17 ஜூன் 2018

தாகம் தீர்க்கும் வழிகள்




     உணவிற்கு மாற்றாக, தானியம், காய்கறி, பழம், பால், இறைச்சி, கோழி, முட்டை, திண்பண்டம், சத்து மாத்திரைகள், புழு பூச்சிகள் எனப் பலப் பொருட்கள் இருக்கின்றன.

     எரி சக்திற்கு மாற்றாக, விறகு, அடுப்புக்கரி, நிலக்கரி, மண்ணெண்ணை, நில ஆவி, புனல் மின்சாரம், அனல் மின்சாரம்,அணு மின்சாரம், சூரிய சக்தி, காற்று, அலை ஆகியவற்றில் இருந்து பெறும் மின்சாரம், சாண எரி வாயு, எனப் பல வழிகள் இருக்கவே இருக்கின்றன.

     ஆனால், தண்ணீருக்கு மாற்றாக என்ன இருக்கிறது?


     எது இருக்கிறது?

     இவ்வுலகில் தண்ணீருக்கு மட்டும், மாற்று என்பது கிடையவே கிடையாது.

---

     உலகில் மொத்தம் நாற்பது டெல்டாப் பகுதிகள் இருக்கின்றன.

     உலகு முழுவதும் உள்ள, இந்த நாற்பது டெல்டாப் பகுதிகளிலும், தலையாயது, நமது காவிரி டெல்டா ஆகும்.

     இதற்குக் காரணம் என்னவென்றால், உலகின் வேறு எந்த டெல்டாவிலும் இல்லாத அளவில், சிற்பக் கலை, நாட்டியம், சித்திரம், கர்நாடக இசை போன்ற, நுண்கலைகளின் பிறப்பிடமாக, காவிரி டெல்டா திகழ்வதே ஆகும்.

     காவிரி

     தமிழகப் புனித நதி

     தமிழகத்தின் எழுபது விழுக்காடு, கால்வாய்ப் பாசனத்திற்கு, இந்தக் காவிரியே காரணமாகும்.

      தமிழக நெல் விவசாயப் பரப்பளவில், நாற்பது விழுக்காடு, காவிரிப் படுகையிலேயே அமைந்துள்ளது.

     இதுமட்டுமல்ல, தமிழகத்தின், ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் 23 மாவட்டங்களின் குடி நீர் ஆதாரமாக விளங்குவதும் காவிரியே ஆகும்.

---

     ஒரு தனி மனிதனின் தண்ணீர் தேவை எவ்வளவு தெரியுமா?

     ஒவ்வொரு தனி மனிதனுக்கும், நாள்தோறும் குடிப்பதற்கு மூன்று லிட்டர் நீர் தேவைப்படுகிறது.

     தனி மனிதனின் அன்றாடப் பயன்பாட்டிற்குத் தேவைப்படும் நீரின் அளவு 135 லிட்டர் ஆகும்.

     தனி மனிதன், நாள் ஒன்றிற்கு, உண்ணும் உணவினைத் தயார் செய்ய, விளைவிக்க, 3500 லிட்டர் முதல் 4500 லிட்டர் வரை நீர் தேவைப்படுகிறது.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     நாம் ஒரு நாள் உண்ணும் உணவினை உற்பத்தி செய்வதற்கே, 3500 லிட்டரில் இருந்து 4500 லிட்டர் வரை தண்ணீர் தேவைப்படுகிறது.

     அப்படியானால், ஒரு தனி நபருக்கு, ஒரு ஆண்டிற்கு, தேவைப்படும் தண்ணீரின் தேவை என்ன தெரியுமா?

     1700 கன மீட்டர்

     அதாவது

     17,00,000 லிட்டர்

     பதினேழு இலட்சம் லிட்டர்.

    ஆனால் நம்மிடம் இவ்வளவு நீர் வளம் இருக்கிறதா?

    வாருங்கள் ஒரு பருந்துப் பார்வைப் பார்ப்போம்.

    தமிழகத்தின் சராசரி ஆண்டு நீர் வளம் 1643 டி.எம்.சி.,

    இன்று ஒரு தனி நபருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் நீரின் அளவு 641 கன மீட்டர் மட்டுமே.

    அதாவது, 2054 கன மீட்டர் பற்றாக்குறையுடன்தான் நாம், இன்று காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.

     இன்னும் 32 ஆண்டுகளில், 2050 ஆம் ஆண்டில், ஒரு தனி நபருக்கு 416 கன மீட்டர் நீர் மட்டும்தான் கிடைக்கும்.

     பற்றாக்குறை 1284 கன மீட்டராக உயரும்.

     75.53 விழுக்காடு பற்றாக்குறை ஏற்படும்

     ஒரு முறை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொள்ளுங்கள்,

     மனதை தயார் செய்து கொள்ளுங்கள்

     இந்நிலை தொடருமானால், 2050 வது ஆண்டில், தமிழக மக்களுக்கு, ஒரு நாளில், ஒரு வேளைக்குப் போதுமான உணவைத்தான் உற்பத்தி செய்ய இயலும்.

     நம் காலம் ஓடிவிடும்,

     கிட்டத்தட்ட ஓடி விட்டது.

     ஆனால் நம் பிள்ளைகளின், நம் பெயரப் பிள்ளைகளின்  நிலைமை என்ன?

     இந்நிலையினை மாற்ற நாம் என்ன செய்யப் போகிறோம்?

----

     இன்றைய நிலையில், காவிரி டெல்டா பகுதிகளில் மழையின் மூலம் பெற்றபடும் நீரின் அளவு 60 டி.எம்.சி.,

     காவிரி டெல்டாவின்  நிரந்தர நீர் வளம் 20 டி.எம்.சி.,

     நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரின் அளவு 177.25 டி.எம்.வி.,

     நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, முழுமையாக நீர் கிடைக்குமா என்பது தனிக் கதை.

     கிடைக்கிறது என்றே வைத்துக் கொள்வோம்.

     கிடைத்தால், டெல்டாவின் மொத்த நீர் ஆதாரம் 257.25 டி.எம்.சி.,

     நடுவர் மன்றத் தீர்ப்பு பொய் ஆகுமேயானால், கானல் நீராக மாறுமேயானால், 2050 ஆம் ஆண்டில், டெல்டாவிற்குத் தேவைப்படும் நீரின் அளவு 424 டி.எம்.சி., ஆக உயரும்.

     பற்றாக்குறை 217 டி.எம்.சி., ஆக வளரும்.

     என்ன செய்யப் போகிறோம்?

     நமது பிள்ளைகளுக்காக, நமது பெயரப் பிள்ளைகளுக்காக, நமது சந்ததியினருக்காக, என்ன செய்யப் போகிறோம்?

---

     முதலில் நாம் தண்ணீரைச் சேமிக்கப் பழக வேண்டும்.

     அன்றாடப் பயன்பாடு

     விவசாயப் பயன்பாடு

     தொழிற்சாலைப் பயன்பாடு

     வியாபாரப் பயன்பாடு

என ஒவ்வொரு நிலையிலும், நீரைச் சேமித்தே ஆக வேண்டும்.

     வீட்டினைப் பொறுத்தவரை, கழிவறையில் தொடர்ந்து நீர் கசிவதால், நாள் ஒன்றுக்கு 200 கேலன் நீர் வீணாகிறது.

     குழாயில் ஒரு சொட்டு சொட்டினால், ஓர் ஆண்டில், 3000 கேலன்  நீர் வீணாகிறது.

     இதனைச் சரி செய்ய வேண்டும்.

     குழாயினைத் திறந்து வைத்தபடி, பல் துலக்குவதால், முகச் சவரம் செய்வதால், நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் நீர் வீணாகிறது.

     பாத்திரத்தில் நீரைப் பிடித்து வைத்துக் கொண்டு பயன்படுத்தினால், தினமும் 13 முதல் 15 லிட்டர் வரை சேமிக்கலாம்.

      வீட்டில் சமையல் பாத்திரங்கள் கழுவிய நீரைத் தோட்டத்திற்குப் பயன்படுத்த வேண்டும்,

     பாத்திரம் கழுவும் இயந்திரம், துணி துவைக்கும் இயந்திரம் முழு கொள்ளளவை எட்டிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

     இதுமட்டுமல்ல,

     மழை நீர்ச் சேகரிப்பு

    செயற்கை முறை நில நீர்ச் செறிவு

    கோடை உழவு

     மாற்றுப் பயிர்

     நீர் வளம் அற்றப் பகுதிகளுக்கு தானியம் இறக்குமதி செய்தல்

     மாசடைந்த தண்ணீரை நன்னீராக்குதல்

     உலக வெப்பத்தைக் கட்டுப் படுத்துதல்

     கடல் நீர் ஊடுறுவலைத் தடுத்தல்

     நீரி நிலைகளைப் புதுப்பித்தல்

     நதிகளை இணைத்தல்

முதலிய வழிகளில் தண்ணீர் பற்றாக்குறையினைச் சமாளிக்கலாம்.

     நம்மைவிட குறைந்த மழை அளவுகளை உடைய, அமெரிக்கா போன்ற பிற நாடுகள் அனைத்தும், மழை நீரைத் தேக்கி, முறைப்படுத்தி, அனைத்து மாநிலங்களுக்கும், முறையாகப் பகிர்ந்து கொடுப்பதன் மூலம், தண்ணீர் பற்றாக்குறை என்பதே இல்லை, என்னும் நிலையினை உருவாக்கி விட்டன.

     நாம் என்று, இதுபோல் மாறப் போகிறோம்.

     தண்ணீரைப் பிரித்துக் கொடுப்பதில், ஜாதி, மதம், இனம், நிறம், வகுப்பு, பிரிவு, மொழி, கொள்கை, நாட்டு எல்லை, அரசியல், எதுவும் தடைக்கல்லாகவே இருக்கக் கூடாது.

     இவையெல்லாம் பெருந்தடைகளாக நீடிக்குமானால், தண்ணீர் கிடைக்காமல் இருக்குமேயானால், இத்தடைகளைத் தகர்க, நம்முன் இரண்டே இரண்டு வழிகள் தான் இருக்கின்றன.

     முதல் வழி

     தண்ணீர் பற்றாக் குறையுடன் வாழக் கற்றுக் கொள்வது.

     இரண்டாவது வழி

     வீதிக்கு வந்து போராடுவது.

     போராடிப் போராடி நம் உரிமையைப் பெறுவது,

     இரண்டில் நாம், எதைச் செய்யப் போகிறோம்.

     முடிவு செய்ய வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.

-----

     பொழிவு,

    சொற்பொழிவு நிறைவு பெற்ற பொழுது, அரங்கு முழுவதும் ஓர் அமைதி.

தஞ்சாவூர், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின்,
பருவகால மாற்ற ஆய்வு மையத்தின்,
மேனாள் இயக்குநர்
முனைவர் ப.மு.நடராசன் அவர்கள்,


காவிரி – தாகம் தீர்க்கும் வழிகள்

என்னும் தலைப்பிலானப் பொழிவினை நிறைவு செய்து இருக்கையில் அமர்ந்த பிறகும், அமைதி தொடரத்தான் செய்தது.

     என்ன செய்யப் போகிறோம்?

     எப்படி வாழப் போகிறோம்?

     நம் வருங்காலச் சந்ததியினர் எப்படி வாழ வைக்கப் போகிறோம்?

     காசு, பணத்தை மட்டும், நம் சந்ததியினருக்கு விட்டுச் சென்றால் போதுமா?

      உள்ளத்தில் கேள்விகள் சூறாவளியாய் சூழன்றடிக்க, வெளியிலோ அமைதி.

      கடந்த 10.6.2018 ஞாயிற்றுக் கிழமை மாலை, ஏடகம் அமைப்பின் சார்பில், நடைபெற்ற ஞாயிறு முற்றம் சொற்பொழிவில்தான், முனைவர் ப.மு.நடராசன் அவர்களின்  உரையினைக் கேட்டு, மூச்சு விடக்கூட மறந்து அமைதியாய் அமர்ந்திருந்தேன்.

      ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டும், அனைவர் உள்ளத்திலும் புகுந்திப்பது தெளிவாய் தெரிந்தது.


ரோட்டரி கிளப் ஆப் தஞ்சாவூர் கிரானரியின் தலைவர்
ரொட்டேரியன் ஆர்.பழனியப்பன் அவர்கள்
விழாவிற்குத் தலைமையேற்க.

அரசு விருது பெற்றத் தஞ்சை ஓவியர்
திரு ஆ.ராகவன் அவர்கள்
வந்திருந்தோரை வரவேற்றார்.

ஏடகம் அமைப்பின் செயலாளர்
பா.விஜி அவர்கள்
நன்றிரையாற்ற விழா இனிது நிறைவுற்றது.


ஏடகம் அமைப்பின் நிறுவனர்,
தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தின், தமிழ்ப் பண்டிதர்
திரு மணி.மாறன் அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

      மாதந்தோறும், இரண்டாம் ஞாயிறு மாலை, சீரியச் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்து, திறம்பட நடத்திவரும், ஏடக நிறுவனர் திரு மணி.மாறன் அவர்களின் முயற்சி போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்.

    

30 கருத்துகள்:

  1. என்ன செய்யப் போகிறோம்....

    ஒவ்வொரு தனிமனிதனும் தண்ணீர் சேமிப்பின் முக்கியத்தினை உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாளைய பாடு திண்டாட்டம் தான்.

    சிறப்பான பகிர்வு.

    ஏடகம் நிகழ்வு பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே பணம் ஒன்றே குறிக்கோளாகி விட்ட இயந்திர மனித வாழ்வில் நாளைய சந்ததிகளின் வாழ்வாதாரத்தை மறந்து வாழ்கிறோம்

    பதிலளிநீக்கு
  3. தண்ணீருக்காகத்தான் அடுத்த உலகப்போர் நிகழும் என்கிறார்கள். தண்ணீர் சிக்கனத்தை நாம் இன்னும் பழகவில்லை. தன்ணீரைத் தேக்கி வைக்க புதிய அணைகளையும் நாம் கட்டவில்லை. வருங்காலம் மிரட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  4. மிக அற்புதமான பதிவு.தண்ணீரின் தேவையை, சிக்கனத்தை,சேமிப்பை தமிழக மக்கள் முழுமையாக உணரவேண்டும் அதைநோக்கிய பயணத்தை இந்த பொழுதில் இருந்தே தொடங்கவேண்டும் வரும் தலைமுறைக்கு நீரைவிட்டுச்செல்லவேண்டும்.நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்ல பதிவு.
    அருமையான சொற்பொழிவு.
    தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி.
    நிறைய இடங்களில் மழை நன்றாக பெய்து இருக்கிறது மழை சேகரிப்பு முறையாக செய்து இருந்தால் பல ஆண்டுகளுக்கு தண்ணீர் பஞ்ச்சம் இருக்காது.

    பதிலளிநீக்கு
  6. தொடர்ந்து தண்ணீர் விசயத்தை உணர்ச்சி பூர்வமாக அணுகிக் கொண்டிருக்கின்றோம். பற்றாக்குறையில் எப்படி அதனை பயன்படுத்த வேண்டும் என்பதனை அரசாங்கமும் சொல்வதில்லை. தனி மனிதர்களுக்கு அது குறித்த அக்கறையில்லை.

    பதிலளிநீக்கு
  7. தண்ணிர் கிடைக்காமல் சித்ரவதை பட்டு சாவதை விட போராடி சாவதே மேல்...... போராடவிட்டால் நீரை மட்டுமல்ல..மண்ணையும் விவசாயிகளையும் நம் எதிர்கால தலைமுறையையும் பறி கொடுக்க போகிறோம்..

    பதிலளிநீக்கு
  8. ஆற்காடு கிச்சடி சம்பா என் இளமை காலத்தில் 50 வருடங்களுக்கு முன் கேள்விப்பட்ட அரிசி ரகம்.
    கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சென்னை பகுதிகளில் ஆந்திர மாநில அரிசி வகைகளே உணவுத் தேவையை பூர்த்தி செய்கிறது.
    தஞ்சைத் தரணியில் நெல் சாகுபடியே கிடையாதா?. உண்டு என்றால் எங்கு செல்கிறது?..
    தெரிந்து கொள்ள ஆசை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயிரிடும் விவாசாயி குடும்பத்திற்கும் மீதமுள்ளதை அரசு விற்பனை கூடத்திற்கும் தஞ்சை விவசாயி நெற்பயிரை விற்பனை செய்கிறான். இந்த நெல்லை அரிசியாக்கி ரேஷனில் தமிழக அரசு வழங்குகிறது. சோழநாடு சோறுடைத்து பழமொழி அளவிலே உள்ளது. ஆந்திரா மாநில அரிசியே நம் தேவையை பூர்த்தி செய்கிறது கசப்பான உண்மைதான்.

      நீக்கு
  9. கரந்தை ஜெயக்குமார் ஸாருக்கு மிக்க நன்றி..காவிரி .தாகம் தீர்க்கும் வழிகளை மிகவும் அருமையாகப் பதிவிட்டுள்ளமைக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்...

    பதிலளிநீக்கு
  10. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, காலத்திற்கு ஏற்ற பதிவு. நாம் அனைவரும் விழிப்புணர்வு பெற்று செயல்பட்டால்தான் எதிர்காலத்தில் பிழைக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. தண்ணீர் சிக்கனத்தை அறிவுறுத்தியது - பதிவு...

    ஒவ்வொருவரின் கடமையும் கூட..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  12. தமிழா - நீ
    தண்ணீரைச் சேமிக்காது விட்டால்
    கண்ணீரைத் தான் சிந்துவாய்!
    என்று தண்ணீர் விழிப்புணர்வு
    மேற்கொண்டாலும் கூட
    தண்ணீரைச் சேமிக்கும் பழக்கம்
    நம் வாழ்வில் வழக்கமாக்குவோம்!

    பதிலளிநீக்கு
  13. என்னதான் முடிவு? என்று எல்லோரும் யோசிக்க வேண்டிய வேளை என்பதை கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. அரசியல் பகைமை இல்லாமல் செயல்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

    பதிலளிநீக்கு
  15. அரசும் அரசியல்வாதிகளும் அனைத்து மக்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அரிய பதிவு.

    பதிலளிநீக்கு
  16. காவிரி நீரையே நம்பி இராமல் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் காவிரி உற்பத்தியாகி அந்த மாநிலத்து தேவையைத்தான் முதலில் பார்ப்பார்கள்நாம் இன்னும் ப்ராக்டிகலாகசிந்திக்க வேண்டும் உணர்ச்சி வசப்படுவதுதான் நம் இயல்பாகிவிட்டதே

    பதிலளிநீக்கு
  17. சொற்பொழிவாளர் கூறியதை மிகவும் நுட்பமாகப் பகிர்ந்த விதம் அருமை. மின்சாரம் இல்லாத நிலையிலும் சொற்பொழிவாளர் தொய்வின்றி உரையாற்றிய விதத்தினை அரங்கத்தில் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. மிக மிக அவசியமான பதிவு நண்பரே.
    கேரளத்தை பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  19. நீரைச் சேமிக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இனியாவது விழித்துக் கொள்வோம்!

    பதிலளிநீக்கு
  20. தண்ணீர் பிரச்சினை இன்னும் சில வருடங்களில் பல அழிவுகளை ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமேயில்லை .
    அவசியமான விளக்கமான பதிவு

    பதிலளிநீக்கு
  21. தண்ணீரின் தேவை விஸ்வரூபம் எடுத்து அது கிடைக்காமல் போகும் முன் நாம் ஏதாவது செய்ய வேண்டும்,,/

    பதிலளிநீக்கு
  22. நீர் இன்றி அமையாது உலகு...

    நாம் வாழ ...

    நம் மக்கள் வாழ...

    நம் உலகம் வாழ..

    நீரை சேமித்து பயன் படுத்த வேண்டும்...


    அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  23. காவிரி ஆறு... போர்ட் இருக்கு 6 எங்கே?:)

    பதிலளிநீக்கு
  24. மழைபெய்யும் போதெல்லாம் வீணாகும் நீரை நினைத்தால் பரிதவிப்பாயிருக்கிறது. ஏதாவது செய்யவேண்டும் மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்று எங்கோ படித்தேன்.

    தஞ்சை இலக்கிய நிகழ்வுகள் அருமை. ஓவியருக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் !

    எதிர்காலம் பற்றிய இயற்கைச் சிந்தனை போற்றுதலுக்கு உரியது ஆனால் எத்தனை பேர் இதை சிந்திக்கப்போகிறார்கள் என்பதே கேள்விக் குறியாய் இருக்கிறது காரணம் சமுதாயம் கட்டுக் கோப்பு இழந்து பலகாலம் ஆச்சு .....இனிவரும் இளைய தலைமுறைக்கு இதுபற்றிய விழிப்பூட்டல் பயன் தரும் இப்போதிருப்போர்க்கு காதில் எதுவும் ஏறாது .......


    கானலாய் வாழ்க்கை கரைந்தாலும் !எண்ணங்கள்
    கூனலாய்க் கொண்டோர் குணம்மாறர்! ஆனாலும்
    தேநீரைத் தேடித் தெருவெல்லாம் காய்ந்தொருநாள்
    வாநீரைத் தேடுமவர் வாய் !

    பதிலளிநீக்கு
  27. நிச்சயம் தண்ணீர் சிக்கனமாக பாவிக்க வேண்டிய பொருள். எதிர்கால சந்ததிக்கு தண்ணீர் ஒரு பொக்கிஷம் போல!

    பதிலளிநீக்கு
  28. mostly taken by private plants more than people consumption

    பதிலளிநீக்கு
  29. தண்ணீரைப் பற்றி இவ்வளவு விடயங்கள் உள்ளனவா என்று சிந்திக்கும் வேளையில், தண்ணீரை எப்படியெல்லாம் சேமித்து வைக்கலாம்- சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு வழங்கிய ஆலோசனைகள் மிக மிகப் பிரயோசனமானவை,பெறுமதி மிக்கவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு