02 மே 2025

முனியம்மா



     ஆண்டு 2011.

     அந்தத் தாய், தனது பத்து வயது மகனோடு, மெல்லப் படியேறி, முதல் தளத்தில் அமைந்திருந்த, அந்த அலுவலகத்திற்கு வருகிறார்.

     பார்த்தாலே தெரிகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்மணி.

     வயல் வெளிகளில், வெயிலைப் பொருட்படுத்தாமல், உழைத்து, உழைத்துக் கருத்தப் பெண்மணி.

     வாங்கம்மா, உட்காருங்கம்மா.

     உட்காராமல், நின்று கொண்டே பேசுகிறார்.

     ஆண்டுதோறும், நீங்கள் நடத்தும் கூட்டங்களுக்கு வர்ரேனுங்க.

     எங்கள் கிராமத்தில் இருந்து, இரண்டு பஸ் மாறி மாறிப் பயணித்து வருவேன்.

     நான்கு ஆண்டுகளுக்கும்முன், நடிகர் சிவக்குமார் மேடையில் அமர்ந்திருக்க, நீங்கள் பேசினீர்கள் அல்லவா?

     மிகுந்த பணப்பற்றாக்குறைக்கு இடையில்தான், ஆண்டுதோறும் இந்நிகழ்வினை நடத்தி வருகிறோம்.

     பலர் நுழைவுக் கட்டணம் வசூலிக்கலாம் என யோசனை கூறுகிறார்கள்.

     நுழைவுக் கட்டணம் வசூலிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

     விரும்புகிறவர்கள், ரூபாய் ஒரு இலட்சத்தை, தங்கள் பேரில், வங்கியில் டெபாசிட் செய்து, ஆண்டுதோறும் அத்தொகைக்கான வட்டி, நம் அமைப்பிற்கு வருமாறு முதலீடு செய்யலாம் என்று பேசினீர்கள் அல்லவா?

     பல்லாயிரம் பேர் அமர்ந்திருந்த, அந்தக் கூட்டத்தில், நான் உடனே எழுந்து, ஆகாயத்தைப் பார்த்து கை கூப்பி வணங்கினேன்.

     ஆண்டவா, என்னிடம் பணம் இல்லையே, என்ன செய்வேன் என கலங்கினேன்.

     புலம்பிக் கொண்டே வீடு திரும்பினேன்.

     தொடர்ந்து வருடந்தோறும், பேச்சுகளைக் கேட்க வந்துகொண்டுதான் இருக்கிறேன்.

     ஆனால் கொடுக்க பணமில்லையே என்ற கவலை மட்டும் தொடர்ந்தே வந்தது.

     மூன்று ஆண்டுகளுக்கு முன், என் கணவர், ஒரு சாலை விபத்தில் உயிரிழந்து விட்டார்.

     விபத்து குறித்த வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது.

     ஆண்டுக் கணக்கில் வழக்கு நீண்டு கொண்டே சென்றது.

     நமக்கு எதுவும் கிடைக்காது என நம்பிக்கையை நான் இழந்த நேரத்தில், வழக்கு முடிந்து, மூன்று இலட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

     ரூபாய் இரண்டு இலட்சத்தை நீதிமன்றமே வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு, மீதம் இருக்கும் ஒரு இலட்சத்தை எனக்குக் கொடுத்தது.

     நான் படிக்காதவங்க.

     புத்தகங்கள் படிக்கமாட்டேனுங்க.

     பேச்சு கேட்பேன்.

     தாங்கள் தொடர்ந்து நடத்தும் கூட்டங்களில் பேச்சுக் கேட்டுக் கேட்டு, எப்படி இருக்கிறேன் தெரியுமா?

     வேறொரு உலகத்தில் இருப்பதைப் போல் உணர்கிறேன்.

     எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும, எதிர்த்து நிற்கும் துணிச்சலை, நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.

     நான்கு வருடத்திற்குமுன், தாங்கள் மேடையில் கேட்டீர்களே, ஒரு இலட்சம்.

     அதைக் கொண்டு வந்திருக்கிறேன்.

     இந்தாங்க.

     மஞ்சள் பையில் இருந்தப் பணக்கட்டுகளை, மேசை மீது கொட்டினார்.

     அமைப்பாளர் பதறிப் போனார்.

     அம்மா, முதல்ல பணத்தை எடும்மா.

     வீட்டுக்காரர் இறந்துபோய்விட்டார். கிடைத்த மூன்று இலட்சத்தில், டெபாசிட் செய்தது போக தங்களிடம் இருப்பதே இந்த ஒரு இலட்சம்தான்.

     அதையும் உங்கள் குடும்பத்திற்கு என்று வைத்துக் கொள்ளாமல், கொண்டு வந்துவிட்டீர்களே.

     முதல்ல உங்க பணத்தை எடுங்கம்மா.

     அப்பெண் உறுதியாக மறுத்துவிட்டார்.

     இது உங்களுக்குத்தான், எடுத்துக் கொள்ளுங்கள், வருகிறேன்.

     எவ்வளவோ பேசிப் பார்த்தார்.

    அப்பெண் அசைந்து கொடுக்கவில்லை.

    வேறு  வழியில்லை அமைப்பின் நிறுவுநருக்கு.

     அலுவலகத்தில் இருந்து, அந்த அம்மாவுடன் ஒரு ஆளை அனுப்பி, ரூபாய் ஒரு இலட்சத்தை, அந்த அம்மாவின் பெயரிலேயே டெபாசிட் செய்து, ஆண்டுக்கு ஒரு முறை வட்டி மட்டும், அமைப்பின் கணக்கிற்கு வருமாறு கடிதம் எழுதிகொடுக்கச் சொன்னார்.

    அந்த அம்மாவும் எழுதிக் கொடுத்தார்.

     அமைப்பின் நிறுவுநர் மீண்டும் சொன்னார்,

     அம்மா தங்கள் பணம் முழுவதும், தங்கள் பெயரிலேயே இருக்கிறது., நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும், உங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

     இனி அந்தப் பணம் உங்களுதுங்க, என்னுதுல்ல

     உறுதியாய் கூறினார் அந்த அம்மா.

     ஆண்டுகள் பல கடந்த நிலையில், அமைப்பின் நிறுவுநரும் இந்நிகழ்வை மறந்தே போனார்.

     கடந்த மாதம், மகிழ்வுந்தில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் நின்ற ஒரு இளைஞரைப் பார்க்கிறார்.

     மனதில் மின்னல் வெட்டுகிறது.

     14 வருடங்களுக்கு முன், அந்த அம்மாவுடன் வந்த சிறுவன் போலத் தெரிகிறானே? என்று எண்ணி, மகிழ்வுந்தினை நிறுத்தி, இறங்கிச் சென்று, அவ்விளைஞனிடம் விசாரித்தார்.

     அது, நான்தான் சார், பணம் கொடுத்தது என் அம்மாதான்.

     நிறுவுநருக்கு மனமெங்கும் ஒரு மகிழ்ச்சி அலை..

     அம்மா எப்படி இருக்காங்க? நலமா?

     அம்மாவுக்கு முன்போல், உடல் நிலை சரியில்லை சார். அவ்வப்போது முடியும்போது கூலி வேலைக்குச் செல்கிறார். நான் இப்பொழுது, ஒரு புத்தகக் கடையில் வேலை செய்கிறேன். என் அம்மாவை நான் பார்த்துக் கொள்கிறேன்.

     அந்த இளைஞனின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொள்கிறார்.

     அடுத்தநாள், இவ்விளைஞனின் அலைபேசி மூலம், அத்த அம்மாவுடன் பேசுகிறார்.

     நலம் விசாரிக்கிறார்.

     அம்மா, அப்புறம் வங்கிக்குச் சென்றீர்களா?

     சார், நான் ஏன் சார் வங்கிக்குப் போகனும், அதான் உங்களுக்குக் கொடுத்துவிட்டேனே. அப்புறம் வங்கியில் எனக்கென்ன வேலை?

     நிறுவுநர் மலைத்துப் போகிறார்.

     வறுமை நிலையில் கூட, உடல் நலிவுற்றுப் போன நிலையிலும் கூட, கொடுத்தது கொடுத்ததுதான் என்ற உறுதியோடு வாழும் அந்தத் தாயின் குணம் கண்டு சிலிர்த்துப் போகிறார்.

     அந்த வள்ளல் தாயின் பெயர் முனியம்மா.

     வறுமையின் கோரப் பிடியில் இருந்தும், கணவரை இழந்த நிலையிலும், முனியம்மா, மனமுவந்து நிதி வழங்கிய அமைப்பின் பெயர் என்ன தெரியுமா?

மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு

பணத்தை வாங்கவே முடியாது, என முடிந்தவரை மறுத்தவர்

அந்த அமைப்பின் நிறுவுநர், தலைவர்

தமிழ்த்திரு த.ஸ்டாலின் குணசேகரன்

---

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கானப் பாராட்டு விழா

தேசிய அறிவியல் தினம்

கல்லூரி மாணவர்களுக்கானப் போட்டிகள்

பயிலரங்குகள்,  பயிற்சி முகாம்கள்

பாரதி விழா

உலகே வியக்கும் வகையில் ஆண்டு தோறும்

ஈரோடு புத்தகத் திருவிழா

     ஒவ்வொரு விழாவின் வடிவமைப்பும், நேர்த்தியும், நடத்தப்பெறும் விதமும், காண்போரிடம் வியப்பை ஏற்படுத்தும்.

     புத்தகத் திருவிழாவும், புத்தகத் திருவிழாவின்போது, நாள்தோறும் நடைபெறும் சொற்பொழிவும், அரங்க அமைப்பும், கூடும் கூட்டமும், கண்ணைக் கவரும் வண்ண விளக்குகளும், சுற்றிச் சுழன்று காட்சிகளைப் படம் பிடிக்கும் கேமராக்களும்,

மக்கள் சிந்தனைப் பேரவை

என்னும் இவ்வமைப்பு

அள்ள அள்ளக் குறையாத செல்வத்துடன்,

கோடிகளில் புரள்வதாகத்தான் தோன்றும்.

     ஆனால், கடும் பொருளாதார நெருக்கடியினைச் சந்தித்து, சந்தித்துதான், பல்வேறு இன்னல்களைச் சமாளித்து, சமாளித்துதான் செயலாற்றி வருகிறது என்பதுதான் உண்மை.

     தெளிவான குறிக்கோளும், தொலைநோக்குச் சிந்தனையும், இடைவிடாத செயல்பாடுகளையும் கொண்ட, மக்கள் சிந்தனைப் பேரவையின் சேவைத் திட்டங்களை முழுமையாகவும், சிறப்பாகவும் நிறைவேற்றிட,  மக்கள் சிந்தனை பேரவைக்கு, நிதி ஆதாரம் அவசியமாய் தேவைப்படுகிறது.

     இதற்காகவும், இன்னும் பல சமூக நலன் சார்ந்த முக்கிய சேவைத் திட்டங்களை நிறைவேற்றிட, மக்கள் சிந்தனைப் பேரவையானது, தற்பொழுது

புரவலர் திட்டம்

என்ற நன்கொடைத் திட்டத்தை தற்பொழுது முன்னெடுத்துள்ளது.

     இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ரூ.5000 நன்கொடை செலுத்த முன்வரும் ஆயிரம் நன்கொடையாளர்களை பேரவையின் புரவலர்களாக இணைத்துக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு ரூபாய் ஐயாயிரம்

ஆயிரம் புரவலர்கள்.

பேரவைக்கு அளிக்கப்படும் நன்கொடை தொகைகளுக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G) யின் படி வரிவிலக்கும் உண்டு.

---

கடந்த 27.4.2025 ஞாயிற்றுக் கிழமையன்று, முழு நாளும்,

ஈரோடு யு.ஆர்.சி., பழனியம்மாள் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் நடைபெற்ற,

மாநில பொதுக்குழுக் கூட்டத்தில்.

மாநில துணைத் தலைவரும்,

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான

பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் ஐயா,

பேரவையின் பொதுக்குழு உறுப்பினரும்,

தஞ்சை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவருமான

புலவர் மா.கோபாலகிருட்டினன்

பேரவையின் பொதுக்குழு உறுப்பினர்

திரு க.ஆசைத்தம்பி

ஆகியோரோடு சென்று, கலந்து கொள்ளும் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய

மக்கள் சிந்தனைப் பேரவையின் நிறுவுநர், தலைவர்

தமிழ்த்திரு த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள்,

பேரவையின் உண்மைப் பொருளாதார நிலையினையும்,

முனியம்மா அவர்களின்

வள்ளல் தன்மையினையும் எடுத்துரைத்தபோது,

அரங்கே வியப்பில் மூழ்கித்தான் போனது.

உடல் நலக்குறைவு காரணமாக, முனியம்மா அவர்களால், இப்பொதுக்குழுவில் கலந்து கொள்ள இயலா நிலையினைக் கூறி,


முனியம்மா அவர்களின் திருமகனை, தமிழ் மகனை

மேடையேற்றிய பொழுது,

அரங்கே கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

தங்கள் வறுமை நிலையினைச் சிறிதும் பொருட்படுத்தாது,

பேரவையினைத் தாங்கிப் பிடித்திருக்கும் எண்ணற்ற

முனியம்மாக்களின் வரிசையில், நாமும் இணைவோம்.

நம்மால் ஆன பங்களிப்பை வழங்கிப்

பேரவையை உயர்த்துவோம்.

 

மக்கள் சிந்தனைப் பேரவை,

மாநிலத் தலைமை அலுவலகம்,

A 47, சம்பத் நகர்,

ஈரோடு – 638 011.

தொலை பேசி 0424 2269186

மின்னஞ்சல்‘stalingunasekaran.t@gmail.com