருக்கிறேனே. மறுநாள் வயிறு சிறுத்துப் போய், கையில் குழந்தையுடன், குடிசையில் இருந்து வெளிவருவதையும் பார்த்திருக்கிறேனே.

     ஆண் பெண் என்றால் என்ன? உறவு என்பது என்ன? என்பதைதெல்லாம் மரியாட்டு சிறிது புரிந்திருந்தாள். இருப்பினும் தன் வயிற்றுக்குள் எப்படி குழந்தை உருவானது என்பதுதான் புரியவில்லை.

     நண்பர்களே, வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்த மரியாட்டுவிற்கு, மேக்பரூ கிராமத்தில் இருந்து, தப்பியோடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் நடந்த சம்பவம் நினைவில் வந்தது.

     வீட்டில் யாருமில்லாத சமயத்தில், வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர், வயதானவர், தனது அருகில் படுத்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தது நினைவிற்கு வந்தது. அவர்தான் குழந்தையைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் என்பது புரிந்தது.

     நண்பர்களே, ஒரு குழந்தைக்குக் குழந்தை பிறக்கப் போகிறது. அதுவும் தொட்டுத் தூக்கக், கைகளே இல்லாத மரியாட்டுவிற்குக் குழந்தை பிறக்கப் போகிறது. என்ன உலகம் இது.

     சிகிச்சை முடிந்து, மருத்துவ மனையில் இருந்து வெளியேறிய மரியாட்டு, அபெர்தீன் எனப்படும் அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்தாள்.

     முகாமிற்குப் போனபிறகுதான் தெரிந்தது, அது எத்தனை மோசமன இடம் என்பது புரிந்தது. எச்சிலும், அழுக்கும் எல்லாப் பக்கமும் நாறிக் கொண்டிருந்தது.

     அபெர்தீன் அகதிகள் முகாமில், மாரியாட்டுபோல், கைகள் வெட்டப் பட்ட நானூறு பேர் இருந்தனர். சரியான உணவு கிடையாது. உடை கிடையாது.

      நண்பர்களே, முகாமில் சேர்ந்த மரியாட்டு மற்றவர்களுடன் சேர்ந்து, உணவிற்காகவும், உடைக்காகவும் என்ன செய்தாள் தெரியுமா? பிச்சை எடுத்தார். பல காலம், தெருவோரங்களில் நின்று பிச்சை எடுத்துத்தான், வயிற்றை நிரப்பினாள்.

     
குழந்தையுடன் மரியாட்டு
அபெர்தின் அகதிகள் முகாமில் இருந்தபோது, மரியாட்டுவிற்குக் குழந்தையும் பிறந்தது. ஆண் குழந்தை. அப்துல் என பெயரிட்டாள். குழந்தையை மடியில் வைத்துக் கொண்டே பிச்சை எடுத்தாள். ஒரு வருடத்திற்குள் குழந்தையும், வயிறு வீங்கி, ஊட்டச் சத்துக் குறைபாட்டால் இறந்து போனது.

     நண்பர்களே, ஒரு நாள் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் இம்முகாமிற்கு வந்தனர். மரியாட்டு அவர்கள் முன் நின்றுப் பேசத் தொடங்கினாள், என் பெயர் மரியாட்டு....

        பேசப் பேச, இறுகிப் போயிருந்த மரியாட்டுவின் நினைவுகள், அருவியாய் கொட்டத் தொடங்கின. கிட்டத் தட்ட பத்து மணி நேரம், புரட்சிக் காரர்களிட்ம் பிணைக் கைதியாய் சிக்கியிருந்தது, கேலியும் கிண்டலுமாய் துண்டிக்கப் பட்ட கைகள், ரத்தம் கசியக் கசிய, காடும் மேடும் ஓடிக்கொண்டேயிருந்தது என மூச்சு விடாமல் பேசினார்.

     அடுத்த சில நாட்களில் பத்திரிக்கைகளில் மரியாட்டுவின் படத்துடன் செய்தியும் வெளியானது.

      நண்பர்களே, மரியாட்டுவின் நல்ல நேரம் தொடங்கியது. மரியாட்டு பற்றிய செய்திகளை அறிந்த கனடா தம்பதியினர், மரியாட்டுவைத் தத்து எடுத்துக் கொண்டனர். கனடாவிற்கும் அழைத்துக் கொண்டனர்.

      நண்பர்களே, மரியாட்டு கனடாவில் பள்ளிக்குச் சென்றார். பாடம் படித்தார். தற்பொழுது கனடாவின், டொரண்டோவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

     உலகெங்கும் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ள யுனிசெஃப் அமைப்பு, மரியாட்டுவைத் தனது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்தது. உலகெங்கும் உள்ள நாடுகளில், போரினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் மரியாட்டுவின் இன்றைய முக்கியப் பணி.


    

நண்பர்களே, மரியாட்டுவிடும் எதிர்காலத் திட்டம் ஒன்று உள்ளது. தானே ஒரு அறக்கட்டளையைத் துவக்கி நிதி திரட்டுவது. அதன் மூலம், தன்னைப் போலவே, சியாரா லியோனி நாட்டில், பாதிக்கப் பட்ட அபலைப் பெண்களுக்கும், அனாதைகளாகிவிட்ட குழந்தைகளுக்கும் மறு வாழ்வு வழங்குவது.

     நண்பர்கேளே, மரியாட்டுவின் எண்ணம் பெரியது. முயற்சி பெரியது. செயலும் பெரியது. பெரியது மட்டுமல்ல நண்பர்களே, உன்னதமானது, புனிதமானது.

மரியாட்டுவின் எண்ணம் ஈடேற வாழ்த்துவோமா நண்பர்களே.

மரியாட்டு பற்றி மேலும் விவரங்களை அறிந்து கொள்ள


www.mariatufoundation.com

83 கருத்துகள்:

  1. மரியாட்டு
    திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அருமையான பதிவு.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உடனடி வருகைக்கும் வாழ்த்திற்கும், பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  2. தனக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு துவண்டு விட்டால், மன உறுதியுடன் படித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு சேவை செய்யும் சிறப்பான எண்ணங்களுக்கு அவருக்கு பாராட்டுக்கள் பல...

    மரியாட்டு அவர்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மரியாட்டுவின் தன்னம்பிக்கையும் உயர்ந்த எண்ணமும் பல வெற்றிகளை தர வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  4. புராணங்களில் வலம் வந்த அரக்கர்களும்
    ராட்சதர்கள் கடவுளால் அழிக்கப்பட்டார்கள்
    என்று கதைகளில் படிக்கிறோம்

    இன்றும் பலர் கதை
    விட்டுக் கொண்டிருகிறார்கள்.

    ஆனால் அவர்களின் வாரிசுகள் அப்பாவிகளை
    கொடுமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்
    என்பதற்கு இது போன்ற சம்பவங்களே சாட்சி

    அபலைகளை எந்த மத வெறியர்களும்
    காப்பாற்றுவதில்லை

    .மதங்களை கடந்து மனித நேயம் கொண்ட
    ஒரு சில மனிதர்கள்தான் காப்பாற்றுகிறார்கள்

    அதனால்தான் கடவுள் மனித வடிவத்தில்
    வருவான் என்று சொல்லி வைத்தார்கள் போலும். !

    இந்த உலகம் உள்ள வரை தீயவர்களும் இருப்பார்கள்

    மரியாட்டு,மலாலா போன்ற
    வீராங்கனைகளும் வலம் வருவார்கள்.

    தீயவர்கள் இழைத்த கொடுமைகளைக் களைய
    மரியாட்டுவின் எண்ணம் ஈடேற சக மனிதர்கள்
    துணை புரியட்டும். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தீயவர்கள் இழைத்த கொடுமைகளைக் களைய
      மரியாட்டுவின் எண்ணம் ஈடேற சக மனிதர்கள்
      துணை புரியட்டும். வாழ்த்துக்கள்.///
      தங்களின் வாழ்த்து பலிக்கட்டும் ஐயா
      நன்றி

      நீக்கு
  5. மரியாட்டு வேதனைகளை சாதனைகளுக்கான படிகளாக்கி கொண்டவள்..
    உங்கள் பதிவில் வந்தது மகிழ்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாட்டு வேதனைகளைச் சாதனைகளாக்கியவர்தான்.
      நன்றி நண்பரே

      நீக்கு
  6. மனதை அல்ல, மனச் சாட்சியை உலுக்க வல்ல பதிவு இது.

    கரந்தை ஜெயகுமார் அவர்களை என்ன பாராட்டினாலும் தகும்.

    subbu thatha
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
  7. the link
    mariattafoundation.com
    is not available.
    please check up

    subbu thatha
    www.wallposterwallposter.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் கீழுள்ள வலைதள முகவரியை செலக்ட் செய்து , சர்ச் கொடுங்கள் ஐயா

      நீக்கு
  8. இன்னொரு மலாலா என்றும் பாராட்டலாம் !
    த ம் 3

    பதிலளிநீக்கு
  9. மரியாட்டுவின் உயர்ந்த எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் .நல்ல எண்ணங்கள் கண்டிப்பாக ஈடேறும்.

    நல்லதொரு பதிவு பாராட்டுக்கள் சார்

    பதிலளிநீக்கு
  10. மனதைப் பதறச் செய்யும் நிஜம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வும் அல்ல இது. சமீபத்தில், மிகச் சமீபத்தில்...

    மனம் கனக்க வைக்க்கும் பகிர்வுகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே மனம் கனத்துத்தான் போனது
      வருகைக்கு நன்றி சகோதரியாரே

      நீக்கு
  11. மரியாட்டு மாதிரி கையுமின்றி, காலுமின்றி நானூறு பேர் அதே முகாமில் இருந்தார்களே, இன்னும் எவ்வளவு பேர் அந்நாட்டில் இப்படித் துயரப்படுகிறார்களோ? உலகின் மனச்சாட்சியை உலுக்கும் நிகழ்வு இது. பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா13 பிப்ரவரி, 2014

    மரியாட்டுவின் எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.
    உயிரை உருக்கும் உலகத்துப் பல கதைகள்.
    தெரிந்தவை சில தெரியாதவை பல
    காமமும், அதிகாரமும் படுத்தும் பாடு.
    பதிவிற்கு மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  13. மனம் கனத்து விட்அது நண்பரே! இது போல எத்தனைப் பெண்களோ?!!!! மனிதர்கள் மிருகம்....மன்னிக்கவும்..... மிருகங்கள் கூட மனிதர்களை விட மேலானவை! மரியாட்டுவின் எண்ணங்கள் ஈடேற வாழ்த்துவோம்!

    தாங்கள் இது போல எங்கிருந்தெல்லாமோ பல புதிய தகவல்களை தோண்டி எடுத்துப்பகிர்வதற்கு மிக்க மிக்க நன்றி! வாழ்த்டுக்கள்! பாராட்டாமல் முடிக்க முடியய்வில்ல! நண்பர்! தொடருங்கள்!

    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிருகங்கள் மனிதர்களைவிட மிகமிக மேலானவை.
      எங்காவது ஒரு சிங்கம், மற்றொரு சிங்கத்தை அடித்துச் சாப்பிட்டதாக கேள்விப்பட்டிருக்கிறோமா?
      மனிதன் மட்டும்தான் தன் இனத்தைத் தானே அழிக்கின்றான்
      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  14. மிக அற்புதமான பதிவு.மரியாட்டு இவ்வுலகின் விடி வெள்ளி,வீரமங்கை.போராளி,கொள்கைவாதி,எதிர்கால எதிர்மறையாளர்களின் என்னத்தை வீழ்த்தும் எழுச்சி மங்கை .மரியாட்டு வாழ்க பல்லாண்டு. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாட்டு பல்லாண்டு நிம்மதியாக வாழட்டும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  15. மனதைப் பிசைகிறது. அவரின் நம்பிக்கைக் கண்களைக் கலங்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்கின்ற நமக்கே இவ்வாறு இவ்வாறு இருக்கின்றதே நண்பரே,
      வாழ்ந்து பார்த்த அவருக்கு எப்படியிருக்கும்.
      இனியாகிலும் நிம்மதியாய் வாழட்டும்

      நீக்கு
  16. பதிவைப் படித்து முடித்து
    வெகு நேரம் ஆகியும் அதிர்ச்சியில்
    இருந்து மீளமுடியவில்லை
    அவரது தன்னம்பிக்கை நமக்கெல்லாம்
    நிச்சயம் ஒரு வழிகாட்டி,பாடம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா
      மரியாட்டுவின் தன்னம்பிக்கை நமக்கெல்லாம்
      ஒரு பாடம்தான்

      நீக்கு
    2. மரியாட்டுவின எண்ணங்களை மரிக்காமல்
      காப்பாற்றுவோம்.

      நீக்கு
  17. ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் மக்கள் பல சொல்லென்னாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். சிரியாவில் நடந்த விஷ வாயு கொடூரம், மாலலாவின் ஆருபட்ட மூக்கு என்று வரலாற்றின் பக்கங்களில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

    கண்மூடித் தனமான தாக்குதலில் காயம்பட்ட மரியாட்டே கடைசி குழந்தையாக இருக்கவேண்டும்.
    பகிர்வுக்கு நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாட்டு பாதிக்கப்பட்ட கடைசியாளாக இருக்கவேண்டும் என்ற தங்களின் எண்ணம் பலிக்கட்டும் ஐயா
      வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  18. இதுவரை இவ்வளவு விவரமாக இவரைப் பற்றி நான் அறியவில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே
      மிகவும் அதிர்ச்சி அளிக்கின்ற
      நிகழ்வுதான்.
      மனிதர்கள் விலங்கினும் கீழாய்
      மாறுவதால் வந்த வினை.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
      சகோதரியாரே

      நீக்கு
  20. பல புரட்சியாளர்கள் இப்படித்தான் தங்கள் சொந்த மக்களையே அழித்து அழிந்து போயிருக்கிறார்கள். பதிவைப் படிக்கும்போதே நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  21. கச்சிதமான பதிவு!
    கண்ணீர் வரவழைப்பவள் கமிரா !
    விகடன் கொண்டாடியதல்லவா அவரது சுயசரிதையை!
    என்றாலும் நண்பர்களே! நண்பர்களே என நீங்கள் விவரிக்கும் அழகே தனிதான் அண்ணா !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணீர் கதைக்குச் சொந்தக்காரிதான் மரியாட்டு,
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  22. துன்பங்களில் துவண்டு விடாமல் எழுந்து நின்று இன்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழும் மரியாட்டுவின் உறுதி பாராட்டத்தக்கது! சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாட்டு பாராட்டப்பட வேண்டியவர்.
      வருகைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  23. அன்புள்ள ஜெயக்குமார்.

    விழுவது வேகமாக எழுவதற்கே என்பதற்கான விவேகானந்தர் கருத்திற்கு இவ்வளவு வேதனையும் ரத்தமுமான சான்றைக் கண்டதில்லை. மரியாட்டுக்காக மரியாதை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாட்டு மரியாதைக்கு உரியவர்தான் ஐயா
      போற்றுவோம்
      வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  24. வணக்கம் சார். நானும் இந்த புத்தகத்தை படித்துள்ளேன்.நீண்ட நாட்கள் மறக்க முடியாது என்னை பாதித்தவர் .மரியாட்டு .மனதை கனக்கச் செய்யும் அவரின் வாழ்வு .நல்ல பகிர்வு.நன்றி சார் .

    பதிலளிநீக்கு
  25. என் இனிய ஜெயக்குமார் அவர்களுக்கு, மரியாட்டு என்பவர் உண்மையிலேயே சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய ஒரு இரும்பு பெண்மணி என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர் பட்ட வேதனைகளை, துன்பங்களை நாம் கற்பனை செய்து பார்த்தாலே நமது உடல் நடுங்குகிறது, மனம் பதறுகிறது. புரட்சிப்படை என்ற பெயரில் ஒரு காட்டுமிராண்டிகள் கூட்டம் நடத்திக்கொண்டிருக்கின்ற ஒரு கொடூரமான வன்முறையை கண்டிக்க திராணியற்ற நாடுகள் வல்லரசு என்று கூறுவது வெட்கக்கேடு. மீண்டும் தங்களின் பதிவு ஒரு உச்சத்தை தொட்டுள்ளது. பாராட்டுக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர் பணிகளுக்க இடையிலும்
      நேரம் ஒதுக்கி பதிவினைப்
      படிப்பதும், கருத்திடுவதும்
      மிக்க மகிழ்வினை அளிக்கின்றன நண்பரே
      நன்றி

      நீக்கு
  26. உண்மையிலேயே உணர்ந்து ,பகிர்ந்து கொள்ளப்படவேண்டிய செய்தி...

    பதிலளிநீக்கு
  27. முக்கியமான பதிவு இது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  28. உலகில் கொடூரங்கள் நிகழும் அதே நேரத்தில் மனதில் ஈரமுள்ளவர்களும் இருக்கிறார்கள். ஒரு விழிப்புணர்ச்சிப் பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Varumain niram Sivappu enbathu Kadai Alla NIjan. Sandarpam matrum sooznilai oru manitharai eppadiyellam yosikka vaikum enbadarku Mariyatu or Udaranam.

      Mariyattu Amaidikana Nobal Parisu Pera Thakudiyanavar


      Mikka nandri Thru Karandai Jeyakumar

      நீக்கு
    2. ஈரமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
      நன்றி ஐயா

      நீக்கு
    3. ஆம் ஐயா தாங்கள் சொல்வது சரிதான்.
      நோபல் பரிசுக்கு முற்றிலும் தகுதியானவர்தான் மரியாட்டு,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  29. இது கதையல்ல உண்மை சம்பவம்! நெஞ்சம் இரணமானது! நாட்டில் இன்னும் எத்தனை மரியாக்களோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா கண்ணுக்குத் தெரியாமல் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ.
      வருகைக்கு நன்றி ஐயா

      நீக்கு
  30. தப்பிப் பிழைத்தது ஒரே ஒரு மாரியாட்டு ஒரு மந்தையை சுதந்திரத்திற்காக முகாம்களில் அடைப்பட்டு கிடக்கிறது.

    அங்குள்ள புரட்சி சக மனுஷியின் கையைதான் வெட்டும்.

    சகலரும் மனிதர்கள் என எண்ணும் புரட்சி எப்போது தொடங்கும்

    பதிலளிநீக்கு
  31. அய்யா, நண்பர்களே நண்பர்களே என்று நெருங்க அழைத்து, நீங்கள் சொன்ன செய்தி உயிரை உருக்கிவிட்டது. அதுவும் “ஒரு குழந்தைக்குக் குழந்தை பிறந்த கொடுமை, தொட்டுத் தூக்கக், கைகளே இல்லாத மரியாட்டுவிற்குக் குழந்தை என்ன உலகம் இது” என்னும் உங்கள் நடை மிகுந்த உணர்வுடன் இருந்தது. மிகக் கேவலமான உலகம்தான் அய்யா. வரவர உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வரலாற்றுப் பதிவுகளாக ஒளிர்கின்றன. மனசை ஒரு முன்தயாரிப்பில் வைத்துக்கொண்டுதான் உங்கள் வலைப்பக்கம் வரவேண்டும் போல... அரிய பதிவுக்கு நன்றியும் பாராட்டுகளும் அய்யா. வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பக்கம் விஞ்ஞான வளர்ச்சி
      மறுபக்கம் காட்டுமிரான்டித் தனங்களின் அதீத வளர்ச்சி.
      உலகம் எதை நோக்கிப் பயணிக்கின்றது என்பதே புரியவில்லை ஐயா.
      வருகைக்கும் வாழ்த்திற்கம் நன்றி ஐயா

      நீக்கு
  32. மனதை கலங்க வைத்த பதிவு! மரியாட்டுவின் கனவுகள் ஈடேற இறைவன் அருள் புரிய வேண்டுகிறோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரியாட்டுவின் கனவுகள் நிச்சயம் ஈடேறும் நண்பரே

      நீக்கு
  33. வாசிக்க வாசிக்க உள்ளமேல்லாம் கதறியது. எவ்வாறான அரக்கர்கள் மனித போர்வையில் வாழ்கின்றார்கள். மரியாட்டாவின் தைரியம் அவரை இவ்வாறு உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது. இயக்கம் என்ற பெயரிலே உயிர்களை வதைத்தவர்கள் தான் அதிகம். அதற்காக வால் பிடிப்பவர்கள் இன்னும் இருந்து கொண்டுத்தான் இருக்கின்றார்கள்

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா15 பிப்ரவரி, 2014

    வணக்கம்
    ஐயா.

    படித்த போது கண்களில் கண்ணீர் வந்தது.... மரியாட் பாட்ட துன்பம் அவள் தன் வாழ்கையில் எப்படிப்பட்ட துன்பத்தை சுமந்தால் என்பதை பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    மரியாட்டாவின் சிந்தனை வளரட்டும்.... என்றென்றும் இறைவன் துணையிருப்பான்....
    சிறப்பாக எழுதியுள்ளிர்கள் படிக்க படிக்க திகட்ட வில்லை... வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே, மனிதர் என்ற போர்வையில் வாழும் அரக்கர்களால் அழிவினைத்தானே தர முடிவும்

      நீக்கு
    2. நன்றி நண்பரே
      மரியாட்டுவின் எதிர்காலமாவது ஒளிமயமானதாக அமையட்டும்

      நீக்கு
  35. மரியாட் பட்ட துன்பம் இனி யாரும் படக்கூடாது.

    எத்தகைய கொடுமையான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!?..

    யாதொரு பாவமும் அறியாத மக்களைச் சிதைத்து வதைக்கும் கொடியவர்கள் - இதனால் அடைந்த பயன் தான் என்ன?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பெயர் மரியாட்டு என்றொரு புத்தகம் (விகடன் பிரசுர வெளியீடு) பார்த்தேன்,அதுதான் இதுவா.மிகவும் நெகிழ வைக்கிற கட்டுரையாக/முழுவதுமாய் படிக்கமுடியவில்லை.உலகம் முழுவதுமாய் இருக்கிற மரியாட்டுகளுக்கு இவர் விடிவெள்ளியாக இருப்பார் நிச்சயம்/

      நீக்கு
    2. மக்களை வதைத்தார்கள் என்பதைவிட வேறு என்ன பயனைக் கண்டுவிடப் போகிறார்கள் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
    3. ஆம் நண்பரே தாங்கள் சொல்வது சரிதான். முதலில் ஆஙகிலத்தில் The Bite of the Mango என்று வந்தது. அதன் தமிழாக்கம்தான் தான் தாங்கள் குறிப்பிடும் புத்தகம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  36. மரியாவின் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை நெஞ்சு பதறுகிறது. ஆனாலும்
    அவருடைய தைரியமும் தன்னம்பிக்கையும் கண்டு ஆச்சரியமாகவுமே உள்ளது.
    நிச்சயம் எல்லோரும் அவரை எல்லோரும் வாழ்த்திடவே வேண்டும்.
    இதை நம் மத்தியில் எடுத்து வந்த தங்களுக்கும் பாராட்டுக்களும் நன்றியும் உரித்தாகட்டும்.!
    வாழ்க வளமுடன்....! இனி தொடர்கிறேன்....!

    பதிலளிநீக்கு
  37. என்னுடைய வலைப் பதிவிலும்
    இந்த சம்பவத்தை கீழ்கண்ட தலைப்பில் வெளியிட்டுள்ளேன். படிக்கவும்

    "கைகள் போனால் என்ன ?
    உடலில் இன்னும் உயிர் இருக்கிறதே !
    உள்ளத்தில் உறுதி இருக்கிறதே!"

    இணைப்பு.


    http://kankaatchi.blogspot.in/2014/02/blog-post_13.html

    பதிலளிநீக்கு
  38. உணர்ச்சி மிகு கவிதை ஐயா
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  39. அன்பின் ஜெயக்குமார் - மனம்வலிக்கிறது - இது போன்ற நிகழ்வுகள் நடக்க விடக் கூடாது - அரசினை எதிர்த்து நடக்கும் வன்முறையில் ஒன்றுமறியா பொது மக்கள் பலிகாடாவதை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டாமா ? - ம்ம்ம்ம்ம்ம்ம் - என்ன செய்வது - காலம்மாறும் - பொறுத்திருக்க வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
  40. படிக்கும்போது இதயமே கனத்தது.
    தொடர்ந்து வெளியிடுங்கள்

    பதிலளிநீக்கு
  41. சமூகத்தில் நடந்த கொடுமையை தமிழுக்கு தெரிவித்ததற்கு நன்றி பல.
    தொடரட்டும் உங்கள் சேவை மனப்பான்மை.
    மனித நேயம் தழைக்க இறையருள் புரியட்டும்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  42. எத்தனை கொடுமைகள் ஒரு பெண்ணிற்கு இழைத்திருக்கிறது அந்த சமூகமும் அதில் இருக்கும் கொடுங்கோலர்களும்.....

    படிக்கும்போதே நெஞ்சு பதறுகிறது.....

    பதிலளிநீக்கு
  43. இந்த உண்மைச் சம்பவத்தைப் படிக்க படிக்க கண்கள் கசிந்தன
    மனதில் ஒரு துணிவு பிறந்தது .எத்தனை வல்லமை நிறைந்த
    பெண் !! இவளைப் பார்க்கும் போது ஒவ்வொரு சாதனையாளர்களின்
    வெற்றிக்குப் பின்னும் இன்னார் இருக்கின்றார் என்று சொல்வதை விட
    மனத்துணிவும் தன்னம்பிக்கையும் தான் இருக்கின்றது என்று சொல்லத்
    தோன்றுகிறது .இவளை வாழ்த்துவது என்ன இவளையும் இவளைப்
    போன்று முன்னேறியவர்களையும் போற்றிப் பாடலாம் சகோதரா !
    சிறப்பான பகிர்வின் மூலம் இச் சம்பவத்தை நாமும் அறியும் வண்ணம்
    தந்த தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றி கலந்த வாழ்த்துக்களும் அருமைச் சகோதரரே .

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு