16 ஆகஸ்ட் 2021

பெயர்த்திக்காக

 



 

     கோடை காலம் தொடங்கியது.

     குளத்து நீர் மெல்ல, மெல்ல குறையத் தொடங்கியது.

     இருவருக்கும் கவலை வந்தது.

     குளத்தை நீரின்றி வற்றாமல் காப்பது எப்படி?

     யோசித்தனர்.

     ஓர் எண்ணம் தோன்றியது.

     அன்று மாலை, குளத்திற்கு கை, கால் கழுவ வந்த, அந்த ஊரின் தலைவரைக் கண்டு இருவரும் வணங்கினர்.

     குளத்தைத் தூர்வாரிக் கரைகளை உயர்த்துங்களேன் என வேண்டினர்.

     குளம் தூர்வாரப் பட்டது.

     கரை உயர்த்தப்பட்டது.

     கோடையிலும் குளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது.

     ஊர் தலைவரிடம் கோரிக்க வைத்தவர்கள் யார் தெரியுமா?

     ஒருவர் நண்டு.

     மற்றொருவர் நத்தை.

---

     ஒற்றுமையோடு வாழ்ந்தவர்கள்தான் இவர்கள்.

     ஆனாலும் தற்பொழுது, வேற்றுமை தலை தூக்கத் தொடங்கியது.

     உதவும் மனப்பான்மை குறையத் தொடங்கியது.

     மனிதர்களாய் மாறியவுடன், குணமும் மாறிவிட்டது.

     வேறு வழியின்றி, மீண்டும் கடவுளைச் சந்தித்தனர்.

     எங்களது பழைய உருவைக் கொடுங்கள்.

     மனிதப் பிறவி வேண்டவே வேண்டாம் என மன்றாடினார்கள்.

     கடவுளும் சம்மதித்தார்.

     மீண்டும் பழைய உருவைப் பெற்றனர்.

     காக்கைகளாய் மகிழ்வோடு பறந்தனர்.

---

     இருவரும் நண்பர்கள்.

     ஒருவர் உருவில் பெருத்தவர்.

     மற்றவரோ சின்னஞ் சிறியவர்.

     சின்னவருக்கு எப்பொழுதுமே, தான் சிறியவராக இருப்பதில் வருத்தம்.

     ஒரு நாள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, ஒரு பெருங் கழுகு, மேலிருந்து விரைந்து கீழிறங்கி, தன் கூரிய கால்களால் இருவரையும் பிடிக்க முயன்றது.

     சின்னவரோ, ஓட்டமாய் ஓடி, ஒரு சிறு பொந்தில் ஒளிந்து கொள்ள,  அந்தப் பொந்திற்குள் நுழைய முடியாத,  பெரியவரோ கழுகிற்குப் பலியானார்.

     அன்று அதன் தாய் சொன்னது.

     நம்மை  மற்றவர்களோடு ஒப்பிடுதல் தவறு.

     சிறியவனாய் இருந்ததால்தான் இன்று தப்பினாய்.

     உன்  சிறிய உருவம்தான் உன்னைக் காப்பாற்றி இருக்கிறது.

     சுண்டெலி உண்மையை உணர்ந்தது.

---

     நடக்கவே முடியவில்லை.

     காலில் பயங்கர வலி.

     காரணம் ஒரு முள்.

     எவ்வளவோ முயன்று பார்த்தது.

     முள்ளை எடுக்க முடியவில்லை.

     பெருத்த உருவம் என்பதால், குனியவோ, முள்ளை எடுக்கவோ முடியவில்லை.

     நான் பெரியவன் என்று அதுநாள் வரை இருந்த எண்ணம் தொலைந்தது.

     அப்பொழுதுதான் அந்தச் சிறுவன் வந்தான்.

     முள்ளை எடுத்தான்.

    உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை உணர்ந்தது யானை.

    பூனைக்கு நன்றி கூறியது.

---

     நண்பன் கதிருக்குப் பிறந்தநாள்.

     பணக்கார வீட்டுப் பிள்ளையான, தன் நண்பன்  கதிருக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்தான் குரு.

     மூன்று செடிக் கன்றுகளைக் கொடுத்தான்.

---

     நல்ல மதிப்பெண்களைப் பெறவும், அதன் மூலம், ஓர் உயர்ந்த வேலையில் அமர்ந்து, கை நிறைய சம்பாதிப்பதற்காக மட்டுமே புத்தகங்களைப் புரட்டும்,  மனிதர்களிடமிருந்து, முற்றிலும் வேறுபட்டவர் இவர்.

     தன் பணி ஓய்விற்குப் பிறகுதான் தேடித் தேடி படிக்கத் தொடங்கினார்.

     கூட்டுக் குடும்பம் என்பது வெற்றுச் சொல்லாய், அர்த்தமற்ற வார்த்தையாய் மாறிப் போய்விட்ட இக்காலத்தில், இவர் தன் பெயர்த்திக்காகப் படிக்கத் தொடங்கினார்.

     தாத்தா, பாட்டி என்பதெல்லாம், தூரத்து சொந்தமாய் மாறிவிட்ட, இன்றைய சூழலில், தன் பெயர்த்திக்காகப் படிக்கத் தொடங்கினார்.

     தெனாலி ராமன்

     முல்லா

     பீர்பால்

     பஞ்ச தந்திரக் கதைகள் என இவரது தேடல் தொடர்ந்தது.

     படித்த கதைகளைப் பெயர்த்திக்குச் சொல்லிச், சொல்லி மகிழ்ந்தவர், நாளடைவில், தன் கற்பனையில் உதித்த கதைகளையும் சொல்லத் தொடங்கினார்.

     யானை, பூனை, கரடி, மான், மயில் என ஒவ்வொரு விலங்கையும், தன் கதைக்குள் அழைத்து வந்து, உலாவ விட்டு, ஒரு நீதியோடு கதையை முடித்தார்.

     விலங்குகளை மட்டுமல்ல, சின்னஞ் சிறுவர்களையும், இவர், தன் கதையின் நாயகர்களாய் மாற்றினார்.

     சுருதிகா.

     இவர் பெயர்த்தி.

     கொடுத்து வைத்தவர்.

     சுருதிகாவிற்காக, சுருதியோடு அருவியாய் இறங்கிய கதைகள், இன்று வெள்ளைத் தாளில் இடம் பிடித்திருக்கின்றன.

     மொத்தம் 16 சிறு கதைகள்.

     நேர்மையை, நியாயத்தை, இலட்சியத்தை, கருணையை, உன்னத உறவை உணர்த்தும் கதைகள்.

     இவர் கரந்தையில் பிறந்தவர்.

     சிறு வயதில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்றவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனாரின் பெயர்த்தியையும், கண்ணகிக் கோயிலைக் கண்டு பிடித்ததற்காக, குடியரசுத் தலைவர் விருது பெற்ற, கரந்தைப் புலவர் கல்லூரியின் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மகளையும், தன் உற்ற தோழியாய் பெற்றவர்.

     கரந்தையில் படித்ததனால், தமிழின் மீது பற்றும், எழுத்தின்மீது பாசமும் கொண்டவர்.

    

இவர்

அஞ்சலகத் துறையில்

பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தன் பெயர்த்திக்காக ஓயாமல் கதை சொல்லி வருபவர்.

தன் பெயர்த்தி பெயரிலேயே ஒரு பதிப்பமும் தொடங்கியிருக்கிறார்.

இவர்தான்

நீலாவதி

இவரது நூல்


சுட்டிக் கதைகள்

 

படிப்பதற்கோ, எழுதுவதற்கோ

வயது என்றுமே

ஒரு தடையல்ல

என்பதை நிரூபித்திருக்கிறார்.

வாழ்த்துகள்.

தொடர்ந்து எழுதுங்கள் சகோதரியாரே.

 

 

வெளியீடு

சுருதிலயம்,

14, வைகை தெரு, பாரத் நகர்,

ஆதம்பாக்கம்,

சென்னை – 600 088.

அலைபேசி 94441 24285

மின்னஞ்சல் balajothi1949@gmail.com

விலை ரூ.125

26 கருத்துகள்:

  1. அருமை... வாசிக்க ஆவலாய் உள்ளது ஐயா...

    சகோதரிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. அன்பு நண்பருக்கு, அருமையான புத்தகத்தை, அற்புதமாக அறிமுகம் செய்திட்ட தங்களுக்கும் கதைகளை படைத்திட்ட நீலாவதி என்ற திருமதி.ஜோதி அவர்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எப்போதுமே தங்களது கருத்துக்கு தனி மவுசுதான்

    பதிலளிநீக்கு
  4. என் பேத்திக்கு கதைகள் சொன்ன நினைவுகள் வருகிறது.
    அருமையான நூல் அறிமுகம் .


    //படிப்பதற்கோ, எழுதுவதற்கோ

    வயது என்றுமே

    ஒரு தடையல்ல

    என்பதை நிரூபித்திருக்கிறார்.

    வாழ்த்துகள்.//

    வாழ்த்துவோம் சகோதரியை, வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  5. எடுத்துக் காட்டி இருக்கும் கதைகள் அற்புதம். நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
  6. மற்றவர்கள் உதாரணமாகக் கொள்ளுமளவிற்கு சாதனை படைத்துள்ளார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. எழுதுவதற்கு வயது தடையில்லை ஆம் உண்மையே...

    பதிலளிநீக்கு
  8. மிகச் சிறப்பான விஷயம். சுட்டிக் குழந்தைகளுக்கு கதை சொல்பவர்கள் குறைந்து விட்டார்கள். பெரும்பாலான முதியவர்கள் டீவி சீரியல்களில் மூழ்கிவிட, குழந்தைகள் அலைபேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

    புத்தக அறிமுகம் நன்று. நன்றி. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. குட்டிக் கதைகள் அறிவைக் கூட்டும் கதைகள்

    பதிலளிநீக்கு
  10. சிறுவர்களுக்கு உகந்த படிப்பினைகளை உயர்ந்த படிப்பினைகளை கதைகள் வழியாகச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.உங்கள் முயற்சிகளுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    கொழும்பு-இலங்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் பெரு மகிழ்வினை அளிக்கின்றன
      நன்றி ஐயா

      நீக்கு
  11. முகவுரை, அணிந்துரை, வாழ்த்துரை, என்னுரை என்ற பகுதிகளைப் படித்து முடித்து உட்சென்றால் பதினாறு கதைகளின் தலைப்புகள் நமக்குப் படிக்கும் ஆர்வத்தை இன்னும் அதிகமாகத் தூண்டும் வகையில் உள்ளன.
    ஒவ்வொரு கதையும் எளிமை, இனிமை என்பதோடு ஏற்றதொரு நீதியைப் புகட்டும் வண்ணம் அமைந்துள்ளது. அதிலுள்ள பாத்திரப் படைப்புகள்குழந்தைகள் மனத்தில் பதியும் வகையில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. இயற்கையில் ஆர்வம் கொள்ளல், பிறர்க்கு உதவுதல், நற்பண்புகளைப் பேணி ஒழுகுதல், தன்னார்வத் திறன் வளர்ச்சி, பெற்றோரை மதித்தல், நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வதில் ஆர்வம் கொள்ளுதல், நன்றி உணர்வைப் பேணி பின்பற்றுதல் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கான பல்வேறு விழுமியங்கள் வெளிப்படுகின்றன. அவற்றை மனத்துள் பசுமரத்தாணிபோல் பதிய வைக்கும் பாங்கு நூலாசிரியர் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியிலும், பண்புநிலை மேம்பாட்டிலும், அதன்வழி சமுதாய மேம்பாட்டிலும், உலக அமைதியிலும் அவர் கொண்டிருக்கும் உன்னத ஈடுபாட்டை எடுத்துக் காட்டுகிறது. மொத்தத்தில் நூற்பயன் மிகுதிப்படுத்தும் முயற்சி வாசிப்புத்திறனில் குழந்தைகளை மேம்பட வைக்கும் என்பது உறுதி.
    நூலின். அமைப்பும் வடிவமும் எவரையும் கவர்ந்து விடும் வண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாகக் குழந்தைகளின் உள்ளத்தில் குதூகலத்தை ஏற்படுத்தி
    மகிழச் செய்யும் என்பதில் அய்யமில்லை. அச்சகத்தாரின் உழைப்பு கண்ணைக் கவரும் துல்லியமான அச்சிலும், ஓவியரின் திறமை ஒவ்வொரு பக்கத்திலும் அட்டையிலும் வெளிப்பட்டிருக்கும் வண்ண ஓவியங்களின் சிறப்பிலும், இதழ்வடிவமைப்பாளரின் வரைகலைத் தனித்திறன் நூலின் மொத்த அமைப்பிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆசிரியரின் எளிய நடையும், உயரிய கொள்கையும் ஒவ்வொரு கதையும் வெளிப்படுத்தும் உணர்வின் உச்சத்தில் மிளிர்கிறது. இதன் சிறப்புக்கு உழைத்த ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். இதன் தொடர்ச்சி தமிழுலகத்திற்கு மிகச்சிறந்த நூல்களை நூலாசிரியர் நீலாவதி அவர்கள் வழங்க வழிவகுக்கும். தமிழுலகம் அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

    பள்ளிமாணவர்கள், நூலக வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் போன்ற அனைவரையும் இந்நூலின் கருத்துக்கள் சென்றடைந்து சமுதாயம் மேம்பட வேண்டும்.
    – பதுருமணாளன், தகவல்முத்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை
      பள்ளிமாணவர்கள், நூலக வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் போன்ற அனைவரையும் இந்நூலின் கருத்துக்கள் சென்றடைந்து சமுதாயம் மேம்பட வேண்டும்.

      நீக்கு
  12. சகோதரிக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு