10 ஆகஸ்ட் 2014

சோழ மண்ணில்




நண்பர்களே, மனம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. எனது அழைப்பினை ஏற்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், எங்களுடன் இணைந்து, எங்கள் குல தெய்வம் கோயிலுக்கு, வருகை தந்த, தங்களுக்கு, எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெள்ளத் தெளியாகப் புரிகிறது. இனி இக்குல தெய்வம், எங்கள் குல தெய்வம் மட்டுமல்ல, இன்று முதல் இத் தெய்வம், நம் குல தெய்வம்.

      எனது மனைவியின் விருப்பப்படி, பட்டீசுவரம் துர்க்கையையும், வைத்தீசுவரன் கோயில் வைத்தியநாத சுவாமியையும் தரிசித்தாகிவிட்டது.

      அடுத்து

                கங்கை கொண்ட சோழபுரம்.


     வைத்தீசுவரன் கோயிலில் இருந்து ஒரே நேர் சாலை, 34 கி.மீ. அணைக் கரையை வந்தடைந்தோம். அணைக்கரையின் இரு பாலங்களையும் கடந்து, சிறிது தூரத்திலேயே, இடதுபுறமாகத் திரும்பும் சாலையின், கைகாட்டி அறிவித்தது. கங்கை கொண்ட சோழபுரம் 2 கி.மீ.

     நண்பர்களே, ஆயிரம் ஆண்டு அதிசயம், காலத்தை வென்ற கலைச் சிகரம், நம்மை வா, வா என அழைக்கிறது வாருங்கள்.

      கங்கை கொண்ட சோழபுரம்.  ஊருக்குள் நுழைந்ததுமே, நம்மை அறியாமல், நம் நெஞ்சம் நிமிர்ந்து விரிகிறதல்லவா? மனதில் இனம் புரியாத ஓர் உணர்வு, பெருமித உணர்வு பரவுகிறதல்லவா?

     கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், மலைநாடு கொண்டான், உத்தமச் சோழன், உதார விடங்கன், மதுராந்தகன், மனுகுலச் சோழன், பராக்கிரம சோழன், விக்கிரம சோழன் எனப் பலவாறு போற்றப்பெற்ற, இராஜேந்திர சோழனின் காலடி படிந்த, படர்ந்த உன்னத பூமியல்லவா.

     சுமார் 36 இலட்சம் சதுர கி.மீ., நிலப் பரப்பு. இன்றைய இந்தியாவை விட, 4 இலட்சம் சதுர கி.மீ அதிகம்.

     இப் பக்கம் இலங்கை, அப் பக்கம் வங்கதேசம், இடையில் ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள். கடல் கடந்து மாலத் தீவு, மலேசியா, சிங்கப்பூர், ஜாவா, சுமத்ரா, பிலிப்பைன்ஸ் என கிழக்காசிய நாடுகளின் பெரும் பகுதியை, தன் நிகரற்ற வீரத்தால், மதி நுட்பத்தால் வென்ற மாமன்னன் இராஜேந்திர சோழன், இதோ இச்சிற்றூரில் இருந்துதான், நல்லாட்சி புரிந்திருக்கிறான் என்பதை எண்ணும்போதே விழிகள் வியப்பால் விரிகிறதல்லவா.

     நண்பர்களே, நாம் இம்மண்ணில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து எத்துணையோ வருடங்கள் ஆகிவிட்டன. சில நாட்களில், நமக்கு, திடீரென மனதில் ஓர் எண்ணம் நிச்சயம் தோன்றியிருக்கும், நமது மனசாட்சியே நம்மை கேள்வி கேட்டிருக்கும்.

      இத்தனை வருடங்களில் நீ எதைச் சாதித்தாய். நினைத்துப் பார்த்தால், இத்தனை காலமும் நாம், இப் பூமிக்குப் பெரும் சுமையாகத்தான் வாழ்ந்து வருகிறோம்.

     ஆனால் நண்பர்களே, பத்து ஆண்டுகள், பத்தே ஆண்டுகள், ஆம் பத்தே ஆண்டுகளில் நினைத்ததை எல்லாம் சாதித்துக் காட்டியவன்தான் மாமன்னன் இராஜேந்திரன்.

      இராஜேந்திர சோழன் மன்னனாய் அரியணை ஏறிய ஆண்டு கி.பி. 1012.  முடிசூடிக் கொண்ட, முதல் நாளே, தஞ்சையில், அரியணையில் அமர்ந்து, ஓர் மாபெரும் கனவு கண்டான். அக்கனவினை நிறைவேற்ற, அன்று முதல் தூக்கம் துறந்தான். செயல், செயல், என ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நொடியையும் செயலுக்கே அர்ப்பணித்தான்.

     இராஜேந்திரனின் முதல் சாதனை, புதிதாய் ஓர் தலை நகரையே கட்டி எழுப்பியதுதான். தஞ்சையில் இருந்து தலை நகரை மாற்றியது ஏன்? தஞ்சைக்கு என்ன குறை? தஞ்சையில் எது இல்லை? என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகின்றன அல்லவா? தலை நகர் மாற்றத்தின் பின்னனியில் இருந்தது, ஓர் உயரிய நோக்கம். ஓர் உன்னத நோக்கம்.

     சோழர் படையில் இலட்சக் கணக்கான படை வீரர்கள், தளவாடங்கள், ஆயிரக் கணக்கானக் குதிரைகள், யானைகள். விளை நிலங்கள் எல்லாம் படைக் களமாக மாற்றப் பட்டிருந்தன. ஒவ்வொரு முறையும் போருக்குப் புறப்படும் போதும், வீரர்களின் பயணப் பாதையாகி, விளை நிலங்கள் பாழ்பட்டன. இடையே பல்வேறு ஆறுகளையும் கடக்க வேண்டிய கட்டாயம்.

      இராணுவத்தால், படை நகர்வால், விவசாய நிலங்கள் பாதிப்பு அடைவதை,  இராஜேந்திரன் ஒருபோதும் விரும்பவில்லை. இந்நிலைத் தொடரக் கூடாது என்று நினைத்தான். எனவே விளை நிலங்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில், கொள்ளிடத்தின் வடகரையைத் தேர்ந்தெடுத்தான்.

      முதலில் ஊருக்கு மேற்கே, ஒன்றல்ல, இரண்டல்ல, 16 மைல் நீளத்திற்கு, கடல் போல், ஒரு ஏரியை உருவாக்கினான். சோழ கங்கம். தன் தந்தை கட்டிய, தஞ்சைப் பெரியக் கோயிலுக்கு இணையாக, நிகராக, ஓர் புதிய கோயிலைக் கட்டி எழுப்பினான். அதன் அருகிலேயே, தனக்கென ஒரு அரண்மனையை நிர்மாணித்தான்.

       புதிதாய், புத்தம் புதிதாய் ஓர் நகரம், கங்கை கொண்ட சோழ புரம் உருவாகிக் கொண்டிருந்த, அதே காலத்தில், ஓர் பெரும் படை புறப்பட்டது. இப்பக்கம் இலங்கை, அப்பக்கம் வங்க தேசம், இடையில் ஆந்திரா, கர்நாடகா என அனைத்தும் இராஜேந்திரன் கைவசமானது.

     நண்பர்களே, அக்கால சோழ நாட்டு வணிகம் எல்லையற்று விரிந்த ஒன்றாகும். சோழ நாட்டு வணிகர்களுக்கு, இடைஞ்சலாய் சில நாடுகள். வணிகப் பொருட்கள் கொள்ளையடிக்கப் பட்டன.

     இந்நிலையை மாற்ற நினைத்த மாமன்னன் இராஜேந்திரன், தன் கப்பல் படையை வலிமையாக்கினான். ஆயிரக் கணக்கான யானைகளை, குதிரைகளை, இலட்சக் கணக்கானப் படை வீரர்களைச் சுமந்து செல்ல, ஆயிரமாயிரம் கப்பல்களைக் கட்டுவித்தான். நண்பர்களே நினைத்துப் பாருங்கள், ஆயிரமாயிரம் யானைகளைக் கப்பல்கள் சுமந்தாக வேண்டும், அதற்கெல்லாம் எப்படிப்பட்ட தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதல்லவா.

     மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜாவா, சுமத்ரா, சீனாவின் கான்டன் தீவு வரை கைப் பற்றினான்.

      நண்பர்களே, இதையெல்லாம் செய்து முடிக்க, சாதித்து முடிக்க, இராஜேந்திரன் எடுத்துக் கொண்ட காலம், வெறும் பத்து ஆண்டுகள் மட்டும்தான்.

     பத்தே வருடங்களுக்குள் புதிதாய் ஓர் தலை நகர். அதில் பெரிதாய் ஒரு கோயில். கங்கை வரை ஆட்சி. கடல் கடந்தும் வெற்றிகள் என பத்தே ஆண்டுகளில் அனைத்தையும் செய்து முடித்தான்.

      மாமன்னன் இராஜேந்திரன் நடத்திய எல்லா போர்களுக்குப் பின்னாலும் இருந்த ஒரு வலுவான நோக்கம், உண்மையான இலட்சியம் என்ன தெரியுமா? நண்பர்களே.

      அமைதி, அமைதி, அமைதி ஒன்று மட்டுமதான். ஓர் நல்ல நிர்வாகி, தன் நாட்டு மக்களுக்குத் தரக்கூடிய ஓர் உயர்ந்த பரிசு, அமைதி அல்லவா? இராஜேந்திரன் இந்த அமைதியைத்தான் வாரி வாரி வழங்கினான்.

     அமைதியான வாழ்வு, அமைதியான வணிகம். அமைதியான உணவு. அமைதியான, செழிப்பான வாழ்க்கை.

     மாமன்னன் இராஜேந்திரன், கி.பி.1025 க்குள் இப்பணிகள் அனைத்தையும் செய்து முடித்துவிட்டு, கங்கை கொண்ட சோழபுரத்தில் குடியேறினான். இராஜேந்திரன், கங்கை கொண்ட சோழபுரத்தில் குடியேறிய பிறகு, சோழப்படைகள் எங்கும் நகரவே இல்லை.

      அதன் பிறகு கி.பி.1044 வரை, சுமார் பத்தொன்பது ஆண்டுகாலம், தன் இறுதி மூச்சு உள்ளவரை, மக்கள் நல்வாழ்விற்காகவும், நிர்வாக மறுமலர்ச்சிக்காகவுமே பாடுபட்டான
          


 நண்பர்களே, இதோ கங்கை கொண்ட சோழேசுவரர் ஆலயம். என்னவொரு அழகு, என்னவொரு கம்பீரம் பாருங்கள்.
    


வாருங்கள் உள்ளே செல்வோம். இதோ நந்தி. கருவறையை நோக்கி அமர்ந்துள்ள நந்தியைப் பாருங்கள். மிகப் பெரிய சுதையால் ஆன நந்தி.
    

வாருங்கள் படியேறி உள்ளே செல்வோம். பரசிவம் என்னும் பெயருக்கேற்ப, கோயிலின் கருவறையில் உள்ள லிங்கம், தென்னிந்தியாவிலேயே பெரியது ஆகும். லிங்கத்தினைச் சுற்றிக் கருவறைச் சுவரும், கருவறைச் சுவரினைச் சுற்றி, மற்றொரு சுவரும் உள்ளது. இவ்விரு சுவர்கள்தான் கோபுரத்தைத் தாங்கி நிற்கின்றன
    

கருவறையின் இரு சுவர்களுக்கும் இடையில் ஒரு சுற்று சுற்றிவிட்டு வருவோம் வாருங்கள். பார்த்து வாருங்கள் நண்பர்களே, பகல் பொழுதிலேயே இருள் சூழ்ந்திருக்கிறது பாருங்கள்.

     கோயில் வளாகத்தின் தென்புறத்திலும், வடபுறத்திலும் இரு கற்றளிகள். தென் புறத்தில் தென் கைலாயம், வடபுறத்திலே வட கைலாயம்.
     

நண்பர்களே இதோ பாருங்கள் சிறுவர்களை மிகவும் கவர்ந்திழுக்கும் வகையில் சிம்மக் கேணி. சிங்க முகத்துடன் கூடிய நுழைவு வாயில். உள்ளே படிக்கட்டுகள். இப்படிகளில் இறங்கி கேணியின் உட் பகுதிக்குச் செல்லலாம்.

     வளாகத்தைச் சுற்றி வர வர, எங்கெங்கும் எழிலோவியமாய் கண் கவர் சிற்பங்கள்.
    


நண்பர்களே, கோயிலின் மதில் சுவரை ஒட்டி, உட்புறமாக, நாற்புறமும் இரண்டடுக்கு மண்டபம். ஆனால் ஒரு சிறு இடத்தில் மட்டுமே, இரண்டடுக்கு மண்டபம் மிச்சமிருக்கிறது. மற்றைய இடங்களில், பிற்காலத்திய படையெடுப்பினால், தரையோடு தரையாகக் கிடக்கும் கற்கள் மட்டுமே காணப்படுகின்றன.

      நண்பர்களே, நாம் அவசியம் காண வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம், இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது வாருங்கள்.

      மகிழ்வுந்து புறப்பட இருக்கிறது. வந்து அமருங்கள். இதோ மகிழ்வுந்து புறப்பட்டு விட்டது, ஒரு சில நிமிடப் பயணம்தான். இதோ இடதுபுறமாக ஓர் சாலை செல்கிறதே, அதில் செல்வோம் வாருங்கள்.

     இதோ மீண்டும் இடதுபுறமாக, ஓர் குறுகிய தெரு செல்கிறது பாருங்கள், அவ்வழியே செல்வோம்.

      நண்பர்களே, இதோ இது, இதுதான் மாளிகை மேடு.

      கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் என்று போற்றுகின்றோமே, அம்மன்னன், மாமன்னன் இராஜேந்திரனின் அரண்மனை இருந்த இடம் இதுதான்.

     கால வெள்ளத்தாலும், பிற்காலப் படையெடுப்புகளாலும், இயற்கைப் பேரிடர்களாலும், அரண்மனை மண்ணோடு மண்ணாய்ப் புதைந்த இடம் இதுதான்.

     1980 முதல் 1991 வரை, தொல்லியல் துறையினரால் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. அதன் பயன் இதோ, அரண்மனையின் அடித்தளப் பகுதி மீட்கப் பட்டு கம்பீரமாய் காட்சியளிக்கிறது
      





நண்பர்களே, அரண்மனையின் இச் சுவர்களைப் பாருங்கள். அரண்மனை முழுவதும் இரண்டிரண்டுச் சுவர்கள், தொடர் வண்டித் தண்டவாளங்களைப் போல் இணைந்தே செல்வதைப் பாருங்கள். இரு சுவர்களுக்கும் இடையில் மணல் போட்டு நிரப்பி வைப்பார்களாம். இது கடும் கோடையில் கூட, குளிர்ச்சியைத் தருமாம். என்னவொரு நுட்பம் பார்த்தீர்களா.

     இரும்புப் பொருட்கள், கதவுக்குப் பொருத்தப் பயன் படும் ஆணிகள், செம்பு குறுவாள் கைப் பிடி, கூரை ஓடுகள், அலங்காரப் பொருட்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், மணிகள், பானைகள், குறியீடுகளுடன் கூடிய செங்கல் கற்கள் என இவ்விடத்தில் கிடைத்தப் பொருட்கள் ஏராளம், ஏராளம்.

      வாருங்கள் நண்பர்களே, இராஜேந்திரச் சோழனின் அரண்மனைச் சுவரைத் தொட்டுப் பார்ப்போம். அரண்மனைச் சுவரைப் பற்றிய படியே சிறிது நடப்போம் வாருங்கள். இராஜேந்திரனின் காலடித் தடம் இவ்விடத்தில் பதிந்திருக்கும் அல்லவா.

       அரண்மனைச் சுவரைத் தடவியபடியே நடக்க, நடக்க, நெஞ்சில் ஏதேதோ நினைவலைகள். இது போன்ற செங்கல் கற்களை, கட்டுமானத்தை, கட்டுமானத்தின் எஞ்சிய அடித் தளத்தைப் பார்த்துப் பரவசப்பட்ட நினைவுகள், நெஞ்சில் அலை அலையாய் மோதுகின்றன.
       
மலேசியா பத்து மலை முருகன் கோவிலில்

நண்பர்களே, நான்காண்டுகளுக்கு முன்னர், இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் சென்று வருவதற்கான ஓர் அருமையான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. விடுவேனா? பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டேன். இலங்கையின் கொழும்புவிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் கால்பதித்துத் திரும்பினேன்.

கங்கா நதியுங் கடாரமும் கைக்கொண்டு
சிங்கா தனத்திருந்த செம்பியர்கோன்

என கலிங்கத்துப் பரணியில், ஜெயங்கொண்டரால், போற்றப்படும் இராஜேந்திரச் சோழன் கைப் பற்றிய கடாரத்தில், ஓர் நாளினைக் கழிக்கும் பேரின்பத்தையும் பெற்றேன். கடாரம் இப்பொழுது கெடா என்றே அழைக்கப் படுகிறது.
     
குவாண்டன் ஆறு

கெடாவில் உள்ள குவாண்டன் என்னும் ஆறானது மிகவும் அகலமானதும், ஆழமானதும் ஆகும். இந்த ஆறு, மலேசியாவின் கீழ்க் கரையில் தஞ்சய் தவாய் என்னும் இடத்தில் கடலோடு கலக்கிறது.

      கடல் வழி வந்த சோழப் படைகள், இவ்வாற்றின் வழியாகத்தான் நகருக்குள், கடாரத்திற்குள் நுழைந்தன. இந் நதியின் கரையில் மெய்மறந்து நின்றிருக்கிறேன்.

    




கெடா அருங்காட்சியகத்தில்

கெடா அருங்காட்சியகத்தில், அகழ்வாய்வில் தோண்டியெடுக்கப் பட்ட கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பெற்றிருந்ததைக் கண்ணால் கண்டு, கையால் தடவிப் பார்க்கும் பேறும் பெற்றேன்.

       அருங்காட்சியகத்திற்கு வெளியே, மிகவும் சிறியதும், இரண்டடி அகலமும், சுமார் பத்து அடி அகலமும் கொண்ட படகுகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையப் படகுகள் இவை.

     


நண்பர்களே, வியப்பினும் பெரு வியப்பு காத்திருப்பது தெரியாமல், அருங்காட்சியகத்தை அடுத்திருந்த, மலைப் பகுதியில் சிறிது தூரம் நடந்தேன். கண்ணெதிரில் விரிந்த காட்சியைக் கண்டு மலைத்து, சில நிமிடங்கள் நடக்கக் கூட மறந்து நின்றேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்கால, சோழர் காலக் கோயில்களின் மிச்சங்கள். எச்சங்கள்.

      கடாரத்தின் சோழர் கால கோயில்களின் மிச்சங்களைக் கண்டு களித்த எனக்கு, இராஜேந்திரனின் அரண்மனையில் கால் பதிக்கும் ஓர் அற்புத வாய்ப்பு இன்றுதான் கிட்டியிருக்கிறது.

     நண்பர்களே, நாம் நிற்பது, அரண்மனையின் எப் பகுதியாக இருக்கும்? இராஜேந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து, அமைச்சர்கள் புடை சூழ, நல்லாட்சி நடத்திய அரசவைக் கூடமாகக் கூட இருக்கலாம் அல்லவா?

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மாமன்னன் இராஜேந்திரன் காலடி பதிந்த மண்ணில், இன்று நாமும் நிற்கிறோம். இராஜேந்திரன் சுவாசித்தக் காற்றின் மிச்சத்தை, நாமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், இவ்விடத்தில், அரியணையில் அமர்ந்திருந்த மாமன்னன், இன்று இப்பொழுது, நம் இதயச் சிம்மாசனத்தில் அல்லவா கம்பீரமாய் அமர்ந்திருக்கிறான்.

வாழ்க கங்கை கொண்டான்
வாழ்க கடாரம் கொண்டான்

 


                   

74 கருத்துகள்:

  1. //நாம் நிற்பது, அரண்மனையின் எப் பகுதியாக இருக்கும்? இராஜேந்திரன் சிம்மாசனத்தில் அமர்ந்து, அமைச்சர்கள் புடை சூழ, நல்லாட்சி நடத்திய அரசவைக் கூடமாகக் கூட இருக்கலாம் அல்லவா?//

    இதைத்தானே மனம் - ஆவலாக எதிர்பார்த்திருந்தது.

    அழகான படங்களுடன் - அரிய தகவல்களுடன் - இனிய பதிவு!..

    பதிலளிநீக்கு
  2. பத்தே வருடங்களுக்குள் புதிதாய் ஓர் தலை நகர். அதில் பெரிதாய் ஒரு கோயில். கங்கை வரை ஆட்சி. கடல் கடந்தும் வெற்றிகள் என பத்தே ஆண்டுகளில் அனைத்தையும் செய்து முடித்தான்.


    வியப்பளிக்கும் அருமையான தகவல்கள்.படங்கள்..பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. கங்கைகொண்ட சோழபுரத்தைச் சுற்றி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அந்த மாமன்னனை நினைவுகூர்ந்த அந்தத் தருணங்களை எனக்கு மீண்டும் நினைவூட்டியது உங்களின் அருமையான பகிர்வு. புகைப்படங்களும் கூட.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    சிறப்பான வரலாற்றுக்குறிப்பை பகிர்ந்துள்ளீர்கள் தங்களின் பதிவின் வழி பல தகலலை
    அறிந் தேன் தங்களின் எழுத்து நடை என்னை மட்டுமல்ல பலரை கவரும் வகையில் உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. நானும் இருமுறை கங்கைகொண்ட சோழபுரம் சென்று வந்துள்ளேன். அரண்மனை இருந்த இடத்தைப் பார்த்ததில்லை. அரிய தகவல்களுடன் விரிவான பதிவு. உங்களுடன் பயணித்தது போன்ற உணர்வைத் தோற்றுவித்தது! நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த முறை செல்லும் பொழுது மாளிமை மேட்டிற்கு அவசியம் சென்று வாருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  7. அனைத்துச்செய்திகளும் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  8. ஒரு தமிழ் மன்னனின் வீரவரலாற்றை அழகாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே.... பிரமிப்பாக இருக்கிறது நாமெல்லாம் பூமிக்கு பாரமோ ? உண்மைதான்.
    4 ஆண்டுகளுக்கு முன் தங்களின் மீசை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு ஆண்டுகள் பெரிய மீசையாக வைத்திருந்தேன் நண்பரே,
      தங்களைப் போல,
      எனது தந்தையாரும், மனைவியும் தொடர்ந்து வற்புறுத்தியதால் மீசையை குறைக்க வேண்டியதாகிவிட்டது.
      நன்றி நண்பரே

      நீக்கு
  9. மிக மிக அருமையான கட்டுரை.என் கைபேசியின் வழியாவே கங்கைகொண்டசோழபுரத்தையும் மாமன்னன் இராசேந்திரசோழனையும் அறிந்துகொண்டேன் தெரிந்துகொண்டேன்.வாழ்க சோழநாடு வளர்க விவசாயம். கட்டூரையின் மூலம் கட்டிப்போட்ட தங்களின் படைப்புக்கு மிக்க நன்றி.வாழ்க தமிழ்.

    பதிலளிநீக்கு
  10. நான் சென்றுவந்த நினைவுகளை மீட்டெடுத்தது உங்கள் பதிவு. கோவிலின் உள்ளே செல்ல முடியாததும், மாளிகை மேடு பார்க்காததும் என் குறைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடத்த முறை செல்லும்போது மாளிமை மேட்டிற்கு அவசியம் சென்று வாருங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  11. பெயரில்லா10 ஆகஸ்ட், 2014

    ''...மாமன்னன், இன்று இப்பொழுது, நம் இதயச் சிம்மாசனத்தில் அல்லவா கம்பீரமாய் அமர்ந்திருக்கிறான்...''' அருமை...அருமை... உங்கள் மூலம் நாமும் அருமை அனுபவம் பெற்றோம்.
    நன்றி..
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  12. ராஜ ராஜ சோழன் பற்றி பொன்னியின் செல்வன் நாவலிலும் ராஜேந்திர சோழன் பற்றி 'வேங்கையின் மைந்தன்' நாவலிலும் திரும்பத் திரும்பப் படித்து மெய்மறந்த பழைய நாட்கள் நினைவுக்கு வருகின்றன! உங்களிடம் நான் இன்று பார்த்த உணர்வுகள் நான் அன்று மனக்கண்ணில் பார்த்த உணர்வுகள் தான்!

    அத்தனை அழகாய் எழுதியுருக்கிறீர்கள்! ராஜேந்திர சோழன் அரியணையில் கம்பீரமாய் அமர்ந்திருந்த அந்த காட்சிக்கு நானும் சென்று விட்டேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்னியின் செல்வனைவும்,, வேங்கையின் மைந்தனையும் மறக்க முடியாத சகோதரியாரே
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  13. #இந்தியாவை விட, 4 இலட்சம் சதுர கி.மீ அதிகம்.#மாமன்னன் ஆண்டது அவ்வளவு பெரிய நிலப் பரப்பையா ?நம்பவே முடியவில்லை !அந்த இடங்களில் எல்லாம் கரந்தையாரின் கால் தடம் பதிந்ததும் சிறப்பிலும் சிறப்பு !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே
      நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும்
      கங்கை கொண்ட சோழபுரத்திலும், கடாரத்திலும் கால் பதிக்க ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியதை எண்ணிப் பெருமைப் படுகின்றேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  14. கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து அலேக்கா கடாரம் போய் அப்டியே யூ டர்ன் பண்ணி மறுபடி நம்மூர்ல விடுருகீங்க அண்ணா! அருமை அண்ணா!

    பதிலளிநீக்கு
  15. படங்களைக் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் சகோதரா .த.ம .3

    பதிலளிநீக்கு
  16. அப்பாடா இனி என்னால நகரவே முடியாது என்ன ஏனா ஒரு தண்ணி சாப்பாடு ஒன்றும் இல்லையே நாவரண்டு தலை எல்லாம் கிறு கிறு என்கிறது இல்ல அதான். அருமையான விடயங்களும் படமும் பர்ஹ்டு ரசித்தேன். நேரடியாக பார்க்க ஆசையாக இருக்கிறது. நரி தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் ஒரு முறை கங்கை கொண்ட சோழபுரத்தைப் பாருங்கள் சகோத்ரியாரே
      அற்புதமான கோயில்
      வாழ்வில் மறக்கவே மாட்டீர்கள்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  17. தஞ்சையில் இருந்து தலை நகரை மாற்றியது ஏன்? – என்ற கேள்விக்கு அருமையான விளக்கம் தந்தீர்கள்.

    சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோயிலுக்கு வங்கி நண்பர்களோடு சென்று இருக்கிறேன். அன்று இருந்த கோயிலில் இன்றைக்கு நிறைய மாற்றங்கள் இருப்பதை உங்கள் படங்கள் காட்டுகின்றன. மாளிகைமேடு பகுதியை அகழ்வு ஆராய்ச்சிக்கு முன்னரேயே சுரண்டி கொள்ளையடித்து விட்டார்கள். கடலைத் தாண்டி கடாரம் சென்ற உங்கள் அனுபவமும் படிக்க ஆர்வமாக இருந்தது. நன்றி!

    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாளிமை மேட்டில் ஒரு சிறு பகுதியைத்தான் அகழ்வாய்பு செய்திருக்கிறார்கள் ஐயா
      வரலாற்று ஆய்வாளர் திருமிகு குடவாயில் பால சுப்பிரமணியன் அவர்களோடு பேசும் ஓர் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது.
      இன்றும் கங்கை கொண்ட சோழபுரத்தில் கிணறு தோண்டினாலோ, அல்லது வேறு பணிக்காக நிலத்தை தோண்டினாலோ , சோழர் காலத்திய பொருட்கள் எதாவது கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்று சொன்னார்.
      கடாரம் செல்வதற்கான ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியதுஐயா.
      மலோசியா பல்கலைக் கழகத்தில், கரந்தைத் தமிழச் சங்கத்தை உலகின் சிறந்த தமிழ்ச் சங்கமாகத்தேர்ந்து எடுத்து விருது வழங்கினார்கள்.
      அந்நிகழ்ச்சிக்குச் சென்ற சங்கச் செயலாளர் அவர்கள், என்னையும் உடன் அழைத்துச் சென்றார்.
      அருமையான வாய்ப்பு, அதனால் அற்புதக் காட்சிகளைக் கண்டேன்
      வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  18. பார்த்ததில்லை இதுவரை, ஆனால் பார்க்க முடிகிறது உங்கள் பதிவால்.

    பதிலளிநீக்கு
  19. கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி விரிவான தகவல்களை தெரிந்து கொண்டேன்.
    தங்களின் வெளிநாட்டு அனுபவங்களையும் எழுதலாமே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு ஆண்டுகளுக்கு முன் மேற்கொண்ட பயணம் நண்பரே அது.
      இப்பொழுது எழுதினால் எப்படியிருக்கும் என்று தோன்றவில்லை.
      அந்தத் தயக்கம்தான்.
      நன்றி நண்பரே

      நீக்கு
    2. இதில் தயக்கத்துக்கு ஒன்றும் இல்லை.
      நன்றாக எழுதுங்கள். அந்த நாடுகளுக்கு செல்ல நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக தங்களின் பயண கட்டுரை உதவியாக இருக்கும்.

      நீக்கு
    3. நண்பரே தாங்கள் தரும் உற்சாகத்தால் விரைவிலேயே எழுதுகின்றேன் நண்பரே
      நன்றி

      நீக்கு
  20. கங்கைகொண்ட சோழபுரத்தைப் பார்த்து சிலிர்க்கும் வேளையில் இன்றைய நம் மக்கள் நிலையை நினைத்தால் வருத்தம்தான் சகோதரரே..எப்பொழுதுமே எனக்கு ராஜராஜன், இராஜேந்திரன் பற்றி படிக்கும்பொழுது ஏதோ இழந்துவிட்ட உணர்வு தோன்றும்...படங்கள் அருமை..என் இளையவன் அருகிருந்து பார்த்து நூறு கேள்விகள் கேட்டதால் நேற்றே படித்திருந்தாலும் இன்று தான் கருத்திடுகிறேன்..அவனுக்கு அந்த காலத்தில் பிறந்திருக்க வேண்டுமாம் ..ஹாஹா ஐந்து வயது பையனின் ஆசையைப் பாருங்கள்
    பகிர்விற்கு நன்றி சகோதரரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கன் மகன் ஆசையிலும் ஓர் அர்த்தமிருக்கிறது சகோதரியாரே.
      தாங்கள் சொல்வது உண்மைதான் இராஜராஜன், மற்றும் இராஜேந்திரன் பற்றிப் படிக்கும் பொழுது, ஒரு சோகம் நிழலாடத்தான் செய்கிறது.
      நான் தினமும் பள்ளிக்குச் செல்லும் பொழுது, இராஜராஜசோழன் எழுப்பிய பெரியக் கோயிலின் வழியாகத்தான செல்கிறேன், வருகிறேன்
      இவ்வளவு பெரிய கோவிலை எழுப்பிய அம் மன்னனின் மாளிகை எங்கிருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை
      வருத்தமாகத்தான் இருக்கிறது சகோதரியாரே
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
    2. ஆமாம் சகோதரரே. கோயிலை தினமும் கடந்து செல்லவேண்டுமானால் தினமும் இவ்வருத்தம் தோன்றுமே..புரிகிறது சகோதரரே.

      நீக்கு
  21. அருமையான வர்ணனைகளோடு கடந்த காலங்களுக்கு சென்றுவந்தது போலிருந்தது. புகைப்படங்கள் வர்ணனைகளுக்கு மெருகூட்டின. நன்றி. அடுத்த பயணத்தொடரை எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. உங்கலுடன் பயனித்த இந்த கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் கடாரம் பயனம் எனக்கு நல்ல அனுபவம். நன்றி!

    பதிலளிநீக்கு
  23. வணக்கம்!
    கங்கை கொண்ட சோழபுரம் கோவில் பற்றிதான் அனைவரும் அதிகமாக எழுதுவர். தாஙகள் மாளிகை மேடு சென்று அணு அணுவாக ஆராய்ந்திருகிறீர்கள், தொடர்சுவர், இடையில் மணல், புதைபொருட்கள் கண்டுபிடித்தவை என விரிவாய் எழுதி வரலாற்றின் ஆவல் எழ செய்துள்ளீர்கள். கங்கை கொண்ட சோழபுரம் செல்பவர்கள் மாளிகை மேடு சென்று வந்தால் நம் மண்ணின் அருமை தெரிய வரும்.

    சோழ மண் அழைப்பு ....இதோ புறப்பட்டு விட்டேன் ஆகஸ்ட் 15 காலை சோழ மண்ணில் தடம் பதிப்பேன்.
    சங்கம விழாவி்ல் சந்திக்கலாம் நண்பர்களே!!

    நட்புடன்,
    இரா.சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே

      நீக்கு
  24. கங்கை கொண்ட சோழபுரத்தைப்பற்றிய சிறப்பான பதிவு .
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
  25. மிகச் சிறப்பான ஒரு பதிவு நண்பரே! எப்பேர்ப்பட்ட மன்னர்! பின்னர் னீங்கள் சென்று வந்ததையும் அழகாக படங்களுடன் விளக்கமாகத் தந்துள்ளீர்கள். நல்ல அனுபவம் நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  26. அழகான படங்களுடன் அருமையான பதிவுக்கு நன்றி. வெகு நாட்களாகப் பார்க்க எண்ணி இருக்கும் இடம் கங்கை கொண்ட சோழபுரம். எப்போது சமயம் வாய்க்குமோ தெரியவில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அவசியம் கங்கை கொண்ட சோழபுரம் சென்று வாருங்கள் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  27. படங்களுடன் பல அரியத் தகவல்கள்! குறிப்பாக பத்தே ஆண்டுகளில் தலைநகர்,கோயில், படையெடுப்பு என்று அனைத்தையும் சாதித்த இராஜேந்திர சோழன் மனதில் உயர்ந்து நிற்கிறார்! சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதே நாம் செய்த ஏதோ ஒரு புண்ணியத்தால்தான் என்று எனக்கு தோன்றுகிறது. மிகப் பெரிய செயல்களை மிக மிக சாதாரணமாக செய்து எச்செயலையும் திட்டமிட்டு செய்தால் வெற்றி பெறலாம் என்பதை இவ்வுலகிற்கு தெரிவித்தவர்கள். அவர்களுடைய வாழ்க்கையை நம் இளைஞர்கள் அறிந்து நடந்து கொண்டால் உலகம் நம் தமிழர்கள் கையில் என்பது நிச்சயம். வழக்கம் போல தங்களது எழுத்து நடை அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. படங்களும் பகிர்வும் அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரியாரே
      இதோ தங்கள் வலைப் பூவிற்க வருகிறேன்

      நீக்கு
  31. வணக்கம் ஐயா!

    என்றும்போல் இம்முறையும் உங்கள் பதிவும் படங்களும் மிக மிக அருமை ஐயா!
    பல படங்களை விட்டு கண்களை நகர்த்தவே முடியவில்லை. அற்புதம்!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
  32. அன்பின் ஜெயக் குமார் - அருமையான பதிவு - காணக் கிடைக்காத படங்கள் - இது வரை தெரிந்து கொள்ளாத தகவல்கள் - எத்தனை எத்தனை தகவல்கள் - அத்தனையும் அருமை - வாழ்க்கையில் கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்புகள் கிடைக்கும், காணக் கிடைக்காத வாய்ப்பு - வாழக்கையில் ஒரு முறையாவது சென்று பார்த்து மகிழ்ந்து அனுபவித்து வரக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். தஞ்சையையும் மற்ற சுற்றுப்புற அதிசயங்களையும் சென்று பார்த்து வர வேண்டும், நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் தஞ்சை ஒரு வலம் வாருங்கள் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  33. அன்பின் ஜெயக் குமார் - அன்புடன் அழைத்துச் சென்று - அத்தனை இடங்களையும் கண்டு மகிழ , புகைப்படங்கள் - அரியதகவல்கள் - நினைவாற்றல் - பதிவாக்கும் திறமை - நீண்டதொரு பதிவு - அத்தனைக்கும் அடிப்படையான கடும் உழைப்பு - யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என இப்பதிவின் மூலமாக தகவல்கள் அனைத்தும் அளித்து அனைவரையும் மகிழ்வித்த தங்களீன் அன்பான செயலுக்கு நன்றிகள் பல உரித்தாகுக. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  34. கும்பகோணத்திற்கு அருகில்தான் இருக்கிறது. ஆனால் இன்னும் சென்று பார்க்கமுடியவில்லை.
    ஆவலைத் தூண்டக் கூடிய பதிவு!. வாழ்த்துகள் அய்யா !.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவசியம் ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள் ஐயா
      நன்றி

      நீக்கு
  35. கங்கை கொண்ட சோழபுரம் ஒரு முறை சென்றிருக்கிறேன் இப்போது இரண்டாம் முறையாக உங்கள் பதிவின் மூலம் சுற்றுலா சென்றதுபோல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  36. பலமுறை சென்றுள்ளேன். இருப்பினும் தங்களின் எழுத்துவழியாகக் காண்பதில் ஒரு தனி சுகம். தாமதமான எனது வருகைக்குப் பொறுத்துக்கொள்க. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  37. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப்பற்றி..... வாழ்த்துக்கள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  38. வணக்கம்
    ஐயா.

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட முகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_16.html?showComment=1408144560192#c7901132577909697036

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  39. எழில் மறவன்18 மார்ச், 2018

    மிக்க நன்றி. தமது வரலாற்று தேடல் சிறந்தது. கோடியக்கரையில் எஞ்சியிருக்கும் கலங்கரை விளக்கம் கண்டு அனுபவம் பகிரவும்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு