09 ஆகஸ்ட் 2013

முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்களுடன் சில நிமிடங்கள்

             பொன்னும்  துகிரும்  முத்தும்  மன்னிய
             மாமலை  பயந்த  காமரு  மணியும்
             இடைப்படச்  சேய  ஆயினும்  தொடை  புணர்ந்து
             அருவிலை  நன்கலம்  அமைக்கும்  காலை
             ஒருவழித்  தோன்றி  யாங்கு  என்றும்  சான்றோர்
             சான்றோர்  பாலர்  ஆப
             சாலார்  சாலார்  பாலர்  ஆகுபவே
இப்பாடல் கண்ணகனார் என்னும் பெரும் புலவர் இயற்றிய புறநானூற்றுப் பாடலாகும்.

     பொன்னும், பவளமும், முத்தும், நிலைத்த பெரு மலையில் பிறக்கும் மாணிக்கமும், தோன்றும் இடங்களால் ஒன்றுக்கொன்று தொலைவில் இருப்பினும், மாலையாகக் கோத்து மதிப்பு மிக்க அணிகலனாக அமைக்கும்போது, தம்முள் ஒருங்கு சேரும். அதுபோல சான்றோர் என்றும் சான்றோர் பக்கமே இருப்பர்.

      இப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர் பிசிராந்தையாரும், ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமலேயே, பண்பார்ந்த செயல்களால், ஒருவரை ஒருவர் அறிந்து, உணர்ந்து, நட்புப் பாராட்டி, இறப்பில் ஒன்றிணைந்த  உன்னத நிகழ்வு பற்றி, பள்ளி நாட்களில் படித்துப் பரவசப்பட்டு மெய் சிலிர்த்திருக்கின்றோம்.

     நினைத்துப் பாருங்கள் நண்பர்களே, நினைத்துப் பாருங்கள்.

     ஆம். நினைத்துப் பார்த்தால் நாமும் இப்படித்தான். ஒருவரை ஒருவர் பாராமலும், பாராமல் மட்டுமல்ல, சில வேலைகளில் சகோதரரா, சகோதரியா என்று கூட அறியாமலும், இப்புவிப் பந்தில், மூலைக்கு ஒருவராய் சிதறிக் கிடந்த போதிலும், எழுத்து என்னும் நட்புச் சங்கிலியால் ஒன்றாக பிணைக்கப் பட்டிருக்கிறோம். இந்த உன்னத உறவு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது உறுதி.

     மன்னன் கோப்பெருஞ் சோழனும், புலவர் பிசிராந்தையாரும் வாழும் வரை ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டதே இல்லை என்பது வரலாற்று உண்மை.

     ஆனால் நாம் அவ்வாறில்லை. வலைப் பூ வழி, வாசித்த, நேசித்த உறவை, நேரில் காண அவ்வப்பொழுது வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

     எழுத்தின் வழி அறிந்தோரை, அகத்தின் வழி மனக் கண்ணால் கண்டு பழகியவரை, நேரில் கண்டு உரையாட இயலுமாயின், ஏற்படும் மகிழ்விற்குத்தான் எல்லை ஏது?

      அவ்வாறு ஓர் இனிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது நண்பர்களே. பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், வழக்கம் போல், கடந்த ஜுலை 21 ஆம் தேதி மாலை, கணினி முன் அமர்ந்து, வலைப் பூவைத் திறந்தேன்.

 
முத்துச் சிதறல் மனோ சாமிநாதன்
மனோ சாமிநாதன்,
அன்புச் சகோதரர் அவர்களுக்கு,

       தஞ்சை வருவதால் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் சந்திக்க ஆவலாயுள்ளேன். தங்கள் தொலைபேசி எண்ணை என் ஈமெயில் விலாசத்திற்குத் தெரியப்படுத்தவும். ஊருக்கு வந்ததும் தங்களை தொடர்பு கொள்கிறேன்.

     அடுத்த நொடியே, மின்னஞ்சல் அனுப்பினேன். தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,
     அடுத்த நாள் காலை, கணினியில், பதில் மின்னஞ்சல் தயாராய் காத்திருந்தது.

அன்புள்ள சகோதரர் அவர்களுக்கு,
      தங்களின் உடனடி பதில் மிகவும் மகிழ்வைத் தந்தது. உங்களின் விலாசம், தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டு விட்டேன். இந்த தடவை லாப்டாப் ஊருக்கு எடுத்து வரவில்லை என்பதால் தங்களை நான் வந்த பின், தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்கிறேன்.
     இன்று இரவு தஞ்சை கிளம்புகிறேன். நாளை வந்த பின் உறவினங்கள் எல்லோரும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அதனால இரண்டு நாட்களில் உங்களுக்கு போன் செய்கிறேன்.
     எங்கள் இல்லம், உங்கள் இல்லம் இருக்கும் அதே சாலையில், நடராஜபுரம் தெற்கில் ஐந்தாவது குறுக்குத் தெருவில் 62ம் எண்ணில் உள்ளது.
     தங்கள் இல்லத்தில் அனைவருக்கும் என் அன்பினைத் தெரியப் படுத்துங்கள்.
அன்பு சகோதரி,
மனோ சாமிநாதன்

    சில நாட்கள் கடந்த நிலையில், 25 ஆம் தேதி வியாழக் கிழமை காலை, பதினோரு மணியளவில் என் அலைபேசி ஒலித்தது. மறு முனையில் சகோதரியார். அப்பொழுது நான் தஞ்சையில் இல்லை. சென்னை அப்போலோ மருத்துவ மனையில் இருந்தேன்.

     பதினைந்து நாட்களுக்கும் மேலாக எனது மனைவிக்குத் தலைவலி. விடவேயில்லை. தஞ்சையில் உள்ள கண் மருத்துவரைப் பார்த்தோம். குறையொன்றுமில்லை எனக் கூறிவிட்டார். மூளை நரம்பியல் மருத்துவரைப் பார்த்தோம். எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தோம்.

     பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மைகிரேன் பிரச்சினைதான் எனக் கூறி மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். பத்து நாட்கள் கடந்த பிறகும் முன்னேற்றமில்லை. மீண்டும் மருத்துவரைச் சந்தித்தோம். பத்து நாட்கள் மாத்திரைகள் சாப்பிட்டும் வலி குறையவில்லை என்றவுடன், இதற்குமேல் தஞ்சையில் மருத்துவம் கிடையாது. உடனே அப்போலா மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மூளை நரம்பியல் மருத்துவர் டாக்டர் ஏ. பன்னீர் அவர்களைப் பாருங்கள் என்றார்.

     அன்று இரவே, சென்னையில் இருக்கும் நண்பர் அனந்த ராமன் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.
 
நண்பர் அனந்த ராமன்
     1995 ஆம் ஆண்டு தஞ்சையில், ஒரு அச்சகத்தில் முதன் முறையாக திரு அனந்த ராமன் அவர்களைச் சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு. வாழ்வில் சோதனைகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் தூணாய் இருந்து, என்னைத் தாங்கிப் பிடித்து துயர் துடைக்கும் உத்தம நண்பர். நான்காண்டுகளுக்கு முன், வேதனை மிக்க வேலையில், எனது மகளின் மருத்துவத்திற்காகச் சென்னை சென்ற பொழுது, சென்னையில் கால் பதித்த நொடி முதல், என் மகளுக்கு குறையொன்றுமில்லை என்ற மகிழ்வானச் செய்தியினைக் கேட்டு, நெகிழ்ச்சியுடன், தஞ்சைத் திரும்ப, தொடர் வண்டியில் ஏறிய நிமிடம் வரை, ஐந்து நாட்களும், தனது பணிகள் அத்தனையினையும் ஒதுக்கி வைத்து விட்டு, அச்சகத்தின் பக்கமே செல்லாமல், ஒவ்வொரு நொடியினையும், ஒவ்வொரு நிமிடத்தினையும் எங்களுக்காகவேச் செலவிட்ட நல் நட்பு உள்ளத்திற்குச் சொந்தக்காரர்.

     சென்னையில் உறவினர்கள் பலர் இருந்த போதிலும், நண்பரின் வீட்டில் தங்கினால், சொந்த வீட்டில் இருப்பதைப் போலவே ஓர் உணர்வு. எனவே இப்பொழுதும் அவரையே தொடர்பு கொண்டேன்.

    மறுநாள் காலை முதல் வேலையாக அப்போலோ மருத்துவ மனைக்குச் சென்று, அடுத்த நாள் (25.7.13) வியாழக் கிழமை மருத்துவரைப் பார்க்க முன் பதிவு செய்து விட்டு, என்னை அழைத்தார். இன்று மதியமே புறப்பட்டு, சென்னைக்கு வந்து விடுங்கள். நாளை காலை மருத்துவரைச் சந்திக்கலாம் என்றார்.

    அன்று மதியமே வாடகைக் கார் மூலம் சென்னை புறப்பட்டு, இரவு சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் நண்பர் அனந்தராமனின் இல்லம் அடைந்தேன்.

     மறுநாள் காலை அப்போலோ மருத்துவ மனையில் இருந்த போதுதான், சகோதரியார் அலைபேசியில் அழைத்தார். விவரம் கூறினேன். கவலைப் படாதீர்கள், இன்றைய மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளே இல்லை, உங்கள் மனைவி விரையில் குணமடைவார் கவலை வேண்டாம் என்று கூறினார்.

     அன்று மாலையே திரும்பவும் அலைபேசியில் அழைத்தார். மருத்துவரைப் பார்த்துவிட்டீர்களா? மருத்துவர் என்ன கூறினார், என அக்கறையுடன் விசாரித்தார்.

     மருத்துவரைப் பார்த்துவிட்டோம். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. தலையில் இரத்தக் குழாயில அடைப்பு எதுவும் கிடையாது. மாத்திரைகளைத் தொடர்து சாப்பிட்டு வந்தால், சரியாகிவிடும் என்று கூறினார் எனத் தெரிவித்தேன்.

      காலையில் பேசியதற்கும், இப்பொழுது பேசுவதற்கும், உங்களின் குரலிலேயே ஒரு தெளிவு தெரிகிறது கவலைப் படாதீர்கள் என மகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் நான் ஆகஸ்ட் 15 வரை தஞ்சையில்தான் இருப்பேன். எனவே விரையில் உங்களின் இல்லத்திற்கு வருகிறேன் என்றார்.

     3.8.2012 சனிக் கிழமை நண்பகல் 12 மணியளவில், தனது பள்ளிக் காலத் தோழி ஒருவருடன், எனது இல்லத்திற்கு வருகை தந்தார், சகோதரியார் முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்கள்.

             உலக  வாழ்க்கையி  னுட்பங்கள்  தேரவும்
             ஓது  பற்பல  நூல்வகை  கற்கவும்
             இலகு  சீருடை  நாற்றிசை  நாடுகள்
             யாவுஞ்  சென்று  புதுமை  கொணர்ந்திங்கே
             திலக  வாணுத  லார்நங்கள்  பாரத
             தேச  மோங்க  வுழைத்திடல்  வேண்டுமாம்
             விலகி  வீட்டிலொர்  பொந்தில்  வளர்வதை
             வீரப்  பெண்கள்  விரைவி  லொழிப்பாராம்

என்று, தான் காண நினைத்த புதுமைப் பெண் பற்றிப் பாடுவான் பாரதி. முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்களும், ஓர் பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகத்தான் தோன்றினார்.

     தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில் பிறந்து, இல்லத்தரசியாய் முப்பதாண்டுகள் பாலைவன நாட்டில் வாழ்ந்து வருபவர். வெளிநாடு சென்ற போதிலும் வீட்டிலோர் பொந்தில் முடங்கி விடாமல், வாழ்வியல் அனுபவத்தில் கண்டெடுத்த, எத்தனையோ முத்துக்களில் நல் முத்துக்களாய் தேடி எடுத்து, முத்துக் குவியலாய், முத்துச் சிதறலாய் இணையம் வழி பகிர்ந்து வருபவர்.

     ஓவியம், இலக்கியம், விளையாட்டு, இசை, கவிதை, தையற் கலை, சமையற் கலை என பல துறைகளிலும் கால் பதித்து, பாங்குடன் பணியாற்றி வருபவர்.

    சார்ஜா. அராபிய பாலைவன நாட்டில் வாழும் தமிழர்களின் உணவுத் தாகத்தை தணிக்கும் சபையர் ஹோட்டல் உணவு விடுதியின் உரிமையாளர். இவரது கணவர் சுவைமிகு உணவுகளை உணவு விடுதியில் மட்டுமே வழங்குவார். ஆனால், ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் நுழைந்து, இலட்சக் கணக்கானத் தமிழர்களின், மனத்தினையும், வயிற்றினையும் சுகமாக நிரப்பி வருவது, இவரது
கைமனம்
என்னும் வலைப் பூவாகும்.

Mano’s Delicious kitchen
தாயின் கை பக்குவத்துடன், உணவு வகைகளை வாரி இறைக்கும் இவரது ஆங்கில வலைப் பூ இது.

     இதுமட்டுமல்ல, கடந்த எட்டு வருடங்களில், பத்து இலட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்ட, சமையல் குறிப்புகளுக்கானத் தனித் தளம் ஒன்றும் இவருக்குண்டு,

    புரூட் ரைஸ், பொங்கல் குழம்பு, மலபார் ப்ரான் கறி, பீர்க்கங்காய் துகையல், செட்டியாட்டு சிக்கன் கிரேவி, வறுவல், முட்டை பணியார குழம்பு, மைசூர் ரசம், விவிகா, செமோலியா அல்வா, மீன் கட்லெட், அக்கார வடைசல், தென்கை பால் என நீ.......ண்......டு கொண்டே செல்கிறது இவரது சமையல் குறிப்புகள். மலைப்புதான் மிஞ்சுகிறது. நாம் உண்ணும் உணவில் இத்தகை வகைகள் இருக்கிறதா? பல உணவு வகைகளின் பெயரைக் கூட இதுவரை கேள்விப் பட்டதில்லையே? என வியக்கத் தூண்டும் வலைப் பூ, இவரது வலைப் பூ.
 
எனது மனைவியுடன் திருமதி மனோ சாமிநாதன்
     முப்பது நிமிடங்களுக்கும் மேல் எங்களது சந்திப்பு நீண்டது. இவரது தாத்தா சோம சுந்தரம் பிள்ளை அவரகள் ஒரு பெரும் தமிழறிஞர் என்பதை அறிந்தேன். கரந்தையோடு தொடர்புடையவர். உமாமகேசுவரனாரின் சமகாலத்தவர் என்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். தொல்காப்பியம் குறித்து, இவரது தாத்தா நூல் ஒன்று எழுதியிருப்பதை அறிந்து வியந்தேன்.


     
எனது மனைவியிடம் அன்போடு பல நிமிடங்கள் பேசினார். தன் வாழ்வில், தான் சந்தித்த மருத்துவ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, பலவாறு ஆறுதல் கூறினார்.

     மகிழ்ச்சி நிரம்பிய சந்திப்பாக இச்சந்திப்பு அமைந்தது. எண்ணிப் பார்த்தால் வியப்பாக இருக்கின்றது, தமிழுக்கும் எழுத்திற்கும்தான் எத்தனை சக்தி.

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்பார் கனியன் பூங்குன்றனார். இன்று இவ்வரிகள் உண்மையாகி விட்டதே. பேரூந்தில் ஏறாமல், தொடர் வண்டியில் பயணிக்காமல், விமானத்தில் பறக்காமல், வலைப் பூவின் வழியாக, ஒரு நொடியில், உலகம் முழுதும் சுற்ற முடிகிறதே. உறவுகளை அறிய முடிகிறதே. நட்புகளைப் பெருக்கிக் கொள்ள முடிகிறதே.

வலைப் பூவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.









01 ஆகஸ்ட் 2013

கணினியும் நானும்

     கரந்தை என்றால் மீட்டல் என்ற ஒரு பொருளுண்டு. தமிழின் இழந்த பெருமைகளை மீட்டெடுக்கத் தோன்றிய அமைப்பே கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நூற்றாண்டுகால, தமிழ்ப் பயணத்தை, சிறிதேனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில்தான், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தொடரினை வலைப் பூவில் எழுதத் தொடங்கினேன்.

     உண்மையினைச் சொல்ல வேண்டுமானால், தயக்கத்துடன்தான் தொடங்கினேன். நம்மால் முடியுமா? எழுதினால் ஏற்றுக் கொள்வார்களா என்ற தயக்கம் என்னை வாட்டி வதைத்தது.

     வலையுலக நண்பர்களாகிய தாங்கள், இத்தொடரின் பேரில் காட்டிய ஆர்வமும், ஊக்குவித்தும் உற்சாகப்படுத்தியும், தாங்கள் எழுதிய பின்னூட்டங்களுமே, இத்தொடர் தொடரக் காரணம் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     கடந்த 26.6.13 இல் கரந்தை–மலர் 17 னை பதிவிட்டேன். அன்றே கருத்துரை வழங்கிய
திருமிகு தி. தமிழ் இளங்கோ அவர்கள்,
எனது எண்ணங்கள்
வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர். (எனது கணினி அனுபவங்கள் (தொடர் பதிவு)
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )
என எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

     அன்றே, மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து அனைவரின் உள்ளம் புகுந்து மகிழ்ச்சி மனம் பரப்பி வரும், கல்வியாளர் திருமிகு டி.என்.முரளிதரன் அவர்களின்
மூங்கில் காற்று
மூங்கில் காற்றினை சுவாசிக்கச் சென்றேன். என் முதல் கணினி அனுபவம் என்னும் பகிர்வு, மனதைக் கொள்ளை கொண்டது. பதிவில் இறுதியில்,
கொசுறு: நண்பர் சுரேஷ் கூட கணினி அனுபவத்துக்கு பரிந்துரை செய்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி. நானும்  அஞ்சு பேரை கணினி அனுபவம் பற்றி எழுத பரிந்துரைக்கலாம்னு தேடிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே எனக்கு தெரிஞ்ச நிறையப் பேர் புக் ஆயிட்டாங்க. யாராவது சிக்காமலா போயிடுவாங்க!

ரெண்டு பேர் சிக்கிட்டாங்க  உங்கள் முதல் கணினி அனுபவங்களை எழுதும்படி           அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

1.
பரிதிமுத்துராசன்
2. கரந்தை ஜெயகுமார் 

மகிழ்ச்சியில் உறைந்து போனேன். எனது கணினி அனுபவத்தை எழுதும்படி ஒரு வங்கியாளரும், ஒரு கல்வியாளரும் அழைத்திருக்கிறார்கள்.

வங்கியாளரும் கல்வியாளரும்

     இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?. இந்த எளியேனை அழைத்தமைக்கு நன்றி கூறுகிறேன். இதோ எழுதத் தொடங்கிவிட்டேன்.
     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய் திகழும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், மாணவனாய் கல்வி பயின்ற எனக்கு, அப்பள்ளியிலேயே ஆசிரியராய்ப் பணியாற்றும் நல் வாய்ப்பு கிடைத்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்கமானது 1925 ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பொழில் என்னும்  தமிழாராய்ச்சித் திங்களிதழ் ஒன்றினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இத் தமிழ்ப் பொழில் இதழினை மாதந்தோறும் அச்சிட்டு, அஞ்சலில் சேர்க்கும் பணி 1992 இல் எனக்குக் கிட்டியது. பின்னர் தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழுவிலும் ஓர் உறுப்பினராய் நியமிக்கப்பட்டேன். அன்று முதல் இன்று வரை 21 ஆண்டுகளாக இப்பணியினைச் செய்து வருகின்றேன்.

     1992 ஆம் ஆண்டில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கலைக் கல்லூரியில், கணினி படிப்பு தொடங்கப் பெற்றது. இதற்காக கணினி ஆய்வகம் ஒன்றும் நிறுவப் பட்டது. இங்குதான் முதன் முதலில் கணினியைப் பார்த்தேன்.

      சில ஆண்டுகளில் தமிழ்ப் பொழில் இதழினை அச்சிட்டு வந்த, லக்மி அச்சகத்திலும் கணினி நுழைந்தது. இங்குதான் முதன் முதலில், கணினியின் திரையில் தமிழ் எழுத்துக்களைப் பார்த்தேன்.

    கணினியில் விசைப் பலகையில் இருப்பதோ ஆங்கில எழுத்துக்கள். திரையில் தோன்றுவதோ தமிழ் எழுத்துக்கள். வியந்து பார்த்தது இன்றும் நன்றாக நினைவிருக்கின்றது. பிறகுதான் தெரிந்தது, தமிழுக்கென்றுத் தனியே விசைப் பலகை கிடையாது என்பது. தினந்தோறும் அச்சகத்தில் கணினியைப் பார்த்தாலும, அதனைத் தொட்டுப் பார்க்கக் கூட அச்சமாக இருந்தது. எதாவது ஒரு விசையினை அழுத்தி, பழுதடைந்து விட்டால் என்ன செய்வது என்ற தயக்கம்.

     சங்கத்தின அனைத்து விழாக்களுக்கும், சங்கத்தின் சார்பில் வெளியிடப் பெறும் நூல்களுக்கும் அச்சகப் பணியினைச் செய்தவன் நான்தான். அச்சகத்தில் கணினியில் பணியாற்றுபவருடன் அமர்ந்து, இவ்வாறு செய்யுங்கள், அவ்வாறு செய்யுங்கள் என்று கூறியிருக்கின்றேனே தவிர, அதனை அவர் விசைப் பலகையினைப் பயன்படுத்தி எவ்வாறு செய்கிறார் என்று கவனித்ததே இல்லை. எனது கவனம் முழுவதும் திரையிலேயே இருக்கும்.

     இவ்வாறாக தினந்தோறும் அச்சகத்திற்குச் சென்று வந்த போதிலும், கணினி பற்றிய அடிப்படை அறிவினைக் கூற தெரிந்து கொள்ளாதவனாகவே, ஆண்டுகள் பலவற்றைக் கழித்திருக்கின்றேன்.

     கணினியைத் தொடக்கத்தில் குளிரூட்டப் பட்ட  அறைகளிலேயே பார்த்துப் பழகிவிட்டதால், கணினியானது எனக்கு எட்டாக் கனியாகவே தோன்றியது. பின்னர் இந்நிலை மாறியது. குளிரூட்டப் பட்ட அறை அவசியமானது அல்ல என்ற நிலை தோன்றியது.

      அதன்பிறகுதான் ஒரு கணினி வாங்கினால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. 2009 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில், புத்தாண்டுச் சலுகை விலையில் ஒரு கணினியை வாங்கினேன்.

     ஓபல் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் பணம் செலுத்தி, இரண்டு நாட்கள் கழித்து, வீட்டிற்கு கணினி வந்தது. அந்நிறுவன ஊழியர் ஒருவர் வீட்டிற்கு வந்து, கணினியை பொறுத்திக் கொடுத்தார்.

     கணினி நிறுவன ஊழியரிடம், அப்பொழுது ஒரே ஒரு சந்தேகத்தினை மட்டும் கேட்டேன். கணினியை ஆன் செய்யவும், ஆப் செய்யவும், எந்தெந்த பட்டன்களை அழுத்த வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள் எனக் கேட்டேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, சொல்லிக் கொடுத்தார். என் கணினி அறிவு அவ்வளவுதான்.

     அன்று முதல் பல நாட்கள் கணினியை ஆன் செய்வதும், ஆப் செய்தும் பார்த்தேன். எனது பெயரினைத் தட்டச்சு செய்து, திரையில் பெயர் தோன்றுவதைப் பார்த்து ரசிப்பேன். அவ்வளவுதான். கணினியை வைத்துக் கொண்டு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.

      எனது மகனும், மகளும் கணினியில் உள்ள விளையாட்டுக்களை மணிக் கணக்கில் விளையாடுவார்கள். கணினி எனக்குத்தான் புரிபடாத புதிராகவே தொடர்ந்தது.

         இவ்விடத்தில் செய்தி ஒன்றினைக் கூறியாக வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் தட்டச்சு அறிந்தவன் நான்.

     தஞ்சை மன்னர் சரபோசி கல்லூரியில், இளங்கலை கணிதத்தினை மூன்றாண்டுகள் நிறைவு செய்தபோது, இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமலே இருந்தேன். எனவே ஓராண்டு வீணானது. இக்கால கட்டத்தில் தட்டச்சு வகுப்பிற்குச் செல்லத் தொடங்கினேன். தமிழ் தட்டச்சு மற்றும் ஆஙகிலத் தட்டச்சு இரண்டிலும் ஹையர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதுவரை நான் வெளியிட்ட நூல்கள் மூன்றும் நானே தட்டச்சு செய்ததுதான்.

      தட்டச்சுப் பயிற்சிதான் இப்பொழுது எனக்கு கைகொடுத்து வருகிறது. கணினி வாங்கிய பிறகும் இரண்டாண்டுகள் இணைய இணைப்பு பெறாமலேயே இருந்தேன். இந்த இரண்டாண்டுகளும், கணினியானது ஒரு டி.வி.டி., ஆக மட்டுமே பயன்பட்டது.

     இணைய இணைப்பு பெறாததற்குக் காரணம். பயம். நண்பர்கள் பலரும் பலவாறு பயமுறுத்தினார்கள். எவ்வாறு பயமுறுத்தினார்கள் தெரியுமா?

     கணினியில் இணையதள இணைப்பின் வழியாக, ஏதாவது ஒரு தளத்தினைப் படித்துக் கொண்டோ, பார்த்துக் கொண்டோ இருக்கும் பொழுது, தொலைக் காட்சி போன்று, திடீர் திடீரென பல விளம்பரங்கள் தோன்றும். அவற்றுள் பல விளம்பரங்கள், உங்களை ஆபாச வலைத் தளத்திற்கு அழைக்கும். எனவே நீங்கள் இல்லாதபோது, கணினியைப் பயன்படுத்தும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப் படலாம் என்று பயமுறுத்தினர்.

       எனவே மிகவும் தாமதமாக, இரண்டாண்டுகள் கடந்த நிலையில் நானும், நண்பர் சரவணன் அவர்களும் ரிலையன்ஸ் இணையதள இணைப்பினைப் பெற்றோம்.

நண்பர் ஹரிசங்கர் பாபு
        பின்னர் ஒருநாள் எங்கள் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றும் நண்பர் க.ஹரிசங்கர் பாபு அவர்களிடம் மின்னஞ்சல், மின்னஞ்சல் என்று சொல்கிறார்களே, மின்னஞ்சல் என்றால் என்ன?, என்று கேட்டேன். ஒரு அலைபேசியில் இருந்து மற்றொரு அலைபேசிக்கு, குறுந் தகவல் அனுப்புகின்றோம் இல்லையா, அது போல், ஒரு கணினியில் இருந்து, மற்றொரு கணினிக்கு செய்தி அனுப்புவதுதான் மின்னஞ்சல், இதற்கு தனியாக செலவு செய்ய வேண்டியதில்லை என்றவர், வாருங்கள் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கித் தருகின்றேன் என அழைத்தார்.

     நானும் நண்பர் சரவணனும், ஹரிசங்கர் பாபுவுடன், உமாமகேசுவரனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்குச் சென்றோம். அங்கிருந்த கணினியில் ஆளுக்கொரு மின்னஞ்சல் முகவரியினை உருவாக்கிக் கொடுத்தார். அவ்வாறு பெற்ற எனது மின்னஞ்சல் முகவரி


குறைந்தது ஆறு மாதங்களுக்கு ஒரு மின்னஞ்சலாவது இம்முகவரிக்கு வரவேண்டும், இல்லையேல் இம்முகவரி காலாவதியாகிவிடும் என்றார்.

     உடனே கவலை தொற்றிக் கொண்டது. நமக்கு மின்னஞ்சல் அனுப்ப யார் இருக்கிறார்கள்? எவ்வாறு இம்முகவரியைத் தக்கவைத்துக் கொள்வது என்று புரியவில்லை.

     அன்று மாலையே நண்பர் சரவணனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் அனுப்பினார். ஒரு மின்னஞ்சல் வந்து விட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்குக் கவலைப்பட வேண்டியதில்லை என மனதைத் தேற்றிக் கொண்டேன்.

     வலைதளத்திற்குள் நுழைந்து பல பக்கங்களைப் பார்வையிட்ட பொழுது, ஈமெயில் அலர்ட் என்ற வார்த்தை கண்ணில் பட்டது. உடனே நான்கு அல்லது ஐந்து செய்திகளுக்கு ஈமெயில் அலர்ட் பெற, எனது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தேன். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன்.

     இனி தினந்தோறும் ஒன்றிரண்டு ஈமெயில் அலர்ட் வந்துகொண்டேயிருக்கும், எனவே மின்னஞ்சல் முகவரி காலாவதியாவதைப் பற்றிக் கவலைப் பட வேண்டாமல்லவா?

     நான் தட்டச்சு இயந்திரத்திலேயே தட்டச்சு செய்து பழகியவன். ரெமிங்டன் தட்டச்சு இயந்திரம் சற்று மென்மையாக இருக்கும். ஆனால் கோத்ரெஞ் தட்டச்சு இயந்திரம் சிறிது கடினமாக இருக்கும். விரல்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்து தட்டச்சு செய்ய வேண்டும்.

     நான் கரந்தைத் தமிழ்ச் சங்சத்தில் கோத்ரெஞ் தட்டச்சு இயந்திரத்துடன் வாழ்ந்தவன். கணினியிலோ மயிலிறகால் வருடுவது போன்று தட்டச்சு செய்ய வேண்டும். தொடக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யவே முடியவில்லை. a என்ற எழுத்தை அழுத்தினால் aaaaaaaaaaaaaaaa  என்று வந்தது. பிறகு மெல்ல மெல்ல விரல்களுக்கு அழுத்தம் கொடுப்பதைக் குறைத்துப் பழகிக் கொண்டேன்.

     ஏதேனும் ஒரு தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு தமிழ் தட்டச்சு செய்து பார்ப்பேன். ஆரம்பத்தில் புரியவில்லை.  தட்டச்சு இயந்திரத்தில் க் என்ற எழுத்தை தட்டச்சு செய்ய, முதலில் புள்ளியை தட்டச்சு செய்ய வேண்டும், பிறகு க வை தட்டச்சு செய்ய வேண்டும். செந்தமிழ் எழுத்துருவில் இதுவே தலைகீழாக இருந்தது. பழகிக் கொண்டேன்.

  
தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்
   ஒரு முறை சங்க விழாவிற்கு வந்திருந்த தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள், விழாத் தொடர்பான புகைப்படங்களை, வீட்டு முகவரிக்கு அனுப்பி வையுங்கள், எனது பிளாக்கில் வெளியிடுகிறேன் என்று கூறினார்.

     அப்பொழுதுதான் பிளாக் என்ற வார்த்தையினையே முதன் முறையாக் கேட்டேன். அடுத்த நாளே கணினியில் வலைப் பூ நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டேன். கரந்தைகேஜே என்னும் பெயரில் வலைப் பூவைத் தொடங்கினேன். டாஸ்போர்டில் மொழி என்று வந்தபொழுது தமிழ் மொழியைத் தேர்ந்தெடுத்தேன். குழப்பம் தொடங்கியது. டாஸ் போர்டில உள்ள வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியவில்லை. கண்னைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது. இக்குழப்பத்திலேயே ஆறு மாதங்கள் கழிந்த்து.

     ஒரு நாள் தஞ்சை, முரசு புத்தக நிலையத்திற்குச் சென்றேன். நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் என்னும் கண்ணதாசன் பதிப்பக நூல் கண்ணில் பட்டது. வாங்கினேன். சுமஜ்லா என்பவர் எழுதிய நூல் இது. இந்நுலில்,
அதன் கீழே பார்த்தால்,Language என்று இருக்கும். அதில் English அல்லது தமிழ் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். English என்று இருப்பதுதான் முதலில் பழக எளிதாக இருக்கும். அதோடு சில வசதிகளும் கூடுதலாக இருக்கும்.

     புதிய ஒளி பிறந்தது.

     சிறு வயதில் இருந்தே புத்தகங்களை சேர்ப்பதில் ஓர் ஆர்வம். சுஜாதா, சுஜாதா என சுஜாதாவின் நூல்களைத் தேடி அலைந்திருக்கின்றேன்.

      வீட்டிற்கோர் புத்தகசாலை வேண்டும் என்பார் பாரதிதாசன். நானும் சிறுக சிறுக சேர்த்து இதுவரை 2000 நூல்கள் சேர்த்திருக்கின்றேன். 2000 நூல்கள் சேர்ந்தவுடன், எனது அறையினையே நூலகமாகக் கருதி, அதற்கு ஒரு பெயர் வைக்க விரும்பினேன். முதன் முதலில் தோன்றிய பெயர் கரந்தை. கரந்தை நான் படித்த இடம், பணியாற்றும் இடம், எனக்கு வாழ்வளித்த இடம். எனவே கரந்தை நூலகம் எனப் பெயரிட்டேன். நீங்களும் வலைப் பூக்கள் தொடங்கலாம் நூலைப் படித்தவுடன், மீண்டும் புதிதாக ஒரு வலைப் பூ தொடங்கினேன்.
கரந்தை ஜெயக்குமார்

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர் உமாமகேசுவரனார் அவர்களை வணங்கி முதற் பதிவினைப் பதிவிட்டேன்.

நாள் 23 ஆகஸ்ட் 2011

                            உமாமகேசன்

                              உமாமகேசனே
                              தமிழ் முனியே
                              என் இறையே
                              முதல் வணக்கம்.

                               உனை எழுதும்
                               பித்தன் எனக்கு
                               சொல்லெடுத்துத் தருவாய்
                               தனித் தமிழ் அருள்வாய்

     ஆனால் படிக்கத்தான் யாருமில்லை. ஒவ்வொரு நாளும், காலையும் மாலையும் என் பதிவை நானே படித்துப் பரவசப்பட்டேன்.
முனைவர் பா.ஜம்புலிங்கம்

       இந்நிலையில் ஒரு நாள் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் அலைபேசியில் அழைத்தார். நான்
சோழ நாட்டில் பௌத்தம்

என்னும் தலைப்பில் வலைப் பூ தொடங்கி எழுதி வருகிறேன். படித்துப் பாருங்கள். நீங்களும் ஒரு வலைப் பூ தொடங்குங்கள் என்றார். அய்யா நான் சில நாட்களுக்கு முன்னர் ஒரு வலைப் பூ தொடங்கியுள்ளேன் என்ற தகவலைத் தெரிவித்தேன். பாராட்டினார். நான் மாதம் ஒரு பதிவிடுவது என்று எண்ணி செயலாற்றி வருகிறேன். நீங்களும் மாதம் ஒரு பதிவாவது எழுதுங்கள் என்றார்.

     எனது வலைப் பூவின் முதல் வாசகர் இவர்தான். முதல் வாசகர் மட்டுமல்ல தூண்டுகோலும் இவர்தான். இந்த பொன்னான வாய்ப்பினைப் பயன்படுத்தி, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,

     நீங்களில்லையேல், கணினி என்னும் ஆழ்கடலில், மாலுமி இல்லா படகுபோல், இருக்குமிடம் தெரியாது என்றோ நான் கரைந்து போயிருப்பேன்.

நன்றி தமிழ்த்திரு பா.ஜம்புலிங்கம் அவர்களே


     சில மாத இடைவெளியில், கரந்தையினைச் சேர்ந்த, அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கவிஞர், எழுத்தாளர் திரு ஹரணி அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எனது வலைப் பூ பற்றி அறிந்து மகிழ்ந்தார். பெரிதும் பாராட்டினார். அப்பொழுதுதான்
ஹரணி பக்கங்கள்
என்னும் பெயரில் பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து எழுதி வருவதை அறிந்தேன். கரந்தையிலேயே இருபது வருடங்களுக்கு முன்னரே, கணினியை முதன் முதலில் வாங்கியவர் என்ற பெருமையினைப் பெற்றவர் இவர்.

      அன்றே தனது வலைப் பூவின் வலது பக்கத்தில் உள்ளம் கவர்ந்தவை என்னும் தலைப்பில், எனது வலைப் பூவையும், கரந்தை ஜெயக்குமார் பக்கங்கள் என்னும் பெயரில் இணைத்து, அவரது வலைப் பூவிற்கு வரும் வாசக நண்பர்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
    
   
  திருமிகு ஹரணி அவர்களுக்கு என் நன்றியறிதலைத்தெரிவித்துக் கொள்கின்றேன். பார்த்ததை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள், படித்ததை எல்லாம் எழுதுங்கள், மகிழ்ச்சியை எழுதுங்கள், துயரத்தை எழுதுங்கள், நாள்தோறும் எழுதுங்கள், எழுதுங்கள், எழுதுங்கள் என உற்சாகப் படுத்தியவர், ஊக்கப் படுத்தியவர் நீங்கள். கணினி என்னும் ஆழ் கடலில் திசையறியாது திக்குமுக்காடிய எனக்கு, திசை காட்டியாய், வழிகாட்டியாய் இருந்து என்னை நெறிப்படுத்தியவர் நீங்கள்தான்.

நன்றி தமிழ்த் திரு ஹரணி அவர்களே.


நண்பர் கோவிந்தராஜ்
வலைப் பூ தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை, தேவைப்படும் பொழுதெல்லாம் முக மலர்ச்சியோடு, வலைப்பூவிற்கான முகப்புப் பக்கத்தை அழகுற அமைத்துத் தருகின்ற அருமை நணபர், ஓவிய ஆசிரியர் எஸ்.கோவிந்தராஜ் அவர்களுக்கு என் நன்றியறிதலைத் தெரிவித்து மகிழ்க்கின்றேன்,

 நன்றி திரு எஸ்.கோவிந்தராஜ் அவர்களே,



நண்பர் சரவணன்
     வலைப் பூ தொடங்கி ஓராண்டு காலத்திற்கு, மாதத்திற்கு ஒரு பதிவையே எழுதி வந்தேன். ஒரு நாள் நண்பர் சரவணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, இராமானுஜன் வாழ்க்கை வரலாற்றினையே தொடர் பதிவாய் எழுதுங்களேன், மாதமொரு முறை என்பதற்கு பதிலாக, வாரமொரு  முறை எழுதுங்களேன் என்றார்.

13 ஆகஸ்ட் 2012

அன்று கணிதமேதை சீனிவாச இராமானுஜன் தொடரினைத் தொடங்கினேன். வலைப் பூ நண்பர்களிடத்து ஆதரவினைப் பெற்றுத் தந்த தொடர் இது. என்னை அடையாளம் காட்டிட உதவிய தொடர் இது.
நன்றி நண்பர் சரவணன் அவர்களே.

இத்தொடரின்போதுதான்,
வலைச்சரம்
என்னும் கவின்மிகு வலைப் பூவில்


திருமதி உஷா அன்பரசு
உஷா அன்பரசு, வேலூர்
அவர்களும்



திருமிகு தி, தமிழ் இளங்கோ
எனது எண்ணங்கள்
அவர்களும்
என்னை அறிமுகப்படுத்தி என்னை உற்சாகப் படுத்தினர்.

நன்றி
திருமதி உஷா அன்பரசு அன்பர்களே,
நன்றி
திருமிகு தி, தமிழ் இளங்கோ அவர்களே.


வாரந்தோறும் இத் தொடரினை, தன் முகப் புத்கதகத்தில் பகிர்ந்து
கணிதமேதையின் புகழினைப் பரப்பியவர்
திரு ரத்னவேல் நடராஜன்
ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ரத்னவேல்நடராஜன்


நன்றி திருமிகு ரத்னவேல் நடராசன் அவர்களே,


வாரந்தோறும் தவறாது வருகை தந்து வாசித்து வாழ்த்தியதோடு, தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நேரம் ஒதுக்கி, சிரமம் பாராது, மன மகிழ்ந்து, எனது வலைப் பூவினை,
தமிழ் மணம்
திரட்டியில், இணைத்து உதவியவர்
திருமிகு டி.என்.முரளிதரன்,
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், சென்னை
மூங்கில் காற்று

நன்றி திருமிகு கல்வியாளர் டி.என்.முரளிதரன் அவர்களே,


     கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினைப் படித்துதான், தனது நமது நம்பிக்கை திங்களிதழில், இத் தொடரினை வெளியிட முன் வந்தார்
மரபின் மைந்தர் முத்தையா அவர்கள்,
தற்பொழுது கணிதமேதை சீனிவாச இராமானுஜன் வரலாறு

நமது நம்பிக்கையில்

தொடராக வந்து கொண்டிருக்கின்றது.

நன்றி மரபின் மைந்தன் முத்தையா அவர்களே

    இரண்டாண்டுகளாகத் தொடர்ந்து வலைப் பூவில் எழுதி வருகிறேன். நினைத்துப் பார்த்தால் எனக்கே வியப்பாக இருக்கின்றது. எழுதுவது நான்தானா, என்ற சந்தேகம் எனக்கே வருகிறது. இதற்கெல்லாம் காரணம் வலையுலகச் சொந்தங்களாகிய நீங்கள் தான். தங்களின் தொடர் வருகையும், வாழ்த்துமே, எனது வலைப் பூவிற்கு கிடைக்கும் சுவாசக் காற்று.

நன்றி நன்றி நன்றி

நண்பர்களே

நான் உங்களிடத்து வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்

என்றும் வேண்டும் இந்த அன்பு