11 மே 2017

பட்ட மிளகாய்



சிறு குழந்தையாய் இருக்கும் பொழுதே, நானும் வருவேன், என அழுது அடம் பிடித்து, அக்காளின் கரம் பற்றிப் பள்ளிக்குச் சென்றவர் இவர்.

     ஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும், படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.

     காரணம் சூழல்.

     குடும்பச் சூழல்.

     படித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.


     வேலைக்குப் போனார்.

      உழைத்தார்

      வறுமையை விரட்டினார்.

      பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர, இவர் ஒரு போதும் படிப்பதை நிறுத்தவேயில்லை.

எல்லாப் பிரச்சினைகளைத் தாண்டியும்
எது என்னை மூச்சுவிடச் செய்து கொண்டிருக்கிறது
எந்த சந்தேகமும் வேண்டாம்
வாசிப்பு மட்டுமே என்னை வசிக்க வைத்திருக்கிறது.

      வாசிப்பை நேசிப்பவர், ஏடெடுத்து எழுதத் தொடங்கினால், வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இனிக்கத்தானே செய்யும்.



ஒரு ரோஜாக் குவியலாய்
தாதி தந்த நொடிகள்
தேவ கணம் ……..

மடக்கியிருந்த
சிறுவிரல் நீவி

சுண்டுவிரல் கொடுக்க
பற்றிக் கொண்ட
பரவசம்
மோன நிலை ……

      

முதல் மழலை.

       தாயின் கருவறையில் இருந்து வெளிவந்து, இவர்தம் குவிந்த கரங்களில், சுருண்டு படுத்து, கண் திறந்து, சுண்டு விரல் பற்றி, மகிழ்ந்த நிமிடங்கள், கனவுலகில், நம்மைச் சஞ்சரிக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தவை.

       பல்லாண்டுகள் கடும் தவம் புரிந்து, கடவுளை கண்முன் வரவழைத்து, வேண்டும் வரங்களைப் பெற்ற தேவர்கள், அசுரர்கள் பற்றிப் பல கதைகளைப் படித்திருப்போம்.

      ஆனால், இறைவனே இவர் முன் தோன்றி, வரம் ஒன்று கேட்ட கவிதையினைப் படித்தால் வியந்து போவீர்கள்.

கடவுள்
என் வீட்டுக்கு
காலையிலேயே
வந்துவிட்டார்.

இன்று முழுவதும்

உன்னோடிருக்கிறேன்
சரியா?  என்றார்.

வேலையிருக்கிறது போகிறேனென்றேன்
நானும் என்றவன்
வண்டியில் அமர்ந்து கொண்டான்.

ஆயிரம் சந்தேகங்கள் கேட்டிருப்பான்
கூகுளில் பாதியும் – படித்ததில்
பாதியும் தெரிந்ததைச் சொன்னேன்.

துணிக் கடைகளில் ஏனித்தனை கூட்டம்?
அம்மணம் மறைக்க ….

வெடிகள் வெடிப்பது அத்தனை அவசியமா…..?
எமனின் வேலையை கொஞ்சம் குறைக்க.

பேருந்தில் ஏனடா இத்தனை கூட்டம்?
நாட்டில் நதிகள் மட்டும்தான் ஓடாது.

மனிதனைத்தானே படைத்தேன்
இவையெல்லாம் யாராலென்றான்

நாங்கள் தானென்றேன்

முழுவதுமாய் உன்னோடிருந்திருக்கிறேன்
வரமொன்று தா என்றான்

கேள் என்றேன்

அலைபேசி வேண்டுகிறான்

அவனை வெறுங்கையோடே
அனுப்பிவிட்டேன்.

      வேலைக்குப் போகும் தற்கால பெண்களின் நிலை பற்றி, முகத்தில் அறைந்தாற் போல், எடுத்து வைத்து, அவ்வரிகளிலேயே, நம்மை நெடுநேரம் நிற்க வைக்கிறார்.

ஒற்றை நாள்
தற்செயல் விடுப்பவளுக்கு..

கண்ணாடி பார்த்து
நிறம் மாறிய முடி
பார்த்து நெட்டுயிர்க்க…..
பள்ளிப் பிள்ளைகள் வருவாரே
பலகாரம் ஏதேனும் செய்ய ….
தள்ளிப்போன தாய்வீடு பேச….
ஆயுளின் நாள் தேடும்
வேலையுண்டு அவளுக்கு…

இந்த விடுப்பும் கூட
தற் செயல் விடுப்புதான்…..     

      வளர்ச்சி எழும் பெயரில், நாம் மறந்துபோன, நம்மையும் அறியாமல் துறந்தே போன, செயல்களை, சிறு குறு வரிகளில், குறுவாளாய் எடுத்து வீசுகிறார்.

பால்கார
வீடென அறியப்படும் ….

மத்துகள் சுழல

மாடுகள் உரச

குழலூதும்
கண்ணன்
பானையுருட்டி
படத்திலிருப்பான்
ஊதுபத்திப் புகையில் …..

சீம்பால்
கிடைக்குமென
சிறுவர்கள்
கூட்டமே
காத்திருக்கும் …..

எப்போதும்
நெய்யுருக்கும்
முறுகலில்
காற்றும் கனிந்திருக்கும் …

தலைமுறைகள்
மாற்றத்தில்
மாடுகளும்
மனிதர்களும்
வெளியேறிப் போனார்கள்…

இழுத்துக் கிடந்த
கிழவி
புதைத்து
இரண்டாம் நாள் …

பத்திரமாய்
எடுத்து வைக்கிறார்கள்

பாக்கெட் பால்…

        அறிவியல் வளர்ந்து பயனென்ன, மக்கள் வளரவில்லையே, பொது வெளியில் ஒழுக்கம் தழைக்கவில்லையே, என்னும் ஆதங்கத்தையும் வேதனையோடு எடுத்து முன் வைக்கிறார்.

சற்றே வளைந்த
நான்கு சக்கர வாகனமொன்றில்
குவிந்து கிடக்கிறது
நீர் தெளித்த சத்துக்குடி குறுமலை.

வியர்வை காய்ந்த
ஆடைகளுடன்
பிழிந்து நிரப்பி
கையளிக்கிறாள்…

தாகத்துக்குச் சிலரும்…
மோகத்துக்குச் சிலரும்…
மொய்த்துக் கிடக்கிறது

பெரு வனத்துக்கான விதைகள் ….

      நண்பர்களே, இனிப்பையும், இவ்வுலக அவலங்களையும், ஒன்றாய் குழைத்து, எழுத்துக்களால் கோர்த்து, கவிதையாய் வார்த்தெடுத்து, பக்கத்துக்குப் பக்கம் விருந்தளிக்கும், இக் கவி யார் தெரியுமா?

     நூற்றுக் கணக்கான கவிதைகள், இவர்  விரல் நுனியில் காத்திருக்க, சிலவற்றை மட்டும், இரு நூல்களாய் இறக்கி வைத்திருக்கிறார்.

      நாமும் நமது பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு, ஆண்டு தோறும், ஏதாவது பரிசுகளை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறோம்.

      ஆனால், அவையெல்லாம், நம் பணத்தால் பெறுவது.

      ஆனால் இவரோ, தன் மகளுக்கு, அதிலும் சின்னவளுக்கு, தன் எழுத்தை ஒன்று சேர்த்து, அதில் தன் பாசத்தை, நேசத்தை சேர்த்துக் குழைத்து, நூலாக்கி பரிசளித்திருக்கிறார்.


சின்னவள்

      தந்தை எழுதியதை, தாயின் முன்னிலையில், சின்னவளே வெளியிட, அவரது அக்காள், முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.

      தந்தையின் மனம் குளிர, தாயின் அகம் மலர, பிள்ளைகள் குதூகலிக்க, வீட்டிற்குள்ளேய, ஒரு புத்தக வெளியீட்டு விழா அரங்கேறியிருக்கிறது.

      என்னைக் கேட்டால், புத்தக வெளியீட்டு விழாக்களிலேயே, மிகச் சிறந்த புத்தக வெளியீட்டு விழா, இதுதான் என்பேன்.

      இவரது இரண்டாவது நூல் என்ன தெரியுமா?

      ஆயிரமாயிரமாய், இலட்ச இலட்சமாய், கோடிக் கோடியாய் சம்பாதித்து, நட்சத்திர விடுதியில், குளிரூட்டப்பட்ட அறையில், சொகுசு இருக்கையில் அமர்ந்து, பணியாளர் பணிவோடு பரிமாற, தவறியும் விரல் படாமல், முள் முனையில் கொத்தி எடுத்து, அமிர்தத்தையே உண்டாலும், தாயின் அன்பு கலந்த, தாயின் வேர்வையில் நனைந்த, ஒரு பிடி, ஒரே ஒரு பிடி, பழையச் சோற்றுக்கு ஈடாகுமா.

       வார்த்தைகளாலேயே விருந்து படைக்கிறார் இவர்.

ஒரு பட்ட மிளகாய்

உப்புச் சட்டி
கழுவிய தண்ணீர் …..

ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரையில் ….

என் பட்டினி
கொன்றவளே …

எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே….

       இக்கவிதையினை முழுவதுமாய் எடுத்து வைத்துப் பரிமாற மனமில்லை, நூலெடுத்துப் படித்துப் பாருங்கள், என் உணர்வு உங்களையும் வந்தடையும். நிச்சயமாய் சில நிமிடம், அடுத்த பக்கத்தைப் புரட்ட கை எழாமல், அமைதியாய் அமர்ந்திருப்பீர்.


ஒரு பட்டமிளகாயும், கொஞ்சம் உப்பும்

கவிஞரின் இரண்டாவது நூல்.

       இந்நூலினையும், நான்கு சுவர்களுக்குள் வெளியிட்டிருக்கிறார்.
      

புதுகையின் ஈடில்லா கவிஞர், எழுத்தாளர் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் இல்லத்தில், நண்பர்கள் படை சூழ வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார்.


கவிஞர் மீரா. செல்வக்குமார்.

நான் வார்த்தைகளின் கஞ்சன்
என் எழுத்துக்கள்
என் விரல்வழிப்
பிரசவங்கள் ….

கவருமாயின்
கரம் குலுக்குங்கள்

புரியவில்லை எனில்
ஒரு புன்னகையோடு
போய் விடுங்கள் …

இல்லை இது
கவிதைதானென்றால்….
சொல்லிவிட்டுப் போங்கள்….

      சொல்லிவிட்டுப் போகத்தான் வந்திருக்கிறேன் நண்பரே.

      அடுத்த நூல் வெளியீட்டு விழாவிற்குப், புதுகையின் எல்லை தாண்டி, எங்களையும் அழையுங்கள்.

ஒரு பட்டமிளகாயும், கொஞ்சம் உப்பும்

     காலைப் பொழுதில், பழைய சாதத்தில், சிறிது உப்பிட்டு, மோர் கலந்து பிசைந்து, ஒரு கைப் பிடி, அகழ்ந்து எடுத்து, வாயில் இட்டு, மெல்ல மெல்ல மென்று சுவைத்தபடியே, பட்ட மிளகாயை ஒரு கடி, கடித்துப் பாருங்களேன், சுள்ளென்று உறைக்கும்.

     கவிஞரின் நூலும் அப்படித்தான், பக்கத்துக்குப் பக்கம், சுள்ளென்று சுவை கூட்டுகிறது.

ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்.


வாழ்த்துக்கள் நண்பரே.

30 கருத்துகள்:

  1. நல்ல நூல் அறிமுகம். 'கடவுள் கேட்ட வரம்' கவிதை ரசித்தேன். முன்னெல்லாம் கவிதை என்றால் காததூரம் ஓடுபவன், இப்போதுதான் படித்துப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். இந்தக் கவிஞரின் கவிதைகளைப் படித்திருந்தாலும் இத்தனை விபரங்கள் தெரியாது! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்ல அறிமுகம். நண்பருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. மனம் நிறைந்த நன்றிகள் நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. அருமை... அன்பருக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. நல்ல அறிமுகம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு. கவித்துவம் நர்த்தனம். வாசித்து முடித்தும் வார்த்தைகள் வாசம் அப்பிக்கொண்டது. வெகுவாகை வாசகனை ஒட்டிக்கொள்ளும் கவிதைகள். கவிஞருக்கும் கரிசனத்துடன் எங்களிடம் கொண்டுவந்த ஜெயக்குமாருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. கவிஞரின் கவிதைகளை தங்களது பாணியில் விவரித்தமை அழகோவியமாய் ஜொலிக்கிறது நண்பரே...

    வாழ்த்துகள் கவிஞருக்கு.

    பதிலளிநீக்கு
  9. நல்ல நூல் அறிமுகம். நன்றி !

    பதிலளிநீக்கு
  10. புஸ்தகாவில் வெளியாகியுள்ள இவரது நூலுக்கு அங்கேயே நான் இப்படி review கொடுத்திருக்கிறேன்:

    புதுக்கோட்டையின் சிறப்பான கவிஞர். தெளிவும் எளிமையும் உணர்ச்சி ததும்பலும் பல கவிதைகளின் அடிநாதமாக உள்ளது. ஒன்றுவிடாமல் படிக்கமுடிகின்ற கவிதைகள்.

    இவர் இன்னும் நிறைய எழுதிக் குவிக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    ஐயா
    சிறப்பான அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் மீரா செல்வக்குமார் அண்ணா பல நூல்கள் வெளியீடு செய்ய எனது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. கவித்துவமான நடையில்
    அருமையான ஒரு கவிதை நூல்
    அறிமுகம

    தொட்டுச் சப்பியவையே இத்தனை
    சுவையெனாறால்...

    நிச்சயம் அள்ளிச் சாப்பிடவேண்டும்...

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. அருமையான கவிதைகள்.சிறப்பான அறிமுகம்.மீரா செல்வகுமாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. எங்கள் வறுமையில்
    நாமும் பழஞ்சோற்றோடு
    ஒரு பட்டமிளகாயும்,
    கொஞ்சம் உப்பும் சேர்த்து
    உண்ட நினைவு - தங்கள்
    பதிவைப் படித்ததும் கிட்டியதே!

    கவிஞர் மீரா.செல்வக்குமார் அவர்களுக்கு
    வாழ்த்தும் பாராட்டும்!

    பதிலளிநீக்கு
  15. பெயரிலேயே மீரா இருக்கே , கந்தக பூமியான சிவகங்கையில், கவிதை சந்தனமாக திகழ்ந்த மீராவின் தாசனோ இவர் :)

    பதிலளிநீக்கு
  16. கவிஞர் மீராகுமாருக்கு வாழ்த்துக்கள். பகிர்வை பகிர்ந்த உங்களுக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. நண்பர் மீரா செல்வகுமாருக்கு வாழ்த்துகள். உங்கள் அறிமுகமும் அருமை!!

    பதிலளிநீக்கு
  18. ஒரு காய்ந்த சப்பாத்தியும் ஒரு வெங்காயமும் சாப்பிடும் கரிசல்மண் தொழிலாளர்கள் ஒரு மூட்டை நெல்லை அனாயசமாக தூக்குவதைக் கண்டிருக்கிறேன் .
    நல்ல பதிவு கரந்தையார் அவர்களே.

    பதிலளிநீக்கு
  19. நல்லதொரு நூல் அறிமுகம். செல்வா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. மீரா செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள்.
    அருமையாக விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  21. கவிஞர் மீரா செல்வகுமாரின் கவிதை நூலை நன்றாகவே, ரசித்துப் படித்து விமர்சனம் செய்து இருக்கிறீர்கள். நானும் வாங்கி படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  22. கவிஞர் மீரா செல்வக்குமாரின் ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும் கவிதை நூலை கவிஞர் முத்துநிலவன் அவர்கள் இல்லத்தில் வெளியிடும் வாய்ப்பினை எனக்களித்தபோது காரமும் சுவைப்பட்டது. நல்ல அலசல் அறிமுகம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  23. மிக அருமையாக இருக்குது அனைத்தும்.. ஆனா பெருத்து விடுகிறது, இரண்டு பதிவாகப் போட்டால், இன்னும் நல்லா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. இன்றைய நிலையை இதைவிட அழகாகச் சொல்ல முடியுமா/வரமொன்று தா என்றான்

    கேள் என்றேன்

    அலைபேசி வேண்டுகிறான்

    அவனை வெறுங்கையோடே
    அனுப்பிவிட்டேன்.
    வார்த்தைகளில் சிக்கனம் ஆனால் பொருள் பொதிந்தவை புதுகையில் இவரது அறி முகம் கிடைக்காதது பேரிழப்பு என்றே தோன்று கிறது

    பதிலளிநீக்கு
  25. நல்ல நூல் அறிமுகம்,வித்தியாசமான தலைப்பு,பட்டமிளகாயும்,கொஞ்சம் உப்பும்,
    அட்டைபடமும் அதி உறுதி செய்து
    செல்கிறது வாழ்த்துக்கள்,பட்ட மிளகாயும்
    கொஞ்சம் உப்பும் புஸ்தகம் கிடைக்குமா,,,?

    பதிலளிநீக்கு
  26. நூல் அறிமுகம் அருமை போங்கள். பதிப்பகம், விலை போன்ற விவரங்களையும் தரலாமே.

    பதிலளிநீக்கு
  27. அருமையான விமர்சனம். அருமையான தொகுப்பு. வெளியிடப்பட்ட விதம் பாராட்டத்தக்கது. அனைத்திற்கும் மேலாக பதிவிற்கான தலைப்பு.... உங்கள் பாணியில்..ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  28. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களின் கவிதை நூல் வெளியீடே ஒரு புதுமை என்றால் தங்களின் பதிவிட்ட நடையும் ஒரு புதுமை. பட்ட மிளகாய் உரைப்புச் சுவையைத் தராமல் இனிப்புச் சுவை தந்துள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அருமை விமர்சனம்
    வாழ்த்துக்கள்
    தங்களிற்கும் வாழ்த்துகள்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு