11 ஜூன் 2015

அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் கின்னஸ் சாதனை


கருமைஉரு, வெண்மைப் பல், நரைத்ததலை குறைமீசை
கறையற்ற செம்மைமனம், புன்சிரிப்பு எளிமை நிலை
பிறைகருத்த பெருநெற்றி அதில் மணக்கும் நறுஞ்சாந்தம்
மறைவல்ல ஒளிமுகத்திற் கொப்புமையும் இலையன்றோ
-           சி.அரசப்பன்

     ஆண்டு 1948. தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கம். சிங்கம் போல் கம்பீர நடை நடந்து, செம்மாந்தக் குரலில், சங்க இலக்கிய, இலக்கணங்களை, நகைச்சுவை என்னும் நறுந்தேன் கலந்து, மாணவர்கள் மயங்கும் வகையில், எடுத்தியம்பும் ஆற்றல் பெற்ற, அப்பேராசிரியரின் கால்களில் ஓர் தளர்ச்சி.

     மருத்துவம் பார்த்தும் பலனில்லை. நாளாக, நாளாக நிற்கக் கூட இயலாத நிலை.


     கால்கள் நடக்க மறுத்து ஒத்துழையாமை இயக்கம் புரிகின்றன. ஆனால் இதயமோ சங்கம், சங்கம் என்றே துடிக்கிறது.

     சங்கத்திற்குச் சென்றாக வேண்டும். கரந்தைப் புலவர் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்தியாக வேண்டும்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு எதிரிலேயே ஒரு வீடு பார்த்துக் குடியேறினார்.

      நாற்காலி ஒன்றில், நான்கு சக்கரங்களைப் பொறுத்தச் செய்து, தள்ளு வண்டி ஒன்றினைத் தயாரிக்கச் செய்தார்.

      பேராசிரியரின் வீட்டில் விஷ்ணு என்னும் வைணவ மாணவர் ஒருவரும் தங்கியிருந்தார். படிக்க வேண்டும், வசதியில்லை, வழியும் இல்லை என்று வந்த மாணவருக்கு, தன் வீட்டிலேயே இடமும், உணவும் கொடுத்து ஆதரித்து வந்தார்.

      விஷ்ணு என்னும் அம்மாணவர், தினமும், பேராசிரியரை நாற்காலியில் அமர வைத்து, சங்கத்திற்கு வண்டியைத் தள்ளிக் கொண்டே வருவார்.

     கல்லூரி வகுப்பறையின் நிலைக் கதவினை ஒட்டி, வண்டியை நிறுத்துவார். பேராசிரியர் வண்டியில் இருந்தவாறே பாடம் நடத்துவார்.

     ஒருசில ஆண்டுகளில் பேராசிரியரின் உடல் நிலையானது, மேலும் தளர்வுறவே, நாற்காலியில் கூட அமர இயலாத நிலை.

     ஒரு நாள் பேராசிரியரைக் காண வந்த அவரது தமையனார், தாங்கள் இனி நமது சொந்த ஊரான மோகனூருக்கே வந்து விட வேண்டும் என மன்றாடினார்.

     பேராசிரியரிடமிருந்து மௌனமே பதிலாய் வந்தது. அருகில் இருந்த அவரது மகன், தனது சிற்றப்பாவைப் பார்த்துக் கூறினார், கரந்தைத் தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான், அப்பா அங்கு வருவார்கள்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் மேல் கொண்ட நட்பால், பாசத்தால், தனது வாழ்வின் கடைசி நாள், கடைசி நிமிடம், கடைசி நொடி வரை பேராசிரியர், கரந்தையை விட்டு அகலாதிருந்தார்.

      உடல், பொருள், ஆவி அனைத்தையும் கரந்தைக்கே ஈந்த, இப்பெருமகனார் யார் தெரியுமா?

வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே
     மன்னியமூ வேந்தர்தம் மடிவளர்ந்த மகளே
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்
     தென்குமரி யாயிடைநற் செங்கோல்கொள் செல்வி
கானார்ந்த தேனே, கற்கண்டே, நற்கனியே
      கண்ணே, கண்மணியே,  அக்கட்புலம்சேர் தேவி
ஆயாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
       அம்மே நின் சீர்முழுதும்அறைதல்யார்க் கெளிதே?

என்று தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடலை இயற்றிய பெருமைக்கு உரியவர்,
கரந்தைக் கவியரசு
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை.

      நண்பர்களே, கரந்தைக் கவியரசின் காலடித் தடம் பதிந்த மண்ணில், இன்று என் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் சுவாசித்தக் காற்றை, நாள்தோறும் சுவாசித்தே, என் இதயம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் என்ன வேண்டும் எனக்கு.

என் உள்ளத்தே ஓர் ஆசை.
பேராசை என்று கூடச் சொல்லலாம்.

     கவியரசரின் வாழ்வை, எழுத்தாக்கி, வெள்ளைத் தாளில் இறக்கி வைக்க வேண்டும், பின் அச்சேற்றி நூலாக்கி, தமிழன்னைக்கு அமுதாய், தமிழமுதாய்ப் படைக்க வேண்டும்.

     ஓராண்டிற்கு முன், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கவிஞர், எழுத்தாளர் ஹரணி உருவில், ஓர் வாய்ப்பு, அலைபேசி வழி வந்து, என் செவியினைத் தட்டியது.


தமிழியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்

இந்திய ஆய்வியல் துறை,
மலாயாப் பல்கலைக் கழகம்

கலைஞன் பதிப்பகம்
சென்னை
மூன்றும் இணைந்து, நூல் வெளியிடும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளன. வாழ்ந்த, வாழுகின்ற தமிழறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும், எழுதுகிறீர்களா? என்றார்.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயக்குமாரா?
என்று வந்த வாய்ப்பை விடாது பற்றிக் கொண்டேன்.

      கரந்தைக் கவியரசரின் வாழ்வுதனை நூலாய் எழுதிக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்.

       காலம் கனிந்தது, கவியரசரின் நூலும் வெளி வந்தது.

     

கடந்த 5.6.2015 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணியளவில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின், சாஸ்திரி அரங்கில், நூல்களின் வெளியீட்டு விழா.

       நூல்களின் வெளியீட்டு விழா என்றால், ஏதோ ஒன்று, இரண்டு அல்ல.

      இப்பூமிப் பந்தின், எம் மூலையிலும் இதுவரை நிகழ்ந்திராத, ஓர் நிகழ்வு, ஓர் அற்புதம், ஓர் சாதனை, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரங்கேறியிருக்கிறது.

கின்னஸ் சாதனை விழா
351 நூல்களின் வெளியீட்டு விழா
ஒரே மேடையில், ஒரே நேரத்தில்
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறதல்லவா.

சாஸ்திரி அரங்கம்
குளிர்மை வசதி செய்யப்பெற்ற மிகப் பெரிய அரங்கம். அரங்கமே நிரம்பி வழிந்தது.

     மேடையின் பின்புறத்தில், 351 நூல்களின் முகப்புப் படத்தினையும் தாங்கிய மிகப் பெரிய பதாகை. கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


    

விழா மேடையில் மனைவியுடன்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் செ.மணியன் அவர்கள் வெளியிட, 351 நூல்களின் முதற் படியினையும், கடலூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு சீ.சுரேஷ்குமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் அரங்க.பாரி அவர்களின் ஒரு வருட அயரா உழைப்பின் பயன் இவ்விழா.


முனைவர் அரங்க.பாரி அவர்களுக்கும்,
மலாயாப் பல்கலைக் கழகத்திற்கும்
நூல்களை அழகுற அச்சிட்டு
சாதனை படைத்திருக்கும்
கலைஞன் பதிப்பகத்திற்கும்
எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     அலைபேசி வழி அழைத்து, இந்நூல் உருவாக்கம் பெற, வழி காட்டிய, கவிஞர் ஹரணி அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இன்றித் தவிக்கின்றேன்.


நன்றி திரு ஹரணி அவர்களே.

------------------------

நண்பர்களே, வாருங்கள்




     


     

76 கருத்துகள்:

  1. கரந்தைக்கவியரசு பற்றித் தெரிந்து கொண்டேன்.அவர் பற்ரிய நூலுக்கு வாழ்த்துகள்.பல்களைகழகத்தின் கின்னஸ் சாதனைகள் தொடரட்டும்
    தம+1

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் நண்பரே மிகவும் சந்தோஷமான விடயம் மென்மேலும் இதுபோன்ற பல நிகழ்வுகளைத்தொடர எமது மனமார்ந்த வாழ்த்துகள்....
    என்றும் நேசமுடன்
    கில்லர்ஜி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜெயக்குமார்...

    வணக்கம். இதில் நான் ஒரு சிறு கருவி மட்டுமே. இத்தகைய அரிய நிகழ்விற்கும் சிந்தனைகளுக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் பேரா. அரங்க.பாரி அவர்களே முழுக் காரணம். எனவே இது தொடர்பான எல்லாப் புகழுக்கும் உரியவர் அவர் மட்டுமே. இளம் வயதில் பழுத்த சிந்தனையோடு முழுக்கத் தமிழ்ச் சிந்தனையோடும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் அந்த மனிதரின் பண்பு போற்றுதலுக்குரியது. மேலும் உங்களின் தனித்திறமை இந்நூல் உருவாக முக்கிய காரணம். அதற்கான தகுதி உங்களுக்கிருக்கிறது. எனவே அதனை அடையாளப்படுத்த விரும்பினேன். கடவுள் அருளால் அது இயன்றது அவ்வளவே. இன்னும் பல நூல்களை நீங்கள் படைக்கவேண்டும் ஜெயக்குமார். என்றும் நான் அதற்கு என்னாலியன்ற அளவு துணை நிற்பேன் என உறுதியளிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரங்க பாரி அவர்கள் போற்றுதலுக்கு உரிய மனிதர் ஐயா
      அயரா உழைப்பின் உறைவிடம் அவர்.
      வலையில் எதை எழுத வேண்டும் எப்படி எழுத வேண்டும் என எனக்குக் கற்றுக கொடுத்ததே தாங்கள்தானே ஐயா
      என்றென்றும் வேண்டும் இந்த அன்பு
      நன்றி ஐயா

      நீக்கு
  4. "வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே" தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை நினைவு படுத்தினீர்கள்.

    பெருமகனார் பற்றி படித்ததில் மகிழ்ச்சி. ஒரே சமயத்தில் வெளியிடப்பட்ட 351 நூல்கள் சாதனை நிகழ்வு பற்றி செய்தித் தாளில் படித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. “கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை” - என்ற நூலினைப் படைத்து தமிழ்கூறு நல்லுலகில் தனக்கென ஒரு இடம் பெற்ற ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!

    “சுடர்விளக்கே ஆயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்” என்பது போல, ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் இந்நூலை எழுத தூண்டுகோலாய் இயங்கிய பேராசிரியர் ஹரிணி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    த.ம.4

    பதிலளிநீக்கு
  6. இது ஒரு கின்னஸ் சாதனையே தான். மிக்க மகிழ்ச்சி. மனம் நிறைந்த பாராட்டுகள். மேலும் பல வெற்றிகள் கிடைக்க என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் நண்பரே!
    த ம 5

    பதிலளிநீக்கு
  8. நம்பவே முடியலே ,நீங்கள் நூல் எழுதியதை சொல்லலே ...இத்தனை நூல்கள் வெளியீட்டு விழாவை சொன்னேன் !உங்களின் புத்தகமும் அதில் ஒன்று என்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி :)

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  10. அரியதொரு தகவலைத் தங்களால் அறிந்து கொண்டேன்..

    புண்ணியர்கள் வாழ்ந்த மண்ணில் நானும் சில காலம் - என்பது எனக்கும் பெருமை!..

    அன்பின் திரு ஹரணி அவர்களுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும் என்றென்றும் உரியன!..

    பதிலளிநீக்கு
  11. என்ன, 351 புத்தகங்கள் ஒரே நாளில் வெளியீடா! மனிதர்களால் ஆகக்கூடிய. காரியமாக இது! நிச்சயமாக இது தமிழினுக்கு மகுடமான நிகழ்வே. ஹரணி அவர்கள் சொன்னதுபோல் முனைவர் பாரி போன்ற மாமனிதர்களாலேயே இது சாத்தியம். அதே சமயம் உற்றுழி ஆதரவு நல்கி, கரந்தை ஜெயக்குமார் மூலம் கரந்தை மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொணரும் சாதனை, முனைவர் ஹரணி போன்ற மாமனிதர்களாலேயே சாத்தியம். வாழ்த்துக்கள் ஹரணி, வாழ்த்துக்கள் ஜெயக்குமார் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் ஹரணி அவர்கள் மாமனிதர்தான் ஐயா
      நன்றி

      நீக்கு
  12. என்ன, 351 புத்தகங்கள் ஒரே நாளில் வெளியீடா! மனிதர்களால் ஆகக்கூடிய. காரியமாக இது! நிச்சயமாக இது தமிழினுக்கு மகுடமான நிகழ்வே. ஹரணி அவர்கள் சொன்னதுபோல் முனைவர் பாரி போன்ற மாமனிதர்களாலேயே இது சாத்தியம். அதே சமயம் உற்றுழி ஆதரவு நல்கி, கரந்தை ஜெயக்குமார் மூலம் கரந்தை மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொணரும் சாதனை, முனைவர் ஹரணி போன்ற மாமனிதர்களாலேயே சாத்தியம். வாழ்த்துக்கள் ஹரணி, வாழ்த்துக்கள் ஜெயக்குமார் !

    பதிலளிநீக்கு
  13. என்ன, 351 புத்தகங்கள் ஒரே நாளில் வெளியீடா! மனிதர்களால் ஆகக்கூடிய. காரியமாக இது! நிச்சயமாக இது தமிழினுக்கு மகுடமான நிகழ்வே. ஹரணி அவர்கள் சொன்னதுபோல் முனைவர் பாரி போன்ற மாமனிதர்களாலேயே இது சாத்தியம். அதே சமயம் உற்றுழி ஆதரவு நல்கி, கரந்தை ஜெயக்குமார் மூலம் கரந்தை மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொணரும் சாதனை, முனைவர் ஹரணி போன்ற மாமனிதர்களாலேயே சாத்தியம். வாழ்த்துக்கள் ஹரணி, வாழ்த்துக்கள் ஜெயக்குமார் !

    பதிலளிநீக்கு
  14. தங்களின் பெருமை மிக்க இச்சாதனைக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்! மேன்மேலும் தமிழுக்கு இது போல் பல சாதனைகள் புரிய மனம் கனிந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் ஐயா.

    இநதப் பாடலை நான் படித்திருக்கிறேன்.

    தங்களின் சாதனைக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள் ஜெயக்குமார் ஐயா!!!

    பதிலளிநீக்கு
  17. இது போல இன்னும் பல சாதனைகள் புரிந்து, தமிழனின் அறிவுக்கண் திறக்க வாழ்த்தி வேண்டுகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  18. வாழ்த்துகள் ஐயா!சேவை தொடரட்டும் சாதனையாக!

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்
    ஐயா
    நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது... சாதனைகள் பல தொடர எனது வாழ்த்துக்கள் ஐயா த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  20. The Hindu இதழில் பல ஆண்டுகளுக்கு முன் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய படம் பற்றிய ஒரு விமர்சனத்தில் "As there is nobody to compete with him, he has to compete with himself" என்ற சொற்றொடரைப் படித்த நினைவு. அது முழுமையாக தற்போது உங்களுக்குப் பொருந்திவருகிறது என்பதை தங்களின் பதிவுகள் உணர்த்துகின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகப் பெரிய வார்த்தை ஐயா
      என்றும் வேண்டும் இந்த அன்பு
      நன்றி ஐயா

      நீக்கு
  21. சாதனை நிகழ்வில் தங்கள் நூலும் இடம் பெற்றிருப்பது மெத்த மகிழ்ச்சி.இன்னும் பல சிறப்புகளை அடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. சாதனைகள் விரைவில் இதே பல்கலைக் கழகத்தால் முறியடிக்கப் படவேண்டும்

    சமீபத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்றுவந்தேன் ..
    அங்கும் பதிப்புத்துறை மலிவு விலைப் பதிப்பில் அருமையான புத்தகங்களைத தருகிறது! எனக்கு ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் அரங்க பாரி அவர்கள் தனது சாதனையினை
      தானே வென்று காட்டுவார்
      நன்றி ஐயா

      நீக்கு
  23. உங்கள் எழுத்துக்களை முதலில் வலைப்பூவில் பார்த்தபோதே எழுதும் தாகம் நிறைந்த ஒருவரை அடையாளம் தெரிந்ததுஅதிலும் வாழ்க்கை வரலாறு என்றால் உங்களுக்கு ஈடு நீங்களே, திரு ஹரணியின் உற்சாகப் பின்னூட்டங்களை நான் ஒரு டானிக் என்பேன் அவரது உந்துதல் எழுத்துக்களை இன்னும் சீரடையச் செய்யும் கனன்று கொண்டிருக்கும் தணலை ஊதி எரியச் செய்யும் சக்தி அவருக்கு உண்டு, உங்கள் பணியும் மகத்தானது. அரியவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதி சாதனை படைக்கிறீர்கள். கின்னஸ் விழாவில் உங்கள் நூலும் இடம்பெற்றிருப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு ஹரணி அவர்களாலேயே இந்நூல் சாத்தியமாயிற்று ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு

  24. அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தின் புகழ் பெற்ற சீனிவாச சாஸ்திரி அரங்கில் நடைபெற்ற 351 நூல்களின் வெளியீட்டு விழாவான கின்னஸ் சாதனை விழாவில், தாங்கள் படைத்த “கரந்தைக் கவியரசு அரங்க. வேங்கடாசலம் பிள்ளை” அவர்கள் பற்றிய நூல் வெளியிடப்பட்டதற்கு வாழ்த்துக்கள்!

    தங்களின் நூல் வெளிவர உதவிய பேராசிரியர் ஹரிணி அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  25. Glad to know about it sir. my hearty congrats.keep going

    பதிலளிநீக்கு
  26. கரந்தை கவியரசு பற்றி அறிந்துகொண்டேன்! நூல் வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  27. வாழ்த்துகள் சகோ, சொல்லவேயில்லை, எத்தகையதொரு புண்ணிய பூமியில் நானும் உள்ளேன் எனும் போது பெருமையாக இருக்கிறது. தாங்கள் இன்னும் பல நூல்கள் வெளியிட வேண்டுகிறேன். மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.நன்றி சகோ,

    பதிலளிநீக்கு
  28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    தங்களின் அற்புதமான எழுத்தாற்றல் மூலமாக நம் மண்ணின் மைந்தர்களை மீண்டும் உயிர்த்தெழ செய்து அவர்களுடைய புகழை நிலைநிறுத்திய செயல் மிகவும் பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  29. இது போலான மனிதர்களைப்பார்ப்பது அரிது/
    புத்தக வெளியீட்டிற்கும் வாழ்த்துக்கள்,
    351 நூல்கள் ஒரே அரங்கத்தில்
    ஒரே நாளில் வெளியீடா,ஆச்சரியம் /

    பதிலளிநீக்கு
  30. வாழ்த்துகள். மேலும் பல நூல்களை எழுதி தமிழுக்கு அணி சேர்க்க வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  31. ஒரு கனவு நனவானது என்று நினைக்கையில் தமிழன்னையின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பட்டு ஒளிவீசியது என்றே எண்ண தோன்றுகின்றது.

    கரந்தைக் கவியரசுஅரங்க. வேங்கடாசலம் பிள்ளை அவர்களை அறிய தந்த வாய்ப்பிற்கு மிக்க அன்றி.

    தொடரட்டும் உங்கள் தமிழ்பணி.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். உங்களின் அன்பு அளவிடற்கரியது. என் நிலையில் தெளிவாக இருக்கிறேன். முழுக்க முழுக்க நீங்கள் தகுதியானவர். அதனை அடையாளப்படுத்திடக் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். உங்களின் பதிவு வழியாக என்மீது அன்புகொண்ட உள்ளங்களுக்கு என் நன்றிகள் என்றும் உரியன. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒவ்வொரு திறனைக் கடவுள் படைத்தளித்திருக்கிறான். அது வெளிப்படும் தருணமே தாமதப்படுகிறது. 80 வயதிலும் குன்றாத எழுத்துக்களை அதுவும் பயன்தரும் எழுத்துக்களை அளிக்கும் ஜிஎம்பி ஐயா.. உயர்ந்த பணியில் இருந்தாலும் இன்றுவரை எளிமைகாட்டு திருமிகு செல்லப்பா ஐயா.. எப்போதும் பின்னூட்டம்கூடக் கவனமாக இடும் திரு தமிழ் இளங்கோ... அயல்நாட்டில் இருந்தாலும் பண்பாட்டை மறவாமல் பக்திப் பனுவல்களைப் படைத்தளித்துக்கொண்டிருக்கும் திருமிகு துரை செல்வராஜ்...இவர்களைப் போன்றோர் சிறந்த சான்றுகள். நான் எப்பவும் கருவியாக இருக்கவேண்டும். இந்த வாய்ப்பை எனக்குக் கடவுள் எப்போது அளித்தால் போதும்.
    பேரா. அரங்க. பாரி நிகழ்த்தும் ஒவ்வொரு நிகழ்வும் அவரது சிந்தனையில் உதித்ததாக இருக்கும, அவரது பணம் ஏராளமாக செலவிடப்பட்டிருக்கும், சிறப்பான விருந்தோம்பலை அளிப்பார் ஆனால் இதையெல்லாம் கவனமாகப் பார்த்துச் செய்யுங்கள் என்று சொல்பவர்கள் சிறப்பாகச் செய்வார்கள். அவர்களைப் பெருந்தன்மையோடு தலையில் தூக்கி வைத்தக்கொண்டாடுவார். எனவே மறுபடியும் சொல்கிறேன் எல்லாப் புகழும் அவருக்கே.
    சமீபமாக என்னுடைய நண்பர் பாரிசிலிருந்து அவரின் நூலொன்றை எனக்கு அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட 400 பக்கங்கள். வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதில் அவர் பன்முகச் செய்திகளை, தொழில்நுட்பங்களை, அறிவியலை, தமிழை, அகராதியியலை என அறிந்த பலவற்றையும் எழுதியிருக்கிறார். பிரமித்துப்போயிருக்கிறேன். அதுபற்றி வாசித்ததும் விரிவாக எழுதுவேன். அந்த நூலின் பெயர் என்ன தெரியுமா? தெரியத் தெரியத் தெரியாது தெரியும் (அதாவது க்ற்றது கைம்மண்ணளவு). இதுதான் உண்மை. ராபர்ட் பிராஸ்ட் சொன்னதுபோல ஜெயக்குமார் நாம் பயணிக்கவேண்டியது நிறைய உள்ளது. குறிப்பிட்ட ஒன்றில் மட்டும் ஓரளவுக்குத் தெரிந்துவிட்டு எனக்கு எல்லாமும் தெரியும் என்கிற நண்பர்களையும் சந்தித்து விலக்கியிருக்கிறேன். இன்னமும் அவர்கள் அதிலேயே உழன்றுகொண்டிருக்கிற பரிதாபத்தையும் கர்ண்கிறேன். உயிர்பிரியும் கடைசித்தருணம்வரை நாம் வாசிக்கவேண்டும். அவ்வளவுதான். நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  33. சீரிய சிறப்பான உன்னதமான வியக்கவைக்கும் பணி

    பதிலளிநீக்கு
  34. அண்ணாமலைப் பல்லைக் கழகத்தின் கின்னஸ் சாதனை
    கணப்பொழுதில்/ ஒரே நாளில் 351 நூல்களை
    வெளியிட்டதல்ல - அதையும் தாண்டி
    தமிழில் 351 அறிவுக் களஞ்சியத்தை
    வெளியிட்டதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜெயக்குமார்

      351 நூல்கள் கணப் பொழுதில் - ஒரே நாளில் வெளியிட்டு கின்னஸ் சாதனை படைத்தது அரிய செயல். தங்களீன் பாராட்டத் தக்க பணியும் ஹரணியின் செயலும் ஒத்துழைப்பும் பாராட்டத்தக்கது.

      பாராட்டுகள்
      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா

      நீக்கு
  35. இப்போது தான் இந்தப் பதிவைப் பார்த்தேன். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  36. வாழ்த்துக்கள்...தங்கள் பணிகள் மேலும் பல்கிப்பெருகிட வாழ்த்துக்கள்.....உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு