08 ஏப்ரல் 2020

மெல்லத் தமிழினிச் சாகும்



     மெல்லத் தமிழினிச் சாகும்

     மெத்தப் படித்தப் பலரும்கூட, பாரதி  அப்பொழுதே சொல்லிவிட்டார், மெல்லத் தமிழினிச் சாகும் என்று உரைப்பதை நம்மில் பலரும் கேட்டிருக்கலாம்.

     மெல்லத் தமிழினிச் சாகும்

     மகாகவி பாரதி இப்படியா கூறினார்?


     இப்படியா கூறியிருப்பார்?

     மெல்லத் தமிழினிச் சாகும்

     பாரதியின் பாடல் வரிகள்தான் இவை

     அதில் சந்தேகமில்லை

     ஆனால், பாரதியின் பாடலை முழுமையாகப் படிக்காமல், ஒரு வரியினை மட்டும் எடுத்துரைக்கும், பல அரைகுறைகளின் ஓலம் இது.

மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்

     பார்த்தீர்களா, மெல்லத் தமிழினிச் சாகும் என்று அந்தப் பேதை உரைத்தான் என்றுதான் பாரதி பாடுகிறார்.

     சரி, யார் அந்தப் பேதை என்னும் கேள்வி எழுகிறதல்லவா?

     இந்தக் கேள்வி, ஓர் ஆய்வாளரையும் குடைந்தெடுத்தது.

     யார் இந்தப் பேதை?

     இந்தப் பேதையைப் பற்றிய ஆய்வில் இறங்குவதற்குமுன், பாரதியின் இப்பாடலை, தமிழ்த் தாய் என்னும் பாடலை, முழுமையாய் பார்ப்போம் வாருங்கள்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் – இனி
     ஏது செய்வேன் என தாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை – இங்கு
     கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச
     பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே – அந்த
     மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை – அவை
     சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த
     மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ
     இந்த வரையெனக் கெய்திடலாமோ
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
     செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

தந்தை அருள் வலியாலும் – இன்று
     சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் – புகழ்
     ஏறிப் புவிமிசை என்று மிருப்பேன்

     இப்பாடலின் தொடக்கத்திலேயே, இங்கு கூறத் தகாதவன் கூறினான் கண்டீர் என்று வருகிறதல்லவா?

     ஆய்வாளரின் ஆர்வம் மேலும் அதிகரித்தது

     கூறத்தகாத வார்த்தைகளைக் கூறியவன் யார்?

     பேதை யார்?

     கூறத்தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார்?

     ஆய்வாளர் முன்னிலும் வேகமாய் ஆய்வில் இறங்கினார்,

     பாரதி குறித்த அத்துணை படைப்புகளையும் ஒரு வரி விடாமல், ஒரு எழுத்து விடாமல் ஆராய்ந்தார்

     விடை கிடைத்தது

     கூறத்தகாத வார்த்தைகளைக் கூறிய அந்தப் பேதை யார் என்பதைக் கண்டுபிடித்தார்.

     1979 ஆம் ஆண்டு பாரதி அவர்களின் தமையனார் சி.விசுவநாதன் அவர்கள் பாரதி நூல்கள் தொகுப்பு கட்டுரைகள் என்ற நான்கு தொகுப்புகளை வெளியிட்டிருந்தார்

      அந்தத் தொகுப்பின் நான்காம் பகுதியில், சமூகம் – பருந்துப் பார்வை என்னும் கட்டுரையில், பாரதியே இந்தக் கேள்விக்கான விடையினைக் கூறியிருப்பதை அறிந்து, தெளிந்து நெகிழ்ந்து போனார்.

     தட்சிணப் பாஷையில், அதாவது தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில், சாஸ்திரங்களை அதாவது அறிவியல் நூல்களைப் படைக்கும் ஆற்றல் இல்லை என்று பச்சையப்பன் கல்லூரி தலைமை வாத்தியார் மிஸ்டர் ரோலோ என்பவர் சொல்லுகிறார்.

     அவருக்கு இவ்விடத்து பாஷைகள் தெரியாது. சங்கதி தெரியாமல் விவரிக்கிறார்.

     சாஸ்திர பாஷையை நமது பாஷையில் மிகவும் எளிதாக சேர்த்து விடலாம். மேலும் சாஸ்திரம் கற்பிக்க தமிழ் நேர்மையும் எளிமையும் கொண்ட மொழி என்பது, நம்மவர்களில்கூட, சில இங்கிலீஷ் பண்டிதர்களுக்குத் தெரியவில்லையே என வேதனையோடு குறிப்பிட்டுள்ளதைக் கண்டார்.

     பாரதியின் இக்கூற்றில் இருந்து, கூறத்தகாதவன் என்பதும், அந்தப் பேதை என்பதும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ரோலோ என்பவரைத்தான் என்பதை தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார்.

     இந்த ஆய்வாளர் யார் தெரியுமா?

     ஒன்றல்ல, இரண்டல்ல, தன் அறுபது ஆண்டு கால உழைப்பை மகாகவி பாரதிக்காகச் செலவிட்டவர்

     காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதியின் படைப்பின் முதல் பாகத்தை 1998 ஆம் ஆண்டு தொடங்கி, இதுநாள் வரை 16 பாகங்களை வெளியிட்டவர்.

இவர்தான்
சீனி.விஸ்வநாதன்

     நண்பர்களே, இதுபோன்ற பாரதி பற்றிய, அரிய பல தகவல்களை, ஒரு கட்டுரையில் கண்டெடுத்தேன்.
பாரதி, ஒரு வாழ்வியல் தாக்கம்

     இக்கட்டுரையினைப் படிக்கப் படிக்க, பாரதி இவரது வாழ்விலும், ஒரு பெருந் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை உணர முடிந்தது.

இவர்தான்,


முனைவர் த.செந்தில்குமார் அவர்கள்,
திருச்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர்

இவரது நூல்