01 செப்டம்பர் 2013

திருவள்ளுவர் தவச்சாலை

   
  

    
      வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள்  வைக்கப்  படும்

என்றார் திருவள்ளுவர். இப்புவியில் வாழும்போதே, தங்கள் சொல்லால், எழுத்தால், செயலால், தங்கள் வாழ்க்கை முறையால் தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர்கள் பலர், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     நண்பர்களே, நாம் அனைவரும், நமது வாழ்வின் பல்வேறு கால கட்டங்களில், பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். புனிதத் தலங்கள் பலவற்றைக் கண்டு, மெய்மறந்து வணங்கி, இறைவனோடு ஒற்றெணக் கலந்து பரவசப் பட்டவர்கள்தான்.

      நண்பர்களே, ஒரு முறை, ஒரே ஒரு முறை என்னோடு வருகிறீர்களா?அன்னைத் தமிழின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் அர்ப்பணித்து, தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்ற ஒரு தமிழ் முனிவரின் தமிழ்த் தலத்திற்குத் தங்களை அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். வருகிறீர்களா?

     நன்றி நண்பர்களே, அழைத்தவுடன், சிறிதும் தயங்காது, மனதில் மகிழ்ச்சியோடும், உதட்டில் மலர்ச்சியோடும் பயணப்பட இசைந்தமைக்கு நன்றி.

     வாருங்கள், வாகனம் தங்களுக்காகத் தயாராகக் காத்திருக்கின்றது. அமருங்கள். புறப்படலாமா?

     இதோ தஞ்சையிலிருந்து புறப்பட்டு விட்டோம். இதோ திருச்சி சத்திரம் பேரூந்து நிலையம். இதோ நமது வாகனம் கரூர் சாலையில் பயணிக்கின்றது. வலது புறம் காவிரி. இடது புறம் சிறு சிறு சிற்றூர்கள். முத்தரச நல்லூரைத் தாண்டிவிட்டோம்.

     இதோ அல்லூர். இதுதான் நண்பர்களே, நாம் காண வந்த தமிழ்த் தலம். புண்ணிய பூமி.


     திருக்குறளுக்குக் கோயில் எழுப்பி, வள்ளுவமாய், வாழும் வள்ளுவராய் வாழ்ந்து வரும்,
தமிழ்க் கடல்
உலகப் பெருந் தமிழர்
செந்தமிழ் அந்தணர்
முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களின்
திருவள்ளுவர் தவச்சாலை.


    
வணக்கம் ஐயா, வாருங்கள். நம்மை அன்போடு அழைக்கின்றார்.

     அகவை 85ஐக் கடந்தபோதும், மலர்ந்த முகம், ஒடிசலான தேகம், தெளிவான தமிழ்ச் சிந்தனை, இனிமையானச் சொற்களுக்குச் சொந்தக்காரர்.



     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகேயுள்ள, வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில், ராமு – வாழவந்தாள் தம்பதியினரின் அருமை மகனாய்த் தோன்றியவர்.

     பள்ளிக் கூடமே இல்லாத, வாழவந்தாள் புரத்தில், பள்ளிக் கூடம் ஒன்றினை உருவாக்கி, தானே ஆசிரியராகவும் பணியாற்றியவர். பின்னர் கரியவலம் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனது குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, தனது ஓய்வூதியத் தொகை முழுவதையும் செலவிட்டு, திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச் சாலையினை நிறுவித், தமிழ் முனிவராய் வாழ்ந்து வருபவர்.

       திருக்குறள் வகுப்புகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருபவர். இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டத் திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்தி வைத்துள்ளார். தொடர்ந்து நடத்தியும் வருகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

     இளங்குமரனார் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் என்னும் நூலின் பத்து தொகுதிகளை, 1963 இல் வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு.

     புதுமணை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, மணி விழா, பெயர் சூட்டு விழா மற்றும் இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்தையும், தமிழ் முறைப்படி. தூய தமிழிலே பாங்குடன் செய்து வருபவர்.

     தமிழில் எப்படி விழாக்களை நடத்துவது? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் நெறிக் கரணங்கள் என்னும் நூலொன்றினையும் எழுதி வெளியிட்டவர்.

     தனது காலத்திற்குப் பிறகும், இப்பணியினைத் தொடர்ந்து திறம்பட நடத்திட, தமிழகம் முழுவதும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழின் பெருமையினைக் காத்து வருபவர்.

பணியுமாம் என்றும் பெருமை
என்பார் வள்ளுவர். இதற்குப் பொருள் விளங்காதவர்கள், ஐயா அவர்களைக் கண்ட ஒரு சில நொடிகளிலேயே, இக்குறளின் பொருளை முழுமையாய் உணர்வர்.

     தமிழ்க் கடல் இளங்குமரன் ஐயா அவர்கள் தனது வாழ்வியல் அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு என்ன தெரியுமா? ஒரு புல்.

             மனிதரெலாம்  அன்புநெறி  காண்ப  தற்கும்
                   மனோபாவம்  வானைப்போல்  விரிவடைந்து
             தனிமனித  தத்துவமாம் இருளைப் போக்கிச்
                   சகமக்கள்  ஒன்றென்ப  துணர்வ  தற்கும்
             இனிதினிதாய்  எழுந்தஉயர்  எண்ண  மெல்லாம்
                   இலகுவது  புலவர்தரு  சுவடிச்  சாலை
             புனிதமுற்று  மக்கள்புது  வாழ்வு  வேண்டில்
                   புத்தகசா  லைவேண்டும்  நாட்டில்  யாண்டும்

எனப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தரின் எண்ணம் செயலாக்கம் பெற்ற இடம்தான் தமிழ்க் கடலின் இல்லம். இல்லம் என்பது தவறு நண்பர்களே. நூலகம் என்பதுதான் உண்மை. வீட்டிற்கொரு நூலகம் அமைக்கச் சொல்வார் பாவேந்தர். ஆனால் இளங்குமரனாரே நூலகத்தில், தனது இல்லத்தை அமைத்தவர்.

     பாவாணர் நூலகம். சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள். மலைப்பு ஏற்படுகிறது. அத்துனைப் புத்தகங்களின் ஒவ்வொரு ஏட்டிலும் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும், கரைத்து ரசித்துக் குடித்தவர் இளங்குமரனார். திருக்குறளுக்கு இதுவரை இவ்வுலகில் எழுதப்பட்ட உரைகள் அனைத்தும் இவரிடம் தஞ்சம். இளங்குமரன் ஐயா அவர்களே இதுவரை, திருக்குறளுக்காக மட்டும் எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வெளிநாட்டினர் உட்பட, யார் வேண்டுமானாலும், இங்கு வந்து தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம்.



     அடுத்ததாகக் கலைக் காட்சியகம். தமிழ் இனம், தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியங்களுக்காகத் தொண்டாற்றிய, நூற்றுக் கணக்கானத் தமிழறிஞர்களின் படங்களைக் கொண்ட கலைக் காட்சியகம் ஒன்றினையும் தனது இல்லத்திலேயே ஏற்படுத்தி பராமரித்து வருகின்றார். இக்கலைக் காட்சியகம், இதுவரை நாம் கண்டிராத வேறொரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

      இளங்குமரனார் ஐயா அவர்கள், தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் மாமலைகளின் அன்பிற்கு உரியவர். அப்பெரியோர்கள், இளங்குமரனாருக்குத், தங்கள் கைப்பட எழுதியக் கடிதங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
 
சோமசுந்தர பாரதியாரின் கடிதம்
               
மறைமலை அடிகளாரின் கடிதம்
                பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்
                பார்வை சரியாக இருந்தால்

                உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்
                உள்ளம் சிறுத்தால் உறவும் பகையே

                காரணம் சொல்பவன் கடமை செய்யான்
                தம்துயர் தாங்கார் பிறர்துயர் தீரார்

                வாழ்ந்த நாளிலேயே வீடுபேறு பெறாதவன்
                வீழ்ந்த பின்னரா பெறுவான்

கலைக் காட்சியகத்தின் சுவர் முழுவதும் காணப்படும் வாசகங்கள், நம்முள் எழுச்சியினையும், கிளர்ச்சியினையும், புதிய சிந்தனைகளையும் உண்டாக்குகின்றன.

     இல்லத்தின் பின்புறம், இயற்கையை மனிதம் பாழாக்காதிருக்க, நல் அறிவுரைகளை வாரிவழங்கும் இயற்கை நல நிலையம்.

     திருவள்ளுவர் தவச்சாலையின் வாயிற் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே செல்வோமானால், வலது புறத்தில் ஓர் ஆலயம்.

                    

                         
                       திருக்குறள் நம்மறை – நெறி

                      திருக்குறள் வாழ்வியல் நடைநூல்
                      அது, மாந்தரை மாந்தர் ஆக்கும்
                      அது, மாந்தரை சான்றோர் ஆக்கும்
                      அது, மாந்தரை தெய்வம் ஆக்கும்
                      மாந்தப் பிறவியின் நோக்கு, தெய்வமாதல்

என நமக்கு அறிவுறுத்தி, முதலில் மனிதனாகலாம் வா, என நம்மை அழைக்கிறது திருக்குறள் ஆலயம்.

      ஆலயத்தின் கருவறையில், குறளின் அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் மூன்றும் மும் மலைகளாய் காட்சியளிக்கின்றது. நடுவினில திருவள்ளுவர்.

     மும் மலைகளும் சிறுசிறு கற்களால் வடிவமைக்கப் பட்டவை. இளங்குமரனார் ஐயா அவர்களின் திருவடி படாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம். தமிழகத்தில் தான் காலடி பதித்த, ஒவ்வொரு ஊரில் இருந்தும், 1984 முதல் 1994 வரை பத்தாண்டுகளில், இவர் சேகரித்த கற்களின் எண்ணிக்கை 1330.

     அறத்துப் பாலில் 380 குறள்கள். எனவே 380 கற்களை உடைய ஒரு மலை. பொருட் பால் பெரியது. மொத்தம் 700 குறட்பாக்கள். எனவே 700 கற்களை உடைய ஒரு பொருட்பா மலை. இன்பத்துப் பால் சிறியது. மொத்தமே 250 குறள்கள்தான். எனவே 250 கற்களை உடைய ஒரு சிறு மலை.

     திருக்குறளின் முப் பாலையும் குறிக்கும், மும் மலைகளுக்கு முன்னதாக, மனிதனின் இரு பாதச் சுவடுகள்.

     ஏன் தெரியுமா? திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல. பின் பற்றி நடப்பதற்கு என்பதனை உணர்த்தவே, இப்பாதச் சுவடுகள்.

     இத் திருக்குறள் ஆலயத்தில் தீப ஒளி வழிபாடு கிடையாது. ஊது பத்தி வழிபாடு மட்டும்தான். ஏன் தெரியுமா? இதற்குப் பெரும்புலவர் ஐயா அவர்கள் கூறும் விளக்கம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதனை அவரே கூறுகிறார் கேளுங்கள்.

     ஊது பத்தியினைப் பாருங்கள். அதன் உருவத்தினை நோக்குங்கள். ஒரு மெல்லிய குச்சியினை, நெருப்பினையும், புகையினையும், நறுமனத்தினையும் உண்டாக்கும் ஒரு பசை பற்றியிருக்கின்றது. ஊது பத்தியினைப் பற்றவைப்போமேயானால், குச்சியினை பசை பற்றியிருக்கின்றவரை நெருப்பு தொடரும். பற்றியிருக்கும் பசை முடிந்தவுடன் ஊது பத்தி நின்றுவிடும். அதுபோலத்தான் மனித வாழ்வும்.

    
நம் மனத்தினை ஆசை, பேராசை, வெறுப்பு, கோபம் என்றும் பற்று, பற்றியிருக்கும் வரைதான், போராட்டங்களும், வருத்தங்களும், துயரங்களும், வேதனைகளும். பற்றைத் துறப்போமானால் தெய்வ நிலையினை அடையலாம்.

     திருக்குறள் கோயில் வளாகத்திலேயே மன வள நிலையம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

     ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், பயணம், பயணம், பயணம்தான். திருமணம், சொற்பொழிவு என்று ஓயாத பயணமே இவரின் வாழ்க்கை. ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்று மட்டும், உலகப் பெருந்தமிழரை, திருவள்ளுவர் தவச்சாலையில் சந்திக்கலாம்.

     ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க் கிழமையன்று, அல்லூரில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும், குடும்பப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு, மீள வழியின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு, தக்க மன நல ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் சிந்தனையினைத் தொடும் வண்ணம், எடுத்துரைத்து, புத்தம் புது மனிதராய் மாற்றி அனுப்புவதை வழக்கமாய் கொண்டுள்ளார்.

                  தேரிழுக்கச்  செல்வாரில்  தீயணைக்கச் செல்வாரே
                நேருயர்ந்த மேலார் நினை
என்னும் உன்னத எண்ணத்தின் வழி நின்று, உயரிய வாழ்வினை வாழ்ந்து வரும் இளங்குமரனார் ஐயா , அவர்கள் பேசத் தொடங்கினாலே தமிழருவி கொட்டும், தமிழமுதம் பொங்கும்.

      நா து என்னும் சொல்லொன்றினைக் கூறினார். சிலப்பதிகாரத்தில் நா து என்னும் சொல் வருகிறது. நா என்றால் நாக்கு. து என்றால் துணை. அதாவது பேச்சுத் துணை.

     ஒரு பெண் திருமனமாகி, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, தன் கணவரின் சகோதரியே, புது மணப் பெண்ணிற்கு சிறந்த பேச்சுத் துணையாய், தோழியாய் அமைவார். எனவே கணவரின் சகோதரியைக் குறிக்கும் சொல்லே நா து என்பதாகும். இது ஒரு காரணப் பெயர். பின்னாளில் இப்பெயர் மருவி, மாறி இன்று, நாத்தனார் என வழங்கப் படுகிறது என்றார். பெரும் புலவர் இளங்குமரனார் ஒரு நடமாடும் தமிழ்க் களங்சியம்.


                    
                        நல்லோரைக் காண்பதும் நன்றே
                     நல்லோர் சொல் கேட்பதும் நன்றே
என உரைப்பர் நம் முன்னோர். அப்படிப் பட்ட ஒரு நல்லோரை, தமிழில் இமயம் போல், உயர்ந்தோரை, வள்ளுவத்தின் வழி நின்று வாழ்ந்து வருவோரைச் சந்தித்தது, தங்களுக்கும், மகிழ்ச்சியினை, மன நிறைவினை, புத்துணர்ச்சியினை, உங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் என நம்புகின்றேன் நண்பர்களே.

     இச்சிறியேனின் அழைப்பினை ஏற்று, என்னுடன் பயணித்தமைக்கு, நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா..

     



27 ஆகஸ்ட் 2013

கரந்தையில் குடந்தை

   
 திங்கட்கிழமை (26.8.13) காலை 10.55 மணி. வகுப்பறையில் இருந்தேன். அலைபேசி ஒலித்த்து. மறுமுனையில் நண்பரும் உடற்கல்வி ஆசிரியருமான திரு துரைபிள்ளை நடராசன்.

     பொதுவாக ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் செல்லும் பொழுது அலைபேசியை தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் நல்லது. இருப்பினும் இந்த அவசர யுகத்தில், எந்த நேரத்திலும், யாரிடமிருந்தும் அவசர அழைப்பு வரலாமல்லவா? எனவே வகுப்பறைப் பணிகளைப் பாதிக்காதவாறு அவ்வப்போது அலை பேசியைப் பயன்படுத்துவது உண்டு.


    
தங்களின் வலைப் பூ நண்பர் சரவணன் அவர்கள், ஆசிரியர் அறையில் காத்திருக்கிறார் என்றார் நண்பர் நடராசன். அப்பொழுது இரண்டாவது பிரிவு வேளை முடிவுற்றமைக்கான மணியும் ஒலித்தது. இதோ வருகிறேன் என்றேன்.

     ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் சென்றேன். குடந்தையூர் சரவணன் அவர்கள் காத்திருந்தார். எதிர்பார்க்காத இனிமையான சந்திப்பு. வாருங்கள் வாருங்கள் என கைகளைப் பற்றிக் கொண்டேன்.

     வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்னும் உன்னத வழியில் தனது வாழ்வினை அமைத்துக் கொண்டவர். பிறந்த மண்ணை மறவா நல் மனத்தினர். குடந்தையூர் எனத் தன் வலைப் பூவில், தனது ஊரினையும் இணைத்து பெருமிதம் கொள்பவர்.

     சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணி. இல்லம் இருப்பதோ குடந்தையை ஒட்டியுள்ள வலங்கைமானில். திங்கள் முதல் வெள்ளிவரை சென்னையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வலங்கைமானிலும் வாசம் செய்பவர்.


     
   தஞ்சைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தேன். உங்களைக் காண வேண்டும் என்ற ஆவலில் கரந்தை வந்தேன் என்றார். மனம் மகிழ்ச்சியில் மிதந்த்து.

     வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.

       சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும்
      கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
எனப் பாடுவார் பாரதி. ஆனால் இன்று வீட்டில் அமர்ந்தவாறே உலகத்துச் சொந்தங்களை எல்லாம் ஒன்றிணைக்க முடிகிறதே. உறவாடி மகிழ முடிகிறதே.

     வலைப் பூ என்று யார் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் என்னவொரு பொருத்தமான பெயர். உலகத்து உறவுகளை எல்லாம் வலை வீசிப் பிடித்து ஓரிடத்தில உறவாட விடுகிறதே.

     அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர்கள்,


துரைபிள்ளை நடராசன்
http://duraipillainatarajan.blogspot.com/


கரந்தை சரவணன்
http://karanthaisaravanan.blogspot.com/

ஆகியோரை அறிமுகப் படுத்தினேன்.

     சென்னைப் பதிவர் மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்.

     அவ்வப்போது, ஓரிரு பதிவுலக நண்பர்களைச் சந்திக்கும் போதே, மனம் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறதே, பதிவுலகச் சகோதர, சகோதரிகளை எல்லாம் ஓரிடத்தில் சந்தித்தால் எப்படியிருக்கும்?

     வலைப் பூ என்னும் பரமபத வாசலின் வழி சென்று, சொர்க்கத்தையே சொந்தமாக்கிக் கொண்ட உணர்வல்லவா ஏற்படும். சொர்க்கத்தில் கால் பதிக்க யார்தான் மறுப்பார்கள். ஆசைதான். ஆனாலும் வடபழநிக்கு வர இயலாத நிலை.

     தலைவலி என்னும் கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான என் மனைவி, தற்பொழுதுதான் மெல்ல, மெல்ல குணமடைந்து வருகிறார். ஆகையினால் தஞ்சையிலேயே இருக்க வேண்டிய சூழல்.

     ஆகவே நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.


   தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
  தமிழின்  தொண்டர்  தடுக்கினும்  நில்லார்.
  ஓடினார்  ஓடினார்,  ஓடினார்  நடந்தே

 ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உற்சாகம்
  சமுத்திரம் போல அமைந்த  மைதானம்
 அங்கே கூடினார் அத்தனை பேரும்

  உள்ளம்பு ஊற்றி  ஊற்றி  ஊற்றித்
  தமிழ் வளர்க்கும்  சங்கம் ஒன்று
  சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்  தார்கள்

   உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
   கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
   சுடர்க்கவி தொடங்கினர்  பறந்த்து தொழும்பு

   கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
   வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்
   தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்

    காற்றி லெலாம் கலந்த்து கீதம்
    சங்கீ தமெலாம்  தகத்தகா யத்தமிழ்

வலைப் பூ பதிவர் மாநாட்டிற்காகவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறதல்லவா இப்பாடல்.

     பாவேந்தர் பாரதிதாசன் கண்ட தமிழ்க் கனவு இப்பாடல். வலைப் பூ பதிவர் மாநாட்டின் மூலம் பாரதிதாசன் கண்ட கனவு நிறைவேறிவிட்டதாகவே எண்ணுகின்றேன். சான்றோர் கண்ட கனவு ஒருபோதும் பொய்ப்பதில்லை.

       ஞாயிற்றுக் கிழமை நான் (1.9.2013) அன்று தஞ்சையிலேயே இருந்தாலும் மனம் என்னவோ, வடபழநியைத்தான் கிரி வலம் வந்து கொண்டிருக்கும்.

      பதிவர் மாநாடு வெல்லட்டும்.     புதுமைகளைப் படைக்கட்டும்.
    

     

22 ஆகஸ்ட் 2013

கரந்தை - மலர் 19

தமிழர்களும் காந்தியும்

     மொழிகளில் எல்லாம் தூயதும், இனியதும், தொன்மையானதுமாகிய, நம் செந்தமிழ் மொழியானது, மக்களிலெல்லாம் இனியவரும், தூயவரும், பெரியவருமாகிய மகாத்மாவைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.  முப்பத்தி ஆறாவது வயதில், தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கிய காந்தி மகான், முதிய வயதில் மறையும் வரை, தமிழ் மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது ஒவ்வொரு தமிழரும் எண்ணி எண்ணிப் பெருமைப் பட வேண்டிய ஒன்றாகும்.


     மாக்ஸ், முல்லர், போப், பெஸ்கி, ஹீராஸ் போன்ற அந்நிய நாட்டு அறிஞர்களைக் கவர்ந்து ஆட்கொண்ட, நம் மொழி, நம் நாட்டு மகானையும் கவர்ந்தது.
சபர்மதி ஆஸ்ரமம்

     ஆசிரமத்தில் நாங்கள் தமிழர்கள் இல்லாது, சில சமயங்களில் வழிபாடு நடத்தியிருக்கலாம், ஆனால் தமிழ்ப் பாடல்கள் பாடாது நடத்தியதில்லை என்று ஆச்சார்ய கலேல்கார் கூறுகிறார் என்றால், மகாத்மாவின் தமிழ்ப் பற்றை இதிலிருந்தே அறியலாம்.

     முதன் முதலில் காந்திஜி தமிழ் கற்கத் தொடங்கினாரே அது ஏன்? இது பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. தமிழருக்குப் பட்ட நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தவே, தமிழை மகாத்மா கற்க முற்பட்டார் என்று ஒரு சாரர் கூறுவர். திருக்குறளைக் கற்க வேண்டும் என்ற பேர் அவாவின் காரணமாகவே, அவர் தமிழ் கற்றார் என்று மற்றொரு சாரர் கூறுவர். ஆனால், இவை இரண்டுமே உண்மைதான். மகாத்மாவே இவ்விரண்டையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயினும் முதன்மையான காரணம் எண்ண?

     தென்னாப்பிரிக்காவில் தொடங்கப் பெற்ற போராட்டங்களில் தமிழர் அளவுக்கு, வேறு எந்த இந்திய மொழி பேசும் வகுப்பினரும் தியாகம் செய்யவில்லை. ஆக்கம் தரவில்லை என்று மகாத்மா காந்தி மனதாரக் கருதினார். ஆகவே உயிரைத் துச்சமாக எண்ணி, பொருள் இழப்பைப் பற்றிக் கவலைப் படாது, சிறைக்குச் செல்வதை விருந்துக்குப் போவதுபோல் விரும்பிப், பன்முறை முற்றுகையிட்டுத் தம்முடன் ஒத்துழைத்தத் தமிழர்களுக்கு சிறந்த முறையில் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.


    
மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க ட்ரான்ஸ்வால் போராட்டக் காட்சிகள்
  இந்தியன் ஒப்பீனியன் என்னும் இதழில 5.6.1909 அன்று காந்திஜி அவர்கள், தான் எழுதிய கட்டுரையில், தாம் அக்கறையுடன் தமிழைக் கற்க வேண்டும் என்று விரும்பியதற்கானக் காரணத்தை, அவரே கீழ்க் கண்டவாறு விளக்கி எழுதியிருக்கிறார்.

இந்த ட்ரான்ஸ்வால் போராட்டத்தில் தமிழர்களுக்கு இணையான அளவு, இந்தியர்களில் வேறு எவருமே பங்கேற்கவில்லை. ஆகையால் தமிழை நான் மிகுந்த கவனத்துடன் கற்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வேறு காரணத்திற்காக அல்லாவிட்டாலும், என் மனத்தளவிலாவது என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக நான் தமிழைக் கற்றேன். நான் அம்மொழியைப் படிக்கப் படிக்க, அதனுடைய அழகுகளை கண்டு அனுபவிக்கிறேன். அது மிக மிக எழில் நிறைந்த இனிய மொழி. அதனுடைய அமைப்பில் இருந்தும், அதில் நான் படித்தவற்றுள் இருந்தும், தமிழர்கள் மத்தியில், புத்திக் கூர்மையும், சிந்தனா சக்தியும் உள்ள, விவேகம் நிறைந்த ஏராளமான மக்கள் இருந்திருக்கிறார்கள், மேலும் மேலும் அவர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன் என்று எழுதியுள்ளார்.

                   கற்க கசடற கற்பவை கற்றபின்
                   நிற்க அதற்குத் தக

என்ற குறள் அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

                   திக்கற்றவருக்குத் தெய்வமே துணை

என்ற தமிழ்ப் பழமொழியை எண்ணி எண்ணி மகிழ்வார்.

                   பிறப்புண்டேல் இறப்புண்டு

என்ற பழமொழியும் அவருக்கு மிகவும் பிடித்த பழமொழியாக விளங்கியது.

     திருக்குறளுக்கு அடுத்தாற்போன்று, அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பக்திப் பெரு நூல் மாணிக்க வாசகப் பெருமானின் திருவாசகம் ஆகும். அதிலும்

              முத்திநெறி  யறியாத  மூர்க்கரொடு  முயல்வேனைப்
              பக்திநெறி  யறிவித்துப் பலவினைகள்  பாறும்வண்ணம்
              சித்தமல  மறுவித்துச்  சிவமாக்கி  யெனையாண்ட
              அத்தனெனக்  கருளியவா  றார்பெறுவா  ரச்சோவே

என்ற பாடலினை, சேவா கிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்திலும் நாள்தோறும் பாடச் செய்து, கேட்டு அவர் பேரானந்தம் அடைவார். மேலும் சென்னைக்கு வெளியே உள்ளவர்களும் தமிழைக் கற்க வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரைகளில் எழுதியதில் இருந்தே, அவர் தமிழ் மொழியின் மேலும் தமிழர்களின் மீதும் வைத்திருந்த அன்பையும் பாசத்தினையும் உணரலாம்.

தமிழ் நாட்டில் காந்தி

     காந்திஜி அவர்கள் முதன் முதலாகத் தமிழகத்திற்கு வந்தது 1896 ஆம் ஆண்டிலாகும். அவர் கடைசி முறையாக தமிழகத்திற்கு வந்தது 1946 ஆம் ஆண்டிலாகும். இந்த ஐம்பது ஆண்டுகளில், காந்திஜி 28 முறை தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

     காந்திஜியின் வாழ்வில் தமிழகம் எத்துனையோ முதன்மைகளை அடைந்திருக்கின்றது. காந்திஜி தோற்றுவித்த புது சகாப்தத்தில், எதிரி மீது, ஆத்திரமோ கோபமோ கொள்ளாது மனம் உவந்து உயிர் நீத்த உண்மைத் தியாகிகளின் முதல் வரிசையில் வள்ளியம்மா, நாகப்பன், நாராயண சாமி ஆகிய தமிழர்கள்தான் தலைமை இடத்தினைப் பெற்றார்கள்.

     1932 ஆம் ஆண்டில் கொடியேந்தி ஊர்வலம் சென்றபோது, போலீசாரால் அடிபட்டு உயிர் நீத்த, கொடி காத்த குமரனை தமிழகம் உள்ளவரை மறக்க இயலுமோ? தென்னாப்பிரிக்காவில் பாமர மக்களின் நண்பரான காந்தியிடம், முதன் முதலாக பாமர மக்களை, கூலிகளைக் கொண்டு வந்து இணைத்து வைத்தவன் பாலசுந்தரம் என்ற ஒரு தமிழன் அல்லவா.

     முதன் முதலாக இந்தியா முழுமைக்குமான ஒரு போராட்டத்தை எவ்வாறு தொடங்குவது என்பதில் விடைகாண இயலாமல் தவித்துக் கொண்டிருந்த, அகிம்சா வீரருக்குக் கனவு மூலம் விடை கிடைத்தது தமிழகத்தில்தான். வாழ்நாள் எல்லாம் மாணவர்களுடன் இணைபிரியாத நட்பு கொண்டிருந்த வள்ளலுக்கு, மாணவர்களின் தொடர்பு முதன் முதலில் கிடைத்தது தமிழகத்தில்தான்.

     மேல் அங்கியைக் கழற்றி எறிந்து விட்டு, அரை ஆடை உடுத்தி தரித்திர நாராயணர்களுடன் அவர் ஐக்கியமடைந்தது தமிழகத்தில்தான்.

     முதன் முதலாக அவருக்குத் தேசப் பிதா என்ற பட்டத்தைச் சூட்டியவர்கள் தமிழக மாணவர்கள்தான். இவ்வாறு பல முதன்மைகள் தமிழகத்திற்கு உண்டு.

     காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து இந்திய அரசியலில் கால் பதித்தபோது, தமிழக அரசியலில் பாரப்பணரல்லாதார் இயக்கம் வீச்சுடன் மேலெழுந்து கொண்டிருந்தது.

தஞ்சையில் காந்தி

     தமிழகத்திற்கு 28 முறை வந்த காந்தியடிகள், அதில் ஏழு முறை தஞ்சைக்கு வருகை புரிந்துள்ளார். 1919 ஆம் ஆண்டில் மார்ச் 24 மற்றும் 28 தேதிகளிலும், 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 16 ஆம் தேதியும், 1921ஆம் ஆண்டில் செப்டம்பர் 18 ஆம் தேதியும், 1927 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16 ஆம் தேதியும், 1934 ஆம் ஆண்டில் பிப்ரவரி 15 ஆம் தேதியும், 1946 ஆம் ஆண்டில் பிப்ரவரி 4 ஆம் தேதியும், என ஏழு முறை தஞ்சைக்கு வருகை தந்துள்ளார்.

       1927 ஆம் ஆண்டு கதர் திட்டத்தை விளக்குவதற்காகத் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த காந்தியடிகள், கதர் வளர்ச்சியைப் பற்றி மட்டுமல்லாமல், பிராமணர் பிராமணரல்லாதார் சிக்கலைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு இந்த சிக்கல் 1927 இல் தமிழகத்தில் விசூவரூபம் எடுத்திருந்தது.  ஆகையால் இந்த சிக்கலைத் தீர்த்து வைக்க அவர் உதவி வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர்.

            தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடி வந்த காந்திஜி அவர்கள், மன்னார்குடியிலிருந்து, நாகப்பட்டிணம் பாசஞ்சர் தொடர் வண்டி மூலம் 16.6.1927 ஆம் நாள் காலை, தனது குழுவினருடன் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கி விடுவார் என்பதை அறிந்திருந்த, தஞ்சை மக்கள், தஞ்சைக்கு கூட்டுரோடு வழியாக நுழையக் கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் காந்திஜி இம்முறை அவ்வாறு இறங்கவில்லை. திட்டமிட்டபடி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். தஞ்சையில் காந்திஜி குழுவினர் உக்கடை இல்லத்தில் தங்கினர்.

     தஞ்சாவூரில் நடைபெற்ற முக்கிய காரியம், நீதிக் கட்சியைச் சார்ந்த உயர் தலைவர்களான, சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களும் உமாமகேசுவரனார் அவர்களும் காந்தியைச் சந்தித்து உரையாடியதே அகும்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா.


15 ஆகஸ்ட் 2013

கரந்தை - மலர் 18





----- கடந்த அத்தியாயத்தில் -------
தமிழ் மொழியை விட்டால் தமிழர்க்கு வேறு சிறப்பில்லை. தங்கள் முயற்சி நன்கு நடைபெறுக வென்று திருவருளை வேண்டுகிறேன்.
---------------------------------------
 தமிழ்ப் பொழில் இதழினைக் கண்ணுற்ற புலவர் அ.வரத நஞ்சைய பிள்ளை அவர்கள், இவ்விதழினை வாழ்த்தி இயற்றியப் பாடலைப் பாருங்கள்

              வாழ்க நம் தமிழ்த்தாய்  வாழ்க நம்  தனிமொழி
              ஓங்குக  மேன்மேல்  ஓங்குக  நாடொறும்
              ஊழியோர்  கணமா  வுலப்பில்பல்  லாண்டெலாம்
              வாழியர்  தமிழகம் மக்களொடு  மகிழ்ந்தே
              புகழ்பொருள்  வேட்காத  கடமை  பேணி
              முன்னைநாள்  நிலைமை  நன்னாராய்ந்  திந்நாள்
              அன்னையாந்  தமிழண்ங்  கரந்தை  கூரப்
              பிறமொழி  கவர்ந்த  புறமொழி  நாணித்
              தஞ்செயல்  மீட்ப  தாமெனத்  துணிவுறீஇக்
              கரந்தை  யூன்றிய  கழகந்  தொடங்கின
              நான்முத  லிதுகாறு  நற்றமிழ்க்  குழைத்த
              தொண்டின்  பயனாத்  தோன்றித்  தழைத்தது
              தமிழ்ப்  பொழில் அம்ம தமிழர்காள்  வம்மின்
              தாயடி  நிழலிற்  றங்கிவெப்  பொழிமின்
              ஆண்டு  தோறும்  நீண்டுவளர்  துணராற்
              றிங்கட்  கோர்  செழுமலர்  பூத்து
              நறுமணம்  வீசி  நலிவுதீர்க்  கும்மே
              தலைமிசைப்  புனைமின்  விழியி லொற்றுமின்
              மார்புற  அணைமின் தோண்மிசை  தாங்குமின்
              காட்சிக்  கினியது  கைக்குமெல்  லியது
              நாவிற்கினிய  நறுந்தேன்  சுரப்பது
              கேட்குஞ்  செவிபிற  கேளாது  தகைவது
              உற்றுநோக்  குளத்துக்  குவகைமிக்  கீவது,
              இம்மை  மறுமை  யிரண்டுமிங்  களிப்பது

தமிழ்ப் பொழில் தொடங்கிய காலத்தில், இவ்விதழின் ஆண்டு சந்தா, சங்க உறுப்பினர்களுக்கும், மாணவர்களுக்கும் ரூ.2 மட்டுமே ஆகும். ஏனையோருக்கு ரூ.3 ஆகும்.

     தமிழ்ப் பொழிலில் வெளிவரும் கட்டுரைகள், தூய தமிழில் வெளி வந்தன. எனினும் நடை கடினம் என்று அவ்வப்போது சிலர் குறை கூறியதுண்டு. அதற்கு உமாமகேசுவரனார் அவர்கள் அளித்த விளக்கம்,  இன்றும் நாம் அனைவரும் எண்ணி எண்ணிப் பெருமைப்பட வேண்டிய ஒன்றாகும்.

     இறைவன் திருவருளாலும், தமிழ் மக்கள், தமிழ்ப் புலவர்கள் ஆதரவாலும், பொழில் பதினாறு ஆண்டு, இப்பங்குனித் திங்களோடு நிறையப் பெற்றுள்ளது. பொழில் தோன்றிய காலத்தும், பின்னும், எந்தெந்த வழிகளிலெல்லாம் பொழில் தமிழகத்திற்குப் பயன்பட வேண்டுமென்று எண்ணினோமோ, அந்தந்த வழிகளிலெல்லாம் பயணித்துள்ளது என்று கூறுவதற்கில்லை. ஒருவாறு காலந்தள்ளி வந்தது என்றே நாம் கூறலாம்.

     ஆறாயிரம் மைலுக்கு அப்பாலுள்ளள ஆங்கில மொழியையும், ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பெழுந்த வடமொழி நூல்களையும், இடர்பாடு சிறிதுமின்றிக் கற்கவும், கற்று மகிழவும், பிறர்க்குக் கூறிப் பரப்பவும் ஆற்றலுடைய நம் தமிழகத்துத் தமிழ் மொழியின் தூய சொற்கள், பொருள் விளங்கிப் பயன்தர ஆற்றாவாயின், அது யாவர் குறை? பயிற்சிக் குறைவன்றோ? சொல்லாலும் பொருளாலும் பேசவும் எண்ணவும் இனிமை தரும் எம் தாய்மொழி, இன்று இவ்வாறாயிற்றே என்று யாம் வருந்துதல் பயனென்ன? தமிழோடு தொடர்புடைய வேற்று நாட்டவரும், இம்மொழியின் நன்மை உணர்ந்து போற்றுமிடத்து, நம்மவர் யாம் பொருளுணர மாட்டோம், யாம் பொருளுணர ஆற்றேம் எனக் கூறுவது, இதுகாறும் ஏழு வியப்போடு நின்ற இவ்வுலகத்து எழுந்த எட்டாவது வியப்பென்றே எண்ணுகிறோம்...பொழிலின் நறுமணம் நாற்றிசையும் பரந்து உலகை மகிழ்விக்கத் தமிழ்த் தெய்வம் துணை செய்வதாக.

     பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழைப் பற்றி தமிழ் மக்கள் அறியாதிருப்பது குறித்து உமாமகேசுரனார் கொண்ட துயரம் இதில் புலனாகிறது.
 
1925, 1950, 1986 மற்றும் 2014 இல் தமிழ்ப் பொழில் 
     தமிழ்ப் பொழில் இதழின் தொடக்க இதழ்கள் தஞ்சை, லாலி அச்சுக் கூடத்தில் அச்சிடப் பெற்றன. ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதிகளில் பொழில் இதழானது அச்சாகி வெளி வருவதில் தாமதமேற்பட்டது. தமிழ் மாதத்தின் முதல் நாளில் பொழில் இதழ் வெளிவர வேண்டும் என்று உமாமகேசுவரனார் விரும்பினார். ஆனால் அச்சகத்தில ஏற்படும் தடங்கல்கள் காரணமாக, இதழினை குறிப்பிட்ட தேதிகளில் வெளிக் கொணர்வதில் தொடர்ந்து தடைகள் தோன்றத் தொடங்கின. இத் தடைகளிலிருந்து மீண்டு வருவதற்கு உமாமகேசுவரனார் வழி ஒன்றும் கண்டார். அதுவே இன்றைய கூட்டுறவு அச்சகமாகும்.

     நீதிக் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய உமாமகேசுவரனார்,  கூட்டுறவு இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.  கூட்டுறவு சங்கங்கள் மூலம் வேளாளர், வணிகர், நடுத்தர மக்கள் முதலானோர்க்குக் கடன் கொடுத்து, மிகுந்த வட்டி வாங்கும் லேவா தேவிக்காரர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்து, அவர்களுடைய கடன் சுமையைக் குறைப்பதோடு, அவரவரும் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது நீதிக் கட்சியின் கொள்கைகளுள் ஒன்றாகும்.  சில தொழில்களைக் கூட்டுறவுச் சங்கங்களே ஏற்று நடத்த வேண்டும் என்பது அக்கட்சியினரது திட்டமாகும். எனவே நீதிக் கட்சியின் ஆட்சி காலத்தில், பல கூட்டுறவு சங்கங்கள் தோன்றின. மக்களுக்கு உதவி புரிந்தன. உமாமகேசுவரனார் அவர்களும் கூட்டுறவு இயக்கத்தில் பங்குகொண்டு, கூட்டுறவுச் சங்கங்கள் பலவற்றைத் தோற்றுவித்தார்.

திராவிட கூட்டுறவு வங்கி

      உமாமகேசுவரனாரின் அரிய முயற்சியால் 1919 ஆம் ஆண்டு, கரந்தையில், திராவிடக் கூட்டுறவு வங்கி ஒன்று தொடங்கப் பெற்றது.

கூட்டுறவு நிலவள வங்கி

     கூட்டுறவு வங்கியினைத் தொடர்ந்து, 10.9.1926இல் உமாமகேசுவரனார் அவர்களால், தஞ்சையில் கூட்டுறவு நிலவள வங்கி ஒன்றும் தொடங்கப் பெற்றது. இவ்வங்கி தற்போது தஞ்சை, இராசப்பா நகரில் செயல்பட்டு வருகின்றது.

தஞ்சை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம்

     1939 ஆம் ஆண்டு உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியால், தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி விற்பனைக் கழகம் ஒன்றும் தொடங்கப் பெற்றது. மானோஜியப்பா வீதியில் தொடங்கப் பெற்ற இக் கழகம், தற்போழுது நாஞ்சிக் கோட்டை சாலையில் இயங்கி வருகின்றது.

தஞ்சாவூர் கூட்டுறவு அச்சகம்

     தமிழ்ப் பொழில் இதழினை திங்கள்தோறும் தவறாது வெளிக் கொணர விரும்பிய உமாமகேசுவரனார் அவர்கள், தமிழன்பர்கள் பலரின் உதவியோடு, கூட்டுறவு முறையில் அச்சகம் ஒன்றைத் தொடங்கினார். இக் கூட்டுறவு அச்சகம், 16.2.1927 முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு அருகிலேயே, இராமர் கோவிலுக்கு அருகில் செயல்படத் தொடங்கியது. தற்சமயம் இவ்வச்சகம் தஞ்சைக் கூட்டுறவு அச்சகம் என்னும் பெயரில் மருத்துவக் கல்லூரி சாலையில் இயங்கி வருகின்றது. இன்றும் இந்த அச்சகத்திற்குச் செல்வோர், உமாமகேசுவரனாரின் திருஉருவப் படம், இவ்வச்சகத்தின் வரவேற்பறையை அலங்கரிப்பதைக் காணலாம்.

     கூட்டுறவு அச்சகத்தின் தோற்றத்திற்குப் பின், சங்கத்தின் அனைத்து அச்சுப் பணிகளும், இந்த அச்சகத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. தமிழ்ப் பொழில இதழும் காலந் தாழ்த்தாது வெளிவரத் தொடங்கியது.

     1925 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்ற தமிழ்ப் பொழில் இதழானது, வணிக நோக்கமின்றி, விளம்பரங்கள் ஏதுமின்றி இன்றும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது.
.....வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா