05 ஆகஸ்ட் 2023

சுள்ளிகள்

 


யாரேனும் ஒருவர்

விட்டுக் கொடுத்துப் போயிருக்கலாம்.

அப்பாவுடன் கூடப்பிறந்தவர்கள்

அப்பாவைப் போலில்லை …

அப்பாவிடம் அவர்கள் உதவிபெற்று

உயிர்வாழ்ந்த தருணங்களை ஒருபோதும்

அப்பா அனுபவித்ததேயில்லை ….

தன்னிழல்கூட அறியாமல்தான் அப்பா

உறவுகளை நேசித்து வாழ்ந்து போனவர்.

உயிரற்றுப்போன அப்பாவின் முன்னால்

அத்தனை பேரும் விட்டுக்கொடுக்க முடியாதவர்களாக

இயங்கிக் கொண்டிருந்தார்கள் ….

 

முக்கியமான முடிவெடுக்கும் நிலைப்பாடுகளில்

அழக்கூடாதென அப்பா கூறியதை அம்மா

என்றைக்கு மனதிலேந்திக் கொண்டாளோ அதையே

அன்றைக்கும் எந்திக்கொண்டு வெளியே வந்தாள்

அம்மாவை அப்படியானதொரு அமைதியான

சொற்களில் கண்டதில்லை …

 

எல்லோரும் நிறுத்திக்கொள்ளுங்கள் இத்துடன்

ஒற்றையடிதான் சொன்னாள் …

புயல் ஓய்ந்த பெருங்கடல்போல அத்தனைபேரும்

அமைதியானார்கள்.

 

அவர்களிடம் பேசிய கண்களால் என்னைப்

பார்த்தாள்.

நான் அப்பாவைப் பார்த்தேன் – அவர் கண்மூடி

ஆமோதிப்பதை போல மார்பின்மேல் விழுந்த

மாலை அசைந்தது.

 

மாலையை சரிசெய்தேன்.

அப்பா புறப்பட்டுவிட்டார்

அம்மா விட்டுக் கொடுத்துவிட்டாள்

நான் கொள்ளியை எடுத்துக் கொண்டேன்

மூங்கிலின் வழியாக வெப்பமேறிக் கையைத்

தொட்டது …

 

     படிக்கப் படிக்க, கவிஞரின் கையைத் தொட்ட வெப்பம், உள்ளத்துள் நுழைந்து, உடலெங்கும் பரவுவது போன்ற ஓர் உணர்ச்சி. கண்கள் கலங்குகின்றன. மனதை ஏதோ ஒரு பாரம் அழுத்துகிறது.

 

கண்கொத்திப் பாம்பாய்

கண்கள் அசைக்காது

கண்காணிப்பார் …

 

படிக்கட்டுகளில்

மேலேற்றுகையில்

இறுக்கிய கைகளை

விடுவிக்கமாட்டார் …

 

கொஞ்சம் தடுமாறினாலும்

கால்களில் குதிரைகட்டி

ஓடிவருவார்.

 

எப்போதும் சிரித்த முகம்

அன்பு வழியும் பேச்சு…

 

வளர்த்து முடித்த அப்பா

இப்போது …

 

வரிசைதான் ‘

என்கிறார்கள்

பதறிக்கிடக்கிறது.

கிடைக்கும்

சாம்பல்

அப்பாவுடையதுதானா?

 

     படிக்கும்போதே நமது உள்ளமும் பதறித்தான் போகிறது. பெற்று, வளர்த்து, ஆளாக்கிவிட்ட அப்பா, சாம்லாய்.

 

பொடிப் பழக்கந்தான்

அப்பாவின் மரணத்திற்கு

முந்தையதான முரணை

உருவாக்கியது…

 

அப்பாவைச் சுமந்த

ஊர்வலத்தில் உதிர்ந்த

ஏராளமான பூக்களின்

வாசங்களையும் கடந்து

மூக்கிலேறி உலுக்குகிறது

பொடிவாசம்.

அப்பா விட்டு ஆண்டுகளாகி

இறந்த இப்போதும் …

 

      இவரது அப்பா, பல வருடங்களுக்கு முன்னரே பொடிபோடும் பழக்கத்தை விட்டுவிட்ட போதிலும், தந்தையின் மறைவின்போது இவரை உலுக்கிய அந்தப் பொடி வாசத்தை, எழுத்துக்களாய் கோர்த்து வார்த்தைகளாய், கவிதையாய் இவர் காட்சிப் படுத்தும் விதத்தைப் பார்க்கும்பொழுது, நமது மூக்கிலும் நெடி ஏறுவதைப் போன்ற ஓர் உணர்வு.

 

அப்பாவின் இறப்பிற்குப்

பின் பத்திரப்படுத்திய

ஒவ்வொன்றும்

தொலைந்து கொண்டே

இருக்கின்றன.

 

முதலில் கண்ணாடி

அப்புறம் பொடி டப்பா

இப்போது பேணா.

 

மிச்சமிருப்பவை சைக்கிள்

சாவியும் சில குறிப்பேடுகளும்.

 

     பொருள்கள் தொலைந்தால் என்ன? அப்பாவின் நினைவுகள் பத்திரமாய், பாதுகாப்பாய் இருக்கிறதல்லவா?

     நாம் வாழும் வரை சுகமான சுமைகளாய் சுமக்க வேண்டியது நினைவுகளைத்தானே?

 

எதையும் மிகையாகப்

பேசியதில்லை ஒருபோதும் …

 

எதற்கும் மிகையாக

வியப்பு காட்டியதில்லை…

 

அப்படியா

ரொம்ப சந்தோஷம்

என்பார்

கூடவே ஒரு சேமித்த

புன்னகையுடன் …

 

இதைக் கற்றுக்கொள்ள

முடியாத வாழ்வில்தான்

நிரந்தரமாக அப்பா

வாழ்கிறார்.

 

     இந்நூலின் ஆசிரியர் கூட, எப்போதும் எதையும் மிகையாய் பேசி நான் பார்த்ததில்லை. தேவைக்கு அதிகமாய் வியப்பு காட்டியும் நான் பார்த்ததில்லை. புன்னகையோடு பாராட்டுவார், உற்சாகப்படுத்துவார்.

     இவரது இந்நூலைப் படிக்கும் பொழுதுதான் தெரிகிறது, இவரது அப்பா இவருள் இருக்கிறார், வாழ்கிறார் என்பது புரிகிறது.

 

என் தாத்தா என்

அப்பாவின் அப்பா …

 

என் மகனின் தாத்தா

என் அப்பா …

 

என் பேரனின் அப்பா

என் மகன் …

 

ஒருபோதும் அப்பாக்கள்

சாவதில்லை.

 

     எளிமையான வரிகள், ஆனாலும் வலிமையான அர்த்தங்கள். அப்பாவிற்கு ஒருபோதும் மறைவு என்பதில்லை, என்றென்றும் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்.

 

வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் …

ஒரு கவிதை நூல்.

166 பக்க கவிதை நூல்.

     ஒவ்வொரு கவிதையுமே படிப்போரின் உள்ளத்துள் நுழைந்து தங்கும்.

     இந்நூலினைப் படிக்கப் படிக்க, ஆங்காங்கே விரவிக் கிடந்த, அப்பா கவிதைகளை ஒன்றிணைத்தால் என்ன என்று தோன்றியது.

     அப்பாவைப் பற்றி இன்னும் எழுதியிருக்கிறார்.

     நான் அவற்றுள் சிலவற்றை மட்டுமே தங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளேன்.

     குடும்பம், பிள்ளைகள், உறவுகள், எதிர்காலம் என எல்லாவற்றையும், இந்நூலில் இறக்கி வைத்திருக்கிறார்.

     அப்பாவை மட்டும் சற்று கூடுதலாய்.

     கவிதை நான் எழுதுகிறேனா அல்லது கவிதை என்னை எழுதுகிறதா என்றால், கவிதைதான் என்னை எழுதுகிறது, எழுப்புகிறது, உறங்கவிடாமல் எழுத வைக்கிறது. எழுத்து எழுத்தாக எழுத வைக்காமல், சொல் சொல்லாக பயில வைக்கிறது என்கிறார் இவர்.

     இவரை எழுதவைத்தக் கவிதைகள் என்னைத் தூங்கவிடாமல் செய்கிறன.

     அப்பாவைப் பற்றியப் பல கவிதைகளை இந்நூலில் விதைத்திருந்தாலும், எழுதவும், படிக்கவும் தெரியாத, தன் தாய்க்குத்தான், இவர் தன் கவிதை நூலைப் படைத்திருக்கிறார்.

 

அம்மா

எதுவும் படிக்கவில்லை.

எல்லாம்

சொல்லிக் கொடுத்தாள்.

 

ஒரு வாழைக்காயில்

குடும்பம் நடத்தியவள்.

நாங்கள்

ஒரு சிம்னி விளக்கில்

படித்தோம்.

 

     இயற்கையாலும், கால முதிர்வாலும் இறைந்து கிடக்கின்ற சுள்ளிகளைத் தன் அலகில் பற்றிப் பறந்து கூடமைக்கும் சிறு பறவைபோல, இவரும் தன் மன வெளியில், சிதறிக் கிடந்த சொற்களால் ஒரு கூடமைத்திருக்கிறார்.

வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் …

     சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என எழுபது நூல்களின் ஆசிரியர்.

     மேனிலைப் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகம் என அனைத்திலும் இவரது எழுத்துக்கள் பாடங்களாய் பயிற்றுவிக்கப் படுகின்றன.

     வாழ்வென்பதே வாசிப்பதற்கும், எழுதுவதற்கும்தான் என்னும் உன்னதக் குறிக்கோளுடன் வாழ்ந்து வருபவர்.

எழுத்தாளர்

கவிஞர்

மனிதநேயர்


கவிஞர்  ஹரணி

அவர்களின்


வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் …

படித்துப் பாருங்கள்.

மெய்மறந்து போவீர்கள்.

 

வீசியெறியப்பட்ட சுள்ளிகளில் கூடுகளாய் …

ஹரணி.

கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்,

31, பூக்குளம் புது நகர்.

கரந்தை, தஞ்சாவூர்-2

விலை ரூ.200

அலைபேசி 94423 98953 (ஹரணி)

 

 

26 கருத்துகள்:

  1. பெயரில்லா05 ஆகஸ்ட், 2023

    சிறப்பு சார் உடனே ஹரிணி சாரிடம் நான் வாங்கிக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. பேரன்பும் நன்றியும் ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணர்வு ததும்பும் கவிதைகளுக்காக நான் தான் தங்களுக்கு நன்றி கூற வேண்டும் ஐயா

      நீக்கு
  3. பெயரில்லா05 ஆகஸ்ட், 2023

    அருமை

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொரு அப்பாவும் தன் பிள்ளைகளுக்கு ஒப்பில்லா & அளவற்ற அன்பு தந்தவராகவும் குறைகள் கூற இயலாத மனிதராகவும் வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள், வாழப் போகிறவர்கள் என்றால் அது மிகையாகாது. எழுத்தாளர் ஹரணி ஐயாவுடன் பேசும் தருணம் தோறும் அவருள் உருவாகி பொங்கி வழியும் மனித நேயத்தினையும் பண்பான பழக்கத்தையும் கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன். அந்த உயர்ந்த பண்புகளை அவருடைய ஒவ்வொரு கதையிலும் கவிதையிலும் பரவி இருப்பதை வாசித்து உணர்ந்தவன். இவை அனைத்தையும் நண்பர் திரு.ஜெயக்குமார் அவர்கள் அழகாக பதிவு செய்துள்ளார். மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நீண்ட கருத்துரை மகிழ்வினை அளிக்கிறது. நன்றி நண்பரே

      நீக்கு
  5. முதல் கவிதை மனதை நெகிழ வைத்து விட்டது.
    அனைத்து கவிதையும் அருமை. என் அப்பாவின் நினைவுகள் வந்து நீர் துளிகள் துளிர்த்து கண்ணை மறைத்தது.

    ஒருபோதும் அப்பாக்கள்

    சாவதில்லை.//

    அப்பாவிற்கு நிகர் அப்பா தான் ஒரு போதும் சாவதிலை.

    நம் நினைவுகளில் எப்போதும் இருப்பார்.

    அம்மாகவிதையும் நன்றாக இருக்கிறது.
    நூல் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. கவிதை விமர்சனத்தில் ஒரு கச்சித எழுத்தர் கரந்தை ஜெயக்குமார். இவ்வுலகில் அப்பாவுக்கு கவிதைநூல் படைத்தவர்களில் ஒருவர். திரு ஹரினியின் அப்பாவில் முழுக்கவும் என் அப்பாவைக்கண்டேன். பொடிக்குப் பதில் வெற்றிலைப்பாக்கு மட்டும் என் அப்பா (எங்கள் சொல்ல மனமில்லை). கவிஞரின் வரம்புக்குள் வார்த்தைகளும் வரம்பிலா உணர்வு அலைகளும் மிகச் சிறப்பு. வாழ்த்துகள் திரு ஹரினி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரை மகிழ்வளிக்கிறது.
      நன்றி அத்தான்

      நீக்கு
  7. மனதை நெகிழ வைத்த உருக்கிய வரிகள். உங்கள் விமர்சனமும் மிகச் சிறப்பு.

    அம்மாவுக்குப் படைத்திருக்கும் வரிகளும் அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
  8. மிக அருமையான கவிதை வரிகள்! மனதை நெகிழ வைக்கின்றன!
    கவிஞர் ஹரணிக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா07 ஆகஸ்ட், 2023

    விமர்சனம் தங்களது பாணியில் வெகு சிறப்பு நண்பரே ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
    - கில்லர்ஜி தேவகோட்டை

    பதிலளிநீக்கு
  10. முழுமையாக வாசித்த போது எனது அப்பாவும் அம்மாவும் என்னுடன் வாழ்வது போலவும் அவ்வப்போது அறிவுரை -ஆறுதல் சொல்வது போலவும் உணர்கின்றேன். நன்றி !
    உடுவை.எஸ்.தில்லைநடராசா,
    கொழும்பு-இலங்கை

    பதிலளிநீக்கு
  11. கவிதைகள் மனதை நெகிழவைக்கிறது. அனைத்துக் கவிதைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  12. மனம் ஒன்றிப் போகிறது நண்பரே படிக்கும் போது. நன்றி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு