11 மே 2013

கரந்தை மலர் 8



------. கடந்த வாரம் -----

தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.
-----------------------------
         
          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற இரண்டாம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த என்னும் இப்பாடல் சங்க மேடையில் கோலேச்சத் தொடங்கியது.

     சங்க விழாக்கள் அனைத்திலும், முதல் நிகழ்வாக நிராருங் கடலுடுத்த பாடல் பாடப் பெற்றது. நீராருங் கடலுடுத்தப் பாடலை, சங்க மேடையில் அரங்கேற்றியப் பெருமைக்கு உரியவர் கூடலூர் வே. இராமசாமி வன்னியராவார்.
 
கூடலூர் இராமசாமி வன்னியர்


     1938 ஆம் ஆண்டு நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது, வெளியிடப் பெற்ற கரந்தைக் கட்டுரை என்னும் பெயருடைய வெள்ளி விழா மலரில் இடம்பெற்றுள்ள முதல் கட்டுரை, நமது சங்கமும் தமிழ் வளர்ச்சியும் என்பதாகும். ,இக்கட்டுரையில் உமாமகேசுவரனார் குறிப்பிடுவதைப் பாருங்கள் சங்கத்தின் விழாக் காலங்களிலெல்லாம், கேட்போர் உள்ளம் கனிய, தமிழ்த் தெய்வ வணக்கத்தை இன்னிசையோடு, இருபத்து நான்காண்டுகளாக இடைவிடாது பாடி வந்த, உண்மைத் தமிழ்த் தொண்டர் கூடலூர் வே.இராமசாமி வன்னியரவர்களது இன்னிசையை இனி கேட்பதற்கில்லையே என்பதை எண்ணுந்தோறும் நம்மவருள்ளம் வருந்தாதிராது.

     சரி. இனி மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் யாரென்று சிறிது காண்போமா? வாருங்கள் கேரளத்தின் திருவிதாங்கூர் துறைமுகப் பட்டினமான ஆலப்புழைக்குச் சென்று வருவோம்.

மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை

     மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் நாஞ்சில் நாடு தந்த நற்றமிழர். 1855 முதல் 1897 வரை நாற்பத்தியிரண்டு ஆண்டு, குறை ஆயுளில் நிறை வாழ்வு வாழ்ந்தவர்.
 
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
     தனது நவீனக் கவிதை நாடகத்திற்கு மனோன்மணீயம் என்னும் அற்புதப் பெயர் சூட்டியவர். வரலாற்று ஆய்வு, நாடகம், கவிதை, ஆராய்ச்சி, உரைநடை, ஆங்கில நூலாக்கம் என பல துறைகளில் நூல்கள் பலவற்றை இயற்றிய பெருமைக்கு உரியவர்.

               அடியேன்  கடையேன்  அறியாச்  சிறியேன்
               கொடுமலையாளக்  குடியிருப்புடையேன்
               ஆயினும்  நீயே  தாயெனும்  தன்மையின்

என, மனோன்மணீயம் நாடகப் பாயிரத்தில் தழிழையேத் தனது தாயாகப் பாவித்துப் போற்றி, தான் பிறந்தது மலையாள நாடு என்பதையும் குறிப்பிடுகிறார் சுந்தரம் பிள்ளை.


                      ஊக்கம்  குன்றி  உரம்  குன்றி
                           ஓய்ந்த  தமிழர்க்  குணர்வூட்டி
                      ஆக்கம்  பெருக,  அறிவோங்க
                           ஆண்மை  வளரச்செய்து உலகியல்
                      மீக்கொள்  புகழைப்  பெற்றெழுந்த
                           வாரலோன்  நமது  சுந்தரனைப்
                      பாக்கள்  புனைந்து  மகிழ்ந்துநிதம்
                           பாடி  இனிது  போற்றுவமே

என்ற கவிமணியின் பாட்டிலிருந்தே மனோன்மணீம் சுந்தரம் பிள்ளையவர்களின் பெருமையினை நன்குணரலாம்.

     திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்  என்று உரைப்பதிலே தனி இன்பம் கண்டவர் மனோன்மணீம் சுந்தரம் பிள்ளை அவர்களாவார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்வு, சுந்தரம் பிள்ளை அவர்களின் திராவிடப் பற்றையும், அச்சமென்பதை அறியாத தூய தமிழ் மனத்தினையும், தெளிவாக விளக்கும்.

     வீரத்துறவி  விவேகானந்தர் 1892 இல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைக்கு, விவேகானந்தரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவனந்தபுரத்தில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த விவேகானந்தருடன், சுந்தரம் பிள்ளை, மதப் பற்று, இன உணர்வு, தத்துவம் பற்றி வாதப் பிரதிவாதம் புரிந்துள்ளார். உண்மையைத் தேடும் ஞானியல்லவா சுந்தரம் பிள்ளை.


     திருவனந்தபுரத்தில் விவேகாநனந்தர் தங்கியிருந்த நாட்களில் ஒருநாள், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் விருந்தினராக அவரது இல்லத்திற்கு வருகை தந்தார்.

    விருந்திற்குப் பிறகு சுவாமி விவேகானந்தரும், சுந்தரம் பிள்ளை அவர்களும் மகிழ்வோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விவேகானந்தர், சுந்தரம் பிள்ளையைப் பார்த்து, தங்கள் கோத்திரம் என்ன? என்று கேட்டார். சுந்தரம் பிள்ளை ஒரு நிமிடம் மௌனமானார். பின் நிகழ்ந்தவற்றைத் தன் குறிப்புப் புத்தகத்தில் சுந்தரம் பிள்ளை அவர்களே எழுதியுள்ளார். வாருங்கள் அப்பக்கத்தைப் புரட்டிப் பார்ப்போம்.

    உவப்போடு என்னுடன் பேசி மகிழும் உத்தம நண்பர் விவேகானந்தர் தங்கள் கோத்திரம் என்ன என்று வினா எழுப்பினார். வேறு ஒரு தினமாகில், வினாவினைக் கேட்ட நான் வெகுண்டிருப்பேன். உறவென விருந்துக்கு வந்த அந்த உயர்ந்த நண்பரிடம் நான் மெல்லிய குரலில், எனக்கும் கோத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தன்மானம் காக்கும் தென்னாட்டில் பிறந்த திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான், என ஆத்திரமின்றிக் கோத்திரக் கேள்விக்கு விடையளித்தேன்.

பார்த்தீர்களா, இவர்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை. இனி சங்க நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் வாருங்கள்.

தமிழவள் கமழ் மொழி

     சங்க மேடையில் நீராருங் கடலுடுத்தப் பாடலைப் பாடினால் மட்டும் போதுமா? தரணியெங்கும் இப்பாட்டுப் பரவ வேண்டாமா? தமிழின் புகழ் தலை நிமிர வேண்டாமா? அதற்கு என்ன செய்வது என்று எண்ணிய உமாமகேசுவரனாரின் எண்ணம் செயலாக்கம் பெற்றதை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை (1913) வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது பாருங்கள்.
சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அறிக்கை

     பழைய தமிழ் நூற்களைப் பரிசோதித்துப் பிரசுரித்து அவைகளை இறந்துபடாது காத்தலும், ஆங்கிலமாதிய பாஷைகளிலுள்ள பற்பல சாத்திர நூற்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலும், பின்னும் நம் தமிழ்ச் சகோதரர்களுக்கு ஏற்றன நாடி எழுதி வெளியிடுதலும் யாம் கொண்ட நோக்கங்களுள் மிக முக்கியமானவாயினும், ஊதியக் குறைவால் இத்துணையும் யாம் இவ்வழியில் நெடிது சென்றிலம். எனினும், தமிழவள் கமழ் மொழி என்றோர் வரிசைப் பிரசுரம் தொடங்கி, அவ்வரிசையில் முதன் முதலாக திருவனந்தபுரம் காலஞ்சென்ற கனம் சுந்தரம் பிள்ளையவர்கள்,எம்.ஏ., எழுதியுதவியதூஉம், கல்லையும் உருக்கவல்லதூஉமாகிய அருமைத் தமிழ்த் தெய்வ வணக்கத்தினை அச்சிட்டு வெளியிட்டோம்.
சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கை

     இதுமட்டுமல்ல, இதோ இப்பக்கத்தைப் பாருங்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாம் ஆண்டு அறிக்கையே (1917), நீராருங் கடலுடுத்த என்னும் பாடலுடன்தான் தொடங்குகின்றது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தாய்ச் சங்கமாகக் கொண்டு பல ஊர்களிலும் , சங்கத்தின் கிளைகள் தோன்றி நடைபெற்ற காலம் அது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அக் கிளைச் சங்கங்கள் நடத்தும் விழாக்களிலும், நீராருங் கடலுடுத்த பாடலே தமிழ்த் தாய் வாழ்த்தாக முன்னிலைப் படுத்தப் பெற்று பாடப் பெற்றது.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்து, ஆண்டு விழாக்களில் கலந்து கொள்ளாத தமிழறிஞர்களே இல்லை என்று கூறத்தக்க வகையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், தமிழறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் சங்க விழாக்களில் பங்கு கொண்டனர். இவ்வாறு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களில் கலந்து கொண்ட தமிழறிஞர்கள், தங்கள் பகுதிகளில், தாங்கள் நடத்தும் விழாக்களிலும் நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் பாடலை முதல் நிகழ்வாகப் பாடி விழாவினை நடத்தத் தொடங்கினர். இதன் விளைவாக நீராருங் கடலுடுத்த பாடலானது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது.

அரசு ஆணை

     1967 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. 6.3.1967 இல் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராய் பொறுப்பேற்றார்.

     பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராய் பொறுப்பேற்றபின் அரசு விழாக்கள், தமிழ் மொழியினைச் சிறப்பிக்கும் பாடல் ஒன்றுடன் தொடங்கப்படுமேயானால், தமிழ் மொழியின் சிறப்பு பாமரர்களையும் சென்றடையும் என்று எண்ணினார். அதற்குரிய பாடலைத் தேர்ந்தெடுக்க எண்ணி, பல பாடல்களை ஆராய்ந்த பொழுது, இரண்டே இரண்டு பாடல்கள்தான் அண்ணாவின் கவனத்தையும், மனதையும் ஒருசேரக் கவர்ந்திழுத்தன.

     முதல் பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தால், தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்யப் பெற்ற, மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய நீராருங் கடலுடத்த என்னும் பாடல்.

     இரண்டாவது பாடல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சொந்தப் பாடல். ஆம், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளர், கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல்தான் அது..

          வானார்ந்த  பொதியின்மிசை  வளர்கின்ற  மதியே
                மன்னியமூ  வேந்தர்கடம்  மடிவளர்ந்த  மகளே
          தேனார்ந்த  தீஞ்சுனைசால்  திருமாலின்  குன்றம்
                தென்குமரி  யாயிடைநற்  செங்கோல்கொள்  செல்வி
          கானார்ந்த  தேனே  கற்கண்டே  நற்கனியே
                கண்ணே  கண்மணியே  அக்கட்புலம்சேர்  தேவி
          ஆலாத  நூற்கடலை  அளித்தருளும்  அமிழ்தே
                அம்மே  நின் சீர்முழுதும்  அறைதல்யார்க்  கெளிதே?

....... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.

03 மே 2013

கரந்தை . மலர் 7


----------- கடந்த வாரம் ---------
உமாமகேசுவரனார் அவர்கள், சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே, சங்கத்திற்கென்று தனியொரு நூல் நிலையம் அமைக்குள் பணியினைத் தொடங்கினார்.
-----------------------------------

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்காகச் சேகரித்து வைக்கப் பெற்றிருந்த தொகையில் இருந்து, ஒரு பகுதி செலவிடப்பெற்று 20 புத்தகங்கள் வாங்கப்பெற்றன. கரந்தைக் கவியரசு என பின்னாளில் போற்றப் பெற்ற மோகனூர் வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பதிப்பில் ஏழு புத்தகங்களை வாங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கென்று வழங்கினார். கரந்தை, மளிகை வீ. சுப்பராய பிள்ளை அவர்கள் 17 புத்தகங்களையும், கும்பகோணம் மண்டல அலுவலகத்தில், தலைமை எழுத்தராகப் பணியாற்றிய ஏ.பாலகிருட்டினன் அவர்கள் 4 புத்தகங்களையும், திருச்சி டி.என். சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் 10 புத்தகங்களையும், கரந்தை லேவாதேவி பா.நா. சிவகுருநாத பிள்ளை அவர்கள் 4 புத்தகங்களையும், கரந்தை முருகேசன் அவர்கள் 6 புத்தகங்களையும், கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர்.

                   எங்கள்சங்க  மெழிலுடன்  வளருமா
                   றிங்கதன்  போஷகனாக  இயைந்துளோய்
                   தங்கு  கோபாலசாமியை  முன்னிய
                   துங்க  ரகுநாதப் பெயர்கொடுதோற்றியோய்
                   எங்கள்  புத்தகசா  லையைச்
                   செங்கமரமதுகொடு  திறக்க நீவருகவே

எனக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார் வரவேற்க, கரந்தைத் தமிழ்ச் சங்க ஆதரிப்பாளர்களுள் ஒருவராகிய, அரித்துவார மங்கலம், பெருவள்ளல் திருவாளர் கோபாலசாமி இரகுநாத இராசாளியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்க நிதியில் இருந்து வாங்கப் பெற்ற இருபது புத்தகங்கள், மற்றும் அன்பளிப்பாகப் பெறப்பெற்ற நாற்பத்தி எட்டு புத்தகங்கள் என, அறுபத்தி எட்டு புத்தகங்களுடன் கூடிய, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம் என்னும பெயருடைய நூலகத்தைத் திறந்து வைத்தார்.



     சங்கத்திற்கெனத் தனியொரு இடம் இல்லாமையால், சங்கக் கூட்டங்களும் பிறவும், கந்தப்பச் செட்டியார் சத்திரத்திலேயே நடைபெற்று வந்தன. இச் சத்திரமானது திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு வாடகைக்கு விடப்படும் பொழுது, சங்கப் பணித் தொடர்பாக யாரும் சத்திரத்தைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுண்டு.

    மேலும் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவானது இச்சத்திரத்தில் மிகவும் சிறப்புடன் நடைபெறும். நவராத்திரி நாட்களில் ஆளுயர பொம்மைகளைக் கொண்டு ராமர் பட்டாபிசேகக் காட்சி, வனவாசம் செல்லல், மகாபாரதக் காட்சிகள், நல்லதங்காய் குழந்தைகளை கிணற்றில் போடும் காட்சிகள் என பல காட்சிகள், காண்போரைக் கவரும் வண்ணம் மிகவும் உண்மைத் தன்மையுடன் அலங்கரித்து வைக்கப் பட்டிருக்கும், தஞ்சை மக்கள் அனைவரும், இந்நாட்களில் இச் சத்திரத்திற்கு வருகை தந்து கொலு காட்சிகளைக் கண்டு மகிழ்வர்.  
 
நூலகம் முதன் முதலில் தொடங்கப் பெற்ற உமாமகேசுவரனார் இல்லம்
     இதனால் சங்கத்திற்கு என்று வாங்கப்பெற்ற மேசை, நாற்காலிகள் மற்றும் அலமாரிகளைக் கூட தொடர்ந்து சத்திரத்தில் வைத்துப் பாதுகாக்க முடியாத நிலை. இதனால் கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகமானது, கரந்தை சேர்வைகாரன் தெருவில் உள்ள, உமாமகேசுவரனார் அவர்களின் இல்லத்திலேயே செயல்படத் தொடங்கியது. இரண்டாம் ஆண்டில் புத்தகங்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. 1913-14 ஆம் ஆண்டில் வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் பதிப்பிக்கப்பெற்ற நூல்களில் 38 நூல்களையும், செந்தமிழ் இதழ்களின் 11 தொகுதிகளையும் விலைக்கு வாங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்க நூலகத்திற்கு வழங்கினார்.

     1915 ஆம் ஆண்டில் உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியின் பயனாக, கரந்தை கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் சுப்பராயலு நாயுடு அகியோரின் உதவியுடன், தர்மாபுரம் உதவி ஆட்சியர் வேங்கடசாமி நாயுடு அவர்கள், கரந்தைக் கடைத் தெருவில் அமைந்திருந்த, காலஞ்சென்ற வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமாகிய சத்திரத்தை, சங்கத்தின் உபயோகத்திற்காக ஆறு ஆண்டுகளுக்கு, வாடகை ஏதுமின்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி உதவினார். இதனைத் தொடர்ந்து கரந்தைக் தமிழ்ச் சங்கக் கலா நிலையமானது, இச்சத்திரத்திற்கு மாற்றம் செய்யப்பெற்றது. புத்தகங்களின் எண்ணிக்கையும் 929 ஆக உயர்ந்தது. நூலகம் செயல்பட தனித்த இடம் கிடைத்தமையைத் தொடர்ந்து, தஞ்சையில் புத்தக சாலைகள் இல்லாத குறையினை நீக்க வேண்டி, சங்கத்தின் உறுப்பினர் அல்லாதவரும், இந்நூலகத்தில் சந்தாதாரராகி நூல்களைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பெற்றது.

நூலகம் இயங்கிய வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமான சத்திரம்

     மேலும் இவ்வாண்டிலேயே ஒரு இலவசப் படிப்பகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. சங்கத்தின் அங்கத்தினர் மட்டுமல்லாது, அனைவரும் யாதொரு சந்தாவும் செலுத்தாமல், இலவசமாகவே இப்படிப்பகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பெற்றது. இப்படிப்பகத்திற்கென, சங்கத் தலைவர் உமாமகேசுவரனார் அவர்கள் தனது சொந்த செலவில், Justice, Mysore university Magazine, Furgusson College magazine முதலிய ஆங்கில பத்திரிக்கைகளையும், தமிழர் நேசன், சித்தாந்தம், கிருஷிகன் முதலான தமிழ் இதழ்களையும் தொடர்ந்து வாங்கி வழங்கினார்.

     சங்க அன்பர் அ. கந்தசாமி பிள்ளை அவர்கள், சைபச் பிரகாசம் இதழினை வழங்கியுதவினார். மேலும் சங்கத்தின் சார்பில் ஞானசாகரம், தமிழன், நல்லாசிரியன், விவேக சிந்தாமணி, மனோரங்சனி, செந்தமிழ் மற்றும் நாளிதழ்களான சுதேசமித்திரன், திராவிடன் மற்றும் Mysore Economic Journel, Madras Mail  இதழ்களும் வாங்கப்பெற்றன.

     1925 அம் ஆண்டு சங்கத்தின் சார்பில் தமிழ்ப் பொழில் என்றும் திங்கள் இதழ் வெளிவரத் தொடங்கியதும், மாற்றிதழ்களாக, செந்தமிழ்ச் செல்வி, தமிழர், தமிழர் நேசன், செந்தமிழ், தொழிற் கல்வி, ஸ்ரீராம கிருட்டின விசயம், புதுயுகம், மாருதி, கிராமப் பஞ்சாயத்து, அரிசமய திவாகரம், கலா சிந்தாமணி, தாருஸ் இஸ்லாம்,ஆரம்ப ஆசிரியன், ஆனந்த போதினி, ஒற்றுமை, நச்சினார்க்கு இனியன், இய்தியத் தாய், வைத்தியச் சந்திரா, குடியரசு, அகிலாபானு, தேச பக்தன், யதார்த்தவசனி போன்ற இதழ்கள் படிப்பகத்திற்குத் தொடர்ந்து தருவிக்கப்பட்டன. அ.பொன்னண்ணாக் களத்தில் வென்றார் என்பார் இப்படிப்பகம் மற்றும் நூல் நிலையத்தின் மேற்பார்வையாளர் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பித்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், இலவச படிப்பிடத்தின் உபயோகத்தைக் கண்டறிந்து மதித்து, இப்படிப்பகத்தை மேம்படுத்த விரும்பிய, தஞ்சை நகர் பரிபாலன சமையினர் (நகராட்சி நிர்வாகத்தினர்) 1917 அம் ஆண்டு முதல் வருடத்திற்கு நூறு ருபாய் அளித்து உதவத் தொடங்கினர். தஞ்சாவூர் நகராட்சி நிர்வாகத்தினர், கரந்தைத் தமிழ்ச் சங்கப் படிப்பிடத்திற்கு வழங்கும் உதவித் தொகைக்கு சென்னை அரசாங்கத்தாரும் அங்கீகாரம் வழங்கினர்.

நீராருங் கடலுடுத்த...

          கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றிய நாளிலிருந்தே, தமிழின் பெருமையினைத் தமிழர்க்கு உணர்த்த உமாமகேசுவரனார் கையில் எடுத்த பேராயுதம் விழாக்களாகும். திங்கள் தோறும் விழாக்கள் நடத்தி, தமிழ்ப் பெருமக்களை அழைத்து, தமிழின் பெருமையினைக் கல்லாதவர்களும் உணரும்படிச் செய்தார்.

     ஆயினும் உமாமகேசுவரனாருக்கு ஒரு மனக்குறை நெஞ்சை நெருடிக் கொண்டே இருந்தது. அக்காலத்தில் கோயில் திருவிழாக்களின் போது, கதா காலேட்சபங்கள்  நடைபெறும். மகா பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களையும், அரிச்சந்திரன் கதையினையும், உரை நடையும், பாட்டும் கலந்த நடையில் கதா காலேட்சபமாய் விளக்குவர். விடிய விடிய மக்களும் அயராது கண் விழித்து கதை கேட்டு மகிழ்வார்கள். பிறப்பு முதல் இறப்பு வரை பாட்டோடு ஒன்றிய இனமல்லவா நமது தமிழினம்.

     எனவே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் விழாக்களை, தமிழின் பெருமையினைப் பறைசாற்றும், ஓர் இனிய பாட்டுடன் தொடங்கினால் என்ன? என்ற எண்ணம் உமாமகேசுவரனாரின் உள்ளத்தே உரு பெற்றது.

     உமாமகேசுவரனார் தினமும் அதிகாலையில் தூய வெண்ணீறு துதைந்த பொன் மேனியராய் தேவார, திருவாசகத்தையும், இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பாவையையும், உளமுருகப் பாடிக் களிப்புறும் நல் மனத்தினர்.

     தேவாரம், திருவாசகம், திருவருட்பாவிற்கு இணையாக, உமாமகேசுவரனாரின் உள்ளத்தை உருக்கிய பாடல், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலாகும்.

          நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தைக்  கெழிலொழுகுஞ்
          சீராரும்  வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதிற்
          றக்கசிறு  பிறைநுதலுந்  தரித்தநறுந்  திலகமுமே
          தெக்கணமு  மதிற்சிறந்த   திரவிடநற்  றிருநாடும்
          அத்திலக  வாசனைபோ  லனைத்துலகு  மின்பமுற
          எத்திசையும்  புகழ்மணக்க  விருந்தபெருந்  தமிழணங்கே

..... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்த சனிக் கிழமைச் சந்திப்போமா.



27 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 6


--------. கடந்த வாரம் --------
உண்மையின் உறைவிடமாய் விளங்கிய உமாமகேசுவரனாருக்கும், மாவட்ட துணை ஆட்சியாளருக்கும், ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே, தன் வேலையே வேண்டாமென்று உதறித் தள்ளினார்.
-------------------------------
   
     பின்னர் சென்னை சென்று, சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். சட்டப் படிப்பினை வெற்றிகரமாக முடித்த உமாமகேசுவரனார், கரந்தை திரும்பி, அந்நாளில் சிறந்து விளங்கிய வழக்கறிஞர் கே.சீனிவாச பிள்ளை என்பாரிடம் சேர்ந்து, வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். சில ஆண்டுகளிலேயே சட்ட நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, தனியே வழக்குரைஞர் தொழிலைச் செய்யத் தொடங்கினார்.

     உமாமகேசுவரனார் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கியபோது, ஒருசில தமிழர்களே வழக்கறிஞர்களாய் இருந்தனர். ஏ.டி.பன்னீர் செல்வர், ஐ.குமாரசாமி பிள்ளை, மருத முத்து மூப்பனார், அழகிரி சாமி நாயுடு, எம்.வேங்கடாசலம் பிள்ளை என விரல் விட்டு எண்ணிவிடலாம்.

     பெயர்ப் பலகைக் கூடத் தொங்க விடாமல், ஏறத்தாழ முப்பத்தியிரண்டு ஆண்டுகள், திறம்பட வழக்கறிஞராயய் பணியாற்றியவர் உமாமகேசுவரனார்.

     இடையறா உழைப்பு, உண்மைக்காகவும், நேர்மைக்காகவும் மட்டுமே வாதிடும் உயரிய குணம், அச்சம் என்பதை என்னவென்றே அறியாத உள்ளம் இவையே வழக்கறிஞர் உமாமகேசுவரனாரின் பண்புகளாகும்.

     எக்கட்சிகாரரிடமும் வழக்காடுவதற்கு உரிய தொகை இவ்வளவு என ஒருபோதும் கூறமாட்டார். பணம் கொடுக்க இயலாத ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்காக, எவ்விதத் தொகையும் பெறாமல் வழக்காடி வெற்றி தேடித் தருவார்.

     இவ்வாறான தன்மைகளால் அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்திற்கும் நம்பிக்கையானவராகத் திகழ்ந்தார். இதனாலேயே அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவியும் இவரை நாடி வந்து பெருமையடைந்தது.

     இத்தகு பெருமை வாய்ந்த, தகுதி வாய்ந்த, தனது சகோதரரைத்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக்க இராதாகிருட்டினன் உளம் கொண்டார். தனது சகோதரரை, நண்பர்களோடு சேரந்து சென்று சந்தித்து, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின தலைமைப் பொறுப்பினை ஏற்றிட ஒப்புதலைப் பெற்றார்.

     இவ்வாறாக, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெற்றிட, அனைத்து நிலைகளிலும் அயராது உழைத்தமையால் இராதாகிருட்டினனை சங்கம் நிறுவிய துங்கன் என அனைவரும் போற்றலாயினர்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம்

         
நாவலர் ந.மு.வே
தஞ்சாவூர், கரந்தை, கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில், 1911 ஆம் ஆண்டு மே திங்கள் 14 ஆம் நாள், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா சிறப்பாக கொண்டாடப் பெற்றது.


    
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடக்க விழா நடைபெற்ற கந்தப்ப செட்டியார் சத்திரம் இன்று பாழடைந்த நிலையில்
கரந்தைத் தமிழ்ச் சங்கம், என்றென்றும் வளர் பிறையாய் வளர, தமிழ் மொழியின் இழந்த பெருமைகளை மீட்க, கீழ்க் கண்டோர், கரந்தைத் தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றனர்.
 
இராசாளியார் மற்றும் பெத்தாச்சி செட்டியார்
ஆதரிப்பாளர்கள்

அரித்துவார மங்கலம், பெருநிலக் கிழார்,
பெருவள்ளல் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

ஆண்டிப்பட்டி, பெருநிலக் கிழார்,
பெருவள்ளல் சா.ராம.ழ.சித. பெத்தாச்சி செட்டியார்



சபைத் தலைவர்

திரு த.வே. உமாமகேசுவரம் பிள்ளை

உதவி சபைத் தலைவர்

மோகனூர் ஆர். வேங்கடாசலம் பிள்ளை

காரியதரிசி

திரு பி.கல்யாண சுந்தரம் பிள்ளை

உதவிக் காரியதரிசி

திரு கோவிந்தசாமி பிள்ளை

பொருளாளர்

திரு எஸ். தட்சிணாமூர்த்தி பிள்ளை

விகிதர்

திரு அ. கணபதி பிள்ளை

அங்கத்தினர்கள்

திரு த.வே.இராதாகிருட்டின பிள்ளை
திரு பா.சிவகுருநாத பிள்ளை
திரு ஆர். கிருட்டினசாமி பிள்ளை
திரு ஜி. மாது சாமி வன்னியர்
திரு டி.கே. இராமசாமி பிள்ளை
திரு மகா தேவ ராவ்
திரு கி. நாக பிள்ளை
திரு பி.வேங்கடாசலம் பிள்ளை
திரு அயில் செட்டியார்
பட்டுக்கோட்டை திரு வி. நாராயண சாமி பிள்ளை
பட்டுப் கோட்டை திரு துரைசாமி நாயுடு
கரந்தை திரு முருகேசன்

கௌரவ அங்கத்தினர்கள்

திரு சேதுராம பாரதியார்
திரு அர்.சுப்பிரமணிய அய்யர்
திரு உ.நா.அப்பாசமி அய்யர்
திரு ஐ.சாமிநாத முதலியார்
திரு எல்.உலகநாத பிள்ளை
திரு சோமநாத ராவ்
திரு மு.வேங்கடசமி நாட்டார்
திரு ஜோசப் பிள்ளை
திரு வீ.சுப்பராய பிள்ளை
திரு பழனி வேலு பிள்ளை
திரு ஆ.வை. இராமசாமி பிள்ளை
திரு மரு.குப்பு சாமி பிள்ளை
திரு நா.அ.மு. திருவேங்கடம் செட்டியார்
திரு இராமசாமி வன்னியர்
திரு சிவஞானம் பிள்ளை
திரு மு.ஆப்பிரகாம் பண்டிதர்
உக்கடை திரு பாப்பா நாடு சமீன்தார்
திரு வி.ஏ. வாண்டையார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற பிறகு, வித்தியா நிகேதனம் சரியாக செயல்படாது போயிற்று.  ஆயினும் வித்தியா நிகேதனத்தின் தலைவர் இராசாளியார் அவர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பேரில், எவ்வித மன வருத்தமும் அடையாது, வேண்டும் உதவிகளைச் செய்து வந்தார்.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் திங்கள் தோறும் கூட்டங்கள் நடத்துவதென்றும், ஆண்டுதோறும் ஆண்டு விழாக்கள் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பெற்றது.

     மக்கள் வேற்று மொழிச் சொற்கள் கலக்காத தூய தமிழில் பிழையின்றிப் பேசுமாறும், எழுதுமாறும் செய்வதே கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் குறிக்கோள் ஆயிற்று. தமிழகத்தின் தெருக்களில் தமிழ்தான் இல்லை என்னும் இழி நிலையினைப் போக்க வேண்டும் என்பதற்காகக், கரந்தைத் தமிழ்ச் சங்கம்  வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது.

      ஆண்டுதோறும் நடைபெற்ற ஆண்டு விழாக்களில், தமிழகத்துப் பெரும் புலவர்கள் அனைவரும் வந்து பங்கேற்றனர். தமிழ்ப் புலவர்கள் ஓரிடத்தில், ஒன்று கூடுவதற்குக் கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழி செய்தது. தமிழைத் தமிழர்களே கற்காது புறக்கணித்தபோது, தமிழில் பேசுதல் கற்றவர்களுக்கு இழுக்கு என்ற கருத்து, வேரூன்றத் தொடங்கிய போது, அழகிய தமிழ்ச் சொற்களின் இடத்தினை, வடமொழிச் சொற்களும், ஆங்கிலச் சொற்களும் பிடித்து அரசாளத் தொடங்கியபோது, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அயராயப் பணிகள் , தமிழக மக்களிடத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கின.

     தமிழும், வடமொழிச் சொற்களும் கலந்து பேசும் மணிப் பிரவாள நடை மறைந்து, தூய தனித் தமிழில் பேசும் பேச்சு வழக்கு உண்டாயிற்று. இந்த தனித் தமிழ் நடை, கரந்தை நடை என்றே போற்றப் பெற்றது.

     விவாக சுபமுகூர்த்தப் பத்திரிக்கை என்னும் சொல் மறைந்து, திருமண அழைப்பிதழ் என்னும் சொல் தோன்றியது. மகாராய ராய ஸ்ரீ போய் திருவாளர், திரு என்னும் தமிழ்ச் சொற்கள் வழக்கத்திற்கு வந்தன. பிரசங்கம் என்பது சொற்பொழிவு ஆயிற்று, அக்கிராசனாதிபதி தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆகவும், பொக்கிஷத்தார் பொருளாளராகவும் மாறிப் போனார். சீமான், சீமாட்டி என்ற செற்கள் போய் திரு, திருமதி, என்னும் சொற்களும், செல்வன், செல்வி போன்ற எண்ணற்ற தூய தமிழ்ச் சொற்களும் வழக்கிற்கு வந்தன.

     சங்கம் தோன்றிய நாளில், உதவி சபைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட, மோகனூர் ஆர்.வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், 1913 ஆம் ஆண்டிலிருந்து செயலாளர் பொறுப்பேற்று செம்மாந்தப் பணியாற்றத் தொடங்கினார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கக் கலா நிலையம்

     உலக மொழிகளுள் உயர் மொழியாய் வீற்றிருந்த தமிழ் மொழி, மீண்டும் அவ்வுயர்வைப் பெற வேண்டும் என்ற ஆராத காதலினாலும், தமிழ் மக்கள் கலை நயம் முதலிய எல்லா நலங்களையும் பெற்று, உலக மக்களுள் ஒருவராகக் கருதப்பட வேண்டும் என்னும் கருத்தினாலும், உமாமகேசுவரனார் அவர்கள், சங்கம் தொடங்கப்பெற்ற முதலாண்டிலேயே, சங்கத்திற்கென்று தனியொரு நூல் நிலையம் அமைக்கும் பணியினைத் தொடங்கினார்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. நூலகம் ஒன்றினைத் தொடங்க எண்ணி முயற்சி மேற்கொண்ட உமாமகேசுவரனார், சேகரித்த நூல்களை அடுக்கி வைப்பதற்குக்கூட இடம் இல்லாமல் தவித்த தவிப்பை அடுத்தவாரம் பார்ப்போமா நண்பர்களே.

20 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 5



---------- கடந்த வாரம் ----------
நாம் எதற்காக இவர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும்? இந்த அமைப்பினின்று விலகி, நாமே நமக்காக ஒரு புதியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, நம்மால் இயன்றப் பணிகளைச் செய்தால் என்ன?
-----------------------------------   

               இளைஞர்கள் அனைவரும் இராதாகிருட்டினன் கருத்தை வரவேற்றனர். இராதாகிருட்டினனின் முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் அளிப்பதாக உற்சாகமுடன் உறுதியளித்தனர்.

     எனவே புதியதொரு தமிழ்ச் சங்கம் தொடங்குவதென்று அனைவரும் முடிவெடுத்தனர். புதிய தமிழ்ச் சங்கத்திற்குப் பெயர் வைக்க வேண்டுமல்லவா? என்ன பெயர் வைக்கலாம் என்று அனைவரும் ஆலோசனை நடத்தினர். தமிழகத்துத் தமிழர்களிடம், தமிழுணர்ச்சியைத் தட்டிய எழுப்பிய சங்கம் மதுரைத் தமிழ்ச் சங்கமல்லவா? எனவே மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பெயரினைப் பின்பற்றி, இப்புது சங்கம், கரந்தையில் செயல்பட இருப்பதால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் எனப் பெயரிடுவது எனத் தீர்மானித்தனர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, எந்நாளும் நிலைத்து நின்று தமிழ்ப் பணியாற்ற வேண்டுமென்று இராதாகிருட்டினன் விரும்பினார். எனவே இச்சங்கத்திற்கு, அரசு விதிகளின்படி, தலைவர், துணைத் தலைவர், செயலாளர் முதலானோரைத் தேர்ந்தெடுக்க எண்ணினார்.

     இளைஞர்கள் அனைவரும், இராதாகிருட்டினனே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினைத், தலைமையேற்று நடத்த வேண்டும் என வற்புறுத்தினர்.

      நண்பர்களின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இராதாகிருட்டினன், அதற்கானக் காரணங்களை விவரித்தார். நான் தற்சமயம் தனுக்கோடி கடற் சுங்கத்  ஆய்வுக் கழகத் தலைமை தாளாளராகப் பணியாற்றி வருகிறேன். அரசு உத்தியோகம் என்பதால், இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, பணியிட மாறுதல் காரணமாக, பல்வேறு ஊர்களுக்கும் சென்று பணியாற்ற கடமைப் பட்டுள்ளேன். அதனால் கரந்தையில் நிரந்தமாய் தங்கி என்னால் பணியாற்ற இயலாது. நாம் உருவாக்க நினைக்கும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தலைமை ஏற்பவர், கரந்தையில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.

      மேலும் தற்பொழுது ஆங்கிலேயர் ஆடசி நடைபெறுவதால், தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக, ஆங்கிலேயர்களின் உதவியினை நாட வேண்டியிருக்கும். எனவே தமிழ்ப் புலமையோடு, ஆங்கிலத் திறமையும் கைவரப் பெற்ற ஒருவரே இச்சங்கத்திற்குத் தலைமை ஏற்கத் தகுதியானவராக இருப்பார் என எண்ணுகிறேன்.

     தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மிகச் சிறந்த புலமை மிக்கவரும், தஞ்சையின்  புகழ் பெற்ற நேர்மையான வழக்கறிஞருமான, எனது சகோதரர் திரு த.வே. உமாமகேசுவரனார் அவர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைமையினை ஏற்கத் தகுதியானவர் என உளப்பூர்வமாக நம்புகிறேன்.

     உமாமகேசுவரனாருக்கு உற்றத் துணையாய் இருந்து, சங்கத்தை வளர்த்திட, இழந்த தமிழின் பெருமைகளை மீட்டிட, முழுவதும் தகுதியானவராகிய, எனது ஆருயிர் நண்பர் கவிஞர் அரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், சங்கத் துணைத் தலைவர் பொறுப்பினை ஏற்றுச் சிறப்பிக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன் என உரைத்தார்.

     இராதாகிருட்டினனின் கருத்தை நண்பர்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றனர். உமாமகேசுவரனாரைத் தலைவராகவும், அரங்க.வேங்கடாசலம் பிள்ளை அவர்களைத் துணைத் தலைவராகவும் கொண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்குவது என்று முடிவு செய்தனர்.

த.வே. உமாமகேசுவரனார்

                    தூயவெண்  ணிறுதுதைந்த  பொன்
                        மேனியும்  தாழ்வடமும்
                 நாயகன்  சேவடி  தைவர
                        சிந்தையும்  நைந்தருகிப்
                 பாய்வது  போலன்பு  நீர்பொழி
                        கண்ணும்  பதிகச்  செஞ்சொல்
                 மேயசெவ்  வாயுமுடையார்
                        புகுந்தனர்  வீதியுள்ளே

என்னும் திருநாவுக்கரசர் புராணச் செய்யுளை நினைவூட்டும் வகையில், சிவமணக்கும் இன்சொல், உருமணக்கும் திருநீறு, இயலருள் ஒழுகும் கண்கள், அருள் மணக்கும் திரு நோக்கு, இளநகை செவ்வாய், சொற்பொறுக்கும் செவிகள், வீரவுரை நவிலும் நாக்கு, செம்பாகத் தமிழ் பேசி சிரிப்புக் காட்டும் முகம், எடுப்பான திருஉருவம் உடையவர் உமாமகேசுவரனார்.

     வேம்பப் பிள்ளை காமாட்சி அம்மையார் தம்பதியினரின், மகனாக 1883 ஆம் ஆண்டு மே திங்கள் 7ஆம் நாள் உமாமகேசுவரனார் தோன்றினார்.
 
உமாமகேசுவரனார்
     உமாமகேசுவரனாரின் மூத்த சகோதரி தர்மசம்வர்த்தினி ஆவார். உமாமகேசுவரனாருக்கு அடுத்து தோன்றியவர்கள் மூவர். அவர்கள் இராதாகிருட்டினன், கோபால்சாமி, செண்பக வள்ளி ஆகியோராவார்.

     உமாமகேசுவரனார் தனது சிறு வயதிலேயே, உடன் பிறந்த தமையன் கோபாலசாமி என்பாரை இழந்தார். சிறிது காலத்திலேயே, தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது அருமை அன்னையாரை இழந்தார். வயது பன்னிரெண்டில் தனது பாட்டனார் வைத்தியலிங்கம் பிள்ளையை இழந்தார். பாட்டனாரை இழந்த 14 வது நாளிலேயே தனது தந்தையையும் இழந்தார்.


      கரந்தையில் தனது சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் வாழ்ந்தார். இவது சித்தப்பா வீ.சுப்பராய பிள்ளையோ பெரு வணிகர். இவருக்கு உமாமகேசுவரனாரை வணிகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். ஆனால் சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையாருக்கோ, உமாமகேசுவரனைப் படிக்க வைக்க வேண்டும் ஆவல் 

     தனது கணவரிடத்தில் பேசினார் வென்றார். உமாமகேசுவரனார் தூய பேதுரு கல்லூரியில் கல்வி பயின்றார். இவருக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் சண்முகம் பிள்ளை என்பவராவார். இச் சண்முகம் பிள்ளை, உமாமகேசுவரனாரின் தந்தை வேம்பப் பிள்ளையின் வகுப்புத் தோழராவார்.

     இதனால் தனது நண்பரின் மகனை ஆங்கிலத்தில் மிகச்சிறந்த அறிவுள்ளவனாக்க வேண்டும் என்ற உறுதியுடன், ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமையன்று, கரந்தையிலிருந்த, உமாமகேசுவரனாரின் வீட்டிற்கே வந்து ஆங்கிலம் பயிற்றுவித்தார்.

     இயற்கையாகவே அமைந்த தமிழ்ப் புலமையுடன், ஆங்கில அறிவிலும் உரம் மிக்கவரானார் உமாமகேசுவரனார்.

     தஞ்சை தூய பேதுரு கல்லூரியில் இளங்கலை வகுப்பு வரை படித்து முடித்தார். சில காலம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். எழுத்தர் பணி இவருக்கு நிறைவைத் தரவில்லை. இந்நிலையில் உண்மையின் உறைவிடமாய் விளங்கிய உமாமகேசுவரனாருக்கும், மாவட்ட துணை ஆட்சியாளருக்கும், ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படவே, தன் வேலையே வேண்டாமென்று உதறித் தள்ளினார்.

....... வருகைக்கு நன்றி நண்பர்களே. அரசாங்க அலுவலை துச்சமாய் மதித்து உதறித் தள்ளிய உமாமகேசுவரனார் அடுத்து என்ன செய்தார் என்பதை அடுத்த சனிக் கிழமை பார்ப்போமா.

-----------

ஆதித்த குரு சாமிகள் மடம்

     கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடரினை நான்காண்டுகால முயற்சிக்குப் பிறகே எழுதத் தொடங்கினேன். இந்த நான்காண்டுகளில் பல்வேறு நூல்களை, ஆவணங்களைப் படித்து குறிப்புகளைச் சேகரித்தேன். ஆயினும் பற்பல வினாக்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.
     குறிப்பாக சங்கத்திற்கான இடம் பாவா மடத்திடமிருந்து வாங்கப் பெற்றதாக ஆவணங்கள் கூறுகின்றன. அப்படியானால், அந்த பாவா மடம் எங்கிருக்கிறது என்று தேடத் தொடங்கினேன். பலரையும் விசாரித்தேன். சரியான விடைதான் கிடைக்கவில்லை

     கடந்த 10.4.2013 புதன் கிழமை காலை ஓர் எண்ணம் உதிக்கவே, திரு சௌந்தர் அவர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலாளர் திரு ச.இராமாநாதன் அவர்களின் சகோதரர் திரு ச.திருநாவுக்கரசு அவர்களின் புதல்வர்தான் இந்த சௌந்தர். எனக்கு அண்ணன் போன்றவர். இருப்பினும் நெருங்கிய நண்பராய் பழகி வருபவர்.
சௌந்தர்

     கரந்தையில் பாவா மடம் எங்கிருக்கிறது தெரியுமா? என வினவினேன். கரந்தைப் பூக்குளத்தில் பஞ்ச நதி பாவா மடம் என்று ஒன்று உள்ளது. அது சிவன் கோயிலாகும் என்றவர், சோமு அண்ணாத்தையைக் கேட்கலாமே என்றார்.

     எப்பொழுது பார்க்கலாம்? என்றேன். இப்பொழுதே பார்க்கலாம் என்றார். நான் அப்பொழுது எனது பள்ளியின் ஆசிரியர் அறையில் இருந்தேன். பிற்பகலில்தான் ஒன்பதாம் வகுப்பிற்கான தேர்வு இருக்கிறது. காலையில் ஓய்வுதான். மணியோ 10.00 தான் ஆகிறது. நேரம் இருக்கிறது. எனவே சரி இப்பொழுதே பார்க்கலாம் என்றேன். பள்ளியிலேயே இருங்கள், நானே அங்கு வருகிறேன் என்றார்.

     பள்ளித் தலைமையாசிரியரிடமும், உதவித் தலைமையாசிரியரிடமும் அனுமதி பெற்றுக் கொண்டு தயாராகக் காத்திருந்தேன். சௌந்தர் வந்தார். இருவரும் கிளம்பினோம். தூரம் அதிகமல்ல. திரு சோமு அவர்களின் வீடு, சங்கத்திற்கு அடுத்த தெருவிலேயே உள்ளது. சேர்வைகாரன் தெரு என்று பெயர்.

     சேர்வைகாரன் தெரு சென்று, இடது புறம் திரும்பி மீண்டும் வலது புறம் திரும்பினோம். இடது புறத்தில் இரண்டாவது வீடு.

     பெரியவர் சோமு பிள்ளை அவர்களின் மருமகள் எங்களை வரவேற்றார். முன் அறையில் சாய்வு நாற்காலியில் சோமு பிள்ளை கண் மூடிப் படுத்திருந்தார். பெரியவரின் வயது என்ன தெரியுமா? 98.

     பெரியவர் சோமு பிள்ளை அவர்கள் அந்தக் காலத்திலேயே பொறியியல் பட்டம் பயின்றவர். 98 வயதும் ஆறு மாதங்களும் நிறைவடைந்த நிலையிலும், தினந்தோறும், மாலை வேளைகளில், தெரு விளக்கு எரிந்தாலும், இருண்டு கிடந்தாலும், கவலைப் படாமல், நடந்தே கரந்தைக் கடைத் தெருவிற்குச் சென்று, அன்பர்கள் பலரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்து, வீடு திரும்புவதை இன்றளவும் வழக்கமாகக் கொண்டிருப்பவர்.

     காது மட்டும் சிறிது மந்தமான நிலையினை அடைந்துள்ளதால், பெரியவரின் திருமகனார் ராஜகோபால் அவர்கள் மூலம் உரையாடுவதே சிறந்தது என்பதை உணர்ந்தோம்.

     திரு ராஜகோபால் அவர்கள் மடத்திற்குச் சென்றிருப்பதை அறிந்தோம். வீட்டிற்கு பக்கத்து சந்தில் உள்ள மடத்திற்குச் சென்றோம். நான் சிறு வயதில், பல நூறு முறை இந்தச் சந்தின் வழியாகச் சென்றிருப்பேன். ஆனால் இதுநாள் வரை உள்ளே சென்றதில்லை.
ஆதித்த குரு சுவாமிகள் மடம்

      முதன் முறையாக மடத்தினுள் நுழைகின்றேன். ஆதித்த குரு சுவாமிகள் மடம். அமைதியான சூழல். ராஜகோபால் அவர்கள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். சௌந்தர் அவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்து வரவேற்றார். என்னை அறிமுகப்படுத்தினார். எனது நோக்கம் அறிந்ததும் அவரின் முகம் மேலும் பிரகாசமடைந்தது. மலர்ச்சி முகத்திலும் வார்த்தைகளிலும் தெரிந்தது.

     ஆதித்த குரு சுவாமிகளில் கருவறைக்கு எங்களை அழைத்துச் சென்றார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த, சித்தர் ஆதித்த குரு சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம் இது என்றார். ஜீவ சமாதியின் மேல் புறம் ஓர் லிங்கம். தீப ஆராதனை காட்டினார். ஆதித்த குருவை வணங்கினோம். எங்களுக்குத் திருநீறு வழங்கினார். அடுத்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
ஆதித்த குரு ஜீவ சமாதி

      அறையின் நடுவில் ஓர் சிறிய மேடையில், கண்ணாடிக் கூண்டினுள், நான்கடி உயரத்தில் ஒர் சிலை. சிலை என்பது தவறு. உயிருள்ள மனிதர் அமர்ந்திருப்பதை போன்ற ஓர் உணர்வு எங்களைத் தாக்கியது. அவ் உருவின் கருனை மிகு கண்கள் எங்களையே உற்று நோக்குகின்றன.

      இராஜகோபால் கூறினார், ஆரம்பத்தில் கண்ணாடி கூண்டு கிடையாது. இவ்வறைக்கு அருகில் வருபவர்கள், உள்ளே பார்க்கும் பொழுது, உயிருடன் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்பதைப் போல் உணர்ந்து பல முறை திடுக்கிட்டுப் போயுள்ளனர். எனவே இங்கிருப்பது உருவச் சிலைதான் என்பதை உணர்த்துவதற்காகவே கண்ணாடிக் கூடு அமைதோம் என்றார்.
பாடகச்சேரி சுவாமிகள்

     கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்து, இதயத்தை ஊடுருவும் பார்வையால் எங்களைப் பார்ப்பவர் பாடகசேரி சுவாமிகள்.

     பாடகசேரி சுவாமிகள் 1849 ஆம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் இராமலிங்கம் என்பதாகும்.

     இராமலிங்கம் தனது சிறு வயதிலேயே கும்பகோணத்திற்குத் தெற்கேயுள்ள, வலங்கைமானுக்கும் நீடாமங்கலத்திற்கும் இடையிலுள்ள, பாடகச் சேரி என்னும் சிற்றூருக்கு அருயேயுள்ள, பட்டம் என்னும் குக்கிராமத்திற்கு வந்து தங்கினார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே, முற்றும் துறந்த முனிவராய், திகம்பரர் போல், ஆடை ஏதுமின்றி பல காலம் வாழ்ந்து, வடலூர் வள்ளலாரிடம் ஞானானுபதேசம் பெற்றவர். யோக சித்தி என்னும் நவகண்ட யோகாசனம் செய்யும் பொழுது, தனது உடலையே ஒன்பது பாகங்களாக இவர் தனித் தனியாகப் பிரித்ததை, பல கிராமவாசிகள் பார்த்து வியந்துளளனர்.

     பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, பட்டம் என்னும் ஊரிலிருந்து விலகி, பாடகச்சேரி சென்று, பல்லாண்டுகள் அங்கேயே தங்கியிருந்தார். பாடகச் சேரியில் இருந்ததனால், இவர் பாடகச்சேரி சுவாமிகள் என்றே அழைக்கப் பெற்றார். சித்த மருத்துவத்தில் மகத்துவம் பெற்றிருந்த இவர், தனது மருத்துவத் திறமையால் பலரையும் குணப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தனக்குக் கிட்டிய பொருள்களைக் கொண்டு அன்னதானம் செய்தல், கோயில்களுக்கு குடமுழுக்கு செய்தல் எனத் தன் பணியினைத் தொடர்ந்தவர்.

         பாடகச்சேரி சுவாமிகள் தஞ்சைக்கு வரும் பொழுதெல்லாம், ஆதித்த குரு மடத்தில் தங்குவது வழக்கம். இதன் நினைவாகவே, பாடகச்சேரி சுவாமிகளின் திருஉரு இன்று, ஆதித்தகுரு மடத்திற்கு வருவோருக்கு அருள் பாலித்து வருகின்றது. பாடகச் சேரி சுவாமிகளை மனதார வணங்கினோம்.

     இக்கட்டிடத்திற்கு அடுத்து, வரிசையாய் சமாதிகள். தரையோடு தரையாக முதல் சமாதி. உற்று நோக்குகிறோம். உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்த்தது. வியப்பில் விழிகள் விரிந்தன.

தஞ்சை, கரந்தை, சேர்வைகாரன் தெரு,
வீ.சுப்பராய பிள்ளை மனைவி
பெரிய நாயகத்தம்மாள்
விரோதி ஆண்டு, ஆடி மாதம் 12 ஆம் நாள்
இறைவன் திருவடி அடைந்தார்கள். வயது 95,
27.7.49

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் உமாமகேசுவரனாரை சீராட்டி வளர்த்த, அவரின் சிற்றன்னையல்லவா இவர். கண்மூடி, கரம் கூப்பி வணங்குகிறோம்.
 
பெரியநாயகத்தம்மையார் மீளாத் துயில்  கொள்ளும் இடம்
     உமாமகேசுவரனாரின் தந்தை வேம்பப் பிள்ளை, தாயார் காமாட்சி. இவரது பாட்டனார் வைத்தியலிங்கம் பிள்ளை. வேம்பப் பிள்ளை அவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரகத்தில் எழுத்தராய்த் தன் பணியினைத் துவங்கியவர். பின்னர் படிப்படியாய் சிரசுதார், வட்ட ஆட்சியர், துணை நடுவர் என உயர்ந்தவர்.

     உமாமகேசுவரனார் தனது சிறு வயதிலேயே, உடன் பிறந்த தமையன் கோபாலசாமி என்பாரை இழந்தார். சிறிது காலத்திலேயே, தன்னை பாலூட்டி சீராட்டி வளர்த்த தனது அருமை அன்னையாரை இழந்தார். வயது பன்னிரெண்டில் தனது பாட்டனார் வைத்தியலிங்கம் பிள்ளையை இழந்தார். பாட்டனாரை இழந்த 14 வது நாளிலேயே தனது தந்தையையும் இழந்தார்.

      உறவுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் மறைய, தனது சிறு வயதிலேயே, துன்பத்தின் உச்சியைத் தொட்டவர்தான் உமாமகேசுவரனார்.

      கரந்தையில் தனது சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையார் அரவணைப்பில் வாழ்ந்தார். இவது சித்தப்பா வீ.சுப்பராய பிள்ளையோ பெரு வணிகர். இவருக்கு உமாமகேசுவரனாரை வணிகத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணம். ஆனால் சிற்றன்னை பெரிய நாயகத்தம்மையாருக்கோ, தனது அக்காள் மகன் உமாமகேசுவரனைப் படிக்க வைக்க வேண்டும். அவன் படித்து பெரிய நிலைக்கு உயர்வதைக் கண்ணாரக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளத்தில் பொங்கியது.
 
Rசுப்பராய பிள்ளை - பெரியநாயகத்தம்மையார்
     தனது கணவரிடத்தில் பேசினார், வென்றார். தனது மகன் சிதம்பரத்துடன், உமாமகேசனையும், இராதாகிருட்டினனையும், மாட்டு வண்டியில், தஞ்சை வடக்கு வீதியில் இன்றும் இருக்கும், தூய பேதுரு பள்ளிக்கு அனுப்பினார்.

     ஆம். உமாமகேசுவனைப் படிக்க வைத்து, தமிழ் வளர்க்க, மாண்ட தமிழின் பெருமைகளை மீட்டெடுக்க, போர் முனைக்கு அனுப்பிய மாதரசியல்லவா, இக் கல்லறையில் மீளாத் துயில் கொண்டுள்ளார்.

     பின்னாளில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வருகை தந்த தமிழறிஞர்களுக்கு, மனமார உணவு பரிமாறிய கரங்கள் அல்லவா, இங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றன. உமாமகேசுவரனாரின் வளர்ச்சியைக் கண்டு குளிர்ந்த உள்ளமல்லவா இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது.

     உமாமகேசன் மறைந்த பிறகும். பல்லாண்டுகள் வாழ்ந்து, தனது மகனினும் மேலாய் வளர்த்த உமாமகேசனின் பிரிவுத் துயரைத் தாங்காமல், நாளும் துடித்திட்ட இதயமல்லவா, இங்கே ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.

     என்ன தவம் செய்தேனோ, உமாமகேசனை தமிழுக்கு ஈந்து மகிழ்ந்த, இம்மண்ணுலக தமிழன்னைத், துயிலும் புண்ணிய தலத்தில், நானும் எனது காலடியினைப் பதிக்க, என்ன தவம் செய்தேனோ, என்று எண்ணி நெஞ்சார வணங்கினேன்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வரலாற்றினை, உமாமகேசனின் ஒப்பற்ற தியாகத்தை, அப்பழுக்கற்ற சேவையினை, தமிழுக்குத் தாழ்வெனின் பொங்கியெழுந்த உமாமகேசனின் சீற்றமிகு வீரத்தினை, எழுதத் துணிந்திட்ட எனக்கு, உற்ற துணையாய், வழிகாட்டியாய் இருந்து உதவிடுங்கள் தாயே என வேண்டினேன்.

     பெரிய நாயகத்தம்மையார் துயிலும் இடத்திற்கு அருகில் இரு சமாதிகள் இருந்தன. ஆதித்த குரு மடத்தின் மீது பெரு மதிப்பு வைத்திருந்த தங்கம்மாள் மற்றும் அவரது அருமை மகனார் அப்பாவு சாமியார் இருவருக்கும் ஒரே இடத்திலேயே அருகருகே சமாதிகள்.


     அருகிலேயே ஒரு சிறு கோயில். அதுவும் சமாதிதான். ஆதித்த குவிவின் சீடரான சொக்கலிங்க சாமிகளின் சமாதி இது. சொக்கலிங்க சுவாமிகள் அமரத்துவம் அடைந்த நாள் 25.8.1894. இன்றைக்கு 129 ஆண்டுகளுக்கு முந்தையது.


      தெய்வத்துள் தெய்வமாய் இரண்டறக் கலந்து விட்ட, இப்பெரியோர்களை வணங்கி, மடத்தினின்று புறப்பட்டு, மீண்டும் சோமு பிள்ளை அவர்களின் இல்லம் வந்தோம்.

     முக்கியமான செய்தி ஒன்றினைச் சொல்ல மறந்து விட்டேன். இந்தப் பெரியவர் சோமு பிள்ளை யார் தெரியுமா? உமாமகேசுவரனாரை சீரோடும் சிறப்போடும், வளர்த்து ஆளாக்கினாரே, பெரிய நாயகத்தம்மையார், அந்த பெரிய நாயகத்தம்மையாரின் பெயரன்தான் இந்தப் பெரியவர் சோமு பிள்ளை. உமாமகேசனோடு பள்ளிக்குச் சென்றாரே சிதம்பரம், அந்தச் சிதம்பரத்தின் அருமைப் புதல்வர்தான் இந்த சோமு பிள்ளை.

     பெரியவர் சோமு பிள்ளையின் திருமகனார் ராஜகோபால் அவர்கள், தனது தந்தையை, அறையில் இருந்து அழைத்து வந்து, இருக்கையில் அமரச் செய்து, நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தினை, பக்குவமாய், அவர் காதருகே எடுத்துரைத்தார்.
 
பெரியவர் சோமு பிள்ளையுடன் அவரது  திருமகனார்  ராஜகோபால்
     உமாமகேசுவரனார், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்ற வார்த்தைகளைக் கேட்டவுடன், பெரியவரின் முகத்தில், ஓர் மகிழ்ச்சி, இதழ்கள் புன்னகைக் பூக்கின்றன. பெரியவரது கண்களே கூறின, மனமானது, சிந்தனைக் குதிரையில் ஏறி, கடந்தகால நினைவலைகளில் பயணிக்கத் தொடங்கி விட்டது என்பதை.


     மெதுவாகப் பேசத் தொடங்கினார். பத்து நிமிடமோ, இருபது நிமிடமோ அல்ல. சற்றேரக்குறைய இரண்டரை மணி நேரம் விடாது பேசிக் கொண்டே இருந்தார். செய்திகள் அருவியாய் கொட்டின. முதுமையின் தளர்வு வார்த்தைகளில் சிறிதும் இல்லை.

     செய்தி திரட்டச் சென்ற நாங்களே, பேசியது போதும், ஓய்வெடுங்கள் எனக் கூறும் படியாகிவிட்டது.


     ஓய்வெடுக்கச் சொன்னவுடன், பேச்சினை நிறுத்த சிறிதும் மனமின்றிக் கூறினார், சில நாட்கள் கழித்து வாருங்கள், என் நினைவில் இருப்பதை எல்லாம், ஒரு நோட்டில் குறிப்புகளாக எழுதி வைக்கிறேன்.

     பெரியவர் சோமு பிள்ளை தனது, 98 ஆம் வயதிலும், சிறிதும் தளராமல், தயங்காமல் எழுதித் தருகிறேன் என்று கூறியது மிகுந்த வியப்பைக் கொடுத்தது. உடலுக்குத்தான் வயதாகிவிட்டதே தவிர, மனது இளமையாகத்தான் இருக்கிறது என்பது புரிந்தது.

     புறப்படும் பொழுது கேட்டேன், உமாமகேசுவரனார் வாழ்ந்த வீடு எது? என்று. இவ்வீட்டிற்கு முன்னால் உள்ள, முதல் வீட்டில்தான் உமாமகேசுவரனார் வாழ்ந்தார். அவ்வீட்டில் தற்பொழுது எனது சகோதரர் வசித்து வருகிறார் என்றார்.
 
தமிழ்த் தலமாம் உமாமகேசுவரனார் இல்லம்
     திருமூலர் கூறுவார், மனமது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம் என்று. ஆம். செம்மையான மனதிற்குச் சொந்தக்காரர்தான் இப் பெரியவர் சோமு பிள்ளை. பெரியவரை வணங்கி விடை பெற்றோம்.

     அழகப் பிள்ளை சந்தின் இரண்டாம் வீடு, பெரியவர் சோமு பிள்ளை வசிக்கும் வீடு. இதோ, இந்த முதல் வீடு இருக்கிறதே, இதுதான் தமிழவேள் வாழ்ந்த வீடு. தமிழகத்துத் தமிழறிஞர்கள் அனைவருக்கும் உணவிட்ட வீடு. ஒரு வகையில் இதுவும் ஒரு கோயில்தான். ஆம் தமிழ்க் கோயில்.

     உமாமகேசுவரனார் வாழ்ந்த இல்லத்தை, தமிழ்த் தலத்தை மனதார வணங்கி விடைபெற்றோம்.

வாழ்வின் மறக்க இயலாத சந்திப்பு, இச் சந்திப்பு.