17 ஏப்ரல் 2014

இமயத்தை அளந்தவர்



ஆண்டு 1865. திபெத் நாட்டின் எல்லை. வியாபாரிகள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு, திபெத்தின் எல்லையைக் கடக்கிறார்கள். வியாபாரிகளுக்கு நடுவில் ஒரு யாத்ரிகரும் செல்கிறார். யாத்ரிகர் என்றால் அவர் ஒரு லாமா (Lama). திபெத்தியத் துறவி.

       அன்று இரவு, வியாபாரிகளுடனேயே தங்குகிறார். விடிந்து கண் விழித்துப் பார்த்தபொழுது, வியாபாரிகளையும் காணவில்லை. வழிச் செலவிற்காகக் கொண்டு வந்த பணத்தையும் காணவில்லை. சுமந்து வந்த பெட்டி மட்டும் மூலையில் பத்திரமாய் இருந்தது.


      பணம் போனால் என்ன? கால்கள்தான் இருக்கின்றனவே. நடக்கத் தொடங்கினார். பசித்த பொழுது, யாசகம் கேட்டார். பிறர் கொடுப்பதை உண்டு பயணத்தைத் தொடர்ந்தார். அவர் வேகமாகவும் நடக்கவில்லை, மெதுவாகவும் நடக்க வில்லை. ஒரே சீரான நடை. கையில் ஜெப மாலை. விரல்களால் ஜெபமாலையை அவ்வப்பொழுது உருட்டிக் கொண்டே நடக்கிறார்.

     நண்பர்களே, வாருங்கள் இம் மனிதரை சற்று உற்றுப் பார்ப்போமா?. ஏதோ சில வித்தியாசங்கள் தெரிகிறதல்லவா? ஆம் பார்ப்பதற்கு திபெத்தியத் துறவி லாமா போலத்தான் தெரிகிறார். ஆனால் கையில் வைத்திருக்கிறாரே, ஜெபமாலை, அதில் 108 மணிகள் அல்லவா இருக்க வேண்டும். 100 மணிகள்தானே இருக்கின்றன.



  இந்த யாத்ரீகர் வைத்திருக்கும் தேநீர் கிண்ணத்தைப் பாருங்கள் தேநீர் கிண்ணத்தின் கீழே, ஒரு பொய்யான அடிமட்டம் இருக்கிறதல்லவா. கிண்ணத்திற்குள் ஒரு கிண்ணம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறதே. உள் கிண்ணத்தில் ஏதே ததும்பிக் கொண்டிருக்கிறதே, அது என்ன தெரிகிறதா? பாதரசம். வியப்பாக இருக்கிறதல்லவா? இவரின் ஊன்று கோலைப் பாருங்கள். கைத் தடியில் வெப்ப மாணியை (Thermo Meter) அல்லவா மறைத்து வைத்திருக்கிறார். உண்மையில் இந்தத் துறவி யார்?

    
ஆங்கிலேயர்கள், இந்தியாவில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர், 1767 இல் தோற்றுவித்த அமைப்புதான் சர்வே ஆஃப் இந்தியா (Survey of India). இவ்வமைப்பின் மூலம் இந்திய வரைபடத்தினை துல்லியமாக வரைய ஆங்கிலேயர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

      ஆனால் இமய மலைப் பகுதிகளில் ஆங்கிலேயர்களின் முயற்சி பலிக்க வில்லை. காரணம் சீனப் பேரரசர். வெளிநாட்டவருக்கு திபெத்தின் எல்லையை மூட உத்தரவிட்டிருந்தார். மீறி நுழைபர்களுக்கு மரண தண்டனை காத்திருந்தது.

     தாமஸ் ஜி.மாண்கோமெரி என்பவர்தான், ஒரு புது வழியை, அற்புதமான வழியை ஆங்கிலேயர்களுக்குக் கூறினார். திபெத்திய முக அமைப்புடன் கூடிய, படித்த, மலைகளைப் பற்றிய அறிவு வாய்ந்த, அதே சமயத்தில், மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்ற சம்மதிக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பது. அவர்களுக்குப் போதிய பயிற்சி அளித்து, இமயத்தைக் கணக்கிடுவது. இதுதான் அவருடைய திட்டம்.

நயின் சிங்
இமயத்தை அளவிடும் இமாலயப் பணிக்காக, மாண்கோமெரி இரு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்தார். இதில் ஒருவர்தான் தொடக்கத்தில் நாம் சந்தித்தவர். பெயர் நயின் சிங் ராவத். மற்றொருவர் மணி சிங்.

     நயின் சிங் ராவத், மேல் இமயத்தில் உள்ள மிலம் என்ற கிராமத்தின் பள்ளி ஆசிரியர். மணி சிங் இவரது ஒன்று விட்ட சகோதரர்.

     மாண்கோமெரி இந்த இரு சகோதரர்களுக்கும் 1863 இல் கடுமையான பயிற்சி அளித்தார். பின் நாளில் இதுவே சர்வேயர்களுக்கானப் பயிற்சி முறையாக மாறியது.

     இருவருக்கும் அளவிடப்பட்ட, ஒரே சீரான வேகத்தில் நடக்கப் பயிற்சி அளிக்கப் பட்டது. சமதரையாக இருந்தாலும், மலைப் பகுதியாக இருந்தாலும், ஒரே வேகத்தில் நடப்பார்கள். இரு காலடிகளுக்கு இடைப்பட்ட தூரம் எப்பொழுதுமே 33 அங்குலம்தான். இந்த அளவு மாறவே மாறாது. அப்படி ஒரு பயிற்சி.

     நடக்கும் பொழுது தூரத்தைக் கணக்கிட கையில் ஜெபமாலை. வழக்கமான 108 மணிகளுக்கு பதில், இதில் 100 மணிகள். நூறு முறை காலடி எடுத்து வைத்தபின், ஜெபமாலையின் ஒரு மணியை நகர்த்துவார். ஜெபமாலையில் ஒரு முழு சுற்று, சுழற்றி முடிந்தால், 100 x 100  = 10,000 பாத அடிகளைக் கடந்ததாகப் பொருள். அதாவது ஐந்து மைல்.

     தேநீர் கிண்ணத்தில் இருக்கும் பாதரசம், தொடுவானைக் கண்டுபிடிக்க உதவும். ஊன்று கோலில் வெப்பமாணி இருக்கிறதல்லவா? நண்பர்களே, அது எதற்குத் தெரியுமா?

      கொதிக்கும் தேநீரில் வெப்ப மாணியை விட்டு, அந்த இடத்தின் உயரத்தைக் கணக்கிடுவார். ஆமாம் நண்பர்களே, கடல் மட்டத்தில் இருந்து, உயரே செல்லச் செல்ல, தண்ணீரின் கொதிநிலைப் புள்ளியானது மாறிக் கொண்டே இருக்கும். இந்த கொதி நிலைப்  புள்ளியைக் கொண்டே, உயரத்தைக் கணக்கிடலாம். எளிமையான வழிமுறைதான், ஆனாலும் நம்பகமானது.

      திபெத்திய லாமாக்கள், பிரார்த்தனைச் சக்கரம் ஒன்றினை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். அது ஒரு புனிதப் பொருள். அதனைச் சுற்றிலும், ஓம் மனே பாத்மே ஹம் என்னும் மந்திரச் சொற்கள் பொறிக்கப் பட்டிருக்கும். இந்த மந்திரச் சக்கரத்திற்குள்தான், நயின் சிங்கின் பயண வரைபடம், கடந்து வந்த பாதை, உயரம், நில அடையாளங்கள் முதலான நுட்பமான குறிப்புகள் ஒளித்து வைக்கப் பட்டன.

     1865 இல் திபெத்திய எல்லையைக் கடந்து, நேபாளத்தை அடைந்த பிறகு, இருவரும் பிரிந்தனர் நயின் சிங், லாசாவை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

      நண்பர்களே, நயின் சிங் ஒரு நாள், இரு நாள் அல்ல, ஒரு வருடம் நடந்து, கணக்கிட்டுக் கொண்டே நடந்து, குறிப்பெடுத்துக் கொண்டே நடந்து, உயரத்தை அளந்து கொண்டே நடந்து, 1866 இல் தடைவிதிக்கப் பட்ட நகரமான லாசாவைச் சென்றடைந்தார்.

     ஏப்ரலில் மூட்டை முடிச்சுகளுடன் இந்தியா திரும்பினார். டேராடூனில் உள்ள சர்வே தலைமையகத்தை 1866 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் நாள் அடைந்தார்.
     

1867 இல் மீண்டும் ஒரு முறை பயணம். திபெத்திய பகுதிகளை ஆராய்ந்தார். 1873 இல் காஷ்மீரில் தொடங்கி, இரண்டாண்டு பயணம் செய்து 1875 இல் லாசாவை அடைந்தார். இவருடைய வரைபடங்கள்தான், இமய மலைப் பகுதிகளுக்கான துல்லியமான வரைபடங்களாக, அடுத்த அரை நூற்றாண்டு வரை நீடித்தது.

     டேராடூனில், நயின் சிங்கின் பாதைக் கணக்கெடுப்புகள் ஒன்றிணைக்கப் பட்டு, மெல்ல மெல்ல துல்லியமான வரைபடங்களாக உருவம் பெற்றது.

     1876 ஆம் ஆண்டு நயின் சிங்கின் பெயரும் புகழும் உச்சத்தை அடைந்தது. புவியியல் இதழானது அவரது சாதனைகளை உலகிற்கு அறிவித்தது.

     நயின் சிங்கின் ஓய்விற்குப் பிறகு, இந்திய அரசாங்கம், ஒரு கிராமத்தையும், ஆயிரம் ரூபாய்க்கான வருவாயினையும் ஏற்படுத்திக் கொடுத்தது. நண்பர்களே, அது நாள் வரை, நயின் சிங் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதத்திற்கு வெறும் 20 ரூபாய்.

    1868 இல் ராயல் புவியியல் அமைப்பானது நயின் சிங்கிற்கு, தங்க முலாம் பூசப்பட்ட கால மாணியை பரிசாக வழங்கிப் பாராட்டியது.



2004 ஆம் ஆண்டில் ஜுன் 27 இல் இந்திய அரசானது, நயின் சிங் நினைவாக, தபால் தலை ஒன்றினையும் வெளியிட்டது.

     நண்பர்களே, ஆங்கிலேயர்களால் முடியாத செயலை, தன் உயிரையும் துச்சமாக மதித்து, சாதித்துக் காட்டிய, நயின் சிங்கை இன்று யாரும் அறிய மாட்டார்கள். கால ஓட்டத்தில் கரைந்து விட்டார்.

      ஆனால் நண்பர்களே, கல்கத்தாவில் அலுவலகத்தில் அமர்ந்து, சட்டையின் மடிப்பு கூட, கலையாமல், நயின் சிங்கின் சர்வே பணிகளை நிர்வகித்தாரல்லவா, ஓர் ஆங்கிலேய அதிகாரி, அவரின் பெயர், சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்து விட்டது.

       ஆம், அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயரைத்தான், இமயத்தின் உயர்ந்த மலை முகட்டிற்குப் பெயராகச் சூட்டினார்கள்.

நண்பர்களே, அந்த ஆங்கிலேய அதிகாரியின் பெயர் என்ன தெரியுமா?
ஜார்ஜ் எவரெஸ்ட்.

ஜார்ஜ் எவரெஸ்ட்

          

79 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் அரியதொரு செய்தியுடன் இப்போது மலைப்பயணம்! நன்றி கரந்தையாரே! “கடல் மட்டத்தில் இருந்து, உயரே செல்லச் செல்ல, தண்ணீரின் கொதிநிலைப் புள்ளியானது மாறிக் கொண்டே இருக்கும். இந்த கொதி நிலைப் புள்ளியைக் கொண்டே, உயரத்தைக் கணக்கிடலாம். எளிமையான வழிமுறைதான், ஆனாலும் நம்பகமானது.“ - எனும் செய்திக்குள் வரும் புதுச்செய்திக்கும் நன்றி.
    குரங்கு என்ன பண்ணுமாம், தன் குட்டியோட வாலை எடுத்துப போட்டுத்தான் சுடுதண்ணி சூடா இருக்கானு பாக்குமாம்! குளுருலயும் பனிக்காட்டுலயும் பயணம் பண்ணது நயின் சிங், பெயர் பெற்றது எவரெஸ்ட்! எவரெஸ்ட்டுக்குள் ஒளிந்திருந்த செய்தியை அழகான நடையில் தெரிவித்த உங்களுக்கு நன்றி வணக்கம். (மன்னிக்கவும், முந்திய கருத்தூட்டததில் எழுத்துப் பிழை, கருத்தே பிழையாக்கிவிட்டதால் நீக்கினேன். வேறொன்றுமில்லை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குரங்கு என்ன பண்ணுமாம், தன் குட்டியோட வாலை எடுத்துப போட்டுத்தான் சுடுதண்ணி சூடா இருக்கானு பாக்குமாம்//

      அந்தக்காலத்துலே மாமியார்களும் தண்ணீர் கொதித்து விட்டதா என்று பார்க்க, மருமகளை தன விரலை விட்டு பார்க்கச் சொல்வார்களாமே !!

      என் பாட்டி சொல்லி இருக்கிறாள்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  3. வராற்றில் இவரப் போன்ற பலரது சாதனைகள் வெளிக் கொண்டு வராமல் போனது வேதனைக்குரியது. சிறப்பான கட்டுரை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதனைகள் படைத்த பலர் வெளிச்சத்திற்கு வராமலேயே போய்விட்டனர் .
      நன்றி ஐயா

      நீக்கு
  4. நயன்தாராவை மட்டுமே அறிந்த நம்ம பய பிள்ளைங்க அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது சாதனை வீரர் நயன் சிங்கைப் பற்றியும்தான்!
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துடன் ஒத்துப்போக இயலவில்லை. வருந்துகிறேன்.
      நயன்தாரா இல்லை. நஸ்ரியாவைப் பற்றி காவியமே படிக்கிறார்கள்.
      அதை என்னைப்போன்ற கிழவர்களும் படிக்கிறார்கள்.

      உலகம் பலவிதம். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

      ஒரு நயன் தாரா இருந்தால் இன்னொரு பக்கம் ஒரு நயன் சிங்கும் இருக்கிறார் அல்லவா !!



      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. ஒவ்வொருவரும் ஒரு விதம்தான்,
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  5. அருமையான தகவல்கள்.
    பகிர்வுக்கு நன்றி .
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா17 ஏப்ரல், 2014

    வணக்கம்
    ஐயா.

    அறிய முடியாத வரலாற்றுத் தொகுப்பு என்றுதான் என்னால் சொல்ல முடியும் தேடலுக்குக்கு சிறப்பாக எழுதியமைக்கு
    வாழ்த்துக்கள் ஐயா......

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  7. வரலாற்றில் மறைக்கப்பட்ட நயின்சிங்கின் உழைப்பையும் உண்மை வரலாற்றையும் தமிழ் உலகிற்கு அறியச் செய்த ஆசிரியருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. இதுவரை அறியாத அற்புதத் தகவல்
    விரிவான அருமையான பகிர்வுக்கு
    மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஆங்கிலேயர்களால் முடியாத செயலை, தன் உயிரையும் துச்சமாக மதித்து, சாதித்துக் காட்டியசாதனை வீரர்களைப்பற்றிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  10. இதுவரை கேள்விப்படாத ஒரு மாமனிதரைப் பற்றிய தங்களின் பதிவு மிகவும் அருமை. அருமையான புகைப்படங்களுடன் அறிந்திராத செய்திகளை தங்கள் நடையில் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி. வலைப்பூ பதிவில் தங்களின் எழுத்தும் போக்கும் மிக சிறப்பாக மெருகேறுவதைக் காண முடிகிறது. ஆதாரங்களைத் தேடி செல்லும் ஓர் ஆய்வாளனின் சிரமத்தை உங்களின் எழுத்தில் காணமுடிகிறது. அதனைவிட அவ்வாறான செய்திகளை அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும் என்ற அவா மிகவும் பாராட்டுதற்குரியது. வாழ்த்துக்கள். தொடருங்கள். உடன் வருகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதாரங்களைத் தேடி செல்லும் ஓர் ஆய்வாளனின் சிரமத்தை உங்களின் எழுத்தில் காணமுடிகிறது. அதனைவிட அவ்வாறான செய்திகளை அனைவருக்கும் தெரிவிக்கவேண்டும் என்ற அவா மிகவும் பாராட்டுதற்குரியது. வாழ்த்துக்கள். தொடருங்கள். உடன் வருகிறோம்.//

      ஆம். ஆம்.

      சுப்பு தாத்தா.
      www.wallposterwallposter.blogspot.in

      நீக்கு
    2. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  11. நயின் சிங் அவர்களைப் பற்றி அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  12. அருமையான தகவல்களை தந்து கொண்டிருகிறீர்கள் சகோதரா இவை யாவரும் அறிய வேண்டியவையே. மிக்க நன்றி வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  13. அட மக்கா
    இவ்ளோ பாடுபட்டது ஒருத்தர்
    பேரெடுத்தது இன்னோர்த்தர் :((
    உங்களால தான் இவரை தெருஞ்சுகிட்டேன் ! நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னிக்கு அர்ஜுனன் ஜெயிப்பதற்கு அந்த ரங்கன் பார்த்தனாக வந்து பாண்டவர்களை ஜெயிக்க வைத்தாரே ?

      எப்பவுமே ஒருவன் வெற்றிக்கு இன்னொருவன் பின்னால் இருப்பது உலகாயதம் . முன்னாலே இருப்பவன் எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு அம்போ ஆகிவிடுவான். இல்லையா.

      இன்னி தேதியிலே நம்ம ஊட்டுலே இது ட்ரூ . ஆபீஸ்லே ட்ரூ .

      நாட்டுக்கு வேற தினுசா இருக்குமா என்ன?

      அட்ஜஸ்ட் பண்ணிக்கோ தாயி ரியாலிடி இதுதான்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. சுப்பு தாத்தா அவர்களின் நேச மிகு கருத்துரைகளுக்கு
      மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெருமை அடைகின்றேன்.
      மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  14. அறியாத தகவல்கள், பகிர்விற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நல்லதொரு வரலாற்று ஆவணம். படங்களுடன், துலாவி எழுதியமைக்கு நன்றி. கட்டுரை மூலத்தை இனி குறிப்பிடக் கோருகிறேன். தங்கள் பணி என்றென்றும் சிறக்க வாழ்த்துக்கள். வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே
      இணையத்தில் நயின் சிங் என்று தேடினாலே ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன நண்பரே

      நீக்கு
  16. யாரோ வழி வகுத்துக் கொடுக்கச் செய்து முடித்தவர் நயின் சிங். ஆட்டுவிப்பவர் இல்லையென்றால் ஆடுபவர் என்ன செய்ய முடியும் . நயின் சிங்கைப் போற்றும்போது மற்றவர்களையும் குறைத்துமதிப்பிடலாமா..?.ஆமாம் அந்த மணி சிங் என்னவானார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மணி சிங் பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை ஐயா.
      உழைப்பிற்கேற்ற பெருமை கிடைக்க வேண்டும் என்பதே எனது கருத்து ஐயா. எவரெஸ்ட் என்பது ஒரு மனிதனின் பெயர் என்பதே இன்று பலருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அப்பெயர் நிலைத்து விட்டது. ஆனால் நயின் சிங் கரைந்து போய்விட்டார் அல்லவா
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  17. வணக்கம் சகோ இந்த ஆக்கத்தை வாழ வைத்துவிட்டு செல்கிறேன்
    வெள்ளிக் கிழமை சாமி கும்பிடனும் :))ஆதலால் மீண்டும் வந்து படித்து விட்டுக் கருத்திடுகிறேன்
    வாழ்த்துக்கள் .த.ம .7

    பதிலளிநீக்கு
  18. அன்புடையீர்..
    25 ஆண்டுகளுக்கு முன்னால் - கிராம நில அளவை பயிற்சி பெற்ற போது இமய மலையை அளந்த மாவீரர் நயின் சிங் அவர்களைப் பற்றியும் நோகாமல் நுங்கு தின்ற எவரெஸ்ட் பற்றியும் குறிப்புகள் தரப்பட்டது. ஆனால்,

    அந்த வரலாற்றை - துல்லியமாக நெகிழ்ச்சியுடன் மெய்சிலிர்க்கும் வண்ணம் பதிவு செய்தமைக்கு மனம் நிறைந்து பாராட்டுகின்றேன்.. வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறுவதுதான் மிகச் சரியானது ஐயா
      நோகாமல நுங்கு தின்றவர்தான் எவரெஸ்ட்.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  19. என்ன செய்வது?
    ஏணிகள் எப்போதுமே தரையில் தான் நின்றுகொண்டு இருக்கும்.

    அருமையான பகிர்வு.
    நன்றி ஜெயக்குமார் ஐயா.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏணிகள் எப்பொழுதுமே தரையில்தான் நின்று கொண்டு இருக்கும்,
      உண்மை சகோதரியாரே உண்மை
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  20. அரிய தகவல்கள்,நல்ல கட்டுரை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. இமயத்தை அளந்தவர்
    திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும், பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா
      என்றும் வேண்டும் இந்த அன்பு

      நீக்கு
  22. அருமையான தகவல் சார் . கண்டிப்பாய் என் முகனூல் பக்கத்தில் பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி சகோதரியாரே

      நீக்கு
  23. இதுவரை அறியாத தகவல்கள். யாரும் அறிந்திராத ஒரு அரிய மனிதராக இருந்த நயன் சிங் இனி நம் மனதில் ஓங்கி வளர்ந்து நிற்பார் அவர் அளவிட்ட இமயமலை போலவே.

    மிகச் சிறப்பான பதிவு, ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரியாரே

      நீக்கு
  24. நானும் எனது முக நூல் பக்கத்தில் இந்தப் பதிவை பகிர்ந்திருக்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு
  25. இதுவரை நான் படித்திராத செய்தி. மிக்க நன்றி. என்ன இருந்தாலும் தாங்கள் ஆசிரியர் அல்லவா? மாணவர்கள் அறிந்திராத செய்தியை அறிவிப்பதுதானே நல்ல ஆசிரியரின் இலக்கணம்?)

    பதிலளிநீக்கு
  26. பயன் தரு கட்டுரை! நயன்மிகு நடை அழகு! வாழ்த்து

    பதிலளிநீக்கு
  27. நல்ல கட்டுரை. எத்தனை தகவல்கள்.....

    இவர் போன்ற உழைப்பாளிகளுக்கு உரிய மரியாதை கிடைக்காது போய்விடுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நேரங்களில் உழைப்பிற்கு உரிய மரியாதை கிடைக்காமல்தான் போய்விடுகிறது ஐயா.
      நன்றி ஐயா

      நீக்கு
  28. அறியாத செய்திகளை அறியத்தந்ததோடு இடைஇடையே தந்த எக்ஸ்ட்ரா தகவல்களும் அருமை. கொதிநிலை -- உயரம், தண்ணீர் சூடறிய குட்டியின் வால் etc etc..

    மொத்தத்தில் அருமையான கட்டுரை ஐயா! வாழ்த்துகள்!


    http://pudhukaiseelan.blogspot.in/

    பதிலளிநீக்கு
  29. நல்ல பயனுள்ள பதிவு அய்யா ...
    பேசாமல் உங்கள் பதிவை எல்லாம் பாடமாக்கி விடலாம் என்று ஒரு ஐடியா இருக்கிறது எனக்கு...
    சூப்பர் என்ற ஒரு வார்த்தை போதுமா என்று தெரியவில்லை

    பதிலளிநீக்கு
  30. பெயரில்லா19 ஏப்ரல், 2014

    ''..நயின் சிங்கை இன்று யாரும் அறிய மாட்டார்கள். கால ஓட்டத்தில் கரைந்து விட்டார்....'' நானும் இன்று தான்அறிகிறேன்.
    தகவலிற்கு மிக்க நன்றி.
    அருமையான கட்டுரை.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  31. புதிய தகவல்கள். பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  33. அறியாத தகவல்... அருமையான கட்டுரை ஐயா....

    பதிலளிநீக்கு
  34. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, அற்புதமான, அழகான, அவசியமான, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவினை படித்து மிகவும் இன்புற்றேன். இதுநாள் வரை நான் கேட்டிராத, படித்திராத செய்தி. ஒரு மனிதனின் மனவலிமையை திரு.நயன்சிங் மூலம் நாம் பாடமாக உணரவேண்டுவது அவசியம். நமக்கு உயிர் கொடுத்த பெற்றோரை மறந்து அவர்களின் தியாகத்தை புறம் தள்ளும் இந்த சமூகத்தில் நயன்சிங் போன்றோர்களின் பெயர் மிக சிலரால் மட்டுமே போற்றப்படுவது இயல்பே. ஆனால் நல்லவர்களை போற்றும் நாடு மட்டுமே முன்னேறும் என்பதும் இயல்பே. தங்களின் கடுமையான உழைப்பை இந்த பதிவும் மெய்ப்பிக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. சுவாரசியமான பதிவு .
    இதுவரை அறிந்திராத பல தகவல்களைக் கலெக்ட் பண்ணி கோர்வையாக த தருவது மிகவும் சிரமம் .
    மொத்தத்தில் ஒரு அருமையான பதிவு .

    பதிலளிநீக்கு
  36. அன்பின் ஜெயக்குமார் - அருமையான பதிவு - நயன் சிங் எங்கே - எவரெஸ்ட் எங்கே ? ஒருவரின் கடும் உழைப்பு மற்றவரினால் எளிதாகப் பெயர் வாங்கப் பயன் படுகிறது. என்ன செய்வது ........ இவ்வளவு தகவல்கள் எங்கிருந்து எடுத்தீர்கள் ? ந்யன் சிங்கினையும் அவரது செயல்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி கலந்த பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  37. சிறப்பான கட்டுரை, பிரமிக்கவைக்கும் தகவல். நன்றி!

    பதிலளிநீக்கு
  38. பெயரில்லா03 மே, 2014


    நயன் சிங் குறித்த பதிவு, நான் அறியாத பல புதிய தகவல்களுடன் இருந்தது ஐயா. தொடரட்டும் தங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  39. TODAY(21ST OCTOBER) NAYAN SINGH BIRTHDAY GOOGLE DOODLE CELEBRATES NAYAN SING. I CAME TO KNOW FROM YOUR BLOCK ABOUT NAYAN SINGH THANKS SIR.

    பதிலளிநீக்கு
  40. மிகச்சிறந்த இந்த பதிவின் மூலம் பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்,
    நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு