21 ஏப்ரல் 2018

எழுதப் பிறந்தவர்




      அந்த இளைஞருக்கு வயது இருபது இருக்கலாம்.

      தோளில் ஒரு ஜோல்னா பை.

       பையில் ஒரு புத்தகம், சில உடைகள்.

       மனதில் வெறுமை

       வாழ்வு முழுதும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்ட இளைஞர் இவர்.

        ஆனாலும் சூழல் அமையவில்லை.

         வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டார்.


         இதோ சென்னையில்.

         வட இந்தியா முழுவதும் சில ஆண்டுகள் சுற்றித் திரிய வேண்டும் என்ற ஆசை.

         இரவு புதுதில்லிக்குப் புறப்படும் தொடர் வண்டியில், பயணச் சீட்டுக் கூட வாங்கிவிட்டார்.

         அதுவரை பொழுதைப் போக்க வேண்டுமே.

          இதோ அண்ணாசாலையில் அமைந்திருக்கும், ஆனந்த விகடன் அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறார்.

          இவர் கல்லூரியில் படிக்கும்போது, விகடனின் மாணவப் பத்திரிக்கையாளருக்கான நேர் காணலில் கலந்து கொண்டு, அவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

ஏன்? எப்போதுமே பத்திரிக்கையாளர்களையே உருவாக்குகிறீர்கள், எழுத்தாளர்களையும் உருவாக்கலாமே.

       இதுநாள் வரை யாரும் கேட்காத கேள்வி.

உங்களுக்கு விருப்பமிருந்தால் எழுதுங்கள். தரமானதாக இருந்தால் நிச்சயம் வெளியிடுவோம்.

       இளைஞர் எழுதினார்.

        ஆனந்த விகடனும் இவரது கதைகளை வெளியிட்டது

        ஆனாலும் மனதில் ஏதோ ஒரு அமைதியின்மை தொடர்ந்து கொண்டே இருந்தது.

        இதோ ஆனந்த விகடன் அலுவலகத்தைப் பார்த்தவாறு நிற்கிறார் அந்த இளைஞர்.

        ஆனந்த விகடன் அலுவலகம் அமைதியாய் காட்சியளிக்கிறது.

பி.எஸ்.ராமையா, கல்கி, கண்ணதாசன், ஜெயகாந்தன், சுஜாதா, கி.ராஜநாராயணன் துவங்கி எத்தனை எத்தனை பெரிய எழுத்தாளர்கள் இங்கு வந்து போயிருப்பார்கள்.

        உள்ளே போகலாமா, வேண்டாமா என்ற தயக்கம்.

        மெல்ல உள்ளே நுழைகிறார்.

        அலுவலக வரவேற்பறைக்குள் நுழைகிறார்.

மதன் சாரைப் பார்க்கனும்

நீங்கள் யார்?

வாசகன்

மேலே சென்று பாருங்கள்


மெல்லப் படியேறி, மதன் அவர்களின் அறைக்குள் நுழைகிறார்.

       சிரித்த முகத்தோடு வரவேற்றார் மதன்.

ட்காருங்கள், எங்கிருந்து வருகிறீர்கள்

        பெயரையும், ஊரையும் இளைஞர் சொன்னார்.

நம்ம பத்திரிக்கையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

        இளைஞர் தலையசைத்தார்

உங்க சிறுகதைகள் எல்லாம், ரொம்ப நல்லா இருக்குன்னு, எம்.டி., அடிக்கடி சொல்வார்.

சொல்லுங்க, என்ன செய்றீங்க?

         இளைஞர் தயங்கித் தயங்கிக் கூறினார்

மிகவும் குழப்பமான மனநிலையில் இருக்கிறேன்.
வீட்டை விட்டு ஓடி வந்து விட்டேன்
டெல்லிப் பக்கம் போக இருக்கிறேன்

எதற்காக ஓடி வந்தீர்கள்?

இங்கே எழுதுவதற்கான சூழல் எனக்கு இல்லை. என்னிடம் பணமுமில்லை. எங்காவது போய் சம்பளத்திற்கு வேலை பார்க்க மனமுமில்லை.

        மதன் சிரித்தார்.

உங்க பிரச்சினை எனக்குப் புரிகிறது.
நான் உங்களுக்கு ஒரு விசயம் சொல்கிறேன்
எல்லாமே நாம நினைக்கிறது போல எப்பவும் நடந்திராது.
ஓடிப்போனா பிரச்சினை தீர்ந்து போய்விடாது
எதுக்காகவும் நம்ப விருப்பத்தினைக் கை விட்றக் கூடாது
நீங்க என்ன ஆகனும்னு நினைக்கிறீங்களோ, அதை கெட்டியா பிடிச்சுக்கோங்க. விடாதீங்கோ.
நிச்சயமா உங்களாலே ஒரு நல்ல எழுத்தாளரா வர முடியும்னு நான் நம்புறேன்.
உலகமும் ஒரு நாள் நம்பும்.
என்ன சாப்பிடுறீங்க.

     மதன் அவர்களின் குரலில் இருந்த அன்பும், அக்கறையும், இளைஞரின் குழப்பத்தைத் துடைத்து எறிந்தது.

எம்.டி யையும் பார்த்திட்டுப் போங்க என்றார்.
      

  விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியன், இளைஞரை அன்பொழுக வரவேற்றார்.

          அவரது பேச்சில் இருந்த அன்பும், நேசமும் இளைஞரை நெகிழச் செய்தது.

நீங்க விரும்பினா, உடனே ஒரு தொடர்கதை எழுதலாம்.
விகடன் உங்களது தொடர்கதையினை உடனே வெளியிடும்.
உங்களாலே நல்லா எழுத முடியுது.
வெரி டிபரெண்ட் ஸ்டைல் ஆஃப் ரைட்டிங்
நிறைய ஊர் சுத்திப் பாருங்க
அப்பத்தான் வாழ்க்கை புரியும்.
ஆனா எழுதுறதை விட்றாதீங்க
உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் நான் கட்டாயம் செய்கிறேன்.

        இளைஞரிடம் ஒரு தெளிவு தோன்றியது

         புத்துணர்ச்சி பிறந்தது

         ஆனந்த விகடன் ஆசிரியரும், மதன் அவர்களும் காட்டிய அக்கறை, அந்த இளைஞரை, சென்னையிலேயே நிறுத்தி வைத்தது.

         புது மனிதராய் ஆனந்த விகடன் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த அந்த இளைஞர், புது  தில்லிக்கு வாங்கியிருந்தப் பயணச் சீட்டை, கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.

         எழுதினார்

         எழுதினார்

          எழுத்தே இவரது வாழ்க்கையாகிப் போனது

நண்பர்களே, இந்த இளைஞர் யார் தெரியுமா?

வாழ்வின் மீதான சகல அரிதாரங்களையும் பூச்சுக்களையும் துடைத்து,
நிஜ முகத்தை நேரடியாக அடையாளம் காட்டுபவர்.
நெருக்கடிக்குள்ளும் மனித மனம்,
தனது சந்தோஷங்களை அடையாளம் கண்டு கொள்ளும்
என்பதையும்,
வாழ்வின் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கூட வசீகரமானவைதான்
என்பதையும்
தன் எழுத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டும் இவர்தான்,




எழுத்தாளர்
எஸ் .ரா ம கி ரு ஷ் ண ன்.

    



       

22 கருத்துகள்:

  1. முதல் இரண்டு வரிகள் படித்து விகடன் என்று வரும்போதே யூகிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. அதிகம் சுற்றியதால் இவர் எழுத்தில் உண்மை மிளிர்கின்றது.

    பதிலளிநீக்கு
  3. இவர் நிறைய பயணம் செய்கிறார் - பயணம் நமக்கு பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது.....

    தகவல் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. நன்றி.. நல்ல பதிவு. தெளிவு நம் வாழ்க்கையில் பிறக்கவேண்டிய ஒன்று.. அதனை பெறும் வரையில் தெளிவிற்கான எமது தேடல் நிற்காது.

    பதிலளிநீக்கு
  5. ஊர் சுத்தும் ஆசைன்னு வரிகள் வந்ததும் இவர்தான்னு முடிவுக்கு வந்துட்டேன் நான்.... என் யூகமும் சரியா போச்சு. எனக்கு பிடிச்ச எழுத்தாளர். அவரின் கதாவிலாசம் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிச்ச புத்தகம்.

    பதிலளிநீக்கு
  6. சில நேரங்களில் பிறரின் வழியே நமக்கும் வழி கிடைக்கிறது நல்ல மனிதரைப்பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பயணம், அனுபவம் அதை இலகுவாக சொல்லுதல் அவர் வழி!
    இதயத்திலிருந்து வருவதால் எஸ்.ரா எழுத்துக்கள் நம் நெஞ்சத்திலேயே வாசம் செய்கின்றன!! நறுமணம் என்ற வாசத்தோடு!!!
    மும்பை இரா. சரவணன்

    பதிலளிநீக்கு
  8. இதுவரை தெரியாத விஷயம்! அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

    பதிலளிநீக்கு
  9. ஏற்கெனவே இவரைக்குறித்துத் தெரிந்திருந்ததால் படிக்கும்போதே யூகம் செய்ய முடிந்தது.

    பதிலளிநீக்கு
  10. ஏற்கனவே பத்திரிக்கையில் இவரதுபடைப்புகள் சில வந்ததால் மதன் சாரும் ஆசிரியர் பாலசுப்பிரமணியமும் இவருக்குஒரு ப்ரேக் கொடுத்தார்கள் போல் இருக்கிறது

    பதிலளிநீக்கு
  11. சொல்லும் விதம் மூலமாக நம்மை ஈர்ப்பவர். அருமையான பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. பல்வேறு துறைகளையும் சார்ந்த பெருமக்கள் பலரையும் பற்றித் தாங்கள் எழுதி வரும் எல்லாக் கட்டுரைகளையுமே நான் (முடிந்த வரை) தொடர்ந்து படித்து வருகிறேன். எல்லாமே அருமைதான். ஆனால், இதுவரை நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்திய எல்லாரும் (நான் பார்த்த வரையில்) வெகு காலம் முன்பு வாழ்ந்தவர்கள். முதன் முறையாக நம் சம காலத்துப் புள்ளி ஒருவரைப் பற்றி, எனக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள இந்தப் பதிவு எனக்கு உங்கள் வழக்கமான பதிவுகளைக் காட்டிலும் கூடுதலாகவே பிடித்திருக்கிறது!

    மதன் அவர்களையும், பாலசுப்பிரமணியம் அவர்களையும் பற்றி எழுதி முந்தைய தலைமுறையின் அருங்கருவூலமாகத் திகழ்ந்த விகடன் காலத்தை நினைவூட்டி விட்டீர்கள். இன்றைய விகடன் அன்று போல் இல்லை. மதன் அவர்கள் பற்றிப் பல ஆண்டுகள் கழித்துப் படித்தது மனத்துக்கு இதம். மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  13. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பற்றிய சிறப்பான பதிவு. எழுத்தில் மட்டுமல்ல மேடை சொற்பொழிவிலும் ஆழமான கருத்துக்களை, அதேசமயம் கேட்பவர் மனதினில் பதியும் வணணம் உரையாற்றுபவர்.

    பதிலளிநீக்கு
  14. தங்கள் கைவண்ணம் கொண்டு
    எங்கள் உள்ளம் ஈர்த்திட
    எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வரலாறு
    சுவைக்கத் தந்த - தங்களுக்கு
    எங்கள் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  15. //நிறைய ஊர் சுத்திப் பாருங்க
    அப்பத்தான் வாழ்க்கை புரியும்.
    ஆனா எழுதுறதை விட்றாதீங்க//

    அதனால்தான் 'தேசாந்திரி" என்று நிறைய கட்டுரைகள் விகடனில் எழுதினார்.
    நன்றாக அறிமுகம் செய்து இருக்கிறீர்கள்.
    போனமாதம் அவரின் பேச்சை கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  16. இதுவரை அறிந்திராத தகவல் நண்பரே. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பயனுள்ள தகவல். நாம் கொண்ட முயற்சியின்மேல் நம்பிக்கையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  18. எஸ்.இரா.அவர்களைப் பற்றிய செய்தி அருமை. விகடனுக்கும் வாழ்த்து சொல்வோம்....அய்யா கரந்தை ஜெயக்குமார் அவர்களோடு

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பதிவுகள் வழியாக நிறைய அறிந்திராத விடயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். இந்தப் பதிவும் அவற்றுள் ஒன்று.

    பதிலளிநீக்கு
  20. சில நேரங்களில் பல எழுத்தாளர்கள்.... அருமை..

    பதிலளிநீக்கு
  21. அருமையான பதிவிற்கு நன்றி.
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு