15 ஜூலை 2017

நாகையில் ஒரு உலக அதிசயம்




     ஆண்டு 2004.

     இந்தோனேசியா

     சுமத்ரா தீவுகள்

     டிசம்பர் மாதம் 26 ஆம் நாள்.

     ஞாயிற்றுக் கிழமை, காலை மணி 6.29

     ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை, அமைதியாய் காட்சியளித்த, கடலுக்கு அடியில், திடீரென்று ஒரு கொந்தளிப்பு.


      பூமியின் அடுக்குகள், கோபம் கொண்டு, ஒன்றின் மேல் ஒன்று உரசின, ஒன்றை ஒன்று அழுத்தின.

      பூமி அதிர்ந்தது.

      கடலுக்கு அடியில், ஒரு பெரும் பூகம்பம்

     ரிக்டர் அளவு கோலில், எண் 9 ஐத் தொட்டது.

     சீறி எழுந்த அலைகள், ஒன்றல்ல, இரண்டல்ல, 14 நாடுகளைப் பதம் பார்த்தன.

     14 நாடுகளிலும், கடற்கரைகளையும் தாண்டி, பெருங் கோபத்துடன், அளப்பரிய சீற்றத்துடன், அலைகள் ஊருக்குள் நுழைந்தன.

     ஆயிரக் கணக்கில் உயிர்களையும், இலட்சக் கணக்கில் விலங்கினங்களையும், கோடிக் கணக்கில் வாழ்வாதாரங்களையும் வாரிச் சுருட்டி விழுங்கியபின், ஏதுமறியா பிள்ளை போல், ஆழிப் பேரலைகள், கடலுக்குத் திரும்பின.

      காலை மணி 9.12

      நாகப்பட்டிணம்

     ஆழிப் பேரலையால் உருக்குலைந்து போனது.

     முதல் ஆழிப் பேரலையினைக் கண்டு, சுதாரிப்பதற்குள், அடுத்த 45வது நிமிடத்தில், முன்னிலும் கோபமாய், முன்னிலும் வேகமாய் இரண்டாவது ஆழிப் பேரலை உக்கிரத் தாண்டவமாடியது.

     ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நூறு இரு நூறல்ல, முழுதாய், நிச்சயமாய், உறுதியாய் 6,065 பேர், நாகையில் மட்டும் மாண்டு போயினர்.

     இவர்களுள் 1776 பேர் சிறுவர்கள், குழந்தைகள்.

     887 சிறுவர்கள்

     889 சிறுமியர்கள்

     பொய்கை நல்லூர்

     தெற்குப் பொய்கை நல்லூர்

     நாகையின் கடற்கரை கிராமம்.

     இந்தச் சிற்றூருக்கு இருபுறமும் உள்ள, கடற்கரை கிராமங்களில், வசித்த மக்கள், ஆயிரக் கணக்கில், சுனாமிக்கு இரையாகி, பெற்றோர்களை, குழந்தைகளை அனாதைகளாக்கி தவிக்க விட்ட நிலையில், இந்த தெற்குப் பொய்கை நல்லூரில் மட்டும், ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

      வீறு கொண்டு எழுந்த ஆழிப் பேரலை, தெற்குப் பொய்கை நல்லூரில், தோல்வி கண்டு மிரண்டு, கடலுக்குள் ஓடி ஒளிந்தது.

     காரணம், ஒரு உலக அதிசயம்.

     இதுநாள் வரை, உலகு அறியா, உலக அதிசயம்.

     தெற்குப் பொய்கை நல்லூர் மக்கள் கூட, உணராத ஒரு உலக அதிசயம்.

     எத்துனை வேகமாய், எத்துனை வலுவாய், சுனாமி ஆர்ப்பரித்து வந்தபோதும், அதனினும் வலுவாய், அதனினும் உறுதியாய், மேரு மலையென, இந்த உலக அதிசயம், சுனாமியை எதிர் கொண்டு தடுத்தது.

      என்னிடமா மோதுகிறாய், வா வந்து மோதிப்பார், என நெஞ்சம் நிமிர்த்தி போருக்கு அழைத்து, சுனாமியை புறமுதுகு காட்டி ஓடச் செய்தது.

     நாகையில் ஒரு உலக அதிசயம்.

     மதில் சுவர்

     ஆழிப் பேரலைகளால் தகர்க்க முடியாத மதில் சுவர்.

     60 அடி உயரத்தில், ஆறு கிலோ மீட்டர் நீளத்திற்கு, நீண்டு நெடிதுயர்ந்த, ஒரு மதில் சுவர்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     மதில் சுவர்

     கருங்கற்கள் கொண்டு எழுப்பப் பெற்ற மதில் சுவர் அல்ல.

     மணலால் ஆன மதில் சுவர்.

      என்ன? மணலால் ஆன மதில் சுவரா?

      இது எப்படி சாத்தியமாகும்?

      நீங்கள் வியப்பது புரிகிறது.

      ஆனாலும் மணலால் ஆன மதில் சுவர்தான்.

      கிழக்குத் தொடர்ச்சி மலை போல், மேற்குத் தொடர்ச்சி மலை போல், தொடர்ச்சியாய் ஒரு மணல் சுவர்.

      நமது முன்னோர்களின் கை வண்ணம்.

      நமது முன்னோர்களின், உயர் சிந்தனையின் செயல் வடிவம்.

      ஒரு முறை இழப்பு ஏற்பட்டால், மறுமுறை அவ்விழப்பு ஏற்படுவதற்குள், அதனை எதிர் கொண்டு, நேருக்கு நேராய் சந்திக்க, என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும், என்று அறிவுப் பூர்வமாய் சிந்தித்து, ஆக்கப் பூர்வமாய் வியூகம் வகுத்து, செயல்படுத்தி, வெற்றி கண்ட, நம் முன்னோரின், முயற்சியின் அடையாளமாய், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது, இந்த மணல் சுவர்.

பொய்கை நல்லூர் மணல் மேடுகள்.

     காவிரிப் பூம்பட்டிணப் பேரழிவிற்குப் பின், நம் முன்னோர், ஏது செய்ய வேண்டும் என்று யோசித்தனர்.

     கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவில், பனை ஓலைகளை வெட்டி, வரிசையாய் அரண் போல் நட்டனர்.

     கடல் அலையானது, ஒவ்வொரு முறையும், மணலினைக் கரையை நோக்கித் தள்ளும் குணம் வாய்ந்தது.

     இவ்வாறு கடல் அலையால் தள்ளப்படும், கடல் மணல், பனை ஓலைகளில் மோதி, மோதி, அதன் அடியில் விழுந்து, சிறு குன்றாய் குவியத் தொடங்கியது.

      வருடங்கள் ஆக ஆக, குன்றின் உயரம் அதிகரித்துக் கொண்டே சென்றது.

       கிழக்குத் தொடர்ச்சி மலைபோல், கடற்கரையில், நீண்ட நெடிய மணல் தொடர்ச்சி மலைகள் உருவாயின.

      

இம் மணல் மேடுகளில், ராவணன் மீசை, புன்னை, தாழை, குதிரைக் குளம்பு போன்ற தாவரங்களை நட்டு, வளர்த்தனர் நம் முன்னோர்.

       இத்தாவரங்களை ஆங்கிலத்தில் Soil Buinders என்று அழைப்பர்.

       இத்தாவரங்கள் மணலை இறுகப் பிடித்து, மணல் கோட்டையினை, கற்கோட்டை போன்ற, எஃகுக் கோட்டையாய் மாற்றின.

      ஆனாலும், இதன் பெருமையறியா, தற்கால மக்கள், நாகரிகம், வளர்ச்சி என்னும் பெயரில், மேடுகளைத் தகர்த்து, ஆலைகள் அமைத்தும், சாலைகள் அமைத்தும் ஆனந்தமடைந்தனர்.

       இன்று மிஞ்சி இருப்பதோ, ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கான, தெற்குப் பொய்கை நல்லூர் மணல் மேடு மட்டும்தான்.

      இன்று, மாபெரும் சுனாமியைச் சந்தித்த பின்பும், நாம், இந்த மணல் மேடுகளின் அருமையினை, பெருமையினை அறியாதவர்களாய் இருப்பதுதான், வேதனையிலும் வேதனை.

-----.

     கடந்த 17.5.2017 புதன் கிழமை, பிற்பகல் 2.30 மணியளவில், பொசுக்கும் மணலில், தகிக்கும் வெயிலில், தெற்குப் பொய்கை நல்லூர் மணல் மேட்டில், கால் பதித்து நின்றேன்.

     நெஞ்சம் பெருமையால் விம்முகிறது.

     நம் முன்னோரின் பாதம் தொட்டு வணங்க மனம் விழைகிறது.

     நானும், நண்பரும், கரந்தைக் கலைக் கல்லூரி ஆய்வக உதவியாளருமாகிய திரு க.பால்ராஜ், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி, ஓவிய ஆசிரியருமான திரு  சு.கோவிந்தராஜ் மூவரும், மகிழ்வுந்தில், பொய்கை நல்லூரை அடைந்த பொழுது மணி பிற்பகல் 1.30.

     மணல் மேடுகளைக் காண வந்திருக்கிறோம், வழி காட்டுங்கள் என்று, எதிரில் வந்த ஒவ்வொருவராய் விசாரித்தோம்.

     ஒருவருக்குமே தெரியவில்லை.

     சற்று சோர்ந்துதான் போனோம்.

     ஒரே ஒருவர் மட்டும், இடது புறம் திரும்பி, நேரே செல்லுங்கள், கொஞ்ச தூரம் மட்டுமே காரில் செல்ல முடியும், பின் நடந்துதான் செல்ல வேண்டும் என்றார்.

     அவர் சுட்டிய பாதையில் பயணித்தோம்.

     குறுகிய சாலை.

     ஒரு திருப்பத்தில், சாலை முடிந்தே போனது.

     அதற்கு அப்புறம் மணல் சாலை.

     மகிழ்வுந்தில் இருந்து இறங்கி நடக்கத் தொடங்கினோம்.

     





      உச்சி வெயில்.

      நடக்க விடாமல், காலை பின்ன வைக்கும் மணல்.

     சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்போம்.

    மூவருக்கும் நாக்கு உலர்ந்து போனது.

     மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது

     ஒரு மேடு, மணல் மேடு கண்ணில் பட்டது.

     உடலின் சோர்வு பறந்தே போனது

     மூவரின் நடையிலும் வேகம் கூடியது

     மணல் மேட்டினை நெருங்கி, மெல்ல மெல்ல மேலே ஏறினோம்.

     சுடு மணல், எங்களை ஏற விடாமல் தடுத்தது. பிடிமானமில்லா மணல், எங்கள் கால்களை சறுக்க வைத்தது.

      மணல் மேட்டின் உச்சிக்கு வந்த போதுதான், கடல் தெரிந்தது.

      ஐம்பது மீட்டர் தொலைவில் கடல்.

      நீண்டு செல்லும் மணல் சுவர்.

      மணல் மேடெங்கும் மரங்கள்.

      பனை மரங்கள் மற்றும் பலவித மரங்கள் வளர்ந்து, உயர்ந்தோங்கி நின்றன.

      மனமெங்கும் மகிழ்ச்சி அலை மோத, மணல் மேட்டிலேயே நின்றோம்.

     














ஒரு மாபெரும் உலக அதிசயத்தில் நிற்கின்றோம் என்ற உணர்வு., உள்ளத்தை நெகிழச் செய்தது.

      உலகிலேயே மூன்றே மூன்று இடங்களில் மட்டும்தான், இது போன்ற மணல் மேடுகள் உள்ளன.

     

       ஒன்று டென்மார்க்.

     

      இரண்டாவது ஹாலந்து

     மூன்றாவது நமது பொய்கை நல்லூர்

     மெல்ல மணல் மேட்டிலிருந்து இறங்கி, கடற்கரையினை அடைந்தோம்.

     கடற்கரையில் இருந்து, திரும்பிப் பார்த்தால், நீண்டு செல்லும் மலைத் தொடராய் மணல் மேடு.

      மணல் மேட்டினை மூடியவாறு, அடர்த்தியாய் மரங்கள்.

      நமது முன்னோரின் அற்புதக் கோட்டை, மணல் கோட்டை, சுனாமியையே எதிர்கொண்டு வீழ்த்தும் வல்லமை வாய்ந்த எஃகுக் கோட்டை, கண் முன் விரிந்து, பரந்து நிற்கிறது.

     மெய் மறந்து நின்றோம்.

    பின் மெல்ல சுய நினைவு வந்து, கடற்கரையை நோக்கினோம்.

      கடற்கரையெங்கும் காலணிகள்.

     






நூற்றுக் கணக்கானக் காலணிகள் பரவிக் கிடக்கின்றன.

     இத்துனை காலணிகள் எப்படி?

     சுனாமி அலையில் மூழ்கி, பல்வேறு பகுதிகளில் உயிர் துறந்தவர்களின் காலணிகள் இங்கு கரை சேர்ந்திருக்க வேண்டும்.

     சிறிய காலணிகள், பெரிய காலணிகள், கடற்கரையெங்கும் சிதறிக் கிடக்கின்றன.

     மனதில் வேதனை குடியேறுகிறது.

     நம் முன்னோர் முயன்று உருவாக்கிய, மணல் மேடுகளைச் சிதைக்காமல், அழிக்காமல் காத்திருப்போமேயானால், உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் அல்லவா?

      ஆறு கிலோ மீட்டர் தொலைவிற்கான மணல் மேடு மட்டுமே மீதமிருக்கிறது.

       வளர்ச்சி என்னும் பெயரில், இது போன்ற மணல் மேடுகளைத் தகர்த்து, சொந்த செலவில், சூனியம் வைத்துக் கொள்ளாமல், மீதமிருக்கும் மணல் மேடுகளையாவது, காத்திடவேண்டுமே என்ற கவலை நெஞ்சில் குடி கொள்கிறது.

      மீண்டும் கடற்கரையெங்கும் சிதறிக் கிடக்கும் காலணிகளைப் பார்க்கிறோம்.,

      இந்தக் காலணிகளால் சுமக்கப் பட்ட, உடல்கள், உயிர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், இன்று மண்ணோடு மண்ணாய் புதைந்து போயிருக்கும்.

    காலணிகள் மட்டுமே, உயிரிழந்தோரின் சாட்சியாய், மௌன சாட்சியாய் மீதம் இருக்கின்றன.

      கனத்த இதயத்தோடு, மெல்ல மகிழ்வுந்தினை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.

     

அலைபேசி  வழி, தமிழ் மணத்தில் வாக்களிக்க     

50 கருத்துகள்:

  1. புதிய தகவல், அருமையான புகைப்படங்கள். கணினிக்கு வந்ததும்தான் தம வாக்களிக்க வேண்டும். நீங்களும் ஏன் மொபைலில் படிப்பவர்கள் வசதிக்காக தம லிங்க் தரக்கூடாது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லிங்க் கொடுத்திருப்பதற்கு நன்றி. ஏற்கெனவே கொடுக்கப் பட்டு நான் கவனிக்கவில்லையோ...

      தம +1

      நீக்கு
    2. எஞ்சிய கடற்கரைகளிலும் இந்த முறையைப் பின்பற்றி மணல்மேடுகளை உருவாக்க வேண்டும். பனை ஓலைகளைப் பயன்படுத்தி.

      நீக்கு
  2. அற்பதமான வரலாற்றுப் பதிவு. முன்னோர்களின் திறனை மீட்டெடுக்கக்கூடிய ஒரு பதிவுக்கு நன்றிகள் பல. இதனை முறையான ஆவணங்களாக்க, பல்கலைக்கழக கட்டுமானவியல் பேராசிரியர்கள் கவனிப்பார்களா?

    பதிலளிநீக்கு
  3. புதிய தகவல்.பகிர்விற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. நம் முன்னோர்களின் அறிவாற்றலுக்குச் சான்று பகரும் பொய்கை நல்லூர் மணல் மேடு குறித்த பதிவு பெரிதும் மகிழ வைத்தது. பிழையற்ற எளிய நடை மனம் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  5. அருமை அருமை ஐயா, இது போன்ற வரலாற்று எச்சங்களை தேடிக் கண்டறிந்து, நம் மக்களுக்கு எச்சரிக்கை செய்து இருப்பது பாராட்டிற்குரியது இனியேனும் காப்போமே இதனை, நன்றி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. முன்னோரின் முன்னேற்பாடான சிந்தனைகள் எவ்வளவு உயர்வானது.

    நம்மில் பலரும் இன்னும்கூட உணராமல் அவர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்க தெரியாத மடந்தைகளாக இருக்கிறோம் என்பது வேதனையே...

    அரிய தகவல் புகைப்படங்களுடன் தந்தமைக்கு நன்றி நண்பரே
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  7. அரிய செய்தி.. அழகிய படங்களுடன்..

    பொய்கை நல்லூரில் தான் கோரக்க சித்தர் ஜீவசமாதி உள்ளது..
    சென்று காணத் தூண்டுகின்றது பதிவு..

    பதிலளிநீக்கு
  8. அருமையான புதிய தகவல்! வியக்க வைக்கும் தகவலும் கூட. தேடித் தேடிப் புதிய தகவல்கள் தரும் தங்களுக்கு வாழ்த்துகள்!!!

    கீதா: ஹாலந்து, டென்மார்க் மணல் மேடுகள் வாசித்ததுண்டு. அது போன்று நாகையிலும் இருப்பதை அறிவோம் ஆனால் பெயர் தெரிந்திருக்கவில்லை. இப்போது அறிய முடிந்தது. அது போன்று பாயின்ட் கேலிமர் எனப்படும் கோடிய்க்கரை விலங்குகள் சரணாலயமும் தப்பியதற்குக் காரணம் அங்கிருந்த சதுப்பு நிலக் காடுகள் இல்லையா சகோ...அது போன்று பிச்சாவரத்தில் இருக்கும் அலையாத்திக்காடுகளும்/மாங்க்ரூவ் காடுகள் சுனாமியைத் தடுத்தவை...நாம் தான் இவற்றை எல்லாம் அழித்து அழிவைத் தேடிக் கொள்கிறோம்....

    அருமையான் பதிவு...

    பதிலளிநீக்கு
  9. அறியாத தகவல். அறியத் தந்தமைக்கு நன்றி. சென்று பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டியது. அதற்குள்ளாக இதையும் அழிக்காமல் இருக்கவேண்டுமே! :(

    பதிலளிநீக்கு
  10. அற்புதமான பதிவு.மாபெரும் பிரளயத்தின் ஒரு பகுதியைப் பார்க்கும் பேரதிர்ஷ்டம் நமக்கு கிடைத்தது.
    போர்க்கள அழிவுகள் ,வெள்ளப்பெருக்கின் தடங்கள் மாமனிதர்களின் வாழ்க்கை சிதறல்கள் போன்றவை பார்வையாளர்கள் மனதில் அவர்களது மனவளர்ச்சி,அனுபவம் போன்றவைகளைப்பொறுத்து வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
    உங்களது பதிவு எண்ணற்ற மனிதர்களின் சிதைந்த கனவுகளாக எனக்குப் படுகிறது.

    பதிலளிநீக்கு
  11. பொய்கை நல்லூர் மணல் மேடு பற்றிய விவரங்கள் வியக்க வைத்தது ஐயா... நன்றி..

    பதிலளிநீக்கு
  12. மணல்மேடு பதிவு சிந்திக்க வைக்கிறது. நமது ஊரிலும் மணல்காடு,கற்கோவளம்திருப்பாற்கடல் ஆகிய இடங்களில் இருந்த மணல் முகடுகள்அனைத்துமே வீடுகள்கட்ட அள்ளப்பட்டு காணாமலே போய்விட்டன:(

    பதிலளிநீக்கு
  13. தேடல்கள் தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. அந்நாளை கனவிலும் மறக்க இயலாது விரிவான தகவல் நன்றி கரந்தை

    பதிலளிநீக்கு
  15. 2004 சுனாமியை மறக்க இயலாது. ஏனெனில் அன்றைக்கு என் பிறந்த நாள். அந்த‌ நாள் முழுவதும் பெரும் சோகத்தில் கழிந்தது.

    நாகைக்குப்பக்கத்தில் இப்படியொரு உலக‌ அதிசயம் இருப்பதை, வெளியுலகத்திற்குத் தெரியாத ஒரு அபூர்வ அதிசயத்தை இனம் காட்டியதற்கு அன்பு நன்றி!

    போய்ப் பார்க்க வேன்டும் என்று தோன்றி விட்டது. செல்வதற்கு திட்டம் போடும்போது உங்களிடம் விரிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வியப்பான வெளியுலகிற்கு அதிகம் தெரியாத தகவல். மெனக்கட்டு அங்கே போய் தகவல்களைச் சேகரித்து படங்களுடன் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  17. சதுப்பு நிலக்காடுகள் இம்மாதிரி அழிவிலிருந்து காக்க வல்லவை என்று படித்திருக்கிறேன்/ இன்று, மாபெரும் சுனாமியைச் சந்தித்த பின்பும், நாம், இந்த மணல் மேடுகளின் அருமையினை, பெருமையினை அறியாதவர்களாய் இருப்பதுதான், வேதனையிலும் வேதனை./ இது போன்ற செய்திகள் பரவலாகப் பகிரப்பட வேண்டும் முக்கியமாக வருமுன் காக்கும் செயல்கள் அரசுக்குத் தெரிட வேண்டும் அல்லவா உங்கள் பணி பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  18. என் பார்வையில் தஞ்சை, தஞ்சை பெரியகோவிலுக்கும் துல்லியமான நேர்கோட்டில் இந்த மணல் மேடு அமைந்துள்ளது கீழே
    Thanajavur
    Latitude : 10.7870° N
    Longitude: 79.1378° E

    Therku Poigainallur

    Latitude :10.766359 N
    Longitude :79.842335 E

    பதிலளிநீக்கு
  19. ஆச்சரியம் தரும் செய்திகளோடு பதிவு.

    ஒரு முறை இழப்பு ஏற்பட்டால், மறுமுறை அவ்விழப்பு ஏற்படுவதற்குள், அதனை எதிர் கொண்டு, நேருக்கு நேராய் சந்திக்க, என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும், என்று அறிவுப் பூர்வமாய் சிந்தித்து, ஆக்கப் பூர்வமாய் வியூகம் வகுத்து, செயல்படுத்தி, வெற்றி கண்ட, நம் முன்னோரின், முயற்சியின் அடையாளமாய், ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தும், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது, இந்த மணல் சுவர்.///// உண்மை தான் ஐயா, இக்காலங்களில் நாங்கள் இப்படி வருமுன் காக்கும் திட்டமிடுதல் குறித்து சிந்திப்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
  20. புதிய தகவல். அரிய. செய்தி. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  21. காலனியா அல்லது காலணியா? Please look into it.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலணி(செருப்பு)தான் அய்யா. காலனி என்பது குடியிருப்புக்கான ஆங்கிலச் சொல்லின் தமிழ்வடிவம் (போலிஸ் காலனி) எழுத்துப் பிழையென்பது மனவேகத்துக்கும் கைவேகத்துக்குமான இடைவெளி.

      நீக்கு
    2. திருத்தம் செய்துவிட்டேன்
      சுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஐயா

      நீக்கு
    3. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு, காலனி > காலணி விஷயமாக நான் வாட்ஸ்அப்பில் அனுப்பிய செய்தி தங்களுக்கு கிடைத்ததா என்று தெரியவில்லை.

      நீக்கு
    4. தங்களின் வாட்ஸ்அப் செய்தியை பார்த்தேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  22. வருமுன் காக்க நமது முன்னோர்கள் செய்துள்ள இயற்கை அரணை கண்டு வியப்படைந்தேன் :)

    பதிலளிநீக்கு
  23. அய்யா வணக்கம். நீண்ட நாள் கழித்துத் தங்கள் தளத்திற்கு வந், நாடக பாணியிலான வரலாற்றுச் சிறப்புமிக்க “மணல் கோட்டை” பற்றி அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நமது பண்டைத் தமிழர்களின் எத்தனை அறிவுச் செல்வங்களை இழந்திருக்கிறோம் என்று பட்டியல் போட்டு எழுத ஒரு புத்தகம் போதாது போல அய்யா! நன்றி நன்றி.
    இதே போல ஆழிப்பேரலையைத் தாவரத்தாலேயே தடுக்கும் மற்றொரு யுத்தி “அலையாத்திக் காடுகள்” பாருங்கள் பெயரிலேயேபொருளடங்கி நிற்கிறது! இதனால்தான் சுனாமியின் போது, முத்துப்பேட்டை தொடங்கி மணமேற்குடி வரை இழப்பு மிகவும் குறைந்தது! தங்கள் தகவல் களஞ்சியத்தில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். பார்க்க- http://www.vikatan.com/anandavikatan/2011-jul-20/en-vikatan---trichy-edition/8239.html இதோடு பிடியுங்கள் தம-11

    பதிலளிநீக்கு
  24. அய்யா, மன்னிக்க வேண்டும். தங்களுக்கு வாக்களித்தபடி நான் வாக்களிக்கச் சென்றால் தமிழ்மணம் சாக்குப் போக்குக் காட்டுகிறதே! இருந்தாலும் சற்றும் மனம் தளராத விக்கிர மாதித்தன் போல விடாமல் முயன்றுவருகிறேன். விடமாட்டேன் ல? இருந்தாலும் தாமதத்திற்கு வருந்துகிறேன்

    பதிலளிநீக்கு
  25. நம் முன்னோர்களின் அறிவுத் திறன் வியக்க வைக்கிறது. எத்தனை விஷயங்களை முன்னேற்றம் என்ற பெயரில் இழந்திருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  26. அரிய தகவல் புகைப்படங்களுடன் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  27. தகவலும் படங்களும் அருமை..நன்றி!

    பதிலளிநீக்கு
  28. தகவலும் படங்களும் அருமை..நன்றி!

    பதிலளிநீக்கு
  29. அறியாத தகவல். அருமையான விடயப்பகிர்வு அரிய செய்தி பொய்கை நல்லூர் பற்றியது. சிந்திக்கவேண்டும் இயற்க்கையை பாதுக்காக்க. மீண்டும் சுனாமி வரக்கூடாது!

    பதிலளிநீக்கு
  30. அறியாத தகவல். பகிர்வுக்கு நன்றி. துரை செல்வராஜு அவர்கள் சொன்ன 'கோரக்கர் சமாதி'யையும் குறித்துக்கொண்டேன்.

    படங்களும் தகவலும் வியப்பில் ஆழ்த்தியது. த ம +1

    பதிலளிநீக்கு
  31. காலணிகள் மட்டுமே, உயிரிழந்தோரின் சாட்சியாய், மௌன சாட்சியாய் மீதம் இருக்கின்றன.//
    சிறப்புத் தகவல்
    மிக்க நன்றி
    தமிழ் மணம் - 14
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  32. டென்மார்க் மணல் மேடு...தங்கள் படத்தில் உன்ன லைட்கவுஸ் உள்ள இடம் இது...
    இந்தத் தலைப்பின் கீழ் இது வருகிறது...
    https://youtu.be/SmOhidzOTAY
    இதன் கீழ் உள்ள கருத்து:- 23. dec. 2016
    We explore North Jutland in Denmark, a very beautiful place and more specifically Nørre Lyngby, a town that is slowly falling into the sea. The ground is very sandy and every year the water eats 1-2 meters off the coastline in this area of Denmark. The result is that this town and other structures are ending up being swallowed by the sea. ---------
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  33. ஆகா
    தமிழர் அறிவியல் என்னவொரு அற்புதம்
    வகுப்பில் பகிர்கிறேன் அண்ணா

    பதிலளிநீக்கு
  34. மண் மேடு நாட்டின் அரண் என வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

    மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடையது அரண்
    பதிவு அருமை; படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
  35. அரியவற்றை அறியத்தரும் கட்டுரையாளர். அவரைப்போன்றே வாசக நண்பர்களின் பயன்தரும் பின்னூட்டங்கள். இரண்டாம் பெயர் தெரியாத பெரும்பணி. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. மிகச்சிறப்பான தகவல்

    பதிலளிநீக்கு
  37. அற்புதமான பதிவு. Very good models don't get replicated. Local intelligence dies locally. I will visit after corona ends. Thanks to the efforts. K.Manuraj Former Chief engineer TNPWD. Trichy 9443106922

    பதிலளிநீக்கு
  38. அருமை ....நானும் எனது நண்பரும் இங்கு சென்றோம்.நம் முன்னோர் உருவாக்கிய இந்த மணல் மேடு மெய்சிலிர்க்க வைத்தது.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு