18 ஜனவரி 2018

இந்திர விழா



     பொங்கல்.

     பொங்கல் விழாவானது, இன்று தமிழர் திருநாளாகவும், திராவிடர் திருநாளாகவும் போற்றிப் புகழப் படுவதை நாம் அறிவோம்.

      ஆனால், கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை பொங்கல் என்ற வார்த்தையே, தமிழில் பயன்பாட்டில் இல்லை என்பது நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும்.

      ஆம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான், பொங்கல் என்ற சொல்லே, முதன் முதலாக, ஒரு காப்பியத்தில் காணக் கிடைக்கிறது.

      அப்படியானால், அதற்கு முன், பொங்கலே கொண்டாடப் படவில்லையா, எனும் கேள்வி எழுகிறதல்லவா?

      கொண்டாடி இருக்கிறார்கள்.

      ஊரே ஒன்றாய், ஓரிடத்தில் கூடி, கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பெயர்களில், இத்திருநாளைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

      உழவர் திருநாளாக,
       தை நீராடலாக,
       தைப் பூச விழாவாக
      பெயர் மாறி, மாறி கொண்டாடப் பெற்ற விழா, இறுதியில் இந்திர விழா என்னும் பெயரைப் பெற்றிருக்கிறது.

வெற்றி வேல் மன்னர்கு உற்றதை ஒழிக்க என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை
புழுக்கலும், நோலையும், விழுககு உடை மடையும்
பூவும், புகையும் பொங்கலும் சொரிந்து

     கி.பி.இரண்டாம் நூற்றாண்டில், சமணத் துறவி இளங்கோ அடிகள் இயற்றிய, சிலப்பதிகாரத்தில், புகார் காண்டத்தில், இந்திர விழா, ஊர் எடுத்த காதையில்தான் முதன் முதலாக, பொங்கல் என்னும் வார்த்தை முன் வந்து நிற்கிறது.

      பொங்கல் என்னும் வார்த்தை, வந்த போதிலும், இப்பாடல் குறிக்கும் விழாவின் பெயரோ இந்திர விழாவாகும்.

       நண்பர்களே, இன்று அரசு ஆணை என்பது நாம் அனைவரும் அறிந்த சொல்லாகும். நமது செயற்பாடுகளை இன்று, அரசாணை கட்டுப் படுத்துகிறது அல்லது நெறிப் படுத்துகிறது.

      

ஆனால், உலகிலேயே, ஒரு விழாவினைக் கொண்டாட, எப்படிக் கொண்டாட வேண்டும் என்று வழிகாட்ட, ஒரு அரசாணை பிறப்பிக்கப் பட்டு, அவ்விழா அரசு விழாவாகவே கொண்டாடப்பட்டும் இருக்கிறது என்றால், அது இந்த இந்திர விழாவிற்காகத்தான் இருக்கும்.

விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்
பழமணல் மாற்றுமின், புதுமணல் புரப்புமின்
நுதல் வழி நாட்டத்து இறையோன முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆற்றி மரபின் அறிந்தோர் செய்யுமின்.

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும
செய்யமும் காமுஞ் செய்யாது அகலுமின்

     மணிமேகலை விழாவறைக் காதையில், தெள்ளத் தெளிவாய் இந்த அரசாணையானது விளக்கப் பெற்றிருக்கிறது.

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்

      சமய வாதிகளே, ஒன்று கூடி பட்டிமன்றம் நடத்துங்கள். ஆனால் மாற்றுக் கருத்துகளால், சச்சரவு தோன்றுமாயின், கலகம் செய்யாது, அவ்விடத்தை விட்டு உடனே அகலுங்கள் என அறிவுறுத்துகிறது, இந்த அரசாணை.

      படிக்கப் படிக்க வியப்புதான் தோன்றுகிறது.


மதுக்குலாம அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்

பொங்கல் விழாவினை, பொங்கல் விழாவாகவே குறிப்பிடும் சொல்லாட்சி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு உதயம் கண்ட, சீவக சிந்தாமணியில் இடம் பிடித்திருக்கின்றது.

       இதன் பின்னர்தான், பொங்கல் விழாவானது, பொங்கல் விழா என்னும் பெயரிலேயே, உலா வரத் தொடங்கியிருக்கிறது.

       பொங்கல்

       பொங்கல் விழாவானது, அண்மைக் காலம் வரை, ஊரே ஓரிடத்தில் திரண்டு, வரிசை வரிசையாய் பொங்கல் பானைகளை வைத்து, பொங்கும் பொங்கலாக, சமுதாய விழாவாகத்தான் அரங்கேறியிருக்கிறது.

      இன்றோ வீட்டிற்குள் சுருங்கி விட்டது.

போகிப் பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
சிறு வீட்டுப் பொங்கல்
என இவ்விழா, ஐந்து நாள் விழாவாகும்.

       ஆனால் இன்று காணும் பொங்கல் கன்னிப் பொங்கலாகிவிட்டது. சிறு வீட்டுப் பொங்கலோ காணாமலேயே போய்விட்டது.

       உற்றார், உறவினர், நண்பர்களை அவர்தம் இல்லம் சென்று, கண்டு மகிழும் நாளே காணும் பொங்கலாகும். இப்பொங்கல் கன்னிப் பொங்கலாய் உருமாறி விட்டது.

       சிறுவர், சிறுமியர் பலர் ஒன்று சேர்ந்து, கோலாட்டம் ஆடியபடி, கும்மி ஆடியபடி, வீடு வீடாகச் சென்று, அரிசி, வெல்லம் , காய், கனிகள் பெற்று வந்து, ஓரிடத்தில் அமர்ந்து, தாங்களே பொங்கல் பொங்கி, மகிழும் நாளே, சிறு வீட்டுப் பொங்கலாகும்.

        இவ்விழாவின் நோக்கமே, சின்னஞ் சிறுவர்களை, அவர்கள் பெரியவர்களானதும், பொங்கல் திருநாளை அவர்களாகவே, கொண்டாடிடத் தயார் படுத்துவதேயாகும்.

         இன்று சில கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்களில், இந்தச் சிறு வீட்டுப் பொங்கல் இல்லாமலே போய்விட்டது.

---

      நண்பர்களே, சுமார் ஒரு மணிநேரம், இவ்வுலகை மறந்துதான் அமர்ந்திருந்தேன். மடை திறந்த வெள்ளம் போன்ற சொற்பொழிவு.

தமிழர் பண்பாட்டில் தைப் பொங்கல்

      அரசு அலுவலர் ஒருவரிடமிருந்து, இதுபோன்ற, தங்கு தடையற்ற நீரோடை போன்று, பயணிக்கும் பொழிவை எதிர் பார்க்கவே இல்லை.

       இவர் முதுநிலை வருவாய் ஆய்வாளர்.

       வருவாய் துறையில் இருந்தும், வருவாயைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், செந்தமிழின் வருவாயைத் தேடித் தேடிப் பருகி மகிழ்பவர்.

       வித்தியாசமான மனிதர்.

       பெயர் கூட, வித்தியாசமானப் பெயர்தான்.

       இதுவரை நான் கேள்விப்பட்டிராதப் பெயர்.

திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத்

      இவரது தந்தை, கம்யூனிசக் கொள்கைகளில் பெரு நாட்டம் உடையவர். பாப்பா உமாநாத் போன்ற முதுபெரும் இயக்கத் தோழர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

      எனவே, தனது கொள்கையினை, சமத்துவத்தை, தன் மகனுக்குப் பெயராய் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.


திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத்

தன் தந்தையின் வழியில், தடம் மாறாமல் பயணிப்பவர்.

போற்றுதலுக்கும், வாழ்த்துதலுக்கும் உரியவர்.

---

      கடந்த 14.1.2018 ஞாயிறு மாலை, பொங்கல் திருநாளன்று, ஏடகம் அமைப்பின் ஞாயிறு முற்றம், சொற்பொழிவில்தான்,. திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத் அவர்களை முதன் முதலாய் பார்த்து, அவர்தம் உரையினைக் கேட்டு மகிழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.



      








பொங்கல் திருநாளாக இருந்த போதிலும், விழா அரங்கு, நிரம்பித்தான் போனது.


இதற்குக் காரணம்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்
திரு மணி.மாறன்

      ஒவ்வொரு மாதமும், இரண்டாம் ஞாயிறு மாலை, பழந்தமிழரின் தொன்மையினை, மேன்மையினை, நாகரிகத்தை உணர்த்தும் வகையில், சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து, அரங்கேற்றி வருகிறார்.

திரு மணி.மாறன் அவர்களின்
தொண்டு தொடர வாழ்த்துவோம்.


        

28 கருத்துகள்:

  1. /சிறுவர், சிறுமியர் பலர் ஒன்று சேர்ந்து, கோலாட்டம் ஆடியபடி, கும்மி ஆடியபடி, வீடு வீடாகச் சென்று, அரிசி, வெல்லம் , காய், கனிகள் பெற்று வந்து, ஓரிடத்தில் அமர்ந்து, தாங்களே பொங்கல் பொங்கி, மகிழும் நாளே, சிறு வீட்டுப் பொங்கலாகும்.//

    இதை சென்னையில் எங்க வீட்டு பகுதியில் சில சிறுமியர்கள் செய்தார்கள் அவர்களுக்கு வெல்லம் அரிசி தந்த நினைவு இருக்கு கோலாட்டம் ஆடிக்கொண்டு வருவாங்க .இப்போ செய்றாங்களானு தெரியலை

    பொங்கல் பெயர் காரணம் பற்றிய பகிர்வு அருமை

    திரு மணி.மாறன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு, தனக்கே உரிய நடையில் பதிவு செய்துள்ள தங்களுக்கு ஏடகம் அமைப்பின் சார்பில் மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நல்ல உபயோகமான தகவல்கள். இதுவரையில் நான் அறியாத தகவல்கள் தந்த தங்களுக்கு என் உளம் கனிந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பகிரவுக்கு உளமார்ந்த நன்றி.
    அரசாணை என்பது நயத்திற்காக நாம் கையாண்ட சொல்லாடல். இது விழாவறை காதை. அரசனின் ஆணையினை வள்ளுவன் பறையறிவித்து தெரிவிக்கும் பாடலிது.

    பதிலளிநீக்கு
  5. மேலும், சிறு வீட்டுப் பொங்கல் தை மாதத்தில் ஏதேனுமொரு வாய்ப்புள்ள நாளில் கொண்டாடப்படலாம். கதிரவனுக்கான நாளாக ஞாயிறு நல்ல தேர்வாக அமைகிறது.

    பதிலளிநீக்கு
  6. பொங்கல் பற்றி அறியாத பல தகவல்கள் அறிந்தேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  7. படித்தேன் சிலிர்த்தேன்.
    விழவுமலி மூதூர் வீதியும்....
    எப்பேர்பட்ட கலாச்சாரத்திற்கு நாம் சொந்தக்காரர்கள் உலகில் இப்படியொரு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், கலை, போர் எவ்வளவு உச்சத்தில் இருந்திரு்க்கிறோம்.
    ஐந்து நாள் விழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டது
    கேட்கவே எவ்வளவு இனிமையாக உள்ளது.
    யுகம் மேலே செல்ல செல்ல நம் தமிழ் இனம், கலாச்சாரம்,பண்டிகை கீழே மெல்ல மெல்ல சுருங்கிக் கொள்ளுமோ
    அந்த நாளும் வந்திடாதோ
    மும்பையில் பல்வேறு இடங்ளில் 90 அடி சாலையில், மைதானத்தில், கூடத்தில், இப்படி பல இடங்ளிகளில் பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது. காண எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா தங்களின் வாட்ஸ் அப் க்கு அந்த விழாவின் புகைப்படங்களை அனுப்புகிறேன்.
    - மும்பை இரா. சரவணன்

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் !

    சிறப்பான தகவல் தந்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் கரந்தை மைந்தரே ! தங்களைபோன்ற தேடலாளன் உள்ளவரை தேயாது எம் தமிழும் தமிழ் பண்பாடுகளும் வாழ்க பல்லாண்டு வளத்துடனும் நலத்துடனும் மற்றும் சமத்துவராஜனுக்கும் மணிமாறனுக்கும் இனிய வணக்கமும் வாழ்த்துகளும்

    தம +1

    பதிலளிநீக்கு
  9. பொங்கல் இப்பொழுதெல்லாம் கிச்சினுக்குள் அடங்கி விட்டது, வெளிநாடு என்றாலும் நாங்கள் விடுவதில்லை.. பொங்கிப் படைச்சு பிள்ளைகளுக்குச் சொல்லிக் குடுக்கிறோம்..

    அழகாக சொல்லிட்டீங்க பொங்கலின் வகைகளை...

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சகோதரர்!

    பொங்கல் பற்றி இத்தனை விடயங்களா?
    இப்பொழுதான் அறிகிறேன்.
    நல்ல பதிவும் பகிர்வும்!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. பொங்கல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள், மற்றும் இன்றைய விழா பற்றிய இனிமையான நிகழ்வுகள். ரசித்தேன். தம +1

    பதிலளிநீக்கு
  12. பொங்கல் திருநாளில் அவரது இனிய பொழிவினைக் கேட்டு மகிழ்ந்தேன். உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் அதனைக் கேட்ட உணர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. >>>> விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும் <<<<

    சிறப்புறு வரிகளை கல்லூரி துணைப்பாட நூலில் பயின்றிருக்கின்றேன்...

    பொங்கல் திருநாள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  14. பொங்கல் பற்றிய அரிய செய்திகளை அறிய வைத்தமைக்கு நன்றி நண்பரே

    திரு எஸ். சமத்துவராஜன் சம்பத் அவர்களுக்கு எமது வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  15. உரை மிகவும் சிறப்பாகவும் பயனுள்ள வகையிலும் இருக்கிறது. வாழ்த்துகள் தோழா.தோழர் சமத்துவராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  16. Well traced the history of festivals celebrated during the Tamil month "Thai." Ref. Dr. Padmavathy Anaiyappan's article on "Indra Vizha" The subject Thai Neeradal was dealt well in ancient Tamil literature.. S. Ramachandran, the well known epigraphist and scholar, has written a detailed article on this subjct.

    பதிலளிநீக்கு
  17. அரசாணையைப் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி!

    பதிலளிநீக்கு
  18. பொங்கல் விழா, சமத்துவராஜன் பற்றிய அருமையான பதிவு சகோ. நன்றி :)

    பதிலளிநீக்கு
  19. புதிய மனிதர் பற்றிய அறிமுகத்துக்கும் மற்ற தகவல்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  20. திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத். பெயரிலேயே சமத்துவம். அருமையான தகவல்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. பொங்கல் பற்றிய அருமையான பகிர்வு.

    இந்திர விழா பற்றி நானும் படித்திருக்கிறேன். நா.பார்த்தசாரதியின் ' மணிபல்லவம் ' என்ற சரித்திர நூலில் இதைப்பற்றி கதாசிரியர் எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  22. நல்ல பதிவு. சிலம்பை மீண்டும் படித்ததுபோனற உணர்வு ஏற்பட்டது.

    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
  23. பொங்கல் பண்டிகையின் வரலாற்றை அருமையான பதிவாக தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு