07 மார்ச் 2021

கூடு திரும்புதல்


அடிக்கடி

செயின்

கழன்றுவிடும்.

பெடலுடைந்த

சைக்கிளில்

என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டு

தேநீர் கடைக்கு வேலைக்குப் போவார்

என் அண்ணன்.


ஒருவர் படிக்கணும்னா

ஒருவர் வேலைக்குப் போகனும்

எனும் ஒப்பந்தத்தில்

தியாகியானவர் அவர்.

     படிக்கத் தொடங்கும் போதே மனம் கனத்துத்தான் போகிறது. உண்மையிலேயே இவர் இப்படித்தான் படித்திருப்பாரோ, வறுமையோடு போராடித்தான் வாழ்வை வென்றிருப்பாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

     ஏனென்றால் வறியவர்களைக் காணும் பொழுதெல்லாம், இவரது ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு எழுத்தும் நனைந்துதான் போகிறது.

நார்களோடும்

விரல்களோடும்

உரையாடி

மௌனத்தை அணிந்து

சோகத்தைச் சூடியிருக்கும்

பூக்காரி.


வெய்யிலை விரட்ட இயலா

ஓட்டைக் குடையின் கீழ்

பெரிய ஊசி நூலோடு

அறுந்த கால்களுக்காகக்

காத்திருக்கும்

காலணிகளைப்

பழுது நீக்குவோர்.


தோளிலும் இடுப்பிலும்

வாடி வதங்கிய

இரு குழந்தைகளோடு

பசியின் கோரப்பிடியிலும்

சிரித்தபடி கையேந்தும்

வேற்று மொழியாள்.


இருகரம் கூப்பிய

அனுமனை

அச்சு அசலாய்

கலர் சாக்பீசில் வரைந்து

பாவச் சில்லறைகளுக்காகத்

தவமிருக்கும்

பேசவியலா ஓவியர்.

     தினம், தினம் நாம் சாலைகளைக் கடக்கையில், கண்ணில் பட்டும், மனதுள் நுழையாதக் காட்சிகளையெல்லாம், எழுத்தாணி கொண்டு, நம் இதயத்தைக் கிழித்து உள்ளே அனுப்புகிறார்.

தன்னிலை நிறத்திலொரு

ஆடை,

அடுத்தவர் நேரத்தை

அபகரிக்கும் கெடிகாரம்.

போலியாய் குலுக்குதற்கு

இரு கரங்கள்.

உண்மையின்

ஈரம் படியாத நா.

. . . . . . . .

     வறுமையை மட்டுமல்ல, அன்பெனும்  நீர் இன்றி, வறண்டு, சுயநலப் பேய் பிடித்து ஆடும் மனிதர்களையும் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

ஆதிகாலக் குளத்தை

நீந்திக் கடக்கிறது

வறட்சி

-

வற்றிய குளங்கள்

அகதிகளாகும்

தவளைகள்.

-

ஆழ்குழாய் கிணற்றில்

அறுநூறு அடிக்குக் கீழிருந்தது

தாத்தாவின் கண்ணீர்.

-

காடுகள் மனைகளான பிறகே

ஊருக்குள்

உலாவத் தொடங்கின

குரங்குகள்

-

கருவேலங்காட்டில்

அங்குமிங்கும் அலைகிறது

பசியோடு வண்ணத்துப் பூச்சி

-

சகதியில் சிக்கியது

மணல் லாரி

பழி வாங்கியது ஆறு

-

சுடு மணலில்

பாதம் உணர்ந்தது

ஆற்றின் கோபம்

     பொதுநலம் மறந்து, தன்னலம் என்பதனையே கொள்கையாக்கி, காடழித்து, நாடாக்கி, குளம் தூர்த்து மனைகளாக்கி, இயற்கையை, செயற்கையாய் மரணப் படுக்கைக்குத் தள்ளும் கொடுமை கண்டு, இவரது எழுதுகோலில் இருந்து விம்மி வெடித்துச் சிதறுகின்றன வார்த்தைகள்.

பெருங்காற்றின் நெளிவுகளில்

கதிர்வீச்சுப் பொழிவுகளில்

கரும்புகையின் படலமதில்

. . . . . . . .

இறைதேடி

சிறகைச் சுமந்து

கூடு திரும்புதல்

அத்தனை எளிதன்று.

     வளர்ச்சி என்னும் பெயரில் பூமியே கரும்புகை மண்டலத்திற்குள், மூச்சுத் திணறும்போது, இறைதேடிக் கிளம்பும், பறவைகளுக்குத் தங்கள் சிறகுகள் கூடச் சுமையாய் மாறும் அவலத்தினைக் கண்ணுற்றுக் கலங்குகிறார் இவர்.

நாக்கில் வேர்விடும்

சொற்கள் சிலவற்றை

உதடுதாண்டி

வளரவிடாமல்

கத்தரிப்பதில்

பூக்கிறது

வாழ்க்கை

     இப்பேருண்மையை அறிந்ததனால் இவர் வாழ்வு பூத்திருக்கிறது. மலர்ந்து  மணம் வீசுகிறது. பேச்சில் மட்டுமல்ல, எழுத்திலும் வார்த்தைகளை வளரவிடாமல், கத்தரிக்கத் தெரிந்ததால், இவர் எழுதும் எழுத்தெல்லாம் கவியாகித் தேன் ஊறுகிறது.

மைதானத்தில்

கிடக்கிறது

கால் பந்து.

 

உள்ளே இன்னும்

அனுமதியில்லை

வீரர்களுக்கு.

 

மைதானத்தின்

தன்மை

வெளியில் நின்றே

ஆய்வு

செய்யப்படுகிறது.

. . . . .

. . . . .

விளையாட்டுத் துறை

இப்போததைக்கு

மைதானத்தில்

விளையாட

வாய்ப்பே இல்லை

என்கிறது.

 

என்றாலும்

விளையாட்டு உபகரணங்கள்

முறையாக

வழங்கி வருவதாகவும்,

பல தொலைக் காட்சிகளில்

விளையாட்டு

கற்பிக்கப்பட்டு வருவதாகவும்

அடுத்த

உலகக் கோப்பையை

உதைக்காமலே

வென்றுவிடலா மெனவும்

மாதம் இரு முறை

அறிவிப்பு வருகிறது.

 

காலையில்

மைதானம்

சரியில்லை என்றும்,

மாலையில்

மைதானத்தில்

விளையாடலாம் என்றும்

மாறி மாறி

அறிவித்ததில்

தன்னைத்தானே

சுற்றிக் கொண்டு

சுருண்டு படுத்துவிட்டது

கால் பந்து.

     ஒரு கல்வியாளராய், பெருந்தொற்று கால நடைமுறைகள் , செயல் முறைகள் கண்டு, இவர் பொங்குவது தெள்ளத் தெளிவாய் புரிகிறது.

     கல்வியாளராய், தமிழறிஞராய், சமூக நலன் விரும்பியாய், தான் பார்த்தவற்றை, தான் அறிந்தவற்றை, தான் உணர்ந்தவற்றை, உணர்ந்ததால் ஏற்பட்ட உள்ளக் குமுறல்களை, கவியாக்கி, ஏட்டில் கசிய விட்டிருக்கிறார்.

     வாழ்வை அறிந்தவராக இருப்பதால், வாழவின் சூட்சுமம் உணர்ந்தவராக இருப்பதால், இவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது.

இவர்

வானில் எழுதினார்

அவை நட்சத்திரங்களாயின.

மலையில் எழுதினார்

அவை சிலைகளாயின.

நிலத்தில் எழுதினார்

அவை ஏரிகளாயின.

நீரில் எழுதினார்

அவை அலைகளாயின.

நெருப்பில் எழுதினார்

அவை தீபங்களாயின.

காற்றில் எழுதினார்

அவை பறவைகளாயின.

 

ஏட்டில் எழுதினார்

அவை

நம் நெஞ்சக் கூட்டில்

வித்தாய் விழுந்து

விருட்சங்களாய் எழுகின்றன.

 

இவர்

கல்வியில் ஒரு விழியும்

கவிதையில் மறு விழியும்

அறிவுப் பாதையின்

வெளிச்சமே

தன் வழி என்று,

தனி வழியில்

பயணிப்பவர்.

     இவரது நூலில் நுழைந்து, ஒவ்வொரு பக்கமும் பாத யாத்திரையாய் நடந்து, கவி மழையில் நனைந்து, கவியோடு, கருத்தையும் நெஞ்சில் சுமந்து, இறுதிப் பக்கத்தைக் கடந்த பிறகும், இயல்பு நிலைக்குத் திரும்புதல், தன்னிலைக்குத் திரும்புதல் எளிதன்று என்பதை, இவரது ஒவ்வொரு சொல்லும் உணர்த்துகிறது.

கூடு திரும்புதல் எளிதன்று

இவர்

மலரென

நினைத்தால்

நறுமணம் தருபவர்.

மலையென

நினைத்தால்

வலிமை தருபவர்.

 

மழையென

நினைத்தால்

தட்பமாய் நனைப்பவர்

தனலென

நினைத்தால்

வெப்பமாய் இருப்பவர்.

 

சுடரென

நினைத்தால்

துயரத்திலும் நிற்பவர்.

 

மூர்த்தி பெரிதா

கீர்த்தி பெரிதா – என்றால்

மூர்த்தியும் பெரிதுதான் – இவர்

கீர்த்தியும் பெரிதுதான்.

 

இல்லையெனில்

அணிந்துரை இல்லா நூலினை

அச்சேற்ற

எவருக்குத் துணிவு வரும்.

இவர்தான்

 

புதுக்கோட்டையைக் கவிக்கோட்டையாக்கிய


தமிழ்ச் செம்மல்

தங்கம் மூர்த்தி

 

இவரது நூல்


கூடு திரும்புதல் எளிதன்று.