19 அக்டோபர் 2013

இணைய வானில் தமிழ்ப் பறவைகள்

தாயெழிற்  றமிழை,  என்றன்
    தமிழரின்  கவிதை  தன்னை
ஆயிரம்  மொழியிற்  காண
    இப்புவி  அவாவிற்  றென்ற
தோயுறும்  மதுவின்  ஆறு
    தொடர்ந்தென்றன்  செவியில்  வந்து
பாயுநாள்  எந்த  நாளோ,
    ஆரிதைப்  பகர்வார்  இங்கே?

என ஏக்கத்தோடு பாடுவார் பாரதிதாசன். பாவேந்தரின் ஏக்கத்தைப் போக்க, வாட்டத்தை நீக்க, தாயெழில் தமிழை உலகெலாம் பரப்ப, அயரா முயற்சி மேற்கொண்டு, தளராது பாடுபட்டு வரும் தமிழாசிரியர் ஒருவரைச் சந்திப்போமா நண்பர்களே.

     மனதில் உறுதியோடும், வாக்கினில் இனிமையோடும், புதியன விரும்பும் புலவர் நா. முத்து நிலவன் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சார்ந்தவர். தமிழாசிரியர். சிறந்தப் பட்டிமன்றப் பேச்சாளர்.
 
கவிஞர் முத்து நிலவன்
     நண்பர்களே, நாமெல்லாம் கணினி என்னும் வானூர்தியில் ஏறி, நித்தம் நித்தம் உலகை வலம் வருகிறோம். நண்பர்களின் எழுத்துக்களைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்.

     நாமெல்லாம் வலைப் பூவில் வாசம் செய்பவர்களைத்தான் நாள்தோறும் சந்திக்கிறோம். ஆனால் கவிஞர் முத்து நிலவன் அவர்களோ, கணினியைக் கண்டாலே, காத தூரம் விலகியோடும், நண்பர்களைப் பற்றிச் சிந்தித்தார். என்ன செய்தால், இவர்களையும் வலைப் பூவிற்குள், வண்டாய் பறக்க விடலாம் என்று யோசித்தார்.

     நண்பர்களே, ஆசிரியர்களிலேயே பல பிரிவினர் உண்டு. ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாற்று ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் கணினியை அதிகம் நாடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுள் எழுத்துப் பழக்கம் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

     தமிழாசிரியர்களை எடுத்துக் கொண்டால், மேடைப் பேச்சில் வல்லவர்களாகவும், எழுத்தில் ஈடு இணையற்ற விற்பன்னர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களில் பொரும்பாலானவர்கள், கணினி இருக்கும் திசைக்கே பெரிய கும்பிடு போடுபவர்களாக இருப்பார்கள்.

     இப்படிப்பட்ட தமிழாசிரியர்கள் நாற்பது பேரைத் தேர்வு செய்தார் கவிஞர் முத்து நிலவன். 17 தமிழாசிரியைகள், 23 தமிழாசிரியர்கள். இவர்களுள் உதவிக் கல்வி அலுவலர் திருமதி ஜெயலட்சுமியும் ஒருவர்.

     இரண்டு நாட்கள் இவர்களுக்குப் பயிற்சி அளித்து, கணினிக்குள் இவர்களையும் இழுப்பது என்று முடிவு செய்தார். நாற்பது பேருக்கு கணினி பயிற்சி அளிப்பது என்றால், கணினி வேண்டுமல்லவா? இணைய இணைப்பு வேண்டுமல்லவா?
கவிஞர் கதிரேசன்

       கவிஞரான இவர், மற்றொரு கவிஞரை நாடினார். புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக்கின் தாளாளர் ஒரு கவிஞர். கவிஞர் கதிரேசன். எனது கணினி ஆய்வகத்தையே தந்தேன் உனக்கு எனக் கூறி அவ்வண்ணமே வழங்கியும் மகிழ்ந்தார். தமிழ் நெஞ்சமல்லவா.

     நண்பர்களே, நானும் ஒரு ஆசிரியன். கல்வித் துறை அலுவலர்களின் பணிச் சுமையினை ஓரளவு அறிவேன். இந்நாளில் கல்வித் துறை அலுவலர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாமல் பம்பரமாய் சுழன்று கொண்டேயிருப்பவர்கள்.
 
முனைவர் நா. அருள் முருகன்
      நண்பர்களே, புதுக்கோட்டை மாவட்டத்திற்குக் கிடைத்திருக்கின்ற, முதன்மைக் கல்வி அலுவலர், ஒரு தமிழாய்ந்த தமிழறிஞர். தமிழ் இலக்கியங்களிலேயே மிகவும் கடுமையானச் சொற்களை உடையது என கற்றறிந்த சான்றோர்களால் கூறப்படும், நேமிநாதம் என்னும் இலக்கண நூலை ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் நா. அருள் முருகன்.

     தமிழ் மொழியின் மீது உள்ள பற்றினாலும், தமிழைத் தழைக்கச் செய்ய வேண்டுமே, தமிழை கணினி மொழியாக மாற்ற வேண்டுமே என்ற, உயரிய, உன்னத எண்ணத்தினாலும், இரண்டு நாள் பயிற்சியின் போதும் உடனிருப்பதாய் கவிஞர் முத்து நிலவன் அவர்களிடம் உறுதியளித்தார்.

     நண்பர்களே, கவிஞர் முத்து நிலவன் அவர்கள், எனது வலைப் பூவிற்குத் தொடர்ந்து வருகை தருபவர். இவரை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. ஆயினும் வலை வழித் தொடர்பின் காரணமாக, என்னையும், இப் பயிலரங்கிற்கு, மின்னஞ்சல் வழி அழைத்திருந்தார்.

     நண்பர்களே, வலைப் பூ ஏற்படுத்தித் தருகின்ற உறவை, நட்பைப் பார்த்தீர்களா? இதுவல்லவோ நட்பு.

கணினியில் தமிழ் எழுத, வலைப் பக்கம் உருவாக்க இரண்டு நாள் பயிலரங்கம்

களம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை
காலம்
5, 6.10.2013 சனி மற்றும் ஞாயிறு
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

தலைமை
முனைவர் நா.அருள் முருகன்,
முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை
முன்னிலை
கவிஞர் கதிரேசன்,
தாளாளர், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்

    இப்பயிலரங்கில் கலந்து கொள்ளக் கட்டணம் கிடையாது. தனி ஊதியம் (T.A./D.A)  வருகைச் சான்று எதுவும் தரப்பட மாட்டாது. இரு வேளை தேநீர் மட்டுமே வழங்கப்பெறும். மதிய உணவினை, அவரவர்களே கொண்டு வருதல் வேண்டும்.

      நண்பர்களே, அழைப்பிதழிலேயே மேற்கண்ட நிபந்தனைகளை விதித்திருந்தார்.

      ஆசிரியர்களாகிய, எங்களுக்கு ஒரு வாரத்திற்குக் கிடைப்பதோ, இரு நாள் விடுமுறை. அதுவும் பல வாரங்களில் கிடைக்காது. சனிக் கிழமை பல வாரங்களில் அலுவல் நாளாகிவிடும். விடுமுறையில் கலந்து கொள்ள வேண்டும். தேநீர் மட்டுமே தருவோம். ஆனால் கணினியை போதும், போதும் என்கிற வகையில் திகட்டத் திகட்டக் கற்றுத் தருவோம். வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.

     நாற்பது பேர் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில், தனது வலைப் பூவில் மாயா ஜாலங்கள் பலவற்றை நிகழ்த்துபவரும், எவ்வலையின் பக்கம் திரும்பினாலும், கருத்து தெரிவிப்பதில் முதல் மனிதராய் விளங்குபவருமான, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ( நண்பர்களே, திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இப்பட்டம் மிகவும் பொருத்தம்தானே) அவர்கள் கலந்து கொண்டார். நாற்பது பேரையும் மின்னஞ்சல் முகவரி பெறச் செய்தார். நாற்பது பேரும் வலைப் பூவினை உருவாக்க அருகிலிருந்து கற்றும் கொடுத்தார்.

     இரண்டாம் நாள் நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தில் இருந்து இறங்கியவுடன், கவிஞர் முத்து நிலவன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். பேரூந்து நிலையத்திற்கு எதிரிலேயே உள்ள, அபிராமி ஹோட்டலில் இருக்கிறேன், வாருங்கள் என்றார். சென்றேன். முதன் முறையாக கவிஞர் முத்து நிலவன் அவர்களை நேரில் சந்தித்தேன்.
பெரம்பலூர் இரா.எட்வின் 
     வலைப் பக்க எழுத்தாளர், பெரம்பலூர் இரா. எட்வின் உடனிருந்தார். தமிழாசிரியர் திரு மகா.சுந்தர் அவர்களும் உடனிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன். காலை உணவு உண்டோம். வெங்கடேசுவரா பாலிடெக்னிக் சென்றோம். இரண்டாம் நாள் பயிலரங்கு தொடங்கியது.

     என்ன செய்ய வலை? என்னும் தலைப்பில் பெரம்பலூர் கவிஞர் இரா.எட்வின் உரையாற்றினார். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா, இவர் மேனிலைப் பள்ளி ஒன்றில், ஆங்கில அசிரியர்.

      சமூக வலைத் தளங்களின் பயனையும், அதன் வலிமையினையும் எடுத்துரைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியிருப்பார். இரா.எட்வின் அவர்கள் தனது உரையினை நிறைவு செய்த பொழுது, பெய்லின் புயல் சுற்றி, சுழன்று அடித்து ஓய்ந்ததைப் போல் தோன்றியது.
முதன்மைக் கல்வி அலுவலர்
     அடுத்ததாக, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள், கருவி நூல்கள் என்னும் தலைப்பில், நழுவுப் படக் காட்சியின் உதவியுடன் உரையாற்றினார். கவிஞர் இரா.எட்வின் புயலென்றால், இவர் தென்றல். இவரது பேச்சு தென்றலாய் தவழ்ந்தது. ஒவ்வொரு தமிழாசிரியர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்களையும், அதன் அவசியத்தினையும் பாங்குற எடுத்துரைத்தார். நூல்களுக்காக ஒரு ஆசிரியர் செய்யும் செலவு என்பது, செலவேயல்ல, வரவு, அறிவின் முதலீடு, ஆகவே வரவுதான் என்று நயம்பட எடுத்துரைத்தார்.

     பிற்பகல் அமர்வில் நான் பேசினேன். புயல் அடித்து ஓய்ந்த பிறகு, தென்றல் தவழ்ந்து வருடிச் சென்ற பிறகு நான் என்ன பேசுவது? இருப்பினும் நானும் எனது வலையும் என்னும் தலைப்பில் பேசினேன்.

     வலைப் பூவில் எழுதுவதற்கு செய்தி தேடி எங்கும் ஓட வேண்டாம். நூல்களின் பக்கங்களில் மூழ்கி, மூச்சுத் திணற வேண்டாம் என்றேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள், வாழ்வில் வென்ற தருணங்களை, தோல்வியைத் தழுவிய நிமிடங்களை, சாதித்த சாதனைகளை, சோதனையின் பிடியில் சிக்கி வேதனையால் புழுவாய்த் துடித்திட்ட யுகங்களை எழுதுங்கள் என்றேன்.

      மகிழ்ந்தால் நம்மோடு சேர்ந்து மகிழவும், வேதனையென்றால், நமக்காக வருந்தி, துயர் துடைக்க, வார்த்தை என்னும் கரம் கொண்டு ஆறுதல் மொழி பேசி, அரவணைக்க, வலைப் பூவின் உடன் பிறவா உறவுகள், நட்புகள், உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் வலைப் பூ என்னும், அன்பு மயமான உலகில் ஒன்றிணைவோம் என்றேன்.

      நண்பர்களே, இரண்டு நாள் பயிலரங்கின் நிறைவில், கவிஞர் முத்து நிலவன் அவர்களின் முயற்சியால், வலையுலகிற்கு, நாற்பது புதிய பதிவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் பதிவர்களாய் உருவெடுத்துள்ளனர்.

உள்ளன்பு ஊற்றி  ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச்  சேர்த்தமைத்  தார்கள்.
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி  தொடங்கினர். பிறந்த்து தொழும்பு
கற்கண்டு மொழியில் கற்கண்டு கவிதைகள்
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூல்கள்
தொழில் நூல், அழகாய் தொடுத்தனர்  விரைவில்
காற்றி லெல்லாம் கலந்த்து கீதம்
சங்கீ  தமெலாம்  தகத்தகா  யத்தமிழ்

என்பார் பாரதிதாசன். பாவேந்தரின் கனவை கணினி வழி மெய்ப்படுத்த முயற்சியினைத் தொடங்கி விட்டார் கவிஞர் முத்து நிலவன்.

     நண்பர்களே, இப்பயிலரங்கின் விளைவாய், புதுக்கோட்டையில், புதிதாய் ஓர் அமைப்பு, தமிழை உலகெலாம் கணினி வழி எடுத்துச் செல்ல, கணினித் தமிழ்ச் சங்கம் மலர இருக்கின்றது.

     கணினித் தமிழ்ச் சங்கம், சாதனைகள் பல படைக்க நாமும் வாழ்த்துவோம். தமிழாசிரியர்களின் முயற்சியினைப் போற்றுவோம்.


     

94 கருத்துகள்:

  1. தங்களின் பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன் ஐயா... நன்றிகள் பல...

    முதல் நாளே தங்களையும் எதிர்ப்பார்த்தேன்... பிறகு தான் நா. முத்து நிலவன் ஐயா அவர்கள் நாளை (ஞாயிறு அன்று) நீங்கள் கலந்து கொள்வதாக சொன்னார்...

    சிறப்பாக தொகுத்துள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    கணினித் தமிழ்ச் சங்கம் சிறப்பாக அமைய எனது ஆதரவு என்றும் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா. தங்களின் செயல்பாடு கண்டு மெய்சிலிர்த்தவன் நான்.அதனால்தான் வலைச் சித்தர் என அழைத்தேன். மிகவும் பொருத்தமான பெயர் என்றே எண்ணுகின்றேன்.தங்களை நேரில் சந்திக்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் விருப்பம். நன்றி ஐயா

      நீக்கு
    2. இங்கே திண்டுக்கல் தனபாலன், கரந்தை ஜெயக்குமாருக்கு பெரிய நண்பர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது. அவர் வலைச்சித்தர் என்றால் இவர் ”கலைச்சித்தர் கரந்தை ஜெயக்குமார்” என்று கூறலாம் போல... இருவருக்கும் எமது புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் பெரிதும் கடமைப் பட்டது. (இப்போதுதான் கருவாகி வருகிறது, விரைவில் நம் நண்பர்களின் பங்கேற்போடு உருவாகும்) நன்றிகள் பலபல, பலப்பல, பல்பல, பற்பல!

      நீக்கு
  2. திரு. முத்து நிலவன் ஐயாவைப் பின்தொடர்கிறேன்...

    கணினித் தமிழ்ச் சங்கம், சாதனைகள் பல படைக்க நாமும் வாழ்த்துவோம். தமிழாசிரியர்களின் முயற்சியினைப் போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. தமிழாசிரியர்களின் முயற்சி போற்றப்பட வேண்டிய ஒன்று

      நீக்கு
  3. தாங்களும் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் செய்துள்ள சேவை மிகவும் பாராட்டத்தக்கது. அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. கணினித் தமிழ்ப் பயிலரங்கப் பயிற்சிக்கு ஒரு நாள் முழுதாக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்... அப்போது தங்களின் வரவையும் மிகவும் எதிர்ப்பார்க்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை சந்திக்கும் நாளை, ஆர்வமுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றேன் ஐயா

      நீக்கு
  5. //இப்பயிலரங்கின் விளைவாய், புதுக்கோட்டையில், புதிதாய் ஓர் அமைப்பு, தமிழை உலகெலாம் கணினி வழி எடுத்துச் செல்ல, கணினித் தமிழ்ச் சங்கம் மலர இருக்கின்றது.//

    ஆஹா! இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. எல்லா ஊர்களிலும் இதுபோன்ற அமைப்புகள் ஏற்படுத்தி, அவ்வப்போது பதிவர் சந்திப்புக்களும் நிகழ்ந்தால் நல்லது.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. // நண்பர்களே, இரண்டு நாள் பயிலரங்கின் நிறைவில், கவிஞர் முத்து நிலவன் அவர்களின் முயற்சியால், வலையுலகிற்கு, நாற்பது புதிய பதிவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் பதிவர்களாய் உருவெடுத்துள்ளனர்.//

    மிக்க மகிழ்ச்சி. அவர்கள் அனைவரின் வலைப்பூக்களின் முகவரிகளையும் திரட்டி ஓர் தனிப்பதிவாக அளித்தால் மற்ற அனைவருக்கும் + அவர்களுக்கும் பயன்படக்கூடுமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் முத்து நிலவன் அவர்களிடம் இதை வேண்டுகோளாகவே வைத்திருக்கின்றேன் ஐயா.

      நீக்கு
  7. நல்ல ஆக்கமான தமிழ் தொண்டு.....அதை பகிர்ந்து கொண்டு....அதைப் படித்ததால் ...எமக்கும்விருந்து உண்ட களிப்பு உண்டு

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் அய்யா,
    பயிற்சியில் நானும் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன். தங்களிடமிருந்து தமிழ்க் கணினிப் பயிலரங்கம் பற்றிய பதிவினைப் பார்த்ததும் நிரம்ப மகிழ்ச்சி பொங்குகிறது. தாங்கள் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டதோடு விட்டு விடாமல் அழகாக ஒரு பதிவையையும் கொடுத்ததற்கு அன்பான நன்றிகள் அய்யா. தங்களது பேச்சின் மூலமே நான் உட்பட வலையில் என்ன பதிவிட வேண்டுமென்பதில் தெளிவானோம். கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களே நான் வலைப்பக்கம் தொடங்க உந்துதலாக இருந்தவர். இந்த பயிற்சிக்கு முன்பே வலைப்பக்கம் தொடங்கி விட்டேன். எனது முதல் பதிவிற்கு முதல் கருத்திட்டவர் அய்யா அவர்கள் தான். என்னைப் போன்ற எண்ணற்றவர்களுக்கு உதவியும், வழிகாட்டியும், ஊக்கப்படுத்தியும் வருகிறார். ஆனால் ஒரு நன்றியைக் கூட எதிர்பார்க்காத மனிதர். அவரின் முயற்சியினால் இப்பயிற்சி. பயிற்சி வெற்றி அடைந்ததன் பெருமை அவருக்கே சேரும். அவரோடு ஒத்துழைத்த அனைத்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் பங்கும் போற்றத் தக்கது. இப்பயிற்சியின் தாக்கத்தை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே. கவிஞர் முத்து நிலவன் அவர்கள் எடுத்த முயற்சி போற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

      நீக்கு
  9. சிறப்பான நிகழ்வு
    அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. பயனுள்ள நிகழ்வை சிறப்பாகத் அழகான நடையில் தொகுத்து தந்திருக்கிறீர்கள். கவிஞர் அவர்களின் முயற்சி பாராட்டத் தக்கது. என்னால் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டது தங்கள் பதிவு. தங்கள் அனுபவங்களை பலருக்கும் பயன்படும் விதத்தில் உரைத்ததற்கு நன்றி . தொடர்க உங்கள் பணி

    பதிலளிநீக்கு
  11. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினாராக வந்து எங்களோடு ஒன்றென கலந்து விட்ட
    1..வலைப்பதிவர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும்
    2. ”வலைச் சித்தர்” திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்
    3. முனைவர் திரு. பழனியப்பன் (வலைப்பதிவரும்) அவர்களுக்கும்
    4. வலைப்பதிவரும் பத்திரிக்கையாளருமான திரு. எரா எட்வின் அவர்கள் ஆகிய் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்த கருத்தூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்வதில் உள்ளம் மகிழ்கிறேன். இன்னொரு பயிற்சியிலும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. வாருங்கள் இணைந்தே செயல்படுவோம். எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அய்யா அவர்களைப் பற்றியும்.
    கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்கள் பற்றியும் நல்லதொரு கருத்தைக் கருத்தைத் தெரிவித்தமைக்கு நன்றி அய்யா.
    புதுக்கோட்டையில் கணினித் தமிழ்ச் சங்கம் மலர்வதற்கும், சாதனை புரிவதற்கும் வாழ்த்தியமைக்கும் நன்றீங்க அய்யா. நேரம் அனுமதித்தால் எனது தளத்தை பார்வையிடுங்கள் அய்யா.
    வலை: pandianpandi.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தளத்திற்கு உடனடியாக வருகை தந்தேன் நண்பரே.. மகிழ்ந்தேன் .இனி தொடர்வேன்

      நீக்கு
  12. // வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்//

    வார்த்தை சித்தர் வலம்புரி ஜானுக்கு அடுத்து வலைச் சித்தர். திண்டுக்கல் தனபாலன். பொருத்தமான பட்டம்தான்.

    // நண்பர்களே, இப்பயிலரங்கின் விளைவாய், புதுக்கோட்டையில், புதிதாய் ஓர் அமைப்பு, தமிழை உலகெலாம் கணினி வழி எடுத்துச் செல்ல, கணினித் தமிழ்ச் சங்கம் மலர இருக்கின்றது. //

    புதுக்கோட்டையில் நடைபெற்ற இப் பயிலரங்கம் பற்றிய செய்தியை உங்களுக்கே உரிய பாணியில் விளக்கியமைக்கு நன்றி! இப்பயிலரங்கம் மூலம் உருவாக இருக்கும் கணினித் தமிழ்ச் சங்கம் பல கிளைகள் பெற்று தழைத்திட வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  13. கணினித் தமிழ்ச் சங்கம் மலர இருக்கின்றது.//
    மலர இருக்கும் கணினித் தமிழ்ச் சங்கம்த்திற்கு வாழ்த்துக்கள்.

    வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் //
    அருமையான பட்டம்..
    வாழ்த்துக்கள் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு.
    40 புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    நீங்கள் பேசியதும் அருமை.பதிவர்களுக்கு
    அருமையாக சொன்னீர்கள்.
    வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா18 அக்டோபர், 2013

    ''..கணினித் தமிழ்ச் சங்கம், சாதனைகள் பல படைக்க நாமும் வாழ்த்துவோம். தமிழாசிரியர்களின் முயற்சியினைப் போற்றுவோம்...''' ஆம் இனிய வாழ்த்து .வியப்பாக உள்ளது வாசிக்க.
    டி.டிக்கு திண்டுக்கல் தக(ன)பாலனுக்கு பட்டம். நன்று. சரி தான்.
    வாழ்க! வளர்க!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  15. வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ( நண்பர்களே, திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இப்பட்டம் மிகவும் பொருத்தம்தானே) உண்மைதான் தகுதியானவரும் கூட. தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. இனிய வணக்கம் அய்யா...
    கவிஞர் முத்துநிலவன் அவர்களின் எழுத்துக்கள்
    நன்கு பரிச்சயம்...
    சிறந்த தமிழறிஞர்களை அறிமுகப்படுத்தியதற்கு
    நன்றிகள் பல.
    தொடரட்டும் தங்களின் தமிழ்த்தொண்டு.

    பதிலளிநீக்கு
  17. பயிலரங்கில் கலந்துகொள்ளாத குறையை உங்களது பகிர்வு சரிசெய்துவிட்டது. நல்ல முயற்சி. கணினி தமிழ்ச்சங்கத்தின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். அதில் சேர்வதைப் பெருமையாக எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  18. அய்யா ,நானும் அந்த பயிலரங்கில் கலந்து கொண்டேன் .நான் எழுத நினைத்ததை அப்படியே எழுவிடீர்கள் முத்து நிலவன் அண்ணா ,மு.க.அலுவலர் அய்யா ,தாங்கள்,தபால் அய்யா,எட்வின் சார் மற்றும் பழனியப்பன் சார் எல்லோரும் அட்டகாசமானதொரு பயிற்சியால் எங்களை மேருகேற்றியமைக்கு இங்கு நன்றி சொல்வதுதான் சிறப்பாய் இருக்கு.ஏற்கனவே வலைப்பூ வைத்திருந்தாலும் அதை எப்படி செம்மையாக நடத்துவது என இந்த பயிற்சிக்கு பின் தான் தெரிந்து கொண்டேன்,மீண்டும் கணினித்தமிழ் சங்க விழாவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு ,நன்றி பல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வலைப் பூவிற்கு வருகை தந்தேன் சகோதரியாரே.அருமை. இனி தொடர்வேன். நன்றி

      நீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    அருமையான விமர்சனம் .எங்கள் புதுக்கோட்டையின் பெருமைகளில் தமிழ்த்தொண்டின் சிறப்பில் மதிப்பிற்குரிய முதன்மைக்கல்வி அலுவலுர் அவர்களுக்கும் .கவிஞர் .முத்துநிலவன் அய்யா தனியான தொரு இடம் உண்டு.கணினி தமிழ்சங்கம் தோன்றவும்.வளரவும் காரணமாகவும் இருக்கும் அவர்களின் செயல் போற்றுதற்குரியது.
    தங்களின் எளிமையான வழிகாட்டுதல்கள் என்ன எழுதுவது என்ற எங்களின் ஐயங்களுக்கு தீர்வாக இருந்தது .மனம் நிறைந்த நன்றிகள் சார்.மீண்டும் உங்களையும் ,{சிறந்த பட்டம்} வலைசித்தர் தனபாலன் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் .நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் சந்திக்க நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் சகோதரியாரே. சந்திப்போம்.தங்களின் தளத்திற்கு முதன் முறையாக இன்று வருகை தந்தேன். அருமை. வாழ்த்துக்கள் இனி தொடர்வேன்.

      நீக்கு
  21. நல்ல தோழமையான பதிவு...
    நிகழ்வில் உங்கள் உரை மிக அருமை..
    அதன் தாக்கம் ... எனது வலைபூவிலும் உண்டு...
    நன்றிகள் பல ....
    www.malartharu.org

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. தங்களின் வலைப் பூ அருமை ஐயா.பின் தொடர ஏதுவாக கேட்ஜெட் இணைப்பீர்களேயானால் வசதியாக இருக்கும்

      நீக்கு
  22. நாற்பது தமிழாய்ந்த தமிழறிஞர்கள் , இணையத்தில் வலைப் பூ தொடங்கிட காரணமாக இருந்திருக்கிறார் ஒரு தமிழாசிரியர்.

    அவருக்கு வணக்கங்களும் , வாழ்த்துகளும் , பாராட்டுக்களும் தெரிவித்துக்கொள்கிறோம் ..!

    பதிலளிநீக்கு
  23. எனது வலைப்பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன்.www.velunatchiyar.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வலைப் பூவிற்கு வருகை தந்தேன் சகோதரியாரே.அருமை. இனி தொடர்வேன்

      நீக்கு
  24. அய்யா வணக்கம். தங்கள் அன்பின் மிகுதியால் என் தகுதியையும் மிகைப் படுத்தி எழுதியிருக்கிறீர்கள். அது ஒரு கூட்டு முயற்சிதான். எங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், தமிழாசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் கும.திருப்பதி, செயலர் குருநாதசுந்தரம்,நண்பர்கள் மகா.சுந்தர், துரைக்குமரன் ஆகிய குழுவின் ஒருங்கிணைந்த செயல்பாடே இப்பயிலரங்க முயற்சி. தங்கள் வருகையும், வழிச்செலவுக்குத் தந்த சிறு தொகையை மறுத்துவிட்டதோடு தங்களின் வலைப்பக்கக் கட்டுரைநூல் பிரதிகளை நண்பர்களுக்குத் தந்து சென்றதும், அழகாகத் தங்களின் வலைப்பக்கத்தில் பதிவு செய்ததும் தாங்களும் எங்களைப் போல -
    காசுபணம் பெரிது வேண்டாம்,
    காலவிரயம் செய்ய வேண்டாம்,
    கூசு புகழ் கருத வேண்டாம்,
    கொண்ட திறன் வளரவேண்டி
    வீசு காற்றின் வேகமுடன்
    வினையாற்றத் தூண்டிடுவோம்
    காசினியில் வேறென்ன?
    கற்றபயன் அதுவன்றோ? - என்னும் கருத்துடையவரே என்று புரிந்துகொண்டு மகிழ்ந்தோம். (நண்பர் தி.ந.முரளிதரன் அவர்களையும் புதுவை முனைவர் மு.இ.அவர்களையும் அழைத்திருந்தோம், வரஇயலாத நிலையில் வற்புறுத்தவில்லை. பின்னொருமுறை வற்புறுத்தி அழைத்துவிடுவோம்.- வந்தவுங்க கேட்குற சந்தேகத்த யெல்லாம் நம்மால தீர்க்க முடியல சாமீ! நமக்கே ஆயிரம் சந்தேகம் இருக்கு.எனவே அடுத்தொரு பயிலரங்கம் நடத்தியே ஆகணும் போல!)
    நன்றி அய்யா,
    பயிலரங்கில் பங்கேற்றோர் எழுதிய கருத்துகளை அப்படிஅப்படியே எடுத்து இட்டதுபோலவே தங்களின் வலைப்பக்கக் கருத்தையும் எனது பக்கத்தில் எடுத்து இட்டிருக்கிறேன். நேரமிருக்கும்போது வந்து பார்க்க வேண்டுகிறேன். வணக்கம்
    அன்புடன்,
    நா.முத்துநிலவன்,
    http://valarumkavithai.blogspot.in/


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நண்பர்களின் கூட்டு முயற்சி என்றாலும் வழி நடத்த ஒருவர் வேண்டுமல்லவா.
      எனது பதிவினை தங்களின் பக்கத்திர் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா.
      தங்களின் கருத்துரையினைப் பார்த்ததுமே தங்களின் வலைப் பூ விற்கு வருகை தந்துவிட்டேன் ஐயா. நன்றி

      நீக்கு
    2. ஒரு தகவல் திருத்தம். முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் அவர்கள், முனைவர் பட்டம் பெற்றது, சிவஞான போதம் நூலில் அன்று. நேமிநாதம் என்னும் இலக்கண நூலை ஆய்வு செய்தே அவர்கள் முனைவர் பட்டம் பெற்றார்கள். (நாம் சாதாரணமாக ஆய்த எழுத்தை மெய்யெழுத்தேபோல அரை மாத்திரை என அலகு பிரிக்கிறோம் அல்லவா? அவர்கள் ஒரு மாத்திரையும் உண்டு என ஓர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார்கள்- தமிழ் உலகைத் திரும்பிப்பார்க்க வைக்கும் கட்டுரை அது!

      நீக்கு
    3. தவறாக குறிப்பிட்டமைக்கு வருந்துகின்றேன் ஐயா. எனது பதிவில் உடனடியாக திருத்தம் செய்து விட்டேன் ஐயா. நன்றி

      நீக்கு
  25. திரு ,முத்து நிலவன் நன்றாக பேசுவார் தெரியும் ,நன்றாக தமிழ் வளர்ச்சிக்கு செயல்படுவார் என்பதையும் தெரிந்துகொண்டேன் !
    கணினி தமிழ் சங்கம் வெற்றி பெற வாழ்த்துகள் !
    த.ம 6

    பதிலளிநீக்கு
  26. பெயரில்லா18 அக்டோபர், 2013

    வணக்கம்
    ஐயா

    இணையப்படைப்பாளிகளை அறிமுகம் செய்து வைத்த விதம் மிக நன்றாக உள்ளது.... கணனித் தமிழ்ச் சங்கம் மேலும் பல சானையாளர்களை உருவாக்க எனது வாழ்த்துக்கள்

    தனபால் (அண்ணாவுக்கு கொடுத்த பட்டம் அருமை.....)

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  27. அன்புள்ள ஜெயக்குமார்..

    தமிழாசிரியர்கள் பாரதிதாசன் பாடல்களை அதிகம் பயன்படுத்தியதைவிடத் தாங்கள் பயன்படுத்தியதுதான் அதிகமென்று நினைக்கிறேன். பெருமையாக உள்ளது. பாவேந்தர்பால் தர்ங்கள் கொண்டுள்ள விருப்பு நெகிழ்வானது.

    நல்ல பயிலரங்கில் கலந்துகொண்டு வந்துள்ளமை நலமானது.

    திண்டுக்கல் தனபாலனுக்கு எத்தனைப் பட்டங்கள் தந்தாலும் தகும். இடைவிடாமல் பதிவிடுவது என்பதுவே சாதனையானது. அதைவிட தரமான சமுகக் கண்ணோட்டத்துடன் இயங்குவது அதனைப் பதிவிடுவது அதைவிட வெகு சாதனையானது இதற்கு மேலாக ஒவ்வொரு பதிவிற்கும் சென்று கருத்துரையிடுவது என்று விடாது இயங்குமனிதருக்கு எத்தனைப் பட்டங்கள் வேண்டுமானாலும் தரலாம்.

    ஒருமுறை திருச்சி விமானநிலையத்தில் நான் இலங்கை செல்லும் பயணத்தில் முத்துநிலவனை சந்தித்ததாக நினைவு. அருமையான தன்மையான மனிதர். நல்ல நலமுரைக்கும் பேச்சாளர். பண்பு மாறாத சொற்களில் நகைச்சுவையாடுவர்.

    இதுபோன்ற பயிலரங்குகள் முக்கியமானவை.

    அப்புறம் புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் சமீபத்தில்தான் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் என்றுஅறிந்தால் ஒரு தகவல் உண்டு. .ஏனென்றால் சென்ற மாதம்தான் நான் சிவஞானபோதம் குறித்த தரமான முனைவர் பட்ட ஆய்வேட்டை மதிப்பீடு செய்து அறிக்கை அளித்தேன். ஒருவேளை அவருடையதாககூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

    வாழ்த்துக்கள் ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் கூறுவது உண்மைதான் ஐயா. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு எத்தனைப் பட்டங்கள் வேண்டுமானாலும் தரலாம். வலைப் பூ விற்கு புதிதாக வருபவர்களை , இவரைப் போல் ஊக்குவிப்பவர்கள் இல்லை என்பது உண்மை ஐயா.
      கவிஞர் முத்துநிலவன் அவர்களை , அன்று தான் நேரில் முதன் முறையாகச் சந்தித்தேன் ஐயா. சிறந்த பண்பாளர். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் உயரிய குணத்திற்குச் சொந்தக்காரர்.
      முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வேடு குறித்த தகவலை, தவறாக குறிப்பிட்டு விட்டேன் ஐயா. அவர் ஆய்வு செய்தது, நேமிநாதத்தை .

      நீக்கு
  28. அன்புள்ள ஜெயக்குமார்..

    மதிப்பிற்குரிய இரா.எட்வின் அவர்களின் பேச்சை பெய்லின் புயலுக்கு ஒப்பிட்டிருந்தீர்கள். பெய்லின் தாக்கும். எட்வினின் பேச்சும் தரமற்றவைகளை கசடுகளை புல்லமைகளை சமுகக் கேடுகளை வேரோடு பிடுங்கித் தாக்கும். சரியாக மதிப்பிட்டிருக்கிறீர்கள்.

    இன்னொன்று எட்வினின் ஆற்றொழுக்கான கணிரென்ற பேச்சிற்கு நான் ரசிகன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எட்வின் அவர்களின் பேச்சைக் கேட்கும் அனைவருமே அவரது ரசிகராக மாறிவிடுவார்கள் ஐயா. நன்றி

      நீக்கு
  29. இது போன்ற ஒரு முயற்சி எடுத்து தோல்வியுற்றவனான எனது வாழ்த்துகளை உங்களுக்கு அன்போடு அளிக்கிறேன். மேலும் கணினித் தமிழ்ச் சங்கம் மலர்ந்து மணம் பரப்ப வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. தெரிந்து இருந்தால் இப் பயிலரங்க நிகழ்ச்சிக்கு ஒரு பார்வையாளனாக நானும் வந்து இருப்பேன்.. தொடங்க இருக்கும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ச் சங்க விழாவினைத் தெரியப்படுத்தவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காதமைக்கு வருந்துகின்றேன் ஐயா. கணினித் தமிழ்ச் சங்க விழாவிற்கு அவசியம் தெரியப் படுத்துகின்றேன் ஐயா.

      நீக்கு
  31. மிகச்சிறந்த முயற்சி அண்ணா... பாராட்டுகள். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது... பணி மேலும் சிறக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  32. வலைப் பூவில் எழுதுவதற்கு செய்தி தேடி எங்கும் ஓட வேண்டாம். நூல்களின் பக்கங்களில் மூழ்கி, மூச்சுத் திணற வேண்டாம் என்றேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள், வாழ்வில் வென்ற தருணங்களை, தோல்வியைத் தழுவிய நிமிடங்களை, சாதித்த சாதனைகளை, சோதனையின் பிடியில் சிக்கி வேதனையால் புழுவாய்த் துடித்திட்ட யுகங்களை எழுதுங்கள் என்றேன்.

    அருமையான பதிவு. திரு முத்து நிலவன் அவர்களுக்கும் பயிற்சி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள். தமிழ் எழுத்தாளர்கள் கணினி கற்காமல் இருப்பது - ஒரு நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தாமல் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம், they are missing the bus - வயது ஒன்று காரணம், இன்னொன்று சிறுவர்களிடம் சந்தேகம் கேட்பதா என்று நினைக்கலாம் - நானும், எனது மனைவியும் - எனது 56 வயதில் தான் - 2005இல் தான் கணினி மையத்தில் சென்று கற்றோம். பிறகு எனது தங்கை மகன்கள், தம்பி மகள், மகன், எனது மகன்கள் -ஆகியோரிடம் நேரிலும், போனிலும் கற்றுக் கொண்டோம்.
    நீங்கள் பொறுமையுடன் பக்கத்து வீட்டு பள்ளி மாணவர்களை அவர்களுக்கு நேரம் இருக்கும் போது வரச்சொல்லி கற்றுக் கொள்ளலாம். நிறைய தெரிந்து கொள்ளலாம்.

    இந்த பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம். நானும் உங்களைப் போல 44 வயதில் கணினி வாங்கி நானாகவே கற்றுக்கொண்டது போக, சந்தேகம் வரும்போது பிள்ளைகளும் என் மாணவப் பிள்ளைகளும்தான் என் ஆசிரியர்கள் இப்போது வலைப்பக்கச் சந்தேகங்களைப் பொதுமைப்படுத்தி, நாம் பெற்ற இன்பம் பெறுக நண்பர்கள் என்ற உணர்வுதான் கணினித் தமிழ்ச்சங்கம் வரை... ஐயா முரளிதரன், நம் வலைவிழாதந்த உற்சாகம், ஜெயக்குமார் “வலைச்சித்தர்“தனபாலன், ஏன்... உங்களைப் போலும் பெரியஉள்ளங்கள் தரும் உற்சாகம்தான். ஓடுவோம்..இணைந்து. மனசிலும் உடம்பிலும் சக்தி இருக்கும்வரை...நன்றி அய்யா.

      நீக்கு
  33. நல்லதொரு முயற்சி! கணிணி தமிழ் சங்கம் வளர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  34. மறுபடியும் வருகிறேன். பதிவு எழுத ஆரம்பித்த புதிதில் 2, 3 பின்னூட்டங்கள் கூட வராது. இந்த பதிவில் நிறைய நண்பர்கள் படித்து பின்னூட்டமிட்டிருக்கிறார்கள்.
    உங்களுக்கு இது மகத்தான வெற்றி திரு கரந்தை ஜெயக்குமார். மனமார்ந்த வாழ்த்துகள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்றவர்களின் அன்பால் விளைந்த விளைவு ஐயா இது. விளையாட்டாகத்தான் வலைப் பூ வைத் தொடங்கினேன். ஆனால் இன்று இதுதான் முக்கியப் பணி என்றாகிவிட்டது.
      தங்களின் அன்பார்ந்த வார்த்தைகளுக்கும், மனமார்ந்த ஆதரவிற்கும் எனது பணிவார்ந்த வணக்கங்களை நன்றியாய் கூறி மகிழ்கின்றேன் ஐயா

      நீக்கு
  35. கணினித் தமிழ்ச் சங்கம், சாதனைகள் பல படைக்க வாழ்த்துகள்!. தமிழாசிரியர்களின் முயற்சிக்கு உளமார்ந்த பாராட்டுகள்! நன்றி! .

    பதிலளிநீக்கு
  36. முத்துநிலவன் அவர்களின் (கூட்டு) முயற்சி இன்னும் பரவிப் பல்க வேண்டும். பத்து ஆசிரியர்களுக்குக் கற்றுத்தந்தால், அவர்கள் பத்தாயிரம் பேர்களுக்குக் கற்றுத்தருவார்கள். கணினி என்பதின் பிரமை அகன்றுவிடும். திரு ரத்னவேல் நடராசன் கூறியதுபோல நமது பேரக்குழந்தைகள், பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் நமக்கு ஆசான்களாக விளங்கும் காலத்தில் நாம் வாழ்வது எத்தகைய அரிய வாய்ப்பு என்பதை இதுபோன்ற பயிலரங்குகள் மூலம் தெளிவு படுத்தவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் முத்து நிலவன் அவர்களின் பணி போற்றத் தக்கது ஐயா. நன்றி

      நீக்கு
  37. கணினித் தமிழ்ச் சங்கம் - மேலும் பல சாதனைகள் புரியவேண்டும்!.. நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. தீபாவளி திருநாளுக்கு தஞ்சை வருகிறீர்களா ஐயா. தங்களைக் காணவேண்டும் என்ற ஆவல் , தங்களின் பதிவைப் பார்க்கும் பொழுதெல்லாம், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது ஐயா

      நீக்கு
    2. ஐயா, தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகத் தற்போது இருப்பவர் -புதுக்கோட்டையைச் சேர்ந்த திரு தமிழரசு எனில் அவர் எனது இனிய நண்பர். அவரைச் சந்திக்க முடிந்தால் புதுக்கோட்டையில் நடந்த கணினித் தமிழ்ப்பயிலரங்கு பற்றிச் சொல்லி அங்கும் அப்படி ஒரு பயிலரங்கை நடத்த முயற்சி செய்யலாம். நானும் உதவுகிறோம். யோசியுங்கள்.. அங்கும் நம் நண்பர்கள் இருக்கிறார்கள் அணுகி முயற்சி செய்யலாம்.

      நீக்கு
  38. எந்த ஒரு முயற்சிக்கும் முதல் அடி வைப்பது இன்றியமையாதது. திரு. முத்து நிலவன் அந்தப்பணியைச் செய்ய, ஏற்கனவே வலை உலகில் கொடிகட்டிப் பறக்கும் தனபாலன் , எட்வின் , நீங்கள் என்று பலரும் கூடி இழுக்கப் போகும் தேருக்கு வடம் பிடிக்க 40 தமிழாசிரியர்களும் சேர்ந்து விட்டால்..... அப்பப்பா ... நினைக்கவே இனிக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. கரந்தையார் அவர்களுக்கு வணக்கம்.
    இந்தப் பயிலரங்கில் கலந்துகொள்ள எனக்கும் அன்பு அழைப்பு விடுத்திருந்தார் புலவர் முத்துநிலவர். ஆயின் ஒரு சுழலில் சிக்கியிருந்ததால் வரமுடியாமல் போனது. பயிலரங்கம் சிறப்பாக அமைந்தமையை நண்பர்கள் வழியாக அறிந்தேன். தொடர்ந்து பயிலரங்க முயற்சியில் ஈடுபடுவோம். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வலைப்பக்கக் குருநாதர்கள் முனைவர்.மு.பழனியப்பன் அவர்களும், நீங்களும்தானே? நீங்களெல்லாம் இல்லாமலா? எப்படியும் உங்கள் வருகைக்காகப் புதுக்கோட்டைக் கணினி (தமிழ்ச்சங்க) நண்பர்கள் காத்திருக்கிறோம் அய்யா!

      நீக்கு
  40. என்றும் என் இனிய நண்பரும் கலைச்சித்தர் எனும் புதிய மற்றும் சரியான பட்டதை பெற்றிருப்பவருமான திரு.ஜெயகுமார் அவர்களுக்கு,
    இக் கட்டுரையை படித்தவுடன் என் மனம் மிகவும் பெருமையுடனும் பூரிப்புடனும் உள்ளது. தங்களின் வளர்ச்சியை உங்களுடன் கூடவே இருந்து ரசிக்கும் வாய்ப்பு என்னை விட யாருக்கும் கிடைக்கவில்லை என்பது நாம் இருவரும் அறிந்ததே. இப்பொழுது நான் தமிழை தட்டச்சு செய்வதிற்கும் இணயத்தில் நான் இணைந்த செயலுக்கும் தாங்கள் செய்த உதவியை விரைவில் என்னுடைய வலைத்தளத்தில் விரிவாக எடுத்துரைக்க இருக்கிறேன். அப்பொழுதுதான் உதவி செய்யும் குணத்தையும் அனைவரும் தெரிந்து கொள்வதிற்கு வாய்ப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  41. ஆகா அவசியம் எழுதுங்களய்யா. அப்படியே தங்களின் வலைப்பக்க முகவரியையும் தரவேண்டுகிறேன். நல்லவற்றை உள்ளது உள்ளவாறு சொ்ல்வதில் தவறில்லை, அது இன்றைய உலகில் தேவையாகவும் இருக்கிறது. பாரதி உண்மை என்று மட்டும் சொ்ல்லாமால் வெறும் புகழ்ச்சி இல்லை என்றதும் அதனால்தானே? நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
  42. இப்போது தான் என் மகனுக்கு ஹிந்தியில் ஒரு பாடம் சொல்லிக்கொடுத்தேன். அதில் வந்த ஒரு வரி எனக்கு நினைவுக்கு வந்தது ஜெயக்குமார் சார் எழுதிய வரிகளை படித்ததுமே.

    அதாவது... இந்த அவசர உலகில் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ளவோ, அறியாமல் யார் காலையாவது மிதித்துவிட்டால் நிமிர்ந்து தெரியாமல் செய்துவிட்டேன் என்று சொல்லவோ, எதிர் வருவோரை இடித்துவிட்டால் இடித்துக்கொண்ட இடத்தை ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா என்று தடவிக்கொண்டு எதிர் நிமிர்வதற்குள் எங்கோ சிட்டாய் பறந்துப்போயிருப்பார் இடித்துவிட்டு சென்ற மஹானுபாவர்.

    இப்படி இருக்கும் இந்த அவசர உலகில்... நின்று நிதானமாக... பிறர் நலனுக்காக யோசித்து, பிறரின் திறமைகளையும் வெளிக்கொணர்ந்து, உனக்கு இது தெரியுமா? உன்னால் நான்கு பேர் இல்லை இல்லை நாப்பது பேர் பயன் பெறட்டுமே. என்ற அற்புதமான நோக்கில் சிந்தனை வளர்த்து... அந்த அருமையான நலனுக்கு உறுதுணையாக செயல்பட்ட இன்னும் சில நல்ல உள்ளங்கள் என்று இங்கு ஒரு அற்புதமான ஒரு பூஞ்சோலையே ஏற்படுத்தி இருக்கிறீர்கள். அதற்கு என் முதல் வணக்கங்கள் ஐயா.. இந்த நல்ல ஒரு கருத்தினை இங்கு எல்லோருக்குமே அறியத் தந்த பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஜெயக்குமார் சார்...

    பதிலளிநீக்கு
  43. புலவர் முத்து நிலவன் ஐயாவின் இந்த அற்புத சிந்தனைத்துளிர் செயலாக்க உறுதுணையாக இருந்த கதிரேசன் ஐயா, முனைவர் நா.அருள் முருகன், இரா எட்வின், ஜெயக்குமார் சார், ஆஹா ஜித்தர் தனபாலன் அனைவருக்கும் என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்…

    எல்லோரும் வாழும் இப்புவிதனிலே
    நல்லோரும் உண்டு பாரீர்…
    நல்லவை எடுத்துச்சொல்லி
    நம்மையும் ஈடுப்படுத்தி
    நற்செயல்கள் புரிந்திட
    வாய்ப்பும் அளித்தீரே !!

    பதிலளிநீக்கு
  44. தமிழே தகராறு எனக்கு. ஆனால் தமிழை சுவைத்திட அதிக ஆசை உண்டு. எல்லோரின் படைப்புகளை தேடி படித்து மகிழ்ந்ததுண்டு. ஜெயக்குமார் சார் எழுதிய தொடர் ஒன்று கணித மேதையைப்பற்றி.... விரும்பி வந்து வாசித்திருக்கிறேன். அதன்பின் தொடர்பில் இல்லை. மீண்டும் வலைப்பூவுக்கு வந்தப்பின்னர் பலமுறை ஜெயக்குமார் சார் வலைப்பூவுக்கு வரவேண்டும் என்று நினைத்து முடியாமல் மறந்து விட்டதும் உண்டு. இப்படி வரத்தவறினால் நல்ல விஷயங்கள் அறியாமல் போகும் அபாயம் உண்டு. இனி சமயம் கிடைக்கும்போதெல்லாம் வந்து வாசிக்கிறேன் சார். மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  45. முயற்சி எடுத்து வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  46. நல்லசேவை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு