29 ஜூன் 2025

இருபதே நாளில் ஒரு பாலம்

 


     நாச்சியார் கோயில்.

     கும்பகோணம்.

     பொதுப் போக்குவரத்து தொடங்கப் பெற்றக் காலம்.

     நகரப் பேருந்து எண் 4.

  நாச்சியார் கோயில் வழியாகக் கும்பகோணம் செல்லும் ஒரே பேருந்து.

     நாச்சியார் கோயிலில் இருந்து, கும்பகோணம் கலைக் கல்லூரிக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் இப்பேருந்து.

     அன்றும் அப்படித்தான், வழக்கம்போல், நாச்சியார் கோயில் மாணவர்கள், கல்லூரிக்குப் புறப்பட்டார்கள்.

     பேருந்தும் வந்தது.

     மகிழ்வோடு ஏறினார்கள்.

     பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அழகாப்புத்தூர் வாய்க்கால் கரைக்கு, ஆறு போன்ற அந்த வாய்க்காலின் தென் கரைக்கு வந்தவுடன் திடீரென நின்றது.

     பேருந்து இதற்குமேல் போகாது என்றார் ஓட்டுநர்.

     பயணிகள் அனைவரும் கீழே இறங்கி அந்த ஆற்றைப் பார்த்தார்கள்.

     ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பெற்ற அந்த ஆற்றின் பாலம், இடிந்து கிடந்தது.

     ஆற்றிலோ நீர் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது.

     அனைவரும் வந்த  வழி திரும்ப, மாணவர்கள் மட்டும், ஆற்றையே பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

     என்ன செய்வது என்று  தெரியவில்லை.

     கலந்து பேசி ஒரு முடிவிற்கு வந்த மாணவர்கள், வேட்டி, சட்டையைக் கழற்றி, தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டனர்.

     பாடப் புத்தகங்களை முண்டாசுக்கு மேல் தூக்கி வைத்துக் கைகளால் பிடித்துக் கொண்டே, ஆற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.

     மெல்ல, மெல்ல ஆழம் அதிகரிக்கத் தொடங்கியது.

     முழுதாய் மூழ்கி விடுவோமோ என்று அஞ்சினர்.

     சற்றேறக்குறைய கழுத்தளவு தண்ணீர்.

     ஆற்றைக் கடந்தனர்.

     வேட்டியினையே துண்டாய் பயன்படுத்தி உடலைத் துடைத்துக் கொண்டு, உடைகளை அணிந்தவாறு, அருகில் இரண்டு கி.மீ., தொலைவில் இருக்கும் சாக்கோட்டையை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

     சாக்கோட்டையில் இருந்து கும்பகோணம் வரை வேறொரு பேருந்து.

     கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து, காவிரிக் கரையில் அமைந்திருக்கும் கல்லூரியை அடைய, மீண்டும் இரண்டு கி.மீ., நடக்க வேண்டும்.

    நடந்தார்கள்.

     பல நாட்கள் ஆற்றில் நனைந்தார்கள், நடந்தார்கள்.

     நாட்கள் செல்லச் செல்ல, மாணவர்களின் மனங்களில் ஒரு சோர்வு எட்டிப் பார்த்தது.

     ஒரு நாள் அந்த ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் அமைக்கம் பணி நடைபெறுவதைக் கண்டு மகிழ்ந்தார்கள்.

      பின்னர்தான் அறிந்தார்கள், இது ஒரு தற்காலிகப் பாலம் முதல்வர் இவ்வழியாகச் செல்ல இருக்கிறார், அவரது கார் செல்வதற்காகத்தான் இந்தப் பாலம். ஓரிரு நாட்களுக்கு மட்டும்தான் இப்பாலம் இருக்கும் என்பதை அறிந்து துவண்டார்கள்.

     இருப்பினும் அவர்களுக்குள் திடீர் என ஓர் எண்ணம் உதித்தது.

     முதல்வரை தடுத்து நிறுத்தி, பாலம் கட்டிக் கொடுங்கள் எனக் கேட்டால் என்ன என்ற எண்ணம் எழுந்தது.

     ஒரு மனுவினை எழுதி, நாச்சியார் கோயிலைச் சார்ந்த பன்னிரெண்டு மாணவர்களும் கையெழுத்திட்டு, முதல்வரை வழியில் தடுத்து மனுவினைக் கொடுக்கத் தயார் ஆனார்கள்.

     காவலர்கள் இவர்களது எண்ணத்தை அறிந்து துரத்தினர்.

     ஓடுவது போல் ஓடி, மரங்களுக்கிடையே மறைந்திருந்தனர்.

     முதல்வரின் கார் வருவதைக் கண்டவுடன் நடுவீதிக்கு வந்தனர்.

     காரை மறித்தனர்.

     இரண்டே இரண்டு கார்கள்தான் வந்தன.

     முதல் காரில் முதல்வர்.

     இரண்டாவது காரில் சட்டமன்ற உறுப்பினர் காசிராமனும், ஓரிரு அதிகாரிகளும்.

     சாலையின் நடுவில் இளைஞர்கள்.

     கார் நின்றது.

     அடுத்த நொடி, சற்றும் தயங்காமல், காரின் கதவினைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் முதல்வர்.

     யார் நீங்கள்?

     ஐயா, நாங்கள் கல்லூரி மாணவர்கள்.

     இப்போ மணி என்ன?

     11.10 ஐயா.

     கல்லூரிக்குப் போகாமல் இங்கே ஏன் நிற்கிறீர்கள்? படிப்புக் கெட்டுவிடாதா?

     படிப்பதற்காகத்தான் நிற்கிறோம் ஐயா என்று பதில் அளித்தவாரே, ஒரு மாணவர், கையில் வைத்திருந்த கோரிக்கை மனுவினை, முதல்வரை நோக்கி நீட்டுகிறார்.

     முதல்வர் மனுவினை வாங்கவில்லை.

     என்ன எழுதியிருக்கு சொல்லு.

     ஐயா, இந்த ஆற்றின் பாலம் இடிந்து விட்டதால், எங்களால் குறிப்பிட்ட நேரத்தில் கல்லூரிக்குப் போக முடியவில்லை. நீங்கள்தான் உதவ வேண்டும்.

     முதல்வர் ஒரு கணம்கூட யோசிக்கவில்லை.

     காசிராமன் என சட்டமன்ற உறுப்பினரை அழைத்தார்.

     உங்க பஸ்தானே இங்க ஓடுது? நாளையில் இருந்து, உங்க பஸ் இக்கரைக்கு வரும் அதே நேரம், வேறொரு பஸ் அக்கரையில் காத்திருக்க வேண்டும். மாணவர்கள், கரையைக் கடந்து வந்ததும், அவர்களை விரைவாக கும்பகோணம் அழைத்துச் செல்லவேண்டும் என்றார்.

     அதிகாரிகள் பக்கம் திரும்பினார்.

     இன்னும் பதினைந்தே நாளில், புத்தம் புதிதாய் ஒரு பாலத்தைக் கட்டி முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

     அதிகாரி தயங்கினார்.

     ஐயா, ஒரு பாலம் கட்ட எப்படியும் இரண்டு மாதமாவது ஆகும்.

     அதெல்லாம் முடியாது. இருபது நாளில் கட்டி முடிக்க வேண்டும், இரவிலும் விளக்குகளைப் பொறுத்தி வேலை செய்யுங்கள், கூடுதல் செலவிற்கு நான் ஒப்புதல் வழங்குகிறேன் என்றவர் மேலும் தொடர்ந்தார்.

     இருபத்தி ஒன்றாவது நாள், நானே வருவேன் பாலத்தைத் திறந்து வைப்பேன்.

     அவ்வளவுதான், மாணவர்களைப் பார்த்து, நல்லா படிங்க என்றவர் காரில் ஏறிப் புறப்பட்டார்.

     போர்க்கால அடிப்படையில் வேலை நடந்தது.

     இரவும் பகலும் வேலை நடந்தது.

     இருபதாவது நாள் பாலம் தயாரானது.

     முதல்வரை அணுகினார்கள்.

     நான் வரல, அங்கிருப்பவர்களை வைத்தே உடனே திறந்துவிடுங்கள்.

     இருபதே நாட்களில் மாணவர்கள் புத்தம் புதிதாய் ஒரு பாலத்தைப் பெற்றார்கள்.

     இப்படியும் ஒரு முதல்வர்.

     வியப்பாக இருக்கிறது அல்லவா?

     அன்று மாணவரைய் மனு கொடுத்தவர், இன்று தன் 82 ஆவது அகவையில் இருக்கிறார்.

     இவர், தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், இலக்கியத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     பல கல்வி நிறுவனங்களின் பாடநூல் கழக உறுப்பினர்.

     இலக்கிய ஆய்வறிஞர்.

     130 நூல்களின் ஆசிரியர்.


பேராசிரியர் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன்

     இருபதே நாட்களில் பாலம் கட்டிக் கொடுத்த அன்றைய முதல்வர் யார் தெரியுமா?


கர்மவீரர் காமராசர்.