28 மே 2014

வலை உறவுகள்


கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்

நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

எனப் பாடுவார் புரட்சிக் கவி, பாவேந்தர் பாரதிதாசன். இத்தகைய உயிரணையத் தமிழை, உலகெலாம் பரப்ப, இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பேராயுதம்தான் இணையம்.


     நண்பர்களே, உலக அளவில், கணினியில் பயன்படுத்தப்படும் மொழிகளில், அதிகமாகப் பயன்படுத்தப்படும் மொழிகள் என மூன்று மொழிகளை வரிசைப் படுத்தியிருக்கிறார்கள்.

     முதலிடத்திலே ஆங்கிலம் இருக்கிறது.  இரண்டாவது இடத்திலே இருப்பது இட்டீஸ் மொழி. இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருக்கிற யூதர்கள், நாங்கள் எங்கள் வாழ்க்கையை இழந்தாலும் இழப்போமோ தவிர, ஒரு நாளும் எங்கள் மொழியை இழக்க மாட்டோம் எனச் சூளுரைத்து, வீட்டு மொழியாக மட்டுமே இருந்த ஹீப்ரூவை, புதுப்பித்து, மெருகேற்றி, அலுவல் மொழியாக, இட்டீஸ் மொழியாக உயிர்ப்பித்திருக்கின்றனர். இம்மொழிதான் இரண்டாம் மொழி.

     நண்பர்களே, நாம் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கலாம். ஆம் நண்பர்களே, உலக அளவிலான கணினிப் பயன்பாட்டில், மூன்றாம் இடத்தில் இருப்பது, நம் மொழி, நண்பர்களே, நம் மொழி, நம் தமிழ் மொழி.

கற்கண்டு மொழியில் கற்கண்டு கவிதைகள்
வாழ்க்கையை வானில் உயர்த்தும் நூற்கள்
தொழில்நூல், அழகாய் தொகுத்தனர் விரைவில்
காற்றில் லெலாம் கலந்தது கீதம்
சங்கீ தமெலாம் தகத்தகா யத்தமிழ்
                                - பாவேந்தர்

     கற்கண்டுக் கவிதைகள், வாழ்க்கையை வானில் உயர்த்தும் தன்னம்பிக்கை வரிகள், இயல், இசை , நாடகம் என அனைத்தும் வலைப் பூவின் வழி வானில் கலந்து, தமிழ் மொழியை இன்று உலகமெலாம் பரப்பி வருகின்றது.

     நண்பர்களே, நம் மொழி மூன்றாவது இடத்திலேயே நின்று விட்டால் போதுமா? மேலும் முன்னேற வேண்டாமா? இரண்டாமிடத்தை எட்டிப் பிடிக்க வேண்டாமா? முதலாம் இடத்திற்கு முந்திச் செல்ல வேண்டாமா?

     கணினித் தமிழ் முதலிடத்தைப் பிடிக்க, முதலிடத்திலேயே நிலைக்க, நாம் செய்ய வேண்டியதுதான் என்ன? கணினியில் நாம் மட்டும் எழுதினால் போதுமா? கற்றவர்கள் அனைவரையும் கணினிக்குள் இழுத்து விட வேண்டாமா? ஆம், இத்தகு முயற்சிக்கு முதல் விதை, முதல் வித்து விதைக்கப் பெற்ற இடம்தான் புதுக்கோட்டை.


மனதில் உறுதியோடும், வாக்கினில் இனிமையோடும், புதியன விரும்பும் கவிஞர் நா. முத்து நிலவன் அவர்கள் ஓர் தமிழாசிரியர், சிறந்த பட்டிமன்றப் பேச்சாளர், இவை அனைத்திற்கும் மேலாக தமிழைத் தன்னுயிரினும் மேலாய் நேசிப்பவர்.

     கவிஞர் முத்து நிலவன் அவர்களின் உள்ளத்தில் ஓர் ஆசை. தான் மட்டும் கணினியில் எழுதினால் போதுமா? கணினி என்றாலே காத தூரம் விலகியோடும், நண்பர்களை, வலை உலகிற்குள் எவ்வாறு இழுப்பது என்று யோசித்தார். விளைவு கணினி பயிற்சிப் பட்டறை.

     கடந்த ஆண்டு 40 தமிழாசிரியர்களை இணைய உலகில் இணைத்தார். இதோ இவ்வாண்டும் ஓர் பயிற்சிப் பட்டறை.

     கடந்த 18.5.2014 ஞாயிற்றுக் கிழமை காலை 7.00 மணியளவில், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும், நானும், தஞ்சைப் புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டை நோக்கிப் பயணித்தோம்.

     புதுக்கோட்டை அபிராமி உணவு விடுதியில் நுழைந்த சில நிமிடங்களில், வந்து சேர்ந்தனர் திரு கஸ் தூரி ரங்கனும்திரு அ. பாண்டியனும். திரு கஸ்தூரி ரங்கன் ஒரு ஆங்கில ஆசிரியர், ஆனால் தமிழில் தமிழறிஞரைப்போல் எழுதி அசத்துபவர். கடந்த ஆண்டு சந்தித்தது. ஆண்டு ஒன்று கடந்திருந்த போதிலும், நேசமும், பாசமும் முன்னிலும் அதிகரித்தே இருந்தது. சிறிது நேரத்தில் திரு குருநாத சுந்தரமும் வந்து சேரவே, அவ்விடமே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

     திரு அ.பாண்டியன் அவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம். திருமணம் அடுத்த மாதம்தானே? என்று கேட்கும்போதே, நண்பர் பாண்டியனின் முகத்தில், வெட்கம் தானாய் வந்து ஒட்டிக் கொண்டது. திருமணக் களை வந்துவிட்டது. நண்பர் பாண்டியன் பதினாறும் பெற்று, பெரு வாழ்வு வாழ வாழ்த்துவோமா நண்பர்களே.

     சிறிது நேரத்தில் திரு அ.பாண்டியனின் அலைபேசி சிணுங்கியது. எடுத்துப் பேசியவர், திண்டுக்கல் தனபாலன், பேரூந்து நிலையத்திற்கு வந்துவிட்டார். இதோ அழைத்து வருகிறேன் என சிட்டாய் பறந்தார்.


ஐந்தே நிமிடங்கள்தான் கடந்திருக்கும், கணினியில் மட்டுமே இதுவரை பார்த்த முகம், இதோ சிரித்த முகத்துடன் நேரில். வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்.  கரங்களைப் பற்றிக் கொண்டேன். நெடுநாள் நண்பராய் பழகிய ஓர் உணர்வு. வலையுலக உறவல்லவா?

             இறைவனைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கூறுவார்கள், அவர் அங்கு, இங்கு என்று இல்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர் என்று. அது உண்மையோ, பொய்யோ தெரியாது, ஆனால் வலையுலகில் நீக்கமற எங்கும் நிறைந்திருப்பவர் திண்டுக்கல் தனபாலன். எவ்வலைப் பக்கம் சென்றாலும், முதன் கருத்து, முதல் வாழ்த்து இவருடையதாகத்தான் இருக்கும்.

        அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், வந்து சேர்ந்தார் கவிஞர் முத்து நிலவன் அவர்கள். அவருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து இறங்கியவரைக் கண்டதும் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.


மூங்கிலில் நுழைந்து, இசையாய் எழுந்து, அனைவரின் உள்ளம் புகுந்து, மகிழ்ச்சி மனம் பரப்பி வரும், கல்வியாளர் திரு  டி.என்.முரளிதரன் அவர்களைக் கண்டதும் கரம் பற்றி மகிழ்ந்தேன்.


      உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக அயராது பணியாற்றிய போதும், இணைத்திற்கும் நேரம் ஒதுக்கி, இணைய வானில் கொடி கட்டிப் பறப்பவர்.

     இந்த நாள் இனிய நாளாகவே  கரைந்து கொண்டிருந்தது. மனம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது.



புதுக்கோட்டை, கைக்குறிச்சி ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரி. இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறை நடைபெறும், கணினி மையத்திற்குள் நுழைந்தோம். மேலும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.


            ஓய்வு பெற்ற வங்கியாளர், எனது எண்ணங்கள் என்னும் வலைப் பூவில், தனது எண்ணங்களையும் சிந்தனைகளையும் அழகுற இறக்கி வைக்கும், திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள், அகமும், முகமும் மலர வரவேற்றார். முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு. முதன் முறையாய் நேரில் காணும் வாய்ப்பு. உண்மையிலேயே இந்த நாள் இனிய நாள்தான்.


     இவர் வங்கியில் கணினியுடனே காலத்தைக் கழித்தவர். வங்கியை விட்டு வெளியில் வந்தும், கணினியுடனே வாழ்பவர். கணினியும், காமிராவும் இவரது இரு கண்கள். எங்கு சென்றாலும் காணும் காட்கிகளை எல்லாம், படம் பிடித்துப் பதிவாக்கி, வலையில் விருந்து வைப்பவர்.

      கவிஞர் கீதா அவர்களையும், கவிஞர் மகாசுந்தர் அவர்களையும் சந்தித்தேன்.
    

வலையுலக ஜாம்பவான்களைச் சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்த நான், கவிஞர் கதிரேசன் ஐயா அவர்களைக் கண்டவுடன் சுய நினைவிற்கு வந்தேன்.

தமிழுண்டு தமிழ்மக்க ளுண்டு – இன்பத்
தமிழுக்கு நாளும்செய் வோம்நல்ல தொண்டு
தமிழ் என்று தோள்தட்டி ஆடு – நல்ல
தமிழ்வெல்க வெல்கஎன் றேதினம் பாடு

எனும் பாவேந்திரின் வரிகளுக்கு ஏற்ப, தமிழ் வெல்க, வெல்க என்றே தினம் பாடிக் களித்து, தமிழுக்கு நாளும் நல்ல தொண்டாற்றிவரும், தாயுள்ளம், தமிழுள்ளம் படைத்தவரன்றோ கவிஞர் கதிரேசன்.

     இவர் வேறு யாருமல்ல, இணையத் தமிழ்ப் பயிற்சிப் பட்டறை நடைபெற, குளு குளு வசதியுடனும், இணைய வசதியுடனும் கூடிய, மிகப் பெரிய கணிப்பொறி ஆய்வகத்தினையே, தந்தேன் உனக்கு, என வழங்கி மகிழ்ந்த வள்ளல், வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர். இது மட்டுமா,

செந்நெல் மாற்றிய சோறும் – பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை – கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்
நன்மது ரஞ்செய் கிழங்கு – காணில்
நாவிலி னித்திடும் அப்பம்
உன்னை வளர்ப்பன தமிழா

என்னும் பாவேந்தரின் வரிகளுக்கு இணங்க, நல் மதிய விருந்தும் தந்தவர் அன்றோ, கவிஞர் கதிரேசன்.
    

வேகமாக வளர்ந்து வரும் உலகில், தகவல் தொழில் நுட்பத்தைத் தனது தாய் மொழியில் கற்றுக் கொள்வது அவசியம். மொழி வளர்ச்சிக்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும், வலைப்பக்கத்தில் என்ன எழுதலாம் என்பதை சமூக உணர்வோடு சிந்தித்து, எப்படி எழுதலாம் என்னும் தொழில நுட்பத்தைக் கற்றுக் கொள்வது, இன்றைய ஆசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இன்றியமையாததாகிறது என்பதை உணர்ந்து,  தமிழ் காக்கப் புறப்பட்ட, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்களைக் கண்டு, ஆசிரியனாய் அகம் மகிழ்ந்தேன்.

      நண்பர்களே, வலையுலக உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், பேசி  மகிழ்ந்தவாரே, பயிற்சிப் பட்டறை அரங்கில் அமர்ந்தோம்.






முதல் நிகழ்வாக, நட்ட கல்லும் பேசுமே என்னும் தலைப்பில்,  முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள், காணொளி காட்சியுடன் உரையாற்றினார்.

     நண்பர்களே, நாம் ஒவ்வொரு நாளும் பள்ளிகளுக்குச் செல்லும் பொழுதோ, அலுவலகத்திற்குச் செல்லும் பொழுதோ, சாலையோரங்களில், அடுத்த ஊரினையும், அதன் தொலைவினையும் சொல்லும் மைல் கற்களைப் பார்த்திருப்போம். ஆனால் அக் கற்களைப் பற்றிப் பெரியதாக சிந்தித்திருக்க மாட்டோம்.

     முதன்மைக் கல்வி அலுவலரோ, தனது அயராதப் பணிகளுக்கு இடையிலும், புதுக்கோட்டையினைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, பழைய மைல் கற்களை ஆராய்ந்து, அவற்றைப் படங்களாகத் திரையில் காட்டினார்.


ஒரு கல் புதுக்கோட்டையின் தொலையினைவுயும், ஆதனக் கோட்டையின் தொலைவினையும் காட்டுகிறது.

புதுக்கோட்டை
ரூ
Poodoocotay
X

      நண்பர்களே, அக்கல்லைக் கண்டவுடன் மெய்சிலிர்த்துப் போய்விட்டேன். ஆங்கிலேயர்கள் காலத்துக் கல்லில், புதுக்கோட்டையின் தொலைவு பத்து மைல் என, தமிழ் எண்ணில் குறிக்கப்பட்டிருந்தது. தமிழில் எழுதுகிறோம், தமிழில் பேசுகிறோமே, இன்று நம் யாருக்காவது, தமிழ் எண்கள் தெரியுமா?

     ஆனால் ஆங்கிலேயர்களது காலத்து மைல் கல்லில், தமிழ் எண்கள் பொறிக்கப்பட்டிருக்கிறது என்றால், என்ன அர்த்தம்? நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் எண்கள் நடைமுறையில் இருந்தன, படித்தவர்களும், பாமரர்களும், தமிழ் எண்களை அறிந்திருந்தார்கள், அவற்றையே பயன்படுத்தினார்கள் என்றுதானே அர்த்தம்.

     இன்று நம்மில் யாருக்காவது, தமிழ் எண்கள் தெரியுமா? சத்தியமாக எனக்குத் தெரியாது. தமிழனாய் இருந்து கொண்டு, தமிழ் எண்கள் தெரியாது என்று சொல்வதற்கு, கூசுகிறது நண்பர்களே மனம் கூசுகிறது.

     நம்மை வளர்த்தத் தமிழை, நாம் வளர்க்காமல், காக்காமல் விட்டு விட்டோம்.


பிற்பகல் நிகழ்வில் திண்டுக்கல் தனபாலன் அவர்களும், திரு டி.என்.முரளிதரன் அவர்களும், வலைப் பூவின் சூட்சுமங்களை அனைவரும் அறியும் வண்ணம் எளிமையாய் , காணொளி காட்சியுடன் விளக்கினர்.


      நேரம் சென்றதே தெரியவில்லை. நேரம் மாலை மணி ஐந்தாகிவிட்டது என்று கவிஞர் முத்து நிலவன் அவர்கள் அறிவித்ததும்தான், வலையுலகில் இருந்து மீண்டு, பூவுலகிற்கு வந்தோம்.

     ஐம்பதிற்கும் மேற்பட்டோரை வலையுலகில் இணைத்தப் பெருமையோடு, பயிற்சிப் பட்டறை நிறைவு பெற்றது. வலையுலக உறவுகளைச் சந்தித்த மகிழ்ச்சியில், எனது மனமும் நிறைவு பெற்றிருந்தது.

     புதுக்கோட்டையில் விதைக்கப் பெற்ற கணினி வித்து, தமிழ் மரமாய் வளர்ந்து, ஆல் போல் தழைத்து, உலகெங்கும் பல்கிப் பெருகும், தமிழை வளர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்று தமிழ் வளர்க – தமிழ்
நாட்டினில் எங்கனும் பல்குக பல்குக
என்றும் தமிழ் வளர்க – கலை
யாவும் தமிழ் மொழியில் விளைந்தோங்குக
இன்பம் எனப்படுதல் – தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக.
                                    - பாவேந்தர்


      

101 கருத்துகள்:

  1. கற்கண்டுக் கவிதைகள், வாழ்க்கையை வானில் உயர்த்தும் தன்னம்பிக்கை வரிகள், இயல், இசை , நாடகம் என அனைத்தும் வலைப் பூவின் வழி வானில் கலந்து, தமிழ் மொழியை இன்று உலகமெலாம் பரப்பி வருகின்றது.

    கற்கண்டாய் திகழும் வலை உலக வித்தகர்களை அறிமுகப்படுத்திய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. ஐயா,
    இரண்டாம் நாள் பயிற்சியில் கலந்து கொள்ளாமல் போனது எவ்வளவு இழப்பு என்பதை உணர்த்திவிட்டீர்கள்.
    அதேநேரம் இரண்டாம் நாள் நிகழ்வுகளைக் கண்முன் காட்டுவதுபோல் அப்படி ஒரு துல்லியமான பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புதுக் கோட்டையில் பூத்த இந்த பயிற்சிப்பட்டறை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடந்தால், இணையத்தில் தமிழ் இணை இல்லாத மொழியாய் உயர்வது உறுதி !
    த ம 1

    பதிலளிநீக்கு
  4. படங்களுடன் மிகச் சிறப்பாக பதிவிட்டிருப்பது
    நேரில் பார்க்கிற உணர்வை ஏற்படுத்திப்போகிறது
    கலந்து கொள்ள முடியாமல் போன வருத்தத்தையும்
    கூட்டிப் போகிறது

    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களைச் சந்திக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை ஐயா
      விரைவில் நிறைவேறும் என எண்ணுகின்றேன்

      நீக்கு
  5. கணினியில் தமிழ் - தழைத்து, தரணி எங்கும் பல்கிப் பெருகிட வேண்டும். நல்லோர்களின் இந்த பெருமுயற்சி சிறப்புற வேண்டும்.

    புதுக்கோட்டையில் நடந்த - இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையின் நிகழ்வுகள் அனைத்தையும் நேர்முக வர்ணனையாக வழங்கிய தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா..

    பதிலளிநீக்கு
  6. அய்யா வணக்கம். தங்களின் தனிப்பாணியில் இரண்டாம் நாள் நிகழ்வை என்னிலும் சிறப்பாகப்பதிவு செய்து, தங்களின் பதிவுலக அனுபவத்தைக் காட்டிவிட்டீர்கள். சிறப்பான பதிவு அய்யா. என் படத்தைப் போட்டதற்குப் பதிலாக எமது வலைநண்பர்களைத்தான் பாராட்டியிருக்க வேண்டும். நான் ஒரு கருவி. எங்கள் அய்யா முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் தந்த உற்சாகத்தில் ஒரு பெரும் படடாளமே உழைக்கத் தயாராகிவிட்டது. அதுதான் ரகசியம். ஒருங்கிணைத்தது மட்டுமே என் பணி. உங்களின் அன்பிலும், பணிவிலும் நெகிழ்ந்தோம். “பணியுமாம் என்றும் பெருமை” எனும் குறளுக்கு வாழும் உதாரணமாய் நீங்கள். நம் நட்பு கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படட்டும் அய்யா. தங்கள் பணி தொடரட்டும். (அன்பு கூர்ந்து என் படத்தை மட்டும் எடுத்துவிட வேண்டுகிறேன் அய்யா)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைப் போன்றவர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு முதலில் நன்றி கூற வேண்டும் ஐயா.
      ஒரு செயலை ஒருங்கிணைத்து நடைமுறைப் படுத்துவது என்பது அத்துனை எளிதான செயல் அல்ல என்பதை அனுபவத்தில் அறிவேன் ஐயா
      தங்களின் பணி போற்றுதலுக்கு உரியது
      தங்களைப் பற்றி எழுதுவதற்கு எனக்குக் கிட்டிய வாய்ப்பினை எண்ணி மகிழ்கின்றேன் ஐயா
      தங்களின் படத்தினை எடுப்பதா?
      வலை உலகம் மன்னிக்காது ஐயா

      நீக்கு
  7. அன்பிற்க்கும், மதிப்பிற்க்கும் உரிய திரு. கரந்தை ஜெயக்குமார் சார். வணக்கம். இணையத்தில் "நமது தமிழ் மொழி" மூன்றாம் இடத்தில் உள்ளது எனும் செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்க ஓர் நிகழ்வு. டிடி அண்ணாவும், திரு. முத்துநிலவன் அய்யாவும் வலையுலகின் பிதாமகர்கள். அவர்களின் வழிகாட்டுதலினால் பலர் பயன்பெற்றுள்ளனர் (என்னையும் சேர்த்து). தங்களின் புதுக்கோட்டை விஜயமும், வலையுலக நண்பர்களின் சந்திப்பு பற்றிய தொகுப்பும், புகைப்படங்களும் மிக அருமை. வாழ்த்த மனமிருந்தும் வயதில்லை. தங்களின் இம்முயற்ச்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் சார்.
    இப்படிக்கு அன்பு தம்பி.

    பதிலளிநீக்கு
  8. கணினியில் தமிழ் - பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி......

    பதிலளிநீக்கு
  9. பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச மடிக் கணினி வழங்கியுள்ளது. அதை அவர்கள் முறையாக பயன்படுத்துவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். அந்த கணினி மற்ற கீழ் நிலை வகுப்பு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும். அவர்களும் கணினி பயன்பாட்டின் அவசியத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
    வலை உறவுகள் தற்போது சிறகுகளை விரித்து பறக்க தொடங்கிவிட்டது.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. த.ம 3
    ஒரு டைரியினைப் படிக்கும் பொழுது எழும் மகிழ்வு இந்தப் பதிவினைப் படித்தப் பொழுது கிடைத்தது.
    மிக்க நன்றிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்களைச் சந்தித்து என்றும் பசுமையாய் நினைவில் இருக்கும்

      நீக்கு
  11. வலை உறவுகள் வலுப்படட்டும்! கணினியில் தமிழ் பயிற்சிப் பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற்றது மகிழ்வளிக்கிறது. முயற்சி மேற்கொண்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்! தொடர்க உங்கள் சேவை!நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  12. இப்பதிவு நாங்களும் நேரில் கலந்துக்கொண்ட உணர்வை ஏற்படுத்தியது ஐயா.... மிக்க நன்றிகள் வாழ்த்துக்களுடன்.

    பதிலளிநீக்கு
  13. மகிழ்ச்சியளிக்கும் பல்வேறு தகவல்களுடன் கூடிய மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றிகள்.

    //நண்பர்களே, நாம் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கலாம். ஆம் நண்பர்களே, உலக அளவிலான கணினிப் பயன்பாட்டில், மூன்றாம் இடத்தில் இருப்பது, நம் மொழி, நண்பர்களே, நம் மொழி, நம் தமிழ் மொழி.//

    கேட்கவே கற்கண்டாய் இனிக்கும் பெருமைப்படக்கூடிய செய்தியைச் சொல்லியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
      நன்றி

      நீக்கு
  14. வலை மொழிகளில் உலகத்திலேயே நமது தமிழ் 3--ஆம் இடத்தில் என்ற தகவல் மிகவும் மகிழ்வு தரவல்லது. அதை முதல் இடத்திற்குக் கொண்டு வர நாம் உழைப்போம்...

    பதிலளிநீக்கு
  15. வலைப் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சியினை ஆர்வமுடன் முனைந்து செய்த திரு. நா. முத்துநிலவன் அவர்களுக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. அற்றைத் திங்கள் வெண்ணிலவில் - என்பது போல அன்று புதுக்கோட்டையில் நடந்த இனிய நிகழ்ச்சிளை மீண்டும் அசைபோட வைத்தது உங்கள் பதிவு.

    //கணினித் தமிழ் முதலிடத்தைப் பிடிக்க, முதலிடத்திலேயே நிலைக்க, நாம் செய்ய வேண்டியதுதான் என்ன? கணினியில் நாம் மட்டும் எழுதினால் போதுமா? கற்றவர்கள் அனைவரையும் கணினிக்குள் இழுத்து விட வேண்டாமா? //

    என்று நீங்கள் நினைப்பது போலவே ஒவ்வொரு வலைப் பதிவரும் எண்ண வேண்டும்.

    அன்று உங்களையும் முனைவர் ஜம்புலிங்கம் அய்யா அவர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி! என்னைப் பற்றிஅதிகமாக சொல்லி விட்டீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்தது மிக்க மகிழ்வினை அளித்தது ஐயா
      நான் தங்களைப் பற்றி அதிகமாக ஒன்றினையும் எழுதவில்லை ஐயா
      உள்ளதைத்தான் கூறியுள்ளேன்
      நன்றி ஐயா

      நீக்கு
  17. முனைவர் திரு. ஜம்புலிங்கம்,
    திரு. கஸ்தூரி ரங்கன்,
    திரு. அ. பாண்டியன்,
    திரு. குருநாத சுந்தரம்,
    திரு. திண்டுக்கல் தனபாலன்,
    திரு. டி. என். முரளிதரன்,
    திரு. தி. தமிழ் இளங்கோ,
    கவிஞர் கீதா,
    கவிஞர் மகா சுந்தர்,
    கவிஞர் கதிரேசன்,
    முனைவர் நா. அருள் முருகன்,
    ஆகிய அனைவரோடும் கலந்து கண்டு மகிழ்ந்த நிகழ்வுகளை தொகுத்து தந்தது... மன மலர்ச்சி தந்தது. நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வோரு தமிழனும் மகிழ்ச்சியடைய வேண்டிய விசயம் வாழ்த்துக்கள் ஐயா.
      Killergee
      www.Killergee.blogspot.com

      நீக்கு
  18. பரவசப்பட்டேன் ஆனந்த கண்ணீருடன்... நன்றி... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்ததில் பரவசப் பட்டவன் நான்தான் ஐயா
      மிக்க நன்றி

      நீக்கு
  19. தங்கள் பதிவு அருமை! நேரில் கண்டதைப் போன்ற உணர்வு!வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  20. அயராது பாடுபட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அருமையாக பகிர்விட்ட தங்களுக்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் ஐயா
    கணினிப் பயிற்சிப்பட்டறையின் இரண்டாம் நாள் நிகழ்வை உங்கள் பாணியில் எழுதி பிரமிக்க வைத்துள்ளீர்கள். பயிற்சிக்கு வராதவர்கள் கூட பதிவைப் படித்தால் கூடவே பயணித்த ஒரு உணர்வை ஏற்படுத்தும். உங்களைப் போலும் நண்பர்களின் ஒத்துழைப்பும் உறுதுணையாலும் தான் பயிற்சி சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இத்தோடு இல்லாமல் இனிவரும் காலங்களில் இணைந்து நம்மால் ஆன பங்கினை கவிஞர் முத்துநிலவன் ஐயாவிற்கு தருவோம். இரண்டு வருடங்களும் வருகை தந்து சிறப்பித்த உங்களுக்கு எங்களின் அன்பு எப்பவும் இருக்கும். என்னையும் பதிவில் குறிப்பிட்டு மகிழ்ந்தமைக்கு நன்றிகள் ஐயா. தொடர்ந்து இணைந்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து நிலவன் ஐயா அவர்களுடன் இணைந்த பணியாற்ற என்றென்றும் ஆவலாய் உள்ளேன் நண்பரே
      தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளேன்
      தொடர்ந்து இணைந்திருப்போம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  22. இனிய நற் செய்திகளோடு பகிரப்பட்ட இப் பகிர்வு கண்டு உள்ளம் குளிர்ந்தது சகோதரா ! வாழ்த்துக்கள் எங்கள் வலைத்தள உறவுகள் அனைவருக்கும் தங்களுக்கும் .வாழ்க தமிழ் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  23. இனிய நினைவுகளை அழகாக பாவேந்தர் வரிகளுடன் தந்தமைக்கு நன்றி. மன்னிக்கவும், கணினி பயன்பாட்டில், தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது நம்பத்தகுந்ததாய் இல்லை. புகைப்படங்களும், தெரிந்தவர்களே என்றாலும் அறிமுகமும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசிரியர் முனைவர் சுப. வீரபாண்டியன் அவர்கள் மொழியும் வாழ்வும் என்று ஒரு நூலினை வெளியிட்டுள்ளார்கள் நண்பரே, அந்நூலின் முதல் கட்டுரை மொழியும் சிந்தனையும் என்பதாகும். இக்கட்டுரையானது, இவர் 2008 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமெரிக்காவின் மெக்சிகன் தமிழச் சங்கத்தில், ஆற்றிய உரை என்னும் குறிப்புடன் வெளியிடப்பெற்றுள்ளது. இக்கட்டுரையில்தான் தமிழ் மொழியானது, கணினிப் பயன்பாட்டில், உலக அளவில் மூன்றாம் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஐயா.
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  24. முதலில் இந்த ஜோதியில் நீங்கள் கலந்து கொண்டதற்கும், அதனை மிக அழகாக தொகுத்து இந்த பதிவில் வழங்கியதற்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    "வலைச்சித்தர்" என்று சரியான பெயரை தான் நண்பர் திண்டுக்கல் தனபாலனுக்கு வழங்கியிருக்கிறீர்கள்.

    இணையத்தில் தமிழின் பயன்பாடு மூன்றாவது இடத்தில் இருப்பதை நினைத்து மிகவும் பெருமையாக இருக்கிறது. அது மேலும் உயர்ந்த இடத்திற்கு செல்வதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள் எல்லா ஊரிலும் நடக்க வேண்டும்.

    பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா ஊர்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால் அற்புதமாக இருக்கும் நண்பரே
      நன்றி நண்பரே

      நீக்கு
  25. நல்லதொரு பிள்ளையார் சுழி.

    பதிலளிநீக்கு
  26. தமிழை முதல் மொழியாகக் கொண்டுவர தொடங்கப்பட்ட முயற்சி மென்மேலும் வளர்ந்து தமிழ் எங்கும் பரவ ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. வணக்கம், வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  28. இணையத்தில் "நமது தமிழ் மொழி" மூன்றாம் இடத்தில் உள்ளது எனும் செய்தி மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இனிய நிகழ்ச்சியை நடத்த பாடுபட்ட எல்லோருக்கும் வாழ்த்துக்கள் அருமையாக பகிர்விட்ட தங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  29. கணினியில் தமிழ்-பயிற்சி குறித்த நிகழ்வுகள் கண்டு மிக மிக மகிழ்ந்தேன்.

    பதிவிட்டமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  30. இது பற்றி எல்லோரும் எழுதுவதைப் படிக்கும்போது ஒரு சந்தேகம் எழுகிறது. ஆனால் நான் கேட்கவேண்டாம் என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. ஆங்கிலத்தில் no lunch is free என்ற சொற்றொடர் உண்டு. என் சந்தேகம் அதுதான்.பயிற்சிப் பட்டறை நடத்த செலவுகள் எவ்வாறு சமாளிக்கப் பட்டன. தெரிவித்தால்பாராட்ட இன்னும் வசதியாய் இருக்கும். நன்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில், கவிஞர் முத்து நிலவன் அவர்களும், அவரது நண்பர்களான தமிழாசிரியர்களின் முயற்சியின் விளையே இந்த பயிற்சிப் பட்டறை ஐயா
      வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர்
      கவிஞர் கதிரேசன் அவர்கள், கல்லூரியின் கணினி மையத்தினை இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்கினார்.
      பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால் மதிய உணவை அவரகளே கொண்டு வந்துவிட வேண்டும் என்று மட்டும் அறிவுறுத்தப் பட்டுஇருந்தது. அவர்களே உணவு கொண்டு வந்து விட்டனர்.
      செலவில்லாமல் ஒரு பயிற்சிப் பட்டறை
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  31. நல்ல நிகழ்வு. கணினித்தமிழின் சிறப்பை அனைவருக்கும் கொண்டுசெல்கின்ற தங்களின் குழுவிற்கு எமது பாராட்டுக்கள்.
    கற்றது கைமண் அளவு கல்லாதது கணினி அளவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  32. குடும்ப உறவினர்களைச் சந்தித்த உணர்வு.மிகவும் மகிழ்வாய் கலந்து கொண்டேன்.புதுகை முன்னேற்றத்தின் பாதையில் அஸ்திவாரமிட்டது முதன்மைக்கல்வி அலுவலரும்,முத்துநிலவன் அய்யாவும் தான்.வணங்கிறோம் அவர்களை.நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் சகோதரியாரே குடும்ப உறவுகளைச் சந்தித்த உணர்வுதான் அன்று ஏற்பட்டது.
      முதன்மைக் கல்வி அலுவலர் , முத்து நிலவன் ஐயா, மற்றும் அவருக்கு உறுதுணையாக பணியாற்றும் தாங்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  33. பெயரில்லா29 மே, 2014

    அனைவரின் இணைவும் முயற்சியும் போற்றத் தக்கது.
    அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.
    தங்களது 2வதாக வாசித்தேன் முரளிதரனது முதலில் வாசித்தேன்.
    மிக மகிழ்ச்சி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  34. மிக அருமையான பகிர்வு! படங்களுடன் சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

  35. மிகச் சிறப்பானதொரு பயிலரங்கத்தை நடத்தி இருகின்றீர்கள். இப் புத்தாக்கப் பயிற்சி நிச்சயம் வலையுலகத்தினருக்கு கிடைத்ததற்குறியது ஆகும். வாழ்த்துகள் அய்யா. தொடர்ந்து பயணியுங்கள். நண்பர் திண்டுக்கல் தனபாலன், அய்யா நா.முத்துநிலவன் தி. மற்றும் தமிழ் இளங்கோ ஆகியோருக்கு எனது அன்பான வாழ்த்துகள்.

    முன்பே கூறியிருந்தால் தினமணி திருச்சி பதிப்பில் செய்தி வெளியீட ஏற்பாடு செய்து இருப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஐயா
      நாளேடுகளில் செய்திகள் வந்ததாக கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள் கூறினார்கள். இனி இதுபோன்ற நிகழ்வுகளில் தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கிறோம் ஐயா நன்றி

      நீக்கு
    2. அய்யா, கணினி வகுப்பு முடிந்த அடுத்த நாளே, தினமமணி, தினமலர், தினகரன், தி இந்து ஆகிய நாளிதழ்களின் திருச்சிப் பதிப்பில் படத்துடன் விரிவான செய்தி வந்திருந்தது. அந்தப் படத்தைத்தான் எனது தளத்தில் இட்டிருக்கிறேன். (பார்க்க-http://valarumkavithai.blogspot.com/2014/05/blog-post_17.html#more)

      நீக்கு
  36. மிக அற்புதமான பதிவு.தாங்கள் போன்றோறின் அயராத உழைப்பினால் தமிழ் விரைவில் உலகமொழியாக மாறும்.வலைப்பூவே வளர்க !வாழ்க!தமிழே தரனியெல்லாம் தவழ்க!மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  37. தமிழ் மூன்றாம் இடமா.... உண்மையில் பெருமையாக இருக்கிறது.

    அருமையான தொண்டு. தொடருங்கள் ஐயா.
    வாழ்த்தி வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  38. சிலமணி நேரத்திற்கு முன்னால்தான் நியூஜெர்சி வந்து சேர்ந்தேன். முதலில் கண்ணில் பட்டது உங்கள் பதிவுதான். முத்து நிலவனும் உங்களைப் போன்ற நண்பர்களும் தாயுள்ளம் கொண்டு ஆற்றி வரும் இணையத்தமிழ்த்தொண்டு போற்றுதலுக்குரியது. உங்கள் அனைவரின் முயற்சியால் ஆண்டுக்கு ஆயிரம் பேராவது புதிதாக இணையத்தில் எழுத ஆரம்பிக்க வேண்டும் என்பதே என் ஆசை. இவர்கள்தான் தமிழில் இனிமேல் மின்-நூல்களை உருவாக்கித்தரப் போகிறவர்கள் என்பது உறுதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் களைப்பினையும் பொருட்படுத்தாது கருத்தாக்கம் வழங்கியிருப்பது மிக்க மகிழ்வினை அளிக்கின்றது ஐயா.
      இணையத்தில் தமிழில் மின் நூல்கள் உருவாகும் என்பது உறுதி ஐயா
      மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  39. வணக்கம் சகோ தங்களை எல்லாம் காணவும், பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ள இயலாமைக்கும் மனம் வருந்தினாலும். தங்கள் பதிவின் மூலம் யாவையும் விபரமாய் அறிந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சியே.பதிவுக்கு நன்றி ! தங்கள் அனைவரது முற்சிக்கும் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். கலந்து கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  40. // கவிஞர் கதிரேசன் அவர்கள், கல்லூரியின் கணினி மையத்தினை இரண்டு நாட்களுக்கு இலவசமாக வழங்கினார்.
    பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்குக் கட்டணம் ஏதும் கிடையாது //

    ஆனாலும் என்னைப் போன்றவர்கள் மதிய உணவை வெளியில் சென்று சாப்பிட முயன்றபோது கல்லூரியிலேயே முழு சாப்பாடு கொடுத்து விருந்தோம்பல் செய்தனர். அது மட்டுமன்றி இடைவேளையிலும் டீ, பிஸ்கட் முதலானவற்றை தந்தார்கள். வெஙகடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தினரின் தமிழ் தொண்டிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஐயா
      வெங்கடேசுவரா பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளர் அவர்களின்
      தொண்டு போற்றுதலுக்கு உரியது
      நன்றி ஐயா

      நீக்கு
  41. மகிழ்ச்சியளித்த பதிவு. வலையுலக ஜாம்பவான்களை அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  42. பெயரில்லா30 மே, 2014

    புதுக்கோட்டைக்கே நேரில் வந்து சென்றதுபோல் இருந்தது ஐயா. வலைப்பூவில் எழுதுபவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற முன்னோடிகளின் நோக்கமும், முயற்சியும், மிகவும் பாராட்டத்தக்கது ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக பாராட்டத் தகுந்த முயற்சதான் நண்பரே
      பலன் கிடைப்பது உறுதி
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

      நீக்கு
  43. பயனுள்ள பதிவு பயன்பெறுவோருக்கு வாழ்த்துக்கள்

    வண்டமிழ் வாழ வரலாற்று தொண்டுசெய்தால்
    அண்டம் பரவும் அறி !

    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  44. பதிவிக்கு வந்த கருத்த்ரைகளே நிகழ்வின் பெருமையை எடுத்துக் காட்டிவிட்டது. அதில் நானும் பகுபெற்றுள்ளேன் என்பதில் பெரும் மகிழ்ச்சி. நிகழ்வுகளை சித்தரித்த விதம் அருமை

    தங்களை சந்தித்ததில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்தித்தது மிகப் பெரிய மகிழ்வினை அளித்தது ஐயா.
      பல்வேறு பணிகளுக்கு, அலைச்சல்களுக்கு இடையிலும் , வலைப்பூவில் தாங்கள் காட்டம் ஆர்வம் மற்றவர்களால் இயலாதது ஐயா
      தங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  45. அருமையான முயற்சி உழைத்த நல் உள்ளங்களுக்கு எனது நன்றி.

    பதிலளிநீக்கு
  46. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, வலைப்பூ உலகிற்கு புதிய நண்பர்களை அழைத்து வருவதற்காக புதுக்கோட்டையில் நடைபெற்ற பயிலரங்கத்தை இந்தப் பதிவினை வாசித்தவர்களின் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டது உங்களது அற்புதமான நடை. மிகவும் அருமையாக இருந்தது.இப்பதிவினைப் படித்தவுடன் நமது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியப் பெருமக்களுக்கும் சிறிய அளவிலாவது இதனைப் போன்று ஒரு பயிலரங்கத்தினை உங்கள் உதவியுடன் செய்ய வேண்டும் என்று எனக்கு ஆவல் ஏற்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது வளாகத்தில் இல்லாத வசதிகள் எதுவும் இல்லை. நிச்சயமாக நமது ஆர்வமுள்ள ஆசிரியர்களை அழைத்து ஒரு பயிலரங்கு நடத்தலாம் நண்பரே
      நிச்சயம் நடத்துவோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  47. தங்களுடன் புதுக்கோட்டை வந்ததும், பட்டறையில் கலந்துகொண்டதும் மறக்கமுடியாத அனுபவம். தாங்கள் அதனைப் பகிர்ந்துகொள்வதைப் பார்ந்து வியந்தேன். ஒருவரையும் விடாமல் அனைவரையும் பற்றுக் குறிப்பிட்டு இவ்வளவு துல்லியமாக செய்திகளைத் தர உங்களால் முடியும் என்பதை மறுபடியும் நிரூபித்துவிட்டீர்கள். இவ்வாறான ஒரு ஏற்பாட்டைச் சேர்ந்த நம்மையெல்லாம் ஒன்று சேர்த்த திரு முத்துநிலவன் அவர்களுக்கும் பிற நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். பட்டறையில் கலந்துகொண்ட பல நண்பர்கள் கூறியபடி (பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களின் பொழிவினைக் கேட்டதன் அடிப்படையில்) பா.ஜம்புலிங்கம் என்ற பெயரில் தமிழ் விக்கிபீடியாவில் பக்கம் துவங்கப்பட்டுள்ளது என்பதைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாறான ஒரு பக்கம் உருவாக்கப்பட உதவியது புதுக்கோட்டை பட்டறையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கோட்டை பட்டறைக்கு சென்று வந்தது உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்தான். யாருமே செய்யாததை அல்லவா
      செய்து காட்டியிருக்கிறார்கள்
      நன்றி ஐயா

      நீக்கு
  48. நம்ம ஊருக்கு நீங்க வந்துருக்கீங்களே, ஆனா நான் அதுல கலந்துக்க முடியாதது பெருவருத்தம். அதனால் என்ன அடுத்த ஆண்டு கலந்துகிட்டா போச்சு!!

    பதிலளிநீக்கு
  49. பயனுள்ள ஒரு பதிவு கரந்தையாரே! கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கமும் கூடவே எழுகின்றது! மற்ற ஊர்களிலும் நடத்துவதற்கு முயற்சிக்கலாமே நன்பரே! இப்படிப் பட்யிற்சி நடந்தால் இன்னும் தமிழ் உயர்ந்து மின் நூல் வடிவத்தில் உலா வர ஆர்ம்பித்து விடுமே! முத்து நிலவன் ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்! கலந்து கொண்டு பயிற்சி அளித்த எல்லா வலை உலக அன்பர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்! தங்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா நண்பரே!

    பதிலளிநீக்கு
  50. படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. வலை உலகு நண்பர்கள் இணையும் போது உறவினர்களுடன் இணைவது போன்ற இன்பம் ஏற்படும். அதுவே பயனுள்ள இணைவாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி இரு மடங்காகும்.

    பதிலளிநீக்கு
  51. அடடா வாய்ப்பை தவற விட்டேனே. நான் புதுக்கோட்டை மாவட்டத்துக்காரன். அய்யா முத்துநிலவனின் தலைமையில் கவியரங்கங்களில் பங்கேற்றிருக்கிறேன். சித்தப்பா சுந்தரபாரதி மறைவுக்குப் பின் தொடர்பு விட்டுப் போயிற்று. வாய்ப்பை தவற விட்டதற்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  52. இன்னுமொரு அற்புதமான தமிழ் பதிவு; தமிழைப் பற்றிய பதிவு.
    எழுதியவர் திரு கரந்தை ஜெயக்குமார்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி & வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு