01 செப்டம்பர் 2013

திருவள்ளுவர் தவச்சாலை

   
  

    
      வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள்  வைக்கப்  படும்

என்றார் திருவள்ளுவர். இப்புவியில் வாழும்போதே, தங்கள் சொல்லால், எழுத்தால், செயலால், தங்கள் வாழ்க்கை முறையால் தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர்கள் பலர், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     நண்பர்களே, நாம் அனைவரும், நமது வாழ்வின் பல்வேறு கால கட்டங்களில், பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். புனிதத் தலங்கள் பலவற்றைக் கண்டு, மெய்மறந்து வணங்கி, இறைவனோடு ஒற்றெணக் கலந்து பரவசப் பட்டவர்கள்தான்.

      நண்பர்களே, ஒரு முறை, ஒரே ஒரு முறை என்னோடு வருகிறீர்களா?அன்னைத் தமிழின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் அர்ப்பணித்து, தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்ற ஒரு தமிழ் முனிவரின் தமிழ்த் தலத்திற்குத் தங்களை அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். வருகிறீர்களா?

     நன்றி நண்பர்களே, அழைத்தவுடன், சிறிதும் தயங்காது, மனதில் மகிழ்ச்சியோடும், உதட்டில் மலர்ச்சியோடும் பயணப்பட இசைந்தமைக்கு நன்றி.

     வாருங்கள், வாகனம் தங்களுக்காகத் தயாராகக் காத்திருக்கின்றது. அமருங்கள். புறப்படலாமா?

     இதோ தஞ்சையிலிருந்து புறப்பட்டு விட்டோம். இதோ திருச்சி சத்திரம் பேரூந்து நிலையம். இதோ நமது வாகனம் கரூர் சாலையில் பயணிக்கின்றது. வலது புறம் காவிரி. இடது புறம் சிறு சிறு சிற்றூர்கள். முத்தரச நல்லூரைத் தாண்டிவிட்டோம்.

     இதோ அல்லூர். இதுதான் நண்பர்களே, நாம் காண வந்த தமிழ்த் தலம். புண்ணிய பூமி.


     திருக்குறளுக்குக் கோயில் எழுப்பி, வள்ளுவமாய், வாழும் வள்ளுவராய் வாழ்ந்து வரும்,
தமிழ்க் கடல்
உலகப் பெருந் தமிழர்
செந்தமிழ் அந்தணர்
முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களின்
திருவள்ளுவர் தவச்சாலை.


    
வணக்கம் ஐயா, வாருங்கள். நம்மை அன்போடு அழைக்கின்றார்.

     அகவை 85ஐக் கடந்தபோதும், மலர்ந்த முகம், ஒடிசலான தேகம், தெளிவான தமிழ்ச் சிந்தனை, இனிமையானச் சொற்களுக்குச் சொந்தக்காரர்.



     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகேயுள்ள, வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில், ராமு – வாழவந்தாள் தம்பதியினரின் அருமை மகனாய்த் தோன்றியவர்.

     பள்ளிக் கூடமே இல்லாத, வாழவந்தாள் புரத்தில், பள்ளிக் கூடம் ஒன்றினை உருவாக்கி, தானே ஆசிரியராகவும் பணியாற்றியவர். பின்னர் கரியவலம் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனது குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, தனது ஓய்வூதியத் தொகை முழுவதையும் செலவிட்டு, திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச் சாலையினை நிறுவித், தமிழ் முனிவராய் வாழ்ந்து வருபவர்.

       திருக்குறள் வகுப்புகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருபவர். இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டத் திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்தி வைத்துள்ளார். தொடர்ந்து நடத்தியும் வருகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

     இளங்குமரனார் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் என்னும் நூலின் பத்து தொகுதிகளை, 1963 இல் வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு.

     புதுமணை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, மணி விழா, பெயர் சூட்டு விழா மற்றும் இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்தையும், தமிழ் முறைப்படி. தூய தமிழிலே பாங்குடன் செய்து வருபவர்.

     தமிழில் எப்படி விழாக்களை நடத்துவது? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் நெறிக் கரணங்கள் என்னும் நூலொன்றினையும் எழுதி வெளியிட்டவர்.

     தனது காலத்திற்குப் பிறகும், இப்பணியினைத் தொடர்ந்து திறம்பட நடத்திட, தமிழகம் முழுவதும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழின் பெருமையினைக் காத்து வருபவர்.

பணியுமாம் என்றும் பெருமை
என்பார் வள்ளுவர். இதற்குப் பொருள் விளங்காதவர்கள், ஐயா அவர்களைக் கண்ட ஒரு சில நொடிகளிலேயே, இக்குறளின் பொருளை முழுமையாய் உணர்வர்.

     தமிழ்க் கடல் இளங்குமரன் ஐயா அவர்கள் தனது வாழ்வியல் அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு என்ன தெரியுமா? ஒரு புல்.

             மனிதரெலாம்  அன்புநெறி  காண்ப  தற்கும்
                   மனோபாவம்  வானைப்போல்  விரிவடைந்து
             தனிமனித  தத்துவமாம் இருளைப் போக்கிச்
                   சகமக்கள்  ஒன்றென்ப  துணர்வ  தற்கும்
             இனிதினிதாய்  எழுந்தஉயர்  எண்ண  மெல்லாம்
                   இலகுவது  புலவர்தரு  சுவடிச்  சாலை
             புனிதமுற்று  மக்கள்புது  வாழ்வு  வேண்டில்
                   புத்தகசா  லைவேண்டும்  நாட்டில்  யாண்டும்

எனப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தரின் எண்ணம் செயலாக்கம் பெற்ற இடம்தான் தமிழ்க் கடலின் இல்லம். இல்லம் என்பது தவறு நண்பர்களே. நூலகம் என்பதுதான் உண்மை. வீட்டிற்கொரு நூலகம் அமைக்கச் சொல்வார் பாவேந்தர். ஆனால் இளங்குமரனாரே நூலகத்தில், தனது இல்லத்தை அமைத்தவர்.

     பாவாணர் நூலகம். சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள். மலைப்பு ஏற்படுகிறது. அத்துனைப் புத்தகங்களின் ஒவ்வொரு ஏட்டிலும் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும், கரைத்து ரசித்துக் குடித்தவர் இளங்குமரனார். திருக்குறளுக்கு இதுவரை இவ்வுலகில் எழுதப்பட்ட உரைகள் அனைத்தும் இவரிடம் தஞ்சம். இளங்குமரன் ஐயா அவர்களே இதுவரை, திருக்குறளுக்காக மட்டும் எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வெளிநாட்டினர் உட்பட, யார் வேண்டுமானாலும், இங்கு வந்து தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம்.



     அடுத்ததாகக் கலைக் காட்சியகம். தமிழ் இனம், தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியங்களுக்காகத் தொண்டாற்றிய, நூற்றுக் கணக்கானத் தமிழறிஞர்களின் படங்களைக் கொண்ட கலைக் காட்சியகம் ஒன்றினையும் தனது இல்லத்திலேயே ஏற்படுத்தி பராமரித்து வருகின்றார். இக்கலைக் காட்சியகம், இதுவரை நாம் கண்டிராத வேறொரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

      இளங்குமரனார் ஐயா அவர்கள், தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் மாமலைகளின் அன்பிற்கு உரியவர். அப்பெரியோர்கள், இளங்குமரனாருக்குத், தங்கள் கைப்பட எழுதியக் கடிதங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
 
சோமசுந்தர பாரதியாரின் கடிதம்
               
மறைமலை அடிகளாரின் கடிதம்
                பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்
                பார்வை சரியாக இருந்தால்

                உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்
                உள்ளம் சிறுத்தால் உறவும் பகையே

                காரணம் சொல்பவன் கடமை செய்யான்
                தம்துயர் தாங்கார் பிறர்துயர் தீரார்

                வாழ்ந்த நாளிலேயே வீடுபேறு பெறாதவன்
                வீழ்ந்த பின்னரா பெறுவான்

கலைக் காட்சியகத்தின் சுவர் முழுவதும் காணப்படும் வாசகங்கள், நம்முள் எழுச்சியினையும், கிளர்ச்சியினையும், புதிய சிந்தனைகளையும் உண்டாக்குகின்றன.

     இல்லத்தின் பின்புறம், இயற்கையை மனிதம் பாழாக்காதிருக்க, நல் அறிவுரைகளை வாரிவழங்கும் இயற்கை நல நிலையம்.

     திருவள்ளுவர் தவச்சாலையின் வாயிற் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே செல்வோமானால், வலது புறத்தில் ஓர் ஆலயம்.

                    

                         
                       திருக்குறள் நம்மறை – நெறி

                      திருக்குறள் வாழ்வியல் நடைநூல்
                      அது, மாந்தரை மாந்தர் ஆக்கும்
                      அது, மாந்தரை சான்றோர் ஆக்கும்
                      அது, மாந்தரை தெய்வம் ஆக்கும்
                      மாந்தப் பிறவியின் நோக்கு, தெய்வமாதல்

என நமக்கு அறிவுறுத்தி, முதலில் மனிதனாகலாம் வா, என நம்மை அழைக்கிறது திருக்குறள் ஆலயம்.

      ஆலயத்தின் கருவறையில், குறளின் அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் மூன்றும் மும் மலைகளாய் காட்சியளிக்கின்றது. நடுவினில திருவள்ளுவர்.

     மும் மலைகளும் சிறுசிறு கற்களால் வடிவமைக்கப் பட்டவை. இளங்குமரனார் ஐயா அவர்களின் திருவடி படாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம். தமிழகத்தில் தான் காலடி பதித்த, ஒவ்வொரு ஊரில் இருந்தும், 1984 முதல் 1994 வரை பத்தாண்டுகளில், இவர் சேகரித்த கற்களின் எண்ணிக்கை 1330.

     அறத்துப் பாலில் 380 குறள்கள். எனவே 380 கற்களை உடைய ஒரு மலை. பொருட் பால் பெரியது. மொத்தம் 700 குறட்பாக்கள். எனவே 700 கற்களை உடைய ஒரு பொருட்பா மலை. இன்பத்துப் பால் சிறியது. மொத்தமே 250 குறள்கள்தான். எனவே 250 கற்களை உடைய ஒரு சிறு மலை.

     திருக்குறளின் முப் பாலையும் குறிக்கும், மும் மலைகளுக்கு முன்னதாக, மனிதனின் இரு பாதச் சுவடுகள்.

     ஏன் தெரியுமா? திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல. பின் பற்றி நடப்பதற்கு என்பதனை உணர்த்தவே, இப்பாதச் சுவடுகள்.

     இத் திருக்குறள் ஆலயத்தில் தீப ஒளி வழிபாடு கிடையாது. ஊது பத்தி வழிபாடு மட்டும்தான். ஏன் தெரியுமா? இதற்குப் பெரும்புலவர் ஐயா அவர்கள் கூறும் விளக்கம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதனை அவரே கூறுகிறார் கேளுங்கள்.

     ஊது பத்தியினைப் பாருங்கள். அதன் உருவத்தினை நோக்குங்கள். ஒரு மெல்லிய குச்சியினை, நெருப்பினையும், புகையினையும், நறுமனத்தினையும் உண்டாக்கும் ஒரு பசை பற்றியிருக்கின்றது. ஊது பத்தியினைப் பற்றவைப்போமேயானால், குச்சியினை பசை பற்றியிருக்கின்றவரை நெருப்பு தொடரும். பற்றியிருக்கும் பசை முடிந்தவுடன் ஊது பத்தி நின்றுவிடும். அதுபோலத்தான் மனித வாழ்வும்.

    
நம் மனத்தினை ஆசை, பேராசை, வெறுப்பு, கோபம் என்றும் பற்று, பற்றியிருக்கும் வரைதான், போராட்டங்களும், வருத்தங்களும், துயரங்களும், வேதனைகளும். பற்றைத் துறப்போமானால் தெய்வ நிலையினை அடையலாம்.

     திருக்குறள் கோயில் வளாகத்திலேயே மன வள நிலையம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

     ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், பயணம், பயணம், பயணம்தான். திருமணம், சொற்பொழிவு என்று ஓயாத பயணமே இவரின் வாழ்க்கை. ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்று மட்டும், உலகப் பெருந்தமிழரை, திருவள்ளுவர் தவச்சாலையில் சந்திக்கலாம்.

     ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க் கிழமையன்று, அல்லூரில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும், குடும்பப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு, மீள வழியின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு, தக்க மன நல ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் சிந்தனையினைத் தொடும் வண்ணம், எடுத்துரைத்து, புத்தம் புது மனிதராய் மாற்றி அனுப்புவதை வழக்கமாய் கொண்டுள்ளார்.

                  தேரிழுக்கச்  செல்வாரில்  தீயணைக்கச் செல்வாரே
                நேருயர்ந்த மேலார் நினை
என்னும் உன்னத எண்ணத்தின் வழி நின்று, உயரிய வாழ்வினை வாழ்ந்து வரும் இளங்குமரனார் ஐயா , அவர்கள் பேசத் தொடங்கினாலே தமிழருவி கொட்டும், தமிழமுதம் பொங்கும்.

      நா து என்னும் சொல்லொன்றினைக் கூறினார். சிலப்பதிகாரத்தில் நா து என்னும் சொல் வருகிறது. நா என்றால் நாக்கு. து என்றால் துணை. அதாவது பேச்சுத் துணை.

     ஒரு பெண் திருமனமாகி, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, தன் கணவரின் சகோதரியே, புது மணப் பெண்ணிற்கு சிறந்த பேச்சுத் துணையாய், தோழியாய் அமைவார். எனவே கணவரின் சகோதரியைக் குறிக்கும் சொல்லே நா து என்பதாகும். இது ஒரு காரணப் பெயர். பின்னாளில் இப்பெயர் மருவி, மாறி இன்று, நாத்தனார் என வழங்கப் படுகிறது என்றார். பெரும் புலவர் இளங்குமரனார் ஒரு நடமாடும் தமிழ்க் களங்சியம்.


                    
                        நல்லோரைக் காண்பதும் நன்றே
                     நல்லோர் சொல் கேட்பதும் நன்றே
என உரைப்பர் நம் முன்னோர். அப்படிப் பட்ட ஒரு நல்லோரை, தமிழில் இமயம் போல், உயர்ந்தோரை, வள்ளுவத்தின் வழி நின்று வாழ்ந்து வருவோரைச் சந்தித்தது, தங்களுக்கும், மகிழ்ச்சியினை, மன நிறைவினை, புத்துணர்ச்சியினை, உங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் என நம்புகின்றேன் நண்பர்களே.

     இச்சிறியேனின் அழைப்பினை ஏற்று, என்னுடன் பயணித்தமைக்கு, நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா..

     



29 கருத்துகள்:


  1. அருமை ஐயா.அருமை. நா. து. விளக்கம் இதுவரை கேள்விப்படாதது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தமிழ்த் தலம். புண்ணிய பூமி.

    நல்லோரைக் காண்பதும் நன்றே
    நல்லோர் சொல் கேட்பதும் நன்றே
    என உரைப்பர் நம் முன்னோர். அப்படிப் பட்ட ஒரு நல்லோரை, தமிழில் இமயம் போல், உயர்ந்தோரை, வள்ளுவத்தின் வழி நின்று வாழ்ந்து வருவோரைச் சந்தித்தது, தங்களுக்கும், மகிழ்ச்சியினை, மன நிறைவினை, புத்துணர்ச்சியினை, உங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் என நம்புகின்றேன்

    சிறப்பான மன நிறைவு தரும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம்.

    எல்லோருக்கும் வாயப்பதில்லை இப்பேறு.

    ஐயாவுடன் சிதம்பரம் புகைவண்டிநிலையத்தில் (அன்றைக்கு அந்த வண்டி 45 நிமிடங்கள் தாமதம்.... தாமதத்திற்கு நன்றி) அவருடன் 1 மணி நேரம் அளவளாவியது அவரின் சொற்களை மனசேந்தியது இப்போது பசுமையாய்.

    மனநிறைவான பதிவு.

    இதுவே உங்களுக்குப் புண்ணியம்.

    பதிலளிநீக்கு
  4. வியக்க வைக்கும் அபூர்வமான தகவல்களுடன் - மன நிறைவு தரும் அருமையான பதிவு!..

    பதிலளிநீக்கு
  5. ஐயா இளங்குமரனாரை பற்றி பதிவிட்டதும், அவரை பார்த்ததும் மிக மிக மகிழ்ச்சியாகி விட்டது. இளங்குமரனார் ஐயாவும், என் மாமனாரும் திறக்குறள் தொண்டில் நல்ல நட்பு கொண்டவர்கள். இளங்குமரனார் ஐயா எங்கள் இல்லத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறார். இளங்குமரனார் ஐயா மிக மிக எளிமையானவர், அன்பானவர். ஐயாவை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டது. என் மாமனார் பெயர் குறளேந்தி. கோதண்டராமன் அவர்கள். அவரும் தமிழாசிரியராக அரசு பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எப்போதும் திருக்குறள் சிந்தனையோடே இருந்தவர். எங்கள் வீட்டு முன் தினமும் ஒரு திருக்குறள் என 25 வருடம் எழுதியவர். திருக்குறள் சம்மந்தமாக கட்டுரைகள் நூல் மூன்று வெளியிட்டு அது நூலக மதிப்பும் பெற்றது. பத்து மாதம் முன்னர்தான் என் மாமனார் மறைந்துவிட்டார். அவரின் இழப்பு ஐயாவிற்கு தெரியுமோ தெரியாதோ... அந்த நேரத்தில் வருத்தத்தில் அவர் வெளியூர் நண்பர்கள் பலருக்கு தெரிவிக்காமல் போய்விட்டது. தமிழுக்காக வாழ் நாள் முழுதும் தொண்டு புரிந்தவர்தான் என் மாமனார்.மாமானாரின் 70 வது வயது தொடக்கத்திலேயே எதிர்பாராத விதமாக இழந்துவிட்டோம். கடைசிவரை சுறு சுறுப்பாக இருந்தவர்தான். அன்றும் கூட ஒரு பட்டிமன்றத்தில் பேசி விட்டு வந்திருந்தார். நீங்கள் இளங்குமரனர் ஐயாவிடம் பேசினால் வேலூர் சத்துவாச்சாரி என்று என் மாமானாரின் பெயரை குறிப்பிட்டு விசாரியுங்கள். என் மாமனார் இளங்குமரனார் ஐயாவை பற்றி அடிக்கடி உள்ளம் நெகிழ கூறுவார். இந்த பதிவு மனதிற்கு உருக்கமாக இருந்தது. உங்களுக்கு மிக்க நன்றி! உங்களை போல் தமிழ் தொண்டாற்றும் பெரியோர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா தங்கள் மாமனார் திருக்குறள் பற்றி ஏதேனும் எழுதி வைத்துள்ளாரா?? அப்படி இருந்தால் என் மின்னஞ்சல் முகவரி suguna.solomon@gmail.com க்கு அனுப்பி வைக்க இயலுமா....🙏

      நீக்கு
  6. மிகவும் சிறப்பானவரை சந்தித்து அறியவும் தந்துள்ளீர்கள்.

    "நல்லோரைக் காண்பதும் நன்றே
    நல்லோர் சொல் கேட்பதும் நன்றே" கண்டு இன்புற்றோம்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ஜெயக்குமார் - தமிழ்க் கடல், உலகப் பெருந் தமிழர், செந்தமிழ் அந்தணர், முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களின்
    திருவள்ளுவர் தவச்சாலை பற்றிய பதிவு அருமை-

    "பணியுமாம் என்றும் பெருமை " - இளங்குமரனார் ஐயா அவர்கள், தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் மாமலைகளின் அன்பிற்கு உரியவர். அப்பெரியோர்கள், இளங்குமரனாருக்குத், தங்கள் கைப்பட எழுதியக் கடிதங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

    எவ்வளவு தகவல்கள் - எத்தனை நிகழ்வுகள் - பதிவு ஒரு முறை படித்தால் போதாது - மறுபடியும் மறுபடியும் படிக்க வேண்டும்.

    நல்வாழ்த்துகள் ஜெயக்குமார் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. திருச்சியில் இருந்தும் தெரியாமல் போய் விட்டது.
    பஸ்சில் சென்றால், முத்தரச நல்லூர் தாண்டி ,அல்லூர் இறங்கி,நடக்க எவ்வளவு தூரம் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. Hello, I am not getting your articles through Email. Why? Please look into it &do the needful.

    பதிலளிநீக்கு
  10. அருமையான அற்புதமான அழகான ஆழமான தமிழ் ஆர்வளறாம் பெருந்தகை தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ்க்கடல் இளங்குமரனார் பற்றிய உங்களின் படைப்பு செப்பேட்டில் பதிந்த பொன்னெழுத்துக்கள்.அய்யா அவர்களை நானும் ஒருநாள் கானவேண்டும் என்ற ஆவல் என்னுள் ஊற்றுநீராய் பெருக்கெடுத்துள்ளது.அற்புதமான படைப்பை வழங்கிய தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  11. அருமையான அற்புதமான அழகான ஆழமான தமிழ் ஆர்வளறாம் பெருந்தகை தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ்க்கடல் இளங்குமரனார் பற்றிய உங்களின் படைப்பு செப்பேட்டில் பதிந்த பொன்னெழுத்துக்கள்.அய்யா அவர்களை நானும் ஒருநாள் கானவேண்டும் என்ற ஆவல் என்னுள் ஊற்றுநீராய் பெருக்கெடுத்துள்ளது.அற்புதமான படைப்பை வழங்கிய தங்களுக்கு என்சிறம்தாழ்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  12. எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர், தனது மகனுக்கு புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் திருமணம் நடத்தினார். புலவர் அய்யா அவர்கள் தமிழ் முறைப்படி திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்கு முன்னர் யாரையும் கையிலிருக்கும் அரிசி, பூ போன்ற பொருட்களை தூவ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மணமக்கள் மணமேடையிலிருந்து கீழே இறங்கி, திருமண மண்டபத்திற்குள் இருப்பவர்களிடம் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொள்ள வருவார்கள், அப்போது அவற்றை அவர்கள் மீது தூவி வாழ்த்தச் சொன்னார். எல்லோரும் அதுபோலவே செய்தார்கள்.

    கல்லூரியில் பயின்ற போது புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் எழுதிய உரை நூல்களைப் படித்து இருக்கிறேன். திருச்சியில் இருந்தும் இதுவரை அவரது திருவள்ளுவர் தவச்சாலை சென்றதில்லை. போய்வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. வியக்க வைக்கும் பகிர்வு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. வாழ்ந்த நாளிலேயே வீடுபேறு பெறாதவன்
    வீழ்ந்த பின்னரா பெறுவான்//
    புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் பற்றிய தகவலை அறிந்து மகிழ்ந்தேன்

    பதிலளிநீக்கு
  15. அருமை ஐயா... மிகவும் விரும்பிப் படித்தேன்... நன்றிகள் பல... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  16. வியக்க வைக்கும் அற்புத பகிர்வுக்கு நன்றி சார்
    தங்கள் பணி தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  17. திருவள்ளுவர் தவச்சாலைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் நெடுநாள் மனதில் இருந்தது. களப்பணி போகும்போது அங்கு செல்லலாம் என நினைத்திருந்தேன். இம்முறை தாங்கள் என்னை மட்டுமன்றி, பிற நண்பர்களையும் களப்பணி அழைத்துச்சென்றுவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  18. பெருந்தகையாளர் இளங்குமரனார் அவர்களின் எழுத்துக்களில் சிலவற்றையேனும் விரைவில் புதிய பதிப்பாகக் கொண்டுவர முயற்சிக்கவேண்டும். இளைஞர்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும். –கவிஞர் இராய செல்லப்பா, சென்னை.

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பதிவுகள் பொக்கிஷம்தான். தமிழர்கள் பெருமைப் படவேண்டிய திருவள்ளுவர் தவச் சாலை பற்றிய விரிவான தகவல்கள் அளித்தமைக்கு நன்றி. இளங்குமரனார் போன்றவர்கள் விளம்பரமின்றி ஆற்றும் தமிழ்த் தொண்டு மெய் சிலிர்க்க வைக்கிறது.
    தமிழர்கள் அனைவரும் ஒருமுறை சென்று கட்டாயம் பார்த்து வரவேண்டிய தமிழ்த் தளத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. நிறைவான அருமையான அறிமுகம்
    அவசியம் ஒருமுறை சென்று தரிசித்துவரவேண்டும்
    என்கிற ஆவலை தங்கள் பதிவினைப் படிக்கிறவர்கள்
    அனைவருக்கும் ஏற்படுத்தும் அற்புதமான பகிர்வு
    எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. விளம்பரமில்லாது தமிழுக்கு தொண்டாற்றும்
    திரு இரா.இளங்குமரனார் போன்ற வித்தகர்களினால்தான்
    தமிழ் இன்னும் தளர்ச்சியில்லாமல்
    தளிர்த்து வளர்ந்துகொண்டிருக்கிறது .

    தமிழ் மக்கள் அறியும்வண்ணம்
    நல்ல பதிவை தந்தமைக்கு பாராடுக்கள்

    பதிலளிநீக்கு
  22. //தமிழ்த் தலம். புண்ணிய பூமி.

    நல்லோரைக் காண்பதும் நன்றே
    நல்லோர் சொல் கேட்பதும் நன்றே
    என உரைப்பர் நம் முன்னோர். //

    மிகவும் அருமையான செய்திகளுடன் அழகான பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  23. திருவள்ளுவர் தவச்சாலை
    85 வயது முதியவரின் அற்புதமான தமிழ் பணி. எனது பக்கத்தில் பகிர்கிறேன். இந்த பதிவை முழுவதும் படிக்க கேட்டுக் கொள்கிறேன்.
    நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா07 செப்டம்பர், 2013

    அருந்தமிழ் அறிஞரைப் பற்றிய அரிய தகவல்களை மின்சிகரத்தில் ஏற்றி வைத்த தங்கள் தமிழ்ப்பணி மேலும் தொடர வாழ்த்துகள். ப.திருநாவுக்கரசு தஞ்சாவூர்

    பதிலளிநீக்கு
  25. IT IS EXCELLENT KJ. THIS ARTICLE PROMOTES NOT ONLY THE NOBLE GESTURE OF ERA.ELANKUMARANAR BUT ALSO YOUR WONDERFUL JOB OF INTRODUCING GREAT MEN IN THIS ELECTRONIC MEDIA. THANKS A LOT.

    பதிலளிநீக்கு
  26. அருமையான பதிவு ....மிக மிகச் சரியானவரைப் பற்றிய பதிவு....
    நன்றி

    பதிலளிநீக்கு
  27. ஐயா வணக்கம். என் பெயர் அர.வெங்கடாசலம். படிப்பு எம்.ஏ.ஏம்பில், பிஎச்டி உளவியல். திருக்குறள் ஆய்வாளன். 1. திருக்குறள் - புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை, 2. வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழி பாடு,3.Thirukkural - Translation - Explanation: A Life Skills Coaching Approach மற்றும் 4. திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை ஆகிய நூல்களை எழுதி உள்ளேன்.ஏறக் குறைய 400 குறட்பாக்களுக்கு ஆன்மிக உளவியல்.உரை கண்டு உள்ளேன். சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றாற் போல் பிறப்பில்லாப் பெரு வாழ்வை ஈட்டுவது என் உரிமை. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கே செல்லாமல் வாழ்வாங்கு வாழ்வது எவ்வாறு என்பதை கற்பிக்கும் நூல் திருக்குறள். நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு