24 ஜூன் 2017

தலை நிமிர்ந்த தமிழ்

சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
முன்னோட்டம்


தலை நிமிர்ந்த தமிழ்


     ஆண்டு 1872.

     ஆதீனத்தின் உணவுக் கூடம்.

     பிற்பகல் மணி 1.00

     பணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     இன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.


     உணவுப் பதார்த்தங்களை ஒவ்வொன்றாய் சரிபார்த்து, பரிமாறுவதற்கு தயாராக எடுத்து வைக்கிறார்கள்.

      இதோ ஆதீனமும் வந்து விட்டார்.

      பணியாளர்கள் வணங்கி வரவேற்கின்றனர்.

      ஆதீனம் மெல்ல தன் இருக்கையில் அமர்கிறார்.

      ஒரு பணியாளர், பணிவோடு வாழை இலையினை விரித்து வைத்து, தண்ணீர் தெளிக்கிறார்.

       சற்று பொறுங்கள்

        ஆதீனம் மெதுவாய் ஆணையிட, இலை போட்டவரின் முகத்தில் கலவரக் குறி தோன்றுகிறது.

         ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ?

         காரணம் புரியாமல் பதறுகிறார்.

        பணியாளரின் முகக் குறிப்பை உணர்ந்த ஆதீனம், மெல்லச் சிரிக்கிறார்.

        நம் ஆதீனத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும், ஆசிரியர் வந்தவுடன் சாப்பிடுகிறேன். அதுவரை காத்திருக்கிறேன்.

        அருகே நின்றிருந்த பணியாளர்களின் முகத்தில் தெரிந்த பதற்றம், மெல்ல மெல்ல வியப்பாக மாறுகிறது.

        ஆசிரியருக்காக, ஆதீனம் காத்திருப்பதா? அப்படியானால் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்.

         வாய் மூடி வாசலைப் பார்க்கிறார்கள்.

         இதோ ஆசிரியர் வருகிறார்.

         ஒரு யானை மெல்ல, மெல்ல அசைந்து அசைந்து நடந்து வருவதைப் போல ஆசிரியர் வருகிறார்.

         நன்கு வளர்ச்சியடைந்த உயரமான தோற்றம்

        இளம் தொந்தி

        முழங்கால் வரை நீண்ட கைகள்

        பரந்த நெற்றி

        மார்பிலே ருத்திராட்ச கண்டி

        இடையில் தூய வெள்ளை ஆடை

        ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற, அமைதியான முகம்.

         குளிர்ந்த பார்வை

        உணவுக் கூடத்தின் வாயிலருகே நிற்கிறார்.

        உயர்ந்த உருவம், நிலை வாயிலோ சிறியது. மெல்லக் குனிந்து, உள்ளே நுழைகிறார்.

         ஆசிரியரின் வரவை மகிழ்வுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ஆதீனத்தின் மலர்ந்த முகத்தில், திடீரென சிந்தனையின் ரேகைகள் படருகின்றன.

          ஆதீனத்தின் மனதில் தீவிரமாய் ஒரு எண்ணம், ஒரு வருத்தம் நுழைந்து விட்டதை, அவர்தம் முகம், மின்னல் போல், ஒரு நொடி வெளிப்படுத்தி மறைகிறது.

        எண்ணவோட்டத்தை வெளிக் காட்டாமல், பிறர் அறியாமல் மறைத்தபடி புன்னகையோடு, ஆசிரியரை வரவேற்று அமர வைக்கிறார்.

         மதிய உணவு முடிந்தவுடன், ஆசிரியரை அனுப்பி வைத்துவிட்டு, ஆதீனம் அமர்நதே இருக்கிறார்.

        குழம்பிப்போன பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

         ஆதீனத்தின் முகத்தில் மீண்டும் சிந்தனை ரேகைகள்.

         உருவத்தால் மட்டமல்ல, உள்ளத்தாலும், தமிழ் உள்ளத்தாலும், உயர்ந்து நிற்கும் ஆசிரியர், தலை குனியலாமா?

         தம்மிடம் உள்ள வற்றா தமிழ் வளத்தை, மாணவர்களுக்கு வாரி  வாரி வழங்கும் பெரு வள்ளல் தலை குனியலாமா?

         இவருக்கு முன்னும் யாரும் இல்லை, பின்னும் யாரும் வரப்போவதில்லை எனப் போற்றத் தக்க வகையில், ஆயிரமாயிரம் பாடல்களை இயற்றிய மகாகவி, தலை குனியலாமா?

        வித்துவான்களுக்கு எல்லாம் பெரிய வித்துவான், மகா வித்துவானின் தலை, உணவுக் கூடத்தில கூட தாழக் கூடாது.

         கட்டிடப் பராமரிப்பாளரை உடனே அழைத்து வாருங்கள்.

         ஆதீனத்தின் உத்தரவு கேட்டு, நாலாபுறமும் பணியாளர்கள் சிதறி ஓடுகிறார்கள்.

          சிறிது நேரத்தில், கட்டிடப் பராமரிப்பாளர், கை கட்டியபடி, ஆதீனத்தின் முன் நிற்கிறார்.

        உணவுக் கூடத்தின் நுழைவு வாயிலை இடித்து, உடனே உயர்த்திக் கட்டுங்கள். அடுத்த வேளை, உணவு உண்பதற்கு முன், நிலை வாயிலின் உயரம் உயர்ந்தாக வேண்டும்.

         ஆதீனத்தின் முகத்தில் ஒரு புதுப் பொலிவு,. மகிழ்வோடு எழுந்து, மன நிறைவோடு மெல்ல வெளியேறுகிறார்.

        அடுத்த சில மணி நேரங்களில், நுழைவாயில், இடிக்கப் பட்டு, உயரம் உயர்த்தப் பட்டது.

      நண்பர்களே, இந்த ஆதீனம் யார் தெரியுமா?

திருவாவடுதுறை ஆதீனத்தின்
16 வது பட்டம்
திருமிகு மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்.

ஆதீனத்தால், உணவுக் கூடத்தின்
நிலை வாயில்,
உயர்த்தப் பட்டது
யாருக்காகத் தெரியுமா,


மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்களுக்காக.

வாழ்க தமிழ்



37 கருத்துகள்:

  1. மேன்மக்கள் என்றும் மேன்மக்களே..

    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  2. மேதைகளின் வாழ்வு எப்படியென நாம் அறிய வேண்டி பிறந்தவர்கள் இவர்கள் அறிந்தோம் நன்றி நண்பரே

    த.ம.2

    பதிலளிநீக்கு
  3. சிலிர்க்கிறது. நிஜமாகவே பெரிய மனிதர்கள்.
    தம +1

    பதிலளிநீக்கு
  4. நூற்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி என்றாலும் ,தமிழுக்குத் தொண்டு ஆற்றிய மேதைகளின் வாழ்வில் நடந்ததாச்சே ,எப்படி மறக்க இயலும் :)

    பதிலளிநீக்கு
  5. அக்காலம்பொற்காலம்.

    பதிலளிநீக்கு
  6. அ. மார்க்ஸ் கூட இவரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் ...
    நல்ல அறிமுகம்
    ஆசிரியருக்கு இருந்த மரியாதை சிலிர்க்க வைக்கிறது

    பதிலளிநீக்கு
  7. அருமையான செய்தி.
    தமிழை போற்றியவர்களுக்கு வணக்கங்கள்.
    தமிழ் வாழ்க!

    பதிலளிநீக்கு
  8. அந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் மரியாதை என்பது உளப்பூர்வமாக இருந்ததை இந்த நிகழ்ச்சி உணர்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  9. kathai palaiyathuthan anal sollum vetham suvaiyanathu mekka nantri iyya

    பதிலளிநீக்கு
  10. kathai palaiyathuthan anal sollum vetham suvaiyanathu mekka nantri iyya

    பதிலளிநீக்கு
  11. எவ்வளவு அருமையான அற்புதமான செயல் !! ஆதினம் அவர்கள் தமிழுக்கு தமிழாசிரியருக்கு மரியாதை செய்த செயல் மனம் சிலிர்த்தது .வாராவாரம் பல அறியாத தகவல்களை பகிர்வுக்கு நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  12. ஆதீனம் ஆசிரியர் வந்து அமர்ந்தபி ந் உணவுக்கு அமர்ந்திருக்கலாமோ என்று நினைக்கத்தோன்றுகிறது இருந்தாலும் வாசலை உயர்த்திக் கட்டி ஆசிரியருக்கு மரியாதை செய்து விட்டார் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை மிகுந்த மரியாதைக்கு உரியவரே

    பதிலளிநீக்கு
  13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களின் செயல்கள் எப்பொழுதும் போற்றுதலுக்கு உரியனவாக இருக்கின்றன. எனவே அவர்களை மனதின் ஆழத்தில் வைத்து போற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    ஐயா

    அறியமுடியாத மனிதரின் தகவல் பற்றி மிக மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. Even Kalam used to tell Poets will not stand....sit...good post.

    பதிலளிநீக்கு
  16. correction: poets should not stand, please sit....his word...

    பதிலளிநீக்கு
  17. மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு.

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு.

    தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. தமிழுக்கு வாழ்வுதந்தவர்கள் ஆதீனகர்த்தர்கள்! எனவேதான் நிலைப்படியில் தனது தலை தாழ்வதை மாகவித்துவான் அவர்கள் பொருட்படுத்தவில்லை போலும்! அதே சமயம், தமிழ்க்கவிஞர்கள் வாழ்ந்தால்தான் தமிழ் வாழும் என்பதைப் புரிந்துகொண்ட புரவலர்களின் கண்ணோட்டமோ, அவர்தம் தலை தாழ்வதை இனியும் அனுமதிக்கக்கூடாது என்று முடிவெடுக்கிறது! அற்புதமான நிகழ்வு! அதை எடுத்துச்சொன்ன தங்களுக்கு நன்றி! - இராய செல்லப்பா சென்னையில் இருந்து

    பதிலளிநீக்கு
  20. ஏற்கெனவே படிச்சிருக்கேன்! என்றாலும் மீண்டும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. நுணுக்கமான செய்தி. கூறிய விதம் மிகவும் அருமை.

    பதிலளிநீக்கு
  22. ஓ மிக அருமையான தகவல்.. நாம் அறிந்து கொள்ள இப்படி இன்னும் எவ்வளவோ விசயங்கள் இருக்கிறது. இப்படி நீங்கள் போன்றோர் எழுதும் எழுத்துக்களால் பல விசயங்கள் தெரிந்து கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  23. அரிய செய்தியை அறிய நேர்ந்தபோது மெய்சிலிர்த்தது. வாழ்க உ.வே.சா அவர்களின் ஆசிரியர் புகழ்.

    பதிலளிநீக்கு
  24. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். இன்றைக்குத் தமிழின் அருமை தெரியாதவர்கள்தான் கல்விநிறுவன உயர்பதவிக்கு வருகிறார்கள். அரசியலின் கைப்பொம்மையாகிறார்கள். அவர்களுக்குத் தமிழையும் தமிழ் கற்பிப்போரையும் உண்மையறிந்து மதிப்பிடும் திறனை இழந்துவிட்டவர்களாக இயங்குகிறார்கள். ஆதீனம். மகாவித்துவான் போன்றோர் வாழ்ந்த பூமி இவர்களையும் தாங்கிக்கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. அவர்களுக்கு என்பதை அவர்கள் என்று திருத்தி வாசிக்கவும்.

    பதிலளிநீக்கு
  26. அந்த இரு தமிழுக்கும் நான் தலைவணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. தமிழையும் தமிழ் வளர்த்தவர்களையும் வளர்த்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் !

    உயர்ந்தோன் உயர்ந்தோனை உள்ளத்தால் உள்ளல்
    நயந்தோன் எனக்காட்டும் நன்று !

    அருமை கரந்தை மைந்தரே
    தம +1

    பதிலளிநீக்கு
  29. இப்படி தமிழ் வளர்த்த ஆதினங்கள் இன்று பாதை மாறி போவது வேதனை அழிக்கிறது... ஆசானே..

    பதிலளிநீக்கு
  30. தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  31. எத்தனை உயரிய செயல்! மாமனிதர்கள்! தமிழைப் போற்றி தமிழை வாழவைக்க அரும்பாடுபட்ட மேதைகள் வாழ்ந்த இந்நிலத்தில் மெய்சிலிர்க்கும் அதே வேளையில் இப்போது தமிழ் போகும் நிலை கண்டு மனம் வேதனையும் படுகிறது.

    அருமையான பதிவு! நண்பரே/சகோ இப்படிப் பல தகவல்களை அறியத்தரும் தங்களுக்கு நன்றிகள் பல.

    துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  32. ஆசிரியர் தலை தாழ்ந்துவிடக்கூடாது என்பதில் என்னவொரு அக்கறை.....

    சிறப்பான பகிர்வு. பாராட்டுகள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

    பதிலளிநீக்கு
  33. வரலாற்றை மீட்டுப் படிக்க
    தங்கள் பதிவு உதவுகிறது.

    பதிலளிநீக்கு
  34. அருமையான செய்தி.
    thamil manam - 12
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு