26 பிப்ரவரி 2017

விடுமுறையில் படித்தவர்


 பொருள்.

     பொருளாதாரம்

     ஒரு வீடு வளமிக்கதாக விளங்க, பொருளாதாரம் மிக முக்கியமான ஒன்று.

    அன்பும் பண்பும் வழிந்தோடும் குடும்பமே ஆயினும், பொருளில்லை என்றால் வாழ்வானது வேதனையைத்தான் வாரி வாரி வழங்கும்.

     இன்றைய பெரும்பாலான குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு அடி நாதமாய் விளங்குவது இந்தப் பொருளின்மைதானே.

     45 வயது நிரம்பிய இம்மனிதருக்கும் இதே பிரச்சினைதான்.

      இம்மனிதரின் சிந்தனை முழுமையும் பொருளாதாரத்தைச் சுற்றிச் சுற்றியே வந்தது.

      பொருளாதாரச் சூழலை எவ்வாறு மேம்படுத்துவது.

       ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிம் மாறி மாறி, முன்னேறி வரும் தொழில் நுட்ப முன்னேற்றங்களை, வணிக முறைகளை எவ்வாறு முழுமையாய் புரிந்து கொள்வது.

     புரிந்து கொண்டால்தானே, நிருவாக, பொருளாதார, தொழில் வளர்ச்சி முடிவுகளை மிகச் சரியாக எடுக்க முடியும்.

      வளர்ச்சியை சரியான திசையில், வெகுவேகமாய் உயர்த்த முடியும். மேம்பட முடியும். மேம்படுத்த முடியும்.

       தீவிரமாய் சிந்தித்தவர், ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தார்.

      ஒரு வெள்ளைத் தாளினை எடுத்தார்.

      எழுதுகோலைத் திறந்தார்.

      மனதில் உள்ளவற்றை எல்லாம் இறக்கி வைத்து, ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதினார்.

      24 மணி நேரமும், கண் துஞ்சக் கூட நேரமின்றி, தான் ஆற்றிவரும் பணியில் இருந்து, சற்றே விடுபட, விடுமுறை விண்ணப்பம் எழுதினார்.

      விடுமுறை என்றால் எத்தனை நாளைக்கு?

      ஒரு நாளா, இரண்டு நாளா?

      இல்லை.

     ஒரு மாதத்திற்கா அல்லது இரண்டு மாதத்திற்கா?

     அதுவும் இல்லை.

      முழுதாய் ஒரு வருடத்திற்கு விடுமுறை.

      செய்தியறிந்த அனைவரும் திகைத்துத்தான் போனார்கள்.

     விடுமுறையா?

     இவர் ஆற்றிவரும் பணிக்கு ஏது விடுமுறை.

     ஞாயிறும் அலுவல் நாள்தானே.

     ஒரு நாளின் 24 மணி நேரமும், அலுவல் நேரம்தானே.

     இதுவரை இப்பதவியில் இருந்தோர், விடுமுறை எடுத்ததாக வரலாறே இல்லையே?

     மக்கள் அதிர்ந்துதான் போனார்கள்.

     ஆனால் இம்மனிதரோ, எடுத்த முடிவில் உறுதியாய் நின்று, விமானம் ஏறினார்.

    அமெரிக்காவில் இறங்கினார்.
   

உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின், கென்னடி அரசு நிர்வாகவியல் கல்லூரியில், ஒரு வருடப் படிப்பில் சேர்ந்தார்.

     செய்தியறிந்து அமெரிக்கா மட்டுமல்ல, உலகே மூக்கின் மேல் விரல் வைத்து வியந்துதான் போனது.

     உலகு முழுவதுமே வைத்த கண் வாங்காமல், தன்னையே பார்ப்பதையே அறியாமல், இம்மனிதரோ முழு நேரமும் அறிவுத் தேடலில் மூழ்கினார்.

    பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தார்.

    நூலகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் ஒளிந்திருக்கும் பொருளாதார, தொழில் நுட்ப நூல்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஒவ்வொரு வரியையும் விடாமல் படித்து, அனைத்தையுமே, தன் மூளையின் நினைவு அடுக்குகளில் சேமித்தார்.

     கல்லூரிப் பேராசிரியர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து, கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்.

    தன் சிந்தனைகளை, எண்ணங்களை அவர்களோடு மோத விட்டு, அயரா விவாதம் செய்தார்.

    விளைவு. பொருளாதார, வணிக நுணுக்கங்கள் வரிசை வரிசையாய் வலம் வந்து, இவர்தம் கரம் பற்றி நட்புப் பாராட்டத் தொடங்கின.

    நிலையான, தொடர்ச்சியான வெற்றியினைக் காண வேண்டுமாயின், பலங்களை, பலவீனங்களை, தன்னை எதிர்நோக்கியிருக்கும் அபாயங்களை, வாய்ப்புகளை சரியாக எடை போட வேண்டும்.

   மிகச் சரியான வியூகங்களை வகுக்க வேண்டும்.

   இது தனி மனிதன், சமுதாயம், வட்டம்,. மாவட்டம், மாநிலம், நாடு ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என்பதை துல்லியமாய் உணர்ந்தார்.

   புது மனிதராய்

   புத்துணர்ச்சியுடன்

   பேரெழுச்சியுடன் நாடு திரும்பினார்.

   சுழியத்தில் இருந்து தொடங்கி, தன் நாட்டை, வளமான நாடாக்கினார்.

    சேறுகள் நிறைந்த இடங்களில், சிதறிய கனவுகளோடு, வறுமைத் தாண்டவமாடும் குடிசைகளில் வாடியவர்களை, பெருமையோடு உயர்ந்து நிற்கும், நெஞ்சம் நிமிர்த்தி வளர்ந்து நிற்கும், வானளாவியப் பலமாடிக் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்றார்.

    தரமான கல்வி, உயரிய சுகாதாரமான நல் வாழ்க்கைத் தரம், வலுவான பொருளாதாரம், ஊழலற்ற அரசுக் கட்டமைப்பு, ஒழுங்கு, தூய்மை என ஒரு முன் மாதிரி நாடாக, தன் நாட்டைத் தகவுறக் கட்டமைத்தார்.

     நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     தன் பணியில் இருந்து, சாதாரணப் பணியில் இருந்து அல்ல, வெகு உயர்வானப் பதவில் இருந்து, உயர்வானப் பதவி என்றால், அதுதான் அந்நாட்டின், உச்சப் பதவி, ஆம் தன் பிரதமர் பதவியில் இருந்து, விடுமுறை எடுத்துக் கொண்டு, ஒரு வருட விடுமுறை எடுத்துக் கொண்டு, வேறொரு நாட்டிற்குச் சென்று, அங்கொரு கலாசாலையில் மாணவராய்ச் சேர்ந்து, பாடம் படித்து, தன் நாட்டின் வறுமை நிலையினை, தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட, இம் மனிதர், இம் மாமனிதர் யார் தெரியுமா?

சிங்கப்பூரின் சிற்பி

    மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன், திட்டமிட்டதை பாங்குற செயலாற்றும் நேர்த்தி, ஆளுமைப் பண்பு, ராச தந்திரம் ஆகியவற்றால் சிங்கப்பூரை உலகில் தலை சிறந்த நல்லரசாய், நல் வளமிக்க நாடாய் உயர்த்திய மனிதர், மாமனிதர்

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு தலைவரிடம், முழுமையான அதிகாரங்கள் கிடைத்தால், ஒரு நாடு, எந்த அளவிற்கு முன்னேற முடியும் என்பதற்கு, ஒரு உதாரணம்


சிங்கப்பூரின் சிற்பி
லீ குவான் யூ

நமக்கும்,
இவர் போல் ஒரு சிற்பி
கிடைக்க மாட்டாரா,
நம் பாரதத்தைச் செதுக்கிச்
சீரிய சிற்பமாக்க மாட்டாரா
என்னும் ஏக்கத்தோடு

லீ குவான் யூ
அவர்களைப்
போற்றுவோம் வாழ்த்துவோம்.




26 கருத்துகள்:

  1. லீ குவான் யூ - அவருடைய வாழ்'நாளையே சிங்கப்பூரின் மேன்மைக்காகச் செலவழித்தவர்.

    "நமக்கும், இவர் போல் ஒரு சிற்பி கிடைக்க மாட்டாரா, நம் பாரதத்தைச் செதுக்கிச் சீரிய சிற்பமாக்க மாட்டாரா என்னும் ஏக்கத்தோடு" - நியாயமான ஏக்கம்தான். அதற்கு நாம் தகுதியானவர்களா என்பதுதான் சந்தேகம். லீ அவர்கள் மிலிடரி கட்டளைபோன்று கட்டளைகளைச் செயல்படுத்தியவர். ஒரே சட்டம் எல்லோருக்கும். எல்லா முக்கியப் பண்டிகைகளையும் அரசுப் பண்டிகையாக்கியவர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிலை நிறுத்தியவர். குறிப்பாக, சட்டம் என்பது அனைவருக்கும் பொது என்பதை மிகவும் கண்டிப்பாகக் கடைபிடித்தவர். 'இனக்குழு' என்ற ஒன்றையே அவர் நாட்டின் முன்னேற்றத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் உபயோகித்துக்கொண்டவர்.

    அத்தகைய தலைவர்களைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி இருக்கிறதா?

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்தி பெருமை கொள்வோம் .இது போலானவர்கள் மனித குல மாணிக்கங்கள்!

    பதிலளிநீக்கு
  3. "ஒரே இலக்கு - அதை அடையும் வரை போராடு" என்பதற்கு "லீ குவான் யூ" அவர்கள் ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக என்றும் வாழ்பவர்...

    பதிலளிநீக்கு
  4. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    பெரும் புகழும் மதிப்பினையும் பெற்றவர், உழைப்பாலும் உண்மையான ஆழ்மனதின் உந்துதலாலும் சிங்கப்பூரின் சிற்பியாக மாறியவர் லீ குவான் யூ அவர்களைப் பற்றிய பதிவு அருமையாக தொகுக்கப் பட்டுள்ளது. அந்த உன்னத தலைவனின் வாழ்க்கையை நாம் அனைவரும் நம் மனதில் கொண்டு நாம் செய்கின்ற எந்த பணியாக இருப்பினும் மிக சிறப்பாக செய்ய விரும்பி செயல்படுவோம்.

    பதிலளிநீக்கு
  5. நமக்கும் இவர் போல் ஒரு சிற்பி கிடைக்கமாட்டாரா. சரியான ஆதங்கம் தான் ஆனால் நம் நாட்டின் நிலையே வேறு கலாச்சாரத்தையே பேசிப் பேசி பொழுதைக் கழிப்பவர்கள் ஆயிரம் கட்சிகள் அததுக்கு ஒரு தலைவன் சமமான வாழ்க்கை என்பதே நம்மால் நினைக்க முடியாதது அதற்கும் கர்மவினை என்று கூறி சமாதானப்படுத்திக் கொள்வோம் அவர்களைப் பாராட்டத்தான் நமக்கு முடியும் அவர்கள் போல் செயல் பட முடியாது ஏன் என்றால் நாம் எல்லாம் அறிந்தவர்கள் என்னும் நினைப்பு நம் ரத்தத்தில் ஊறி இருக்கிறது

    பதிலளிநீக்கு
  6. நல்லவர்கள் எல்லோரும் நம்மை விட்டுத் தள்ளியே இருக்கிறார்கள்! நல்ல பதிவு.

    தம +1

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு.
    லீ குவான் யூ அவர்கள் ஒரு சிறிய நாட்டுக்கு முன் உதாரணம்.தன்னலமற்ற அவரால் சுதந்திரமாக செயலாற்ற முடிந்தது.
    சுமார் ஒரு மத விடுமுறையில் நான் சிங்கப்பூரில் இருந்த பொழுது லீ இறந்துபோனார்.ஒரு ஆர்பாட்டமமுமில்லாமல் நாட்கள் கழிந்தன.
    இந்தியா பல இன,பல மொழி,பலவிதமான கலாச்சாரம் நிறைந்த பழம் பெரும் நாடு.தன்னிகரற்ற தலைவன் ஒருவன் நாட்டின் நலனை முன்னிறுத்தி சர்வாதிகாரமுறையில் அடித்து உதைத்து குற்றங்களுக்கு உடனடி தண்டனை வழங்கி வழிப்படுத்தவேண்டும்.
    கையூட்டு கலாச்சாரம் பிரதம மந்திரி முதல் கடைநிலை ஊழியர் வரை சென்ற சுமார் 50 வருடங்களாக நமது வழக்கை முறையில் கலந்துவிட்டது.
    தனிமனித வைராக்கியம் கொண்டு மனிதன் .வீடு,ஊர்,நகரம்,மாவட்டம்,மாநிலம் என்று மாற்றம் பெறாதவரை நமது கனவு கனவாகவே இருக்கும்.

    ஒரு மாநில அரசியல் சாந்தி சிரிக்கிறது.இதை ஆட்சியர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
    உண்மையே உன் விலை என்ன ? என்பதுதான் இன்றைய நிலை.



    பதிலளிநீக்கு
  8. ஹும்,நம்ம ஊரில் தலைவர் ஆவதற்கு டீ போடத் தெரிந்தால் போதும் :)

    பதிலளிநீக்கு
  9. அத்தகைய தலைவர்களைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி இருக்கிறதா?
    நெல்லைத் தமிழனோடு நானும் சேர்ந்து இவ் வினாவை விடுக்கிறேன்.
    பதிவு மிக அருமை!

    பதிலளிநீக்கு
  10. அத்தகைய தலைவர்களைப் பெறுவதற்கு நமக்குத் தகுதி இருக்கிறதா?
    நெல்லைத் தமிழனோடு நானும் சேர்ந்து இவ் வினாவை விடுக்கிறேன்.
    பதிவு மிக அருமை!

    பதிலளிநீக்கு
  11. இத்தகைய தலைவர்கள் நம் நாட்டில் ஆட்சிக்கு வரமுடியும் என்பதே கனவு! :( சிங்கப்பூர் மக்களின் அதிர்ஷ்டத்தைப் பாராட்டுவோம். :)

    பதிலளிநீக்கு
  12. இப்படிப்பட்டவர்கள் நம் நாட்டிற்கு தலைவராக வர முயற்சித்தால் நிச்சயம் தோற்றுதான் போயிருப்பார். நம் மக்கள் கொடுப்பினை இல்லாதவர்கள்

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்
    ஐயா

    உலகம் போற்று ஒப்பற்ற மனிதர் பற்றி நான் நிறைய அறிந்திருக்கேன் படித்இதிருக்ருகேன் இருந்தாலும் தங்களின் வழி மேலும் அறியக்கிடைத்தமை மிக்க மகிழ்வு ஐயா.த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. லீ குவான் யூ பற்றிய சிறப்பான பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  15. சிங்கப்பூரின் சிற்பி அவர்களைப் பற்றி அருமையான செய்திகளை தந்தீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. உலகை மாற்றி அமைத்து
    உலக சமாதானத்தை
    உருவாக்கித் தரவல்ல ஒருவராக
    சிங்கப்பூரின் சிற்பி
    லீ குவான் யூ
    நல்லதோர் எடுத்துக்காட்டு!

    பதிலளிநீக்கு
  17. சிங்கப்பூர் என்றாலே தன் பெயரை நினைக்குமளவு செய்த மாமனிதரைப் பற்றிய கூடுதல் செய்திகளை அறிந்தேன். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான செய்தி. நன்றி

    பதிலளிநீக்கு
  19. அருமை.

    ஒரு நல்ல ஆட்சி ஒரு தலைவனை அடையாளம் காட்டுகிறது!

    தவறான ஆட்சி தவறான மக்களை அடையாளம் காட்டுகிறது!

    சிந்திக்கவைத்த வாழ்க்கை வரலாறு. நன்று.

    பதிலளிநீக்கு
  20. இந்தியர்கள் மேலும் குறிப்பாக தமிழர்கள் மேலும் மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் லீ குவான் யூ. தமிழகத்தில் காமராஜர் செய்த சாதனையைப் போன்றது, கிட்டத்தட்ட அதே அளவுள்ள சிங்கப்பூரில் அவர் செய்த சாதனை. ஆனால் அது தனி நாடாக இருந்ததால் அவரால் உலகளாவிய காரியங்களைச் செய்யமுடிந்தது.
    மனித குலம் நினைவில் வைக்கவேண்டிய தலைவர்களில் அவரும் ஒருவர்.
    இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  21. இவர் பற்றிய விவரங்கள் இது வரை தெரியாது நன்றி

    பதிலளிநீக்கு
  22. சிங்கப்பூரின் சிற்பி - அருமையான செய்தி.
    நன்றி.
    தமிழ் மணம் - 8
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  23. இவரைப் போன்ற ஒரு தலைவர் நமக்குக் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் எப்போதுமே உண்டு. சிங்கப்பூரின் மேன்மைக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த்வர். மட்டுமல்ல தமிழர்களுக்கும் தான்!!! மரியாதை கொடுத்தவர்! ஏக்கம் இருந்தாலும் இப்படிப்பட்டத் தலைவரை நம் நாடு ஏற்றுக் கொள்ளுமா? ஊழலிலேயே உழன்று வரும் நம் நாட்டில் தோற்றுப் போயிருப்பாரோ???!!! அருமையான தலைவரைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் மீண்டும் தங்களின் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது.மிக்க நன்றி!!நண்பரே/சகோ

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு