06 ஜனவரி 2016

இப்படிக்கு... கண்ணம்மா




ஆண்டு 2003. இரவு 11.00 மணி. தஞ்சாவூர், கரந்தையில் இருந்து அந்த வேன் புறப்படுகிறது.

    கரந்தைக் கடைத் தெருவில் வீற்றிருக்கும், மீனாட்சி அம்மனை வழிபட்டு, வேனின் நான்கு சக்கரங்களுக்குக் கீழேயும், எழும்பிச்சைப் பழங்களை வைத்து, வேனுக்குச் சூடம் ஏற்றி, தீப ஆராதனை செய்து, ஒரு சிதற் தேங்காயினையும் உடைத்து விட்டு, அனைவரும் வேனில் ஏறிப் புறப்பட்டனர்.

     மொத்தம் 12 பேர். அனைவருமே இருபது அல்லது இருபத்தியோரு வயது நிரம்பிய இளைஞர்கள்.


     வயதில் சிறியவர்கள் ஆனாலும், திருப்பதி சென்று வந்தால், வாழ்வில் திருப்பம் நிகழும், வாழ்வு வளம் பெறும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையுடன், திருப்பதி நோக்கிப் பயணிக்கிறார்கள்.

     வேன் செல்லச் செல்ல, நேரம் ஆக ஆக, அனைவரின் கண்களும் அவர்களை அறியாமலே ஓய்வெடுக்கத் தொடங்குகிறன.

      இருக்கையில் சாய்ந்தவாறு தூங்கத் தொடங்குகிறார்கள். ஒரு இளைஞன் மட்டும், அருகில் இருந்த நண்பனின் மடியில் தலை வைத்து, சிறிய இடத்திற்குள் கூனிக் குறுகி படுத்து உறங்குகிறார்.

      நாள் முழுக்கப் பணியாற்றிய அசதி. ஆம் இந்த இளைஞன் மட்டும் பணியில் இருப்பவர். அரசுப் பேருந்தில் நடத்துநர் பணி.

     ஓட்டுநராய் இருந்த இவரது தந்தை, தன் பணிக் காலத்திலேயே இறந்து போனதால், கருணை அடிப்படையில், நடத்துநர் பணியினைப் பெற்றவர்.

   இவருக்கு இரு சகோதரிகள். சிறு வயதிலேயே பணிக்குச் சென்று, சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, சொந்தமாய் ஒரு சிறு வீடும் கட்டியுள்ள பொறுப்பான இளைஞர்.

      இவர், நண்பரின் மடி மீது தலைவைத்து அசந்து உறங்க, வேன் இருளைக் கிளித்துக் கொண்டு பறக்கிறது.

      அதிகாலை 3.00 மணி. வேன் கடலூரை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

      சாலையில் இடது புறத்தில், ஓர் லாரி நிற்கிறது. பின்புற விளக்குகள் எதையும் எரிய விடாமல், இருளோடு இருளாய் ஓர் லாரி.

      வேனை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுநர், மிக மிக அருகில் வந்ததும்தான் கவனிக்கிறார், இருளில் யானை போல் நிற்கின்ற லாரியை.

     வேகமாய் வண்டியை வலது புறம் திருப்புகிறார். இன்னும் 200 அடித் தொலைவிற்குமேல் இருக்கிறது வலது புறம் திரும்பி விடலாம், என்று எண்ணி வேகமாய் வலது புறம் திருப்புகிறார்.

     எதிர் திசையில் வேகமாய், அதிவேகமாய் ஓர் பேருந்து.

     பேருந்தில் நேருக்கு நேராய் மோதிவிடக் கூடாதே என்ற பயத்தில், ஓட்டுநரின் கரங்கள், தன்னிச்சையாய், வேனை மீண்டும் இடது புறம் திருப்புகின்றன.

     ஒரு நொடி, ஒரே நொடி, ஒரே நொடிதான், சாலையில் இடதுபுறம் நின்றிருந்த லாரியின் மீது, வேன் அதிவேகத்தில் மோதுகிறது.

     வேனில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. பயங்கர சத்தம். வேனில் இருந்த இளைஞர்கள் வேனுக்குள்ளேயே தூக்கி வீசப்படுகிறார்கள்.

     ஓட்டுநருக்கு இடது புறம் அமர்ந்து வந்த, இருபது வயதே நிரம்பிய ரமேஷ் என்னும் இளைஞர், உடல் நசுங்கி அங்கேயே, அப்பொழுதே இறந்து போனார்.

     மற்ற இளைஞர்களுக்கு கை, கால், முகம் என பலத்த காயம்.

     வேனில் நண்பனின் மடி மீது, தலை வைத்துப் படுத்து உறங்கியபடி வந்தாரல்லவா ஓர் இளைஞர், அவர் படுத்த வாக்கிலேயே தூக்கி வீசப்பட்டார்.
உடலெங்கும் பலத்த அடி.

     குறிப்பாக, அவரது முதுகின், தண்டுவடத்தின் டி5 மற்றும் டி6 என்னும் இரண்டு எலும்புகள் சுத்தமாய் நொறுங்கிப் போயின.

---

இப்படிக்கு..... கண்ணம்மா

    வித்தியாசமான நாவல் முயற்சி. சமூகத்தின் பல பின்புறங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து, தனித்து வாழும் நண்பர்களின் கதை.

     சம்பத், சந்துரு, திலக், சேகர், பிரபா என ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது.

     தஞ்சை வட்டாரத்தில் இருந்து ஐ.டி., வேலைக்கு வந்து சேரும் சம்பத். லாட்ஜ் நடத்தும் தந்தைக்கு மகனாக இஞ்சினியர் சந்துரு.

     பெருவிவசாயியின் மகனாய் பிறந்து, திரைப்பட ஆசையில், சென்னைக்கு வந்து சேர்ந்த திலக்.

    சிறு வயதில் பெற்றோரிடமிருந்து காணாமல் போய், கூர் நோக்கு இல்லம் மற்றும் வளர்ப்புப் பெற்றோர்களால் ஆளாகி, வேலைக்கு வந்து சேரும் பிரபா. இவர்களோடு அண்ணன், அண்ணியிடம் கோபம் கொண்டு பிரிந்து வந்து, விட்டேத்தியாக வேலையின்றித் திரியும் சேகர்.

    இவர்கள் எல்லோருமாக, எல்லோருக்குமாக வாழும் வீடு இன்குடில்.

     இவர்களைச் சுற்றிச் சுழலும் கதை.

     குறிப்பாக சம்பத்.

     துடிப்பான சம்பத். வசதியான சம்பத். இரு சகோதரிகள் அயல் நாட்டில், வசதியாய் வாழ, தந்தையும் தாயும் தஞ்சையில்.
    

சம்பத்திற்காகத் தாயும், தந்தையும் ஒரு பெண் பார்க்க, சம்பத்தோ முகநூலில் தன் காதலியைக் கண்டுபிடிக்கும் அற்புதமான, நெகிழ்வான தருணங்களால், விரைகிறது கதை.

ஹாய் உங்கள் கவிதை அட்புதம்.

     முகநூலில் தான் எழுதியிருந்த கவிதையைப் பாராட்டி, வந்த வாழ்த்துச் செய்தியை சம்பத் இயல்பாகத்தான் கடந்தான்.

      இருப்பினும், அட்புதம் என்று குறிப்பிட்டிருந்த பதம், எழுத்துப் பிழை என்று கடக்க விடாமல், அவனைத் திருப்பியது.

      வாழ்த்தியவரின் பெயரைப் பார்த்தான். டிலோனி டிலக்ஸி.

      ஆணா? பெண்ணா?

      அனுப்பியவரின் ப்ரொஃபைலைப் பார்த்தான்.

      பெண்.

      அதுவும் இலங்கையில் இருந்து.

      இப்படித்தான் தொடர்பு தொடங்கியது.



வெளியே மழை
உள்ளே நனைகிறேன்

லைக் வந்து விழுந்தது.

மழை பேசுகிறது
அது விழுந்து சிதறும்
பொருளின் துணைகொண்டு...

லைக் வந்து விழுந்தது.

வானம் பொழிந்தது
மழையையா ...?
நீரையா ....?

லைக் வரவில்லை. ஆனால் பதில் வந்தது

வானம்
பொழிந்தது
மழை நீரைத்தான்.

இப்படித்தான் தொடர்ந்தது. விளைவு....

உறங்க மறுத்து
உயிர்ப்புடன் உலவுகிறது
கண்கள்

என எழுதினான். சிறிது நேரம் யோசித்து, பின்னால்

நானே அறிந்திடாத
ரகசியம்தான்
என் கனவு

என மற்றொரு பதிவும் எழுதினான்.
பதிவும் தொடர்ந்தது, காதலும் வளர்ந்தது.

    கணினி வழி காதல் வளர்ந்த போது, ஒரு நாள், உன் மொபைல் நம்பர் குடேன் என்று செய்தி அனுப்பினான்.

நம்பர் வந்தது.

     கணினி போய், அலைபேசியில், குரலும் மனமும் கலந்து, காதல் தழைத்தோங்கியது.

     உன் படத்தை அனுப்பேன் என்றான். மின்னஞ்சலில் வந்த படம், நெஞ்சில் ஒட்டிக் கொண்டது.

   ஒரு நாள் டிலோனி சொன்னாள்,

   என்னோட கிறிஸ்டியன் நேம்தான், டிலோனி டிலக்ஸி. இந்த பேர் வீட்ல உள்ளவங்களைத் தவிர, வேற யாருக்கும் தெரியாது, பட் என்னோட பெயர் கண்ணம்மா. இதுதான் எல்லோரும் கூப்பிடும் பெயர்.

கண்ணம்மா, கண்ணம்மா, கண்ணம்மா

உள்ளம் உருகித்தான் போனான் சம்பத்.

---

     சம்பத்திற்கு கண்ணம்மாவிற்கு முன்னே, மனதில் ஒரு காதல் இருந்தது. ஆனால் அது பெண்மேல் அல்ல. பொருளின் மீது. ஒரு வண்டியின் மீது.

      டூ வீலர் வாங்கினா, யமஹா ஆர்.எக்ஸ். 100 தான் வாங்கனும். அதிலும் மெரூன் கலர்தான் வேண்டுமென, அந்த வண்டியின் மீது தீராத காதல்.

     தஞ்சையில் பள்ளியில் படிக்கும் போதே, தொடங்கிய காதல் இது.

     பள்ளிப் படிப்பு முடிந்து, கல்லூரி வாழ்க்கையும் முடிந்து, வண்டி வாங்குவதற்கான நேரம் வந்த பொழுது, அந்த மாடல் வண்டி நிறுத்தப் பட்டே பல வருடங்களாகி விட்டது.

     ஆனாலும் அந்த வண்டிதான் வேண்டும் என்றான் சம்பத்.

     எனவே ஒரு பழைய வண்டியைத்தான் வாங்கினான்.

      என் வண்டி, எனக்குப் பிடித்த வண்டி.
      

அன்றும் வழக்கம் போலத்தான், அலுவலகப் பணி முடிந்து, அதே யமஹாவில் கிளம்பினான்.

      வண்டியின் வேக முள் அறுபதுக்கும் எண்பதுக்குமாக ஆடிக் கொண்டிருந்தது. ஒரு பைக் ரேஸரைப் போலத்தான் வண்டியை ஓட்டினான்.

     சாலையின் இடது ஓரத்தில் நின்று கொண்டிருந்த, ஒரு காரின் கதவு திடீரென திறந்ததும், பேயடித்ததைப் போல் கண்கள் இருட்டிக் கொண்டது.

      வண்டியின் வேகத்தைக் குறைத்ததும், பிரேக்கை சட்டென மிதித்ததும் கூட தன்னிச்சையாகத்தான் நிகழ்ந்தது.

      இருந்தும் கூட, திடீரென்று திறக்கப்பட்ட காரின் கதவில் மோதி, டூ வீலரோடு சறுக்கிக் கொண்டே சென்றான். சறுக்கிக் கொண்டே சென்றவன் சாலையின் ஓரத்தில் இருந்த நடைப் பாதையில் மோதி விழுந்தான்.

     மோதிய வேகத்தில், காரின் கதவு, காரில இருந்து கழன்று, கரகரவென சுழன்றபடி, ரோட்டில் தேய்ந்து கொண்டே போய், விழுந்து கிடந்த சம்பத்தின் முதுகில் பலமாய் மோதி ஓய்வெடுத்தது.

     தலைக் கவசம் அவனது முகத்தை விட்டு விலகாமல் இருந்தது. மண்டையில் அடியில்லை என்றாலும்கூட அதிர்ச்சியில் உறைந்து போனான்.

     அவனைச் சுற்றிலும் எக்கச்சக்கமான கூட்டம். அவனது மொபைல் உட்பட, இன்னும பல பொருட்கள் அங்கும் இங்குமாய சிதறிக் கிடந்தன.

     கௌபாய் தொப்பியும், கூலிங் கிளாசும், டீ சர்ட்டுமாக குப்பை பொறுக்கும் ஒருவன், கீழே கிடந்த சம்பத்தின் மொபைலை எடுத்துப் பார்த்து, தன் பையில் போட்டுக் கொண்டு, எதுவுமோ நடக்காதது போல் சர்வசாதாரணமாக தன் நடையைத் தொடர்ந்தான்.

       சில நாட்கள் கடந்த நிலையில், சம்பத் மருத்துவ மனையில்தான் கண் விழித்தான்.

       சம்பத் கண் விழத்தபோது, அந்த அதிர்ச்சிச் செய்தி, அவனுக்காகவே காத்திருந்தது.

      முதுகு எலும்பின், டி5 மற்றும் டி6, அதாவது தொராசிக் 5 மற்றும் 6 என்ற எழும்புகள் சுத்தமாக நொறுங்கிப் போய்விட்டன.

       நொறுங்கிய எலும்புகள் ஒன்றொடு ஒன்று உரசி, மூளையில் இருந்து கிளம்பி, உடலின் அத்தனை பாகங்களையும் கட்டுப் படுத்தும் நரம்பை துண்டித்து விட்டன.

       எனவே சம்பத்தின் நெஞ்சு எலும்புகளுக்குக் கீழ் உள்ள பகுதி, செயலிழந்து விட்டிருந்தது. உணர்ச்சியற்ற இடுப்பு, உணர்வற்ற கால்கள்.

       இனி வாழ்வு முழுவதும் படுக்கையில்தான்.

---

      மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டான் சம்பத். வீட்டின் ஓர் அறையில், கட்டிலே உலகமாகிப் போனது.

       சில நாட்கள் கடந்த நிலையில், கட்டிலில் படுத்திருந்த சம்பத், யாரோ தன்னை உற்று நோக்குவதை உணர்ந்து, தலையைத் திருப்பினான்.

      அடுத்த நொடி சிலையானான்.

      அவன் கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை.

      கனவா, நினைவா.

      கணகளைக் கசக்கித்தான் பார்த்தான்.

      எதிரில் கண்ட காட்சி விலக மறுத்தது, கனவாய் கலைய மறுத்தது.

      மெல்ல மெல்ல அவன் மூளை சொன்னது, நீ காணும் காட்சி உண்மைதான்.

       எதிரில் கண்ணம்மா.

       இலங்கை கண்ணம்மா.

       சம்பத்தின் காதல் கண்ணம்மா.

       அமைதி, அமைதி அறையெங்கும் அமைதி.

       பேரமைதி சூழ்ந்து கொண்டிருந்தது சம்பத்தின் அறையை.

       பின் மெல்ல மெல்ல, கண்ணம்மாவின் கண்ணீர் தளும்பும் சத்தம், அந்த அறையை சிறிது சிறிதாய் நிரப்பத் தொடங்கியது.

       உண்மையில் கண்ணம்மாவுக்கும், சம்பத்துக்கும் பேசுவதற்கு வார்த்தைகள் இல்லைதான், தேவைப்படவும் இல்லைதான்.

     சத்தங்களற்ற வார்த்தைகளாலேயே, கணினியில் பேசிக் கொண்டவர்களுக்கு, வார்த்தைகளற்ற இந்த தருணம் ரொம்பவே துயரமாகத்தான் இருந்தது.

       மௌனமும் கண்ணீரும் வெளிப்படுத்திவிட முடியாத உணர்வை, வார்த்தைகள் கொண்டா பேசிவிட முடியும்.

        பின் மெதுவாய், நிதானமாய், தெளிவாய் கண்ணம்மாள் பேசினாள்.

எந்தச் சூழ்நிலையிலும், கைவிட மாட்டன் எண்டு நீங்கள் சொன்னீங்கள் தானே?

ஆமா ......ஆனா ..... இப்ப எப்டி.... என்னால்.....

நானும் எந்தச் சூழ்நிலையிலும் உங்களைக் கைவிட மாட்டன்.

      இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர்.

       செயற்றைக் கருவூட்டல் முறையில் கண்ணம்மாள் கருவுற்றார்.

     ஒன்றல்ல இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்.
     இரட்டைக் குழந்தைகள். ஒரு ஆண். ஒரு பெண்.

      நிலாந்தன், நிறைநிலா

இப்படிக்கு ... கண்ணம்மா.

      நண்பர்களே, நூலைப் படித்து முடித்து வெகு நேரமாகிவும், புத்தகத்தை மூடத் தோன்றாத மனநிலையில் நான்.

---

      கடந்த 19.12.2015 சனிக் கிழமை மாலை, தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில்,





இப்படிக்கு ... கண்ணம்மா

நூல் வெளியீட்டு விழா.

     நண்பர் ராஜன் என்னை அழைத்திருந்தார்.

     அன்று பள்ளி அலுவல் நாள். சிறப்புப் பயிற்சி வகுப்புகள் முடிந்து, பள்ளியில் இருந்து கிளம்பவே மாலை 6.30 மணி ஆகிவிட்டது.

    நூல் வெளியீட்டு விழாவைச் சுத்தமாய் மறந்தே போனேன்.

    திங்கட்கிழமைதான் நினைவிற்கு வந்தது. அது முதல் மனதில் ஓர் உறுத்தல். மறந்து போனோமே என்ற வருத்தம்.

       நூலினை எழுதிய சிவக்குமார், கரந்தையில் வசிப்பவர். நாங்கள் கரந்தையில் வசித்த பொழுது, எங்களது வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் வசித்தவர்.

       சிவக்குமாரைப் பார்த்தே ஆக வேண்டும், பாராட்டியே ஆகவேண்டும், நூலினை வாங்கிப் படித்தே ஆக வேண்டும் என மனம் பரபரத்தது.

      சிவக்குமாரை அலைபேசியில் அழைத்தேன்.

      தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு அருகில், தனது அக்கா வீட்டில் இருப்பதாகக் கூறினார்.

      இப்பொழுது நாங்கள் இருக்கும் வீட்டிற்கு அருகில், மிக அருகில்.

      உடனே புறப்பட்டு சிவக்குமாரின் சகோதரி வீட்டிற்குச் சென்றேன்.

      என்னை வரவேற்ற சிவக்குமாரின் சகோதரி, ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார்.

      அந்த அறையில், ஓர் நாற்காலியில், சிரித்த முகத்துடன் சிவக்குமார்.

      நெஞ்சுக் கூட்டிற்கும் கீழே, முழுமையாய் செயழ் இழந்த, உணர்விழந்த உடலுடன், சிவக்குமார் என்னை வரவேற்றார்.

       கடந்த 12 ஆண்டுகளாக, பாதி உடல் செயல் இழந்த நிலையிலும்,
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ
என்று, வீறு கொண்ட மன உறுதியுடன் வாழ்ந்து வரும் சிவக்குமார்.

    சிறு வயதிலேயே தந்தையை இழந்த சிவக்குமார்.

    அரசுப் பேருந்தில் நடத்துநராய் பணியேற்று, தன் சகோதரிகளைத் தந்தைபோல் காத்து, கரையேற்றிய சிவக்குமார்.

      திருப்பதி ஏழு மலையானைத் தரிசிக்கப் புறப்பட்டு, பாதி வழியிலேயே, ஏழுமலையானுக்குத் தன் பாதி உடலையே காணிக்கையாய் கொடுத்த சிவக்குமார்.

       ஏழுமலையானே கைவிட்ட போதும், கலங்காத சிவக்குமார்.

      உடல் சோர்ந்து போய்விட்ட போதிலும், உள்ளத்தைத் தளரவிடாமல், கடந்த மூன்று வருடங்களாக, எழுதி, எழுதி, இழைத்து, இழைத்து உருவாக்கிய நூல்தான்,

இப்படிக்கு ... கண்ணம்மா

       என்னைப் பார்த்து, முகம் முழுவதும், அன்றலர்ந்த மலர் போல் சிரித்தபடி வரவேற்கிறார் சிவக்குமார்.
       

என்னால்தான் சிரிக்க முடியவில்லை.

        கரம் பற்றி அருகில் அமர்ந்தேன்.

        பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.

தான் வாழ நினைத்த வாழ்க்கையை, தான் கனவு கண்ட வாழ்க்கையை, எழுத்தால் எழுதி, மனதை நிரப்பிக் கொண்டாரோ.


ஒவ்வொரு வருடமாக என் வாழ்வை வாழ்கிறேன்
எதிர்காலத்தை நோக்கி, தளராத இதயத்துடன்
பரபரப்பின்றி, இலட்சியத்தை விட்டு அகலாமல்
மறைந்து போனவற்றிற்காகப் புலம்பாமல்

கடந்த காலத்தின் பயத்தில் பின்னடையாமல்
எதிர்காலம் அதை மறைக்கலாம் ஆனால் முழுமையான
சந்தோஷமான இதயத்துடன் இறுதியை அடையும்
இளமையிலும் முதுமையிலும் சந்தோஷத்துடன் பயணமாகும்.

எனவே வழி மலைமேல் ஏறட்டும், இறங்கட்டும்
கரடு முரடாக, வழுவழுப்பாக இருக்கட்டும்
பயணம் சந்தோஷமாக இருக்கும்
சிறுவனாக நான் தேடியதை, இன்றும் தேடுவேன்
எனக்கு வயதாகும், ஆனால், வாழ்வின் துடிப்பை இழக்க மாட்டேன்.
                                                    ஹென்றி வான் டைக்.



முடிவிலி வெளியீடு,                       நண்பர் திரு சிவக்குமார்,
கரந்தை,                                                      அலைபேசி 99 94 38 49 41
தஞ்சாவூர் -2 

விலை ரூ.200                     

        





    

    


  

81 கருத்துகள்:

  1. நண்பர் சிவகுமாரின் மனஉறுதி பாராட்டக்கூடி.யது தங்களின் அழகான நடையில் அவரின் வாழ்க்கையை அழகாக விளக்கினீர்கள் நண்பரே முடிவில் மனம் கணத்து விட்டது
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவக்குமார் பாராட்டிற்கு உரியவர்தான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  2. அன்பின் ஐயா...
    கண்ணம்மா... கதையெனப் படித்து வரும்போதே அவரின் வாழ்க்கையையும் சொல்லி... மனம் கனத்து விட்டது...

    அருமையாக எழுதியிருக்கீங்க... ஊருக்கு வரும்போது கண்டிப்பாக வாங்க வேண்டும்....

    தமிழ்மணத்தில் இணைத்து வாக்கும் அளித்தாச்சு...

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையின் ஊற்று. அருமையாக எழுதியிருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  4. ஆரம்பத்தில் திரு சிவகுமாரைப் பற்றி எழுதிவிட்டு (சிவகுமார் என்ற பையனைப் பற்றி), திடுமென்று இப்படிக்குக் கண்ணம்மா என்ற தலைப்புக்குத் தாவியது குழப்பமாக இருந்தது. கடைசியில்தான் தெளிவடைந்தது. ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறக்கும் என்பார்கள். ஆனால் பலருக்கு, அந்த இன்னொரு கதவு எங்கே இருக்கிறது என்று மிகுந்த முயற்சி எடுத்தால்தான் புலப்படும். தீவிரமாக முயற்சித்து தனக்கென ஒரு பாதையில் தடம் பதித்த திரு சிவகுமார் பாராட்டுதலுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
  5. மனதில் நின்று விட்டார் சிவக்குமார்.

    தம +1

    பதிலளிநீக்கு
  6. கல்கி தமது கதையில் தியாக பூமி என்று நினைக்கிறேன்
    அழகாக சொல்வார்
    சமயங்களில் வாழ்க்கை எந்த ஒரு அழகிய கதையையும் விட
    அழகானது,அற்புதமானது.நம்புதற்கரிய சம்பவங்கள் வாழ்வில் நடைபெறும்
    கதையை விட ருசிகரமாக.

    பதிலளிநீக்கு
  7. விபத்தில் இருந்து தெய்வாதீனமாக ....இப்படி சொல்வதுகூட தவறு ...கும்பிடப் போன தெய்வம்தான் சிவகுமாரைக் கை விட்டு விட்டதே !இருந்தாலும் மன உறுதியுடன் # பயணம் சந்தோஷமாக இருக்கும்#என்று வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் சிவகுமாருக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  8. அவரின் தன்னம்பிக்கை மனஉறுதி பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. அவரின் தன்னம்பிக்கை மனஉறுதி பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவினைப் படித்தவுடன் “ என்ன வாழ்க்கை இது?’ என்றே என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  11. மனதில் நீங்கா பாதிப்பை ஏற்படுத்திய பதிவு. உங்கள் எழுத்தால் அது இன்னும் ஆழமாக மனதில் பதிந்தது. சிவக்குமாரின் நம்பிக்கை சிலிர்க்க வைத்தது. மேலும் பல படைப்புகளைப் படைக்க சிவகுமாருக்கு வாழ்த்துகள்! அருமையான நூலை பகிர்ந்த தங்களுக்கும் நன்றி நண்பரே!
    த ம 9

    பதிலளிநீக்கு
  12. சிவக்குமாரின் தன்னம்பிக்கை பாராட்டப்படவேண்டிய ஒன்று. அருமையான புத்தக அறிமுகத்துடன். அருமை.

    பதிலளிநீக்கு
  13. அன்புள்ள கரந்தையாரே!

    ‘இப்படிக்கு..... கண்ணம்மா’ திருமிகு.சிவகுமார் பட்ட துன்பத்தை பாடமாக்கி எழுத்துலகில் சாதனையாளராகத் திகழ்கிறார். விபத்தில் மாட்டி துன்பட்டவர்களுக்கே... அல்லது துன்பட்டுக் கொண்டிருப்பவற்கே அதன் வலி முழுமையும் தெரியும். தங்களின் எழுத்திலேயே... படிக்கும் பொழுது வலிக்கிறது.

    உண்மைகள் என்றும் உயர்வனாது... ‘மனதில் உறுதி வேண்டும்’ என்பதில் உறுதியுடன் இருக்கும் உன்னதமான அவரைப் பாராட்டும் வாழ்த்தும்.

    நன்றி.
    த.ம.9

    பதிலளிநீக்கு
  14. நண்பர் சிவகுமாரின் தன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
    உணர்வுகளை உணரும் வகையில்
    தங்கள் அறிமுகம் சிறப்பாக அமைந்திருக்கிறது

    பதிலளிநீக்கு
  15. மனது கனத்தது. உள்ளம் உருகியது. தளரா நெஞ்சம் கொண்ட திரு சிவகுமாரினைப் பற்றிய பதிவு எல்லாம் இருந்தும் ஏதோ போதமையால் வருந்தும் மனிதர்க்கு ஒரு ஒளிவிளக்கு.

    பதிலளிநீக்கு
  16. எழுதுவது எல்லாம் எழுத்தல்ல. எழச்செய்வதே எழுத்து. சிவகுமார் மட்டுமல்ல நீங்களும் வாசகனை எழச்செய்து விட்டீர்கள்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  17. நான் கரந்தையில் வசித்த போது திரு சிவகுமார் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்..

    இப்போது - அவரைச் சந்திக்க வேண்டும் என ஆவலைத் தூண்டி விட்டது - தங்களது பதிவு..

    பதிலளிநீக்கு
  18. திருமிகு சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  19. கரந்தையாரே தங்கள் எழுத்து நடையே தனிதான்!வாழ்க சிவக்குமார்!

    பதிலளிநீக்கு
  20. தங்கள் எழுத்து நடையே தனிதான். சிவக்குமார் அவர்கள் இன்னும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள். அவரின் நம்பிக்கை துணைநிற்கட்டும். அருமை அருமை சகோ, தங்கள் நடை.

    பதிலளிநீக்கு
  21. கண்ணீர் வர வைத்த பதிவு! மனம் கனக்கிறது. சிவகுமாரின் அசாத்தியமான நம்பிக்கை மேலும் மேலும் வளரட்டும். அவர் வாழ்வில் ஒளி வீசட்டும்.

    பதிலளிநீக்கு
  22. வாழ்க்கையில் சில உண்மைச் சம்பவங்கள் கற்பனையின் எல்லையைத் தொடும் கற்பனையும் நிகழ்வும் கலந்து கட்டிய நூல் உங்கள் எழுத்தால் பரிமளிக்கிறது உங்களுக்கும் சிவ குமாருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. மனதை உலுக்கும் சம்பவம்,,உங்கள் நடையில் மேலும் உணர்வுப் பூர்வமாய்! மனம் கனக்கிறது..சிவக்குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  24. சிவகுமாரை எங்கள் மனதில் நிறுத்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  25. நீங்கள் சிவகுமாரை உங்களுக்கே உரித்தான முறையில் சஸ்பென்சுடன் அறிமுகப் படுத்திய விதம் அற்புதம். தன் உறுதியால் மட்டுமல்ல உங்கள் எழுத்தாலும் எங்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் சிவகுமார்

    பதிலளிநீக்கு
  26. அண்ணா ஒரு தொடர்பதிவு. உங்கள் பங்களிப்பை வேண்டுகிறேன்.http://makizhnirai.blogspot.com/2016/01/travel-with-my-friends.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ தங்களின் வலைப் பூவிற்கு வருகின்றேன் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  27. நண்பர் சிவக்குமாரின் நூல் தமிழகத்து நூல் நிலையங்கள் அனைத்திலும் இடம்பெற வேண்டும். பதிவு மிக அருமை.

    பதிலளிநீக்கு
  28. நல்லதோர் அறிமுகம். நண்பர் சிவக்குமார் மனதில் இடம் பிடித்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  29. வாழ்த்துக்கள்.
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  30. சிவகுமாருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  31. சிவக்குமார் அவர்களின் மன உறுதி பாராட்டுக்குரியது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  32. அவரது மன உறுதிக்கு ஈடு இணை எதுவுமில்லை. வழக்கமாக தங்கள் பாணியில் அவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தி பெருந்தொண்டு புரிந்துள்ளீர்கள். தங்களின் பெருமனதிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  33. இது போன்ற ஆளுமைகளை அடையாளம் காட்டும் உங்கள் பணி போற்றுதற்குரியது.

    தொடர்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
  34. எழுத்து பாணி இன்னொரு வகையை அடைந்திருகிறது..
    மனம் உலுக்கும் பதிவு
    தம +

    பதிலளிநீக்கு
  35. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    நமது கரந்தையில் பிறந்து வளர்ந்த நம் இளவல் திரு.சிவக்குமார் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமையான விபத்தும் அதன் தொடர்ச்சியான அவரது துன்பமிகு வாழ்க்கையும் நாம் முன்பே அறிந்தது. ஆனால் அதிலிருந்து அவர் விடுபட்டு ஒரு அற்புதமான நாவல் ஒன்றை படைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவர் குணமாகி எழுந்து நடக்கிறாரா? என்பதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அவருடைய நண்பர்களான திரு.அய்யப்பன், அன்பு மருந்தகம், திரு.அறிவழகன், ஆசிரியர், திரு.பாரி, நகலக உரிமையாளர் ஆகியோரிடம் விசாரித்துக் கொண்டே இருப்பேன். இறைவழிபாடின் பொழுது என்னை அறியாமலே அந்த நல்ல உள்ளம் நலம் பெற வேண்டும் என வேண்டி வருவேன். பெரிய அதிசயம் நடந்து அவர் மீண்டும் நடக்க மாட்டாரா? என்ற ஏக்கம் கரந்தை நண்பர்கள் மத்தியில் பல ஆண்டுகள் இருந்து வருவதும் உண்மை. அவருடைய மனம் இந்த அளவில் பலம் பெற்று நாவல் படைத்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அவரை நாம் இருவரும் சந்திக்க வேண்டும், ஆறுதல் கூற வேண்டும் என பல நாள் முயற்சித்தாலும் அவரை படுக்கையில் பார்ப்பதற்கு நமக்கு தைரியம் வராத காரணத்தால் இயலாமல் போனது. அவரை சந்தித்து பேசி அவருடைய நாவலை வாசித்து மிக அழகாக விமர்சனமும் நெகிழச் செய்யும் அவர் அறிமுகமும் செய்து பதிவிட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மௌனம் சிதைகிறது...
      என்குறித்த இந்த பதிவு வந்த தினந்திலிருந்து, பின்னூட்டங்களாக வந்து குவியும் வாழ்த்தையும், ஊக்கத்தையும் தினமும் பலமுறை பார்த்துவருகிறேன். முகமறியாத அத்தனை உறவுகளுக்கும் நன்றி.
      எளிதில் உணர்ச்சி வசப்படாமை என்பது என் இயல்பாகவும் பலமாகவும் இருக்கிறபடியால்... என் திறமைகளை இந்த தளத்தில் அறிமுகம் செய்துவைத்த... நாங்கள் சந்தித்துக் கொண்டபோது “என்னால்தான் சிரிக்க முடியவில்லை” என்று வருத்தப்பட்ட ஆசிரியர் ஜெயக்குமார் அவர்களையும், வெகுநாள் விருப்பப்பட்டு விரைவில் சந்திக்கவிருக்கும் கரந்தை ஆசிரியர் சரவணன் அவர்களையும் நோக்கி ஒன்றை மட்டும் உரிமையுடன் என்னால் கேட்க முடியும். பாம்பே ஸ்வீட் ஸ்டாலில் கொஞ்சமே கொஞ்சம் இனிப்பு. வாங்கித்தர முடியுமா சார்...?  உங்கள் இருவருடனும் எனக்கு பேச அநேகம் இருப்பதால் இந்த பொங்கல் விடுமுறையின் ஒரு நாளில் மிகநீண்ட சந்திப்பு ஒன்றுக்கான நேரத்தை ஒதுக்குமாறு ஆவலுடன் கேட்கிறேன்.

      சிவக்குமார்

      நீக்கு
    2. ஆகா
      கொஞ்சமே கொஞ்சம் இனிப்பு என்ன நண்பரே
      அதிகமோ அதிகம் இனிப்புடனும்
      மனம் நிறைய மகிழ்ச்சியுடனும்
      தங்களைக் காண வருவோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  36. மனதைக் கரையவைத்தகதை ஜெயக்குமார் சகோ.. சிவக்குமாரின் மன உறுதி அசரடிக்கிறது. வாழ்த்துகள் இருவருக்கும். நம்பிக்கைதான் விளக்கு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோஸ்.

    பதிலளிநீக்கு
  37. 'எனக்கு வயதாகும், ஆனால், வாழ்வின் துடிப்பை இழக்க மாட்டேன்.' உண்மை . வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  38. வணக்கம்
    ஐயா

    புத்தகத்தின் விமர்சனத்தை படித்த போது புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆசைவந்து விட்டது ஐயா.விமர்சன பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  39. சற்றே கலங்கடித்து விட்டது,சிவக்குமார் அவர்களின் வாழ்நிலை,புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  40. வேலைப்பளு காரணமாக கதையை படிக்க தாமதமாகி விட்டது..

    நம்பிக்கை இருந்தால் நன்றாக வாழலாம் என்பதற்கு இந்தக்கதை ஓர் உதாரணம்
    உங்களுக்கே உரித்தான பாணியில் அருமையாக எழுதியுள்ளீர்கள்...நன்றி
    உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு