21 செப்டம்பர் 2023

தஞ்சாவூர், தஞ்சாவூர், தஞ்சாவூர்



     பித்தளை உலோகத் தட்டில், புடைப்புச் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த செம்பு, வெள்ளி உலோகத் தகடுகளைப் பதிப்பார்கள்.

     இப்பொருளின் தனித்தன்மையே, ஓர் உலோகத்தின் மீது இருவேறு உலோகங்களைப் பதிப்பதே ஆகும்.

பித்தளைத் தட்டின்மீது கலை நுணுக்கம் நிறைந்த, செம்பு, வெள்ளித் தகடுகள் அழகுற பதிக்கப்படுகிறமையால், இக்கலை மூன்று உலோகக் கலை என்று அழைக்கப்படுகிறது.

இதுதான் பார்ப்போரின் கண்களையும், கருத்தையும் கவரும்

தஞ்சாவூர் கலைத் தட்டு.

---

     இந்தக் கலைப் பொருள் மூன்று பாகங்களை உடையது.

     குடம், தண்டி, யாழி.

     ஒரு பெரும் துண்டு மரத்தைத் தேர்ந்தெடுத்து, பானைபோல் செதுக்கி, அதன் உட்புறத்தையும் குடைந்து எடுப்பார்கள்.

     இதன் கீழ்ப்புறத்தில் வெளிப்புற அழகுக்காக, குலவு, தெரபணை எனப்படும் வேலைப்பாடுகளைச் செய்கிறார்கள்.

     குடைந்த குடத்தின் மேல்புறத்தில் பலகையைப் பொருத்தி மூடுகின்றனர்.

     அதன் மத்தியில் மரத்தால் ஆன மெட்டு அமைத்து, அதன்மேல் வெண்கலம் அல்லது வெள்ளிப் பட்டையைப் பொருத்துகிறார்கள்.

     அடுத்து, யானையின் துதிக்கை போன்று நீளமாக அமைக்கப் பெற்றிருக்கும் தண்டியின் மேல் பகுதியை உட்புறமாகக் குடைந்து எடுக்கிறார்கள். இவ்வாறு குடைந்து எடுத்ததால் ஏற்படும் பள்ளத்தை மறைக்க, அதன்மேல் பலகையைப் பொருத்துகிறார்கள்.

     குடத்துடன் சேர்க்கப்பட்ட தண்டியின் மறுபுறத்தில், மரத்தால் செதுக்கப்பெற்ற யாழி முகம் சேர்க்கப்படுகிறது.

     படிப்பதற்கு எளிதாக இருக்கலாம், ஆனால் குடம், தண்டி, யாழி என, ஒவ்வொன்றிலும் நுணுக்கமன வேலைப்பாடுகளைச் செய்தாக வேண்டும்.

     இறுதியாய் சுரக்கம்பி நான்கு, தாளக் கம்பி மூன்று என ஏழு தந்திகளைப் பொருத்துவார்கள்.

     இதுதான் வீணை.

     தஞ்சாவூர் வீணை

    





நண்பர் வீணை இராஜேந்திரன்

இதன் பழைய வடிவத்தைத் திருத்தி அமைத்தவர், பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையில் வாழ்ந்த, இரகுநாத நாயக்க மன்னர் ஆவார்.

தஞ்சாவூர் வீணை.

---

     அலுமினியத் தகட்டில் நிறமேற்றிய கண்ணாடித் துண்டுகளையும், இரசக் கண்ணாடித் துண்டுகளையும் பதித்துச் செய்யப்படுகிறது இந்தக் கண்ணாடித் தட்டு.

தஞ்சையில் மட்டுமே செய்யப்படுவதால்,

இந்தத் தட்டு,



தஞ்சாவூர் கண்ணாடித் தட்டு.

---

     நெல், அரிசி, சந்தனம், சவ்வாது, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றால், பூ மாலையில் இருந்து முற்றிலும் வேறுபட்ட நிலையில் அழகாகக் கட்டப்படுவது தஞ்சாவூர் மாலை.

இன்று பெருமளவு விழாக்களின்போது அணிவிக்கப்படும்

சந்தன மாலை,


தஞ்சாவூர் மாலைதான்.

---

     எப்படி, எவ்வளவு சாய்த்தாலும் விழாமல், இப்படியும் அப்படியும் ஆடி, இறுதியில் நேரான நிலைக்கு வந்து கம்பீரமாய் நிற்பவை தலையாட்டி பொம்மைகள்.

இப்பொம்மைகள் தஞ்சையில் மட்டுமே செய்யப்படுவதால்,

இவை


தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்.

---

     தஞ்சாவூர் என்றாலே, உடனடியாக அனைவர் மனதிலும், பளிச்சென்று முன்வந்து நிற்கும் தஞ்சைப் பெரியக் கோயில் போல,

     தஞ்சாவூர் தட்டு

     தஞ்சாவூர் வீணை

     தஞ்சாவூர் கண்ணாடித் தட்டு

     தஞ்சாவூர் மாலை

     தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

எனப் பல கைவினைப் பொருட்கள், தஞ்சையின் பெருமையினை, உலகு முழுவதும் உரத்து முழங்கி வருகின்றன.

     இத்துணைப் பொருட்களின் வரலாற்றையும், வகைகளையும், செய் முறையினையும், இக்கைவினைப் பொருட்களை தலை முறைகள் பல கடந்தும், செய்துவருகின்ற நாற்பத்து ஏழு குடும்பங்களைச் சார்ந்த, கைவினைக் கலைஞைர்களை பலமுறை நேரில் சந்தித்து, திரட்டப்பெற்றத் தரவுகளோடு, தலை நிமிர்ந்து நிற்கும் நூல் ஒன்றினைக் கண்டு வியந்து போனேன்.

     அட, நம்ம தஞ்சாவூர் தட்டு, நம்ம தஞ்சாவூர் வீணை, நம்ம தஞ்சாவூர் கண்ணாடித் தட்டு, நம்ம தஞ்சாவூர் மாலை, நம்ம தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை எனப் படித்துப் படித்து நெகிழ்ந்து போனேன்.

     கைவினைப் பொருட்களின் வகைகள், செய்முறையோடு நின்று விடாமல், இப்பொருட்கள் சார்ந்த கலைச் சொற்களையும், அகர வரிசையில் தொகுத்து, அரியதொரு நூலினை வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

கைவினைக் கலைச் சொல் அகராதி

     இந்நூலினை,

     அகராதி வளர்ச்சி வரலாறு

     கலைத் தொழில் உருவாக்க நெறிமுறைகள்

     கலைச் சொற்றொகுதி

என மூன்று பிரிவுகளாக வடிவமைத்து வழங்கியுள்ளார்.

     இவை மூன்றும், இதுவரை எங்கும், எதிலும், எவராலும் ஆவணப் படுத்தப்படவில்லை என்னும் செய்தியே, இந்நூலின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.

     இவர் இயல்பிலேயே ஆழமான ஆய்வு நுட்பம் கொண்டவர்.

     எதையும் தெளிந்து செய்பவர்.

     எடுத்துக் கொண்டப் பணியினை, மிகவும் நேர்த்தியாக, தன் உள்ளம் நிறைவு எய்தும் வரை, அயராமல் செய்பவர்.

     கல்வெட்டுகளைக் கசடறக் கற்றவர்.

     தஞ்சாவூர், மன்னர் சரசோசி அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர்.





முனைவர் சோ.கண்ணதாசன்

கைவினைக் கலைச்சொல் அகராதி

 

விலை ரூ.130

செல்ல தங்கம் பதிப்பகம்,

அம்மன்பேட்டை,

தஞ்சாவூர்- 205

அலைபேசி

90 25 17 12 57

மின்னஞ்சல்

skannadasantnj@gmail.com

  

25 கருத்துகள்:

  1. தஞ்சையின் பெருமையினை எடுத்துக்கூறும் சிறப்பான நூல். அருமையான நூலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா21 செப்டம்பர், 2023

    ஆகா! தஞ்சாவூர் தட்டு வரலாறு அருமை! என்னிடம் இரண்டு தட்டு இருக்கிறது! தஞ்சை புத்தக விழா, இலக்கிய விழாக்களில் பெற்றது! ஒளிப்படங்கள் நடுவில் மாட்டி வைத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  3. மிகமிக அருமையான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  4. நா. முத்துநிலவன்21 செப்டம்பர், 2023

    நா. முத்துநிலவன், புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா21 செப்டம்பர், 2023

    அற்புதமான விடயத்தை அழகாக படங்களுடன் விவரித்தமைக்கு நன்றி நண்பரே...

    கில்லர்ஜி தேவகோட்டை

    பதிலளிநீக்கு
  6. தஞ்சையின் மரபு கைவினைப் பொருட்களின் வகைகள் குறித்து மேலும் அறிய முடிந்தது, நன்றி

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பகிர்வு. படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  8. நம்ம ஊர்! சிறப்பான, சுவாரஸ்யமான தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  9. தஞ்சாவூர்க் கலைப் பொருட்களின் பெருமை அறிந்தோம். நன்றி

    பதிலளிநீக்கு
  10. மிக சிறப்பான பதிவு---பாராட்டுகள்--

    உடுவை.தில்லா.
    கொழும்பு
    இலங்கை.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு