08 ஏப்ரல் 2020

மெல்லத் தமிழினிச் சாகும்



     மெல்லத் தமிழினிச் சாகும்

     மெத்தப் படித்தப் பலரும்கூட, பாரதி  அப்பொழுதே சொல்லிவிட்டார், மெல்லத் தமிழினிச் சாகும் என்று உரைப்பதை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்.

     மெல்லத் தமிழினிச் சாகும்

     மகாகவி பாரதி இப்படியா கூறினார்?


     இப்படியா கூறியிருப்பார்?

     மெல்லத் தமிழினிச் சாகும்

     பாரதியின் பாடல் வரிகள்தான் இவை

     அதில் சந்தேகமில்லை

     ஆனால், பாரதியின் பாடலை முழுமையாகப் படிக்காமல், ஒரு வரியினை மட்டும் எடுத்துரைக்கும், பல அரைகுறைகளின் ஓலம் இது.

மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்

     பார்த்தீர்களா, மெல்லத் தமிழினிச் சாகும் என்று அந்தப் பேதை உரைத்தான் என்றுதான் பாரதி பாடுகிறார்.

     சரி, யார் அந்தப் பேதை என்னும் கேள்வி எழுகிறதல்லவா?

     இந்தக் கேள்வி, ஓர் ஆய்வாளரையும் குடைந்தெடுத்தது.

     யார் இந்தப் பேதை?

     இந்தப் பேதையைப் பற்றிய ஆய்வில் இறங்குவதற்குமுன், பாரதியின் இப்பாடலை, தமிழ்த் தாய் என்னும் பாடலை, முழுமையாய் பார்ப்போம் வாருங்கள்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
     ஏது செய்வேன் என தாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
     கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
     பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
     மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை – அவை
     சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
     மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
     இந்த வரையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
     செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள் வலியாலும் – இன்று
     சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
     ஏறிப் புவிமிசை என்று மிருப்பேன்

     இப்பாடலின் தொடக்கத்திலேயே, இங்கு கூறத் தகாதவன் கூறினான் கண்டீர் என்று வருகிறதல்லவா?

     ஆய்வாளரின் ஆர்வம் மேலும் அதிகரித்தது

     கூறத்தகாத வார்த்தைகளைக் கூறியவன் யார்?

     பேதை யார்?

     கூறத்தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார்?

     ஆய்வாளர் முன்னிலும் வேகமாய் ஆய்வில் இறங்கினார்,

     பாரதி குறித்த அத்துணை படைப்புகளையும் ஒரு வரி விடாமல், ஒரு எழுத்து விடாமல் ஆராய்ந்தார்

     விடை கிடைத்தது

     கூறத்தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார் என்பதைக் கண்டுபிடித்தார்.

     1979 ஆம் ஆண்டு பாரதி அவர்களின் தமையனார் சி.விசுவநாதன் அவர்கள் பாரதி நூல்கள் தொகுப்பு கட்டுரைகள் என்ற நான்கு தொகுப்புகளை வெளியிட்டிருந்தார்

      அந்தத் தொகுப்பின் நான்காம் பகுதியில், சமூகம் – பருந்துப் பார்வை என்னும் கட்டுரையில், பாரதியே இந்தக் கேள்விக்கான விடையினைக் கூறியிருப்பதை அறிந்து, தெளிந்து நெகிழ்ந்து போனார்.

     தட்சிணப் பாஷையில், அதாவது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில், சாஸ்திரங்களை அதாவது அறிவியல் நூல்களைப் படைக்கும் ஆற்றல் இல்லை என்று பச்சையப்பன் கல்லூரி தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார்.

     அவருக்கு இவ்விடத்து பாஷைகள் தெரியாது. சங்கதி தெரியாமல் விவரிக்கிறார்.

     சாஸ்திர பாஷையை நமது பாஷையில் மிகவும் எளிதாக சேர்த்து விடலாம். மேலும் சாஸ்திரம் கற்பிக்க தமிழ் நேர்மையும் எளிமையும் கொண்ட மொழி என்பது, நம்மவர்களில்கூட, சில இங்கிலீஷ் பண்டிதர்களுக்குத் தெரியவில்லையே என வேதனையோடு குறிப்பிட்டுள்ளதைக் கண்டார்.

     பாரதியின் இக்கூற்றில் இருந்து, கூறத்தகாதவன் என்பதும், அந்தப் பேதை என்பதும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ரோலோ என்பவரைத்தான் என்பதை தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார்.

     இந்த ஆய்வாளர் யார் தெரியுமா?

     ஒன்றல்ல, இரண்டல்ல, தன் அறுபது ஆண்டு கால உழைப்பை மகாகவி பாரதிக்காகச் செலவிட்டவர்

     காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்பின் முதல் பாகத்தை 1998 ஆம் ஆண்டு தொடங்கி, இதுநாள் வரை 16 பாகங்களை வெளியிட்டவர்.

இவர்தான்
சீனி.விஸ்வநாதன்

     நண்பர்களே, இதுபோன்ற பாரதி பற்றிய, அரிய பல தகவல்களை, ஒரு கட்டுரையில் கண்டெடுத்தேன்.
பாரதி, ஒரு வாழ்வியல் தாக்கம்

     இக்கட்டுரையினைப் படிக்கப் படிக்க, பாரதி இவரது வாழ்விலும், ஒரு பெருந் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிந்தது.

இவர்தான்,


முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்,
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்

இவரது நூல்




42 கருத்துகள்:

  1. பச்சையப்பன் கல்லூரி அப்போதே அப்படிதானா? !!!

    சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  2. பிரமிப்பான தகவல்கள் நண்பரே...
    "பெரிதினும் பெரிது கேள்" ஆசிரியரை வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  3. அருமையான விளக்கம் ஐயா...

    அந்த இங்கிலீஷ் பண்டிதர்களுக்கு 'பாஷை' தான் தெரியும்... மொழி தெரியாது... மூத்த மொழி தமிழ் மொழியை அறியவோ, ஆய்வோ செய்ய மாட்டார்கள்...

    இதே போல் :

    ஒரே ஒரு குறளை விவரித்து பிதற்றும் பேதைகளும் உண்டு... குறைந்தபட்சம் அந்த அதிகாரத்தில் உள்ள குறள்களையும் படித்துவிட மாட்டார்களா என ஏங்குவதும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மவர்களிலேயே பலர் நம் மொழியின் அருமையினை அறியாமல் இருப்பதுதான் வேதனை
      குறளோடு இரண்டறக் கலந்து வாழ்பவர் தாங்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  4. நான் ஏற்கெனவே அறிந்த செய்தி.

    பதிலளிநீக்கு
  5. திரு. சீனி.விஸ்வநாதன் அவர்களைப்பற்றி தெரிந்து கொண்டேன்.நூல் ஆசிரியருக்கும் உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சிறந்ததொரு நூல் படைத்த முனைவர் த. செந்தில்நாதன் அவர்களுக்கும் தங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மெல்லத் தமிழ் இனி சாகும் என்று வார்த்தை பயன்பாடு பற்று பல இடத்தில் நான் குறிப்பிட்டு இருக்கின்றேன். அந்த ஒரு வரியை மட்டும் வைத்துக்கொண்டு பாரதி இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்றெல்லாம் பேசுவார்கள் ஆனால் அதன் கீழே உள்ள வரி என்ன என்பதை நினைத்துப் பார்ப்பதில்லை. இப்பதிவு பலருக்குமீ தெளிவு ஏற்படுத்தும்

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு விளக்கம். ஒரே ஒரு வரியை பயன்படுத்தி மாற்றுக் கருத்தை வெளியிட்டதாகச் சொல்பவர்கள் - என்ன சொல்ல.

    சிறப்பான பதிவு.

    பதிலளிநீக்கு
  9. வேத சாஸ்திரத்தை கூறினாரோ என்னவோ? ஏனெனில் அக்கால கட்டம் அப்படி பட்டதே

    பதிலளிநீக்கு
  10. நல்ல ஸ்வாரஸ்யமான தகவல்கள். திரு. சீனி.விஸ்வநாதன் அவர்களைப்பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. நூல் ஆசிரியர் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வெல்லத் தமிழ் இனி வாழும் என்ற நம்பிக்கைதரும் சொற்றொடருமுண்டு. தமிழ் என்றும் வாழும். நல்ல பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. 1980களின் இடையில், பாரதி பாடல்கள் என்னும் நூலை திரு சீனி.விஸ்வநாதன் ஐயா அவர்களைக் கொண்டு முழுத்தொகுப்பாகக் கொணர தமிழ்ப்பல்கலைக்கழகம் முயற்சி மேற்கொண்டபோது அவர்கள் பலமுறை அலுவலகத்திற்கு வந்துள்ளார்கள். அப்போது சுருக்கெழுத்துததட்டச்சராகப் பணியாற்றிய எனக்கு பல முறை அவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் ஒரு பேரறிஞர். அண்மையில் ஒரு கருத்தரங்கில் அதனை நினைவுகூர்நதபோது பெரிதும் மகிழ்ந்தார். அவரைப் பற்றிய பதிவு கண்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில ஆண்டுகளுக்கு முன் புதுகையில் நடந்த, ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில், இபபெருமகனாரைச் சந்தித்தோம்,அப்பொழுது தாங்கள் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்ததை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பினையும் பெற்றேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  13. இதுவரை அறிந்திராத சேதி. பேதை சொன்னான் என்ற ஒற்றை வார்த்தைக்காக சீனி.விஸ்வநாதன் ஐயாவின் மெனக்கெடல் நமக்கு பல புதிய தகவல்களை தந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. நன்றி ஐயா ஐயம் களைந்தமைக்கு
    பிக்ரி
    இலங்கை

    பதிலளிநீக்கு
  15. ரொலோக்கள் சராசரிகள்
    போப் போல பெஸ்கி போல அரிதினும் அரிதான மனிதர்களும் உண்டே.

    பதிலளிநீக்கு
  16. ஆச்சிரியமுட்டும் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  17. அறியாத தகவல்கள்.
    நன்றி.
    பாடலில், வசை என்பது வரை என்று பதிவாகியிருக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பாரதியாரின் 'மெல்லத் தமிழ் இனி சாகும்' என்ற கவிதை வரியினை சிலர் தவறாகக் கையாளலாம் ஆயினும் அவரது எண்ணம் தமிழ் வாழ தேவையானதை வெளிப்படுத்துவதே. அதுவே அப்பாடலின் வெற்றியும் தங்களது ஆய்வு அல்லது தங்களது பதிவு பலருக்கு இதனை சொல்லும் என நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  19. நீண்ட நாள் குடைந்தெடுத்த கேள்விக்கு விடை கிடைத்தது நண்பரே.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  20. பாரதியாரின் பாடல் வரிகளுக்கு அருமையான விளக்கம்.
    உடுவை.எஸ்.தில்லைநடராசா-இலங்கை

    பதிலளிநீக்கு
  21. அருமையான விளக்கம்
    வாழ்்க வளர்க தமிழ்!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு