09 ஜூன் 2017

கலிலுல்லா




     டவுன் சிண்ட்ரோம்

     Down Syndrome

     தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, மெல்ல மெல்ல உருவம் ஏதுமற்ற பிண்டமாய் உருமாறி, பின் மெல்ல வளர்ந்து, கை கால்கள் முளைத்து, இதயம் துடித்து, பனிக் குடம் உடைத்து வெளி வந்தவர்கள்தான் நாம் அனைவரும்.

      அணுக்கள் இணைந்து கருவாய் உருமாறும் பொழுது, ஏற்படும் சிறு சிறு மரபணுக் குறைபாடுகள், உடலில் மட்டுமல்ல, மூளையினையும் தாக்கி, பெருந் துயரங்களைச் சுமந்த பிள்ளைகளை உலகிற்கு வழங்கி விடுகின்றன.


      கருவில் ஏதேனும் ஒன்று குறைந்தால் மட்டுமல்ல, அதிகப்படியாய் ஏதேனும் ஒன்று சேர்ந்தாலும் கூட, வாழ்வு முழுவதும் வேதனைதான்.

     டவுன் சிண்ட்ரோம்

     அதிகப்படியாய், ஒரே ஒரு குரோமசோம், ஓடி வந்து ஒட்டிக் கொள்வதால் ஏற்படும் விபரீதம்.

      ஆணிண் 23 குரோமசோம்களும், பெண்ணின் 23 குரோமசோம்களும் இணைவதால் உருவாவதுதான் கரு.

       சில சமயம், இந்த குரோமசோம் சோடிகளில், 21 வது குரோமசோம் சோடியில், இரண்டிற்குப் பதில், மூன்றாவதாய், ஒரே ஒரு குரோமசோம், அழுது, அடம் பிடித்து சேர்ந்து கொள்ளும்.

      தேவைக்கும் அதிகமாய் ஒரு குரோமசோம்

     கூடுதல் குரோமசோமுடன் ஒரு கரு

     ஒரு உயிர்

      பிறக்கும் பொழுதே, தீராப் பிரச்சினையினையும் கைப் பிடித்து, உடன் அழைத்துக் கொண்டு வரும் குழந்தை.

      இரண்டு குரோமசோம்களுக்குப் பதில், மூன்று குரோமசோம்.

      எனவே இதன் பெயர்

      ட்ரைசோமி 21

       Trisomy 21

       இதன் மறுபெயர்தான், இதன் இன்னொரு பெயர்தான் டவுன் சிண்ட்ரோம்.

       சிறிய வாய்

       மேல் நோக்கிச் சாய்ந்த கண்கள்

       கன்னங்கள் நிறைந்த வட்டமான முகம்

       வெளிப்புறம் நீண்டு காணப்படும் பெரிய நாக்கு

       தட்டையான மூக்கு

       தள்ளாடும் அவயங்கள்

       குள்ளமான தோற்றம்

       குண்டான உடல் அமைப்பு

       


தோற்றத்தில் மட்டுமல்ல, இவர்களின் உடன் பிறந்த தோழராய், ஏதேனும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட, நோய்களும், இவர்களுடன் சேர்ந்தே வளரும்.

         இதயக் கோளாறு

         குடலில் அசாதாரணமான நிலைமை

         கண் பிரச்சினை

         காது கேட்டலில் குறைபாடு

         மீண்டும், மீண்டும் ஏற்படும் காதுத் தொற்று நோய்கள்

          இடுப்பு இயல்வு பிறழ்ந்த வளர்ச்சி

          உறக்கத்தின் போது மூச்சுத் திணறல்

         தைராய்டு பிரச்சினை

         வலுவற்ற கழுத்து மூட்டுகள்


         வாழ் நாள் முழுதும் போராட்டம், போராட்டம்

         வாழ்வு முழுவதும் வேதனை, வேதனை

         இவர்களின் இவ்வுலக வாழ்வு கூட குறைந்த காலம்தான்

         இவர்களின் ஆயுள், மருத்துவத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே 50 வயதுதான்.

         டவுன் சிண்ட்ரோம்

         இக்குறைபாட்டின் தன்மையையும், இதன் விளைவுகளையும், முதன் முதலாய் இந்த உலகிற்கு விளக்கிக் கூறியவர், ஒரு ஆங்கிலேய மருத்துவர்.

      ஜான் லாங்டன் டவுன்.

      எனவே இக்குறைபாடு, இவர் பெயராலேயே அழைக்கப்படலாயிற்று.

     டவுன் சிண்ட்ரோம்

      குணப்படுத்த இன்று வரை மருந்துகள் ஏதுமில்லை

      பெரிதும் முயன்றால், இவர்கள் வாழ்வில் சிறிதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்

      வாழக் கற்றுக் கொடுக்கலாம்.

     டவுன் சிண்ட்ரோம் குறைபாட்டால், முழுமையாய் பாதிக்கப் பட்டு, கடும் முயற்சிக்குப் பின், கடும் பயிற்சிக்குப் பின், வாழக் கற்றுக் கொண்ட அந்தச் சிறுமி, பள்ளி விழா அரங்கில் அமர்ந்திருக்கிறார்.

     கிணற்றுக்குள் இருந்து அழைப்பது போல் கேட்கிறது, மேடையில் இருந்து காற்றில் தவழ்ந்து வந்த அழைப்பு.

     தன்னைத்தான் அழைக்கிறார்கள்

     உணர்ந்து கொள்ளவே சில நொடிகள் ஆகிவிட்டன.

     அரங்கு முழுதும் கரவொலி

     சிறுமிக்கு மெதுவாய் கேட்கிறது

     இருக்கையில் இருந்து மெல்ல எழுகிறார்

     மேடையை நோக்கித் தள்ளாடித் தள்ளாடி நடக்கிறார்

     வலது கையில் ஒரு காகிதம்

     கையில் இருந்து விலகிப் பறந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை சிறுமிக்கு.

     வெள்ளைத் தாளினை இறுகப் பற்றியபடி நடக்கிறார்

     மேடையின் படிக்கட்டுகளில் தட்டுத் தடுமாறி ஏறுகிறார்

      நாக்பூர் மாவட்டத்தின், ஜீவோதயா சிறப்புப் பள்ளி, விழா மேடை

     ஆண்டு 2014, ஜுலை மாதம்

     பிறந்த குழந்தை, அடுத்த நொடியே, எழுந்து நடந்து வருவதைப் போல், நடந்து வரும் சிறுமியை, வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, மேடையில் நிற்கிறார், விழாவின் சிறப்பு அழைப்பாளர்.

      மாணவர்களின் கரவொலியால் அரங்கம் அதிர்கிறது

      மெல்ல மேடையேறி, முகத்தில் ஒரு வெட்கப் புன்னகையுடன், வெள்ளைத் தாளினை நீட்டுகிறார்.

       சிறப்பு விருந்தினர், குனிந்து, பெற்றுக் கொண்டு, வெள்ளைத் தாளினைப் பார்க்கிறார்.

        தனது உருவம், வெள்ளைத் தாளில்.

       நா…. நா…. நான் வ.. வ… வ….. வரை….. வரைந் ……வரைந்த…. வரைந்தது

       திக்கித் திணறியபடி வார்த்தைகள் வெளிவருகின்றன.

       விருந்தினர் வியந்து போகிறார்

       அச்சு அசலாய், தன் முகம் தாளிள் பளிச்சிடுகிறது.

        விருந்தினர், சிறுமியின் கரம் பற்றி மகிழ்கிறார்

        இந்தப் பிஞ்சுக் கரங்களா, என் உருவத்தினை, இவ்வளவு நேர்த்தியாய் வரைந்திருக்கின்றன.

        நெகிழ்ந்து போகிறார்

        மகளே, உன் பெயர் என்ன?

        க …. லி ….. லு …. ல் ….. லா

        இப்படத்தினை வரைய, இச்சிறுமி எத்துனை சிரமப் பட்டிருப்பார்.

        என் படத்தினை வரைய, எவ்வளவு நேரமாயிற்று?

        அன்பொழுகக் கேட்கிறார்

        பலமுறை வரைந்தேன். படம் சரியாக வரவில்லை, எனவே மீண்டும், மீண்டும் வரைந்தேன். இப் படத்தினை வரைந்து முடிக்க, பல நாட்கள் ஆகிவிட்டன.

        தட்டுத் தடுமாறி, திக்கித் திணறி, பேசி முடிக்கவே பல நிமிடங்கள் ஆகிவிட்டன, அச்சிறுமிக்கு.

        சிறுமியின் அன்பில் தோய்ந்து போகிறார்.

        அன்று மாலையே, கலிலுல்லா வரைந்த படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவேற்றி மகிழ்ந்தார்.



This sketch was gifted 2 me in Nagpur by Khalilullah.
A young girl suffering from Down’s Syndrome.
Thnku my friend.

      


நண்பர்களே, இம்மனிதர், யார் தெரியுமா?

       2015இல் இம்மனிதர், இம் மாமனிதர் மறைந்த போது, இலட்சக் கணக்கான இளைஞர்கள், தங்கள் சமூக வலை தளங்களில், கலிலுல்லா வரைந்த படத்தினைத்தான், புரொஃபைல் படமாக மாற்றினர்.

        இதுவே இம் மகத்தான மனிதருக்கு, இளைஞர்களின் அஞ்சலியாக அமைந்தது.

         இளைஞர்கள்  மீது, இம் மாமனிதர் கொண்டிருந்த, அசைக்க முடியாத நம்பிக்கைக்கு, இளைஞர்களின் வீர வணக்கமாகவும் அமைந்தது.








இம் மனிதர்,
இம் மாமனிதர்
இளைஞர்களின் எழுச்சி நாயகர்

டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்.

31 கருத்துகள்:

  1. டவுன் சிண்ட்ரோம் பற்றி A TO Z சொல்லிய விதமும்,A P J அப்துல் கலாம் செய்தியை முடிச்சு போட்டு விதமும் அருமை !ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  2. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, டவுன் சிண்ட்ரோம் குறைபாடு உடையவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஒரு உந்துசக்தியாக தங்களின் பதிவு அமைந்துள்ளது. பெருமகனார் அபதுல்கலாம் அவர்களின் இரக்க உணர்வும் பெருந்தன்மையும் போற்றுதலுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  3. கலிலுல்லா நிலைமை மிகவும் வேதனை...

    பதிலளிநீக்கு
  4. வியப்புக்குறிய செய்தி மனம் கனத்து விட்டது நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. இந்நிகழ்வைக் குறித்து ஏற்கனவே வாசித்த நினைவு. தங்களது அழகிய நடையில் இங்கு மீண்டும் வாசிக்கக் கிடைத்தமைக்கு மிக்க நன்றி. டவுன்சின்ட்ரோம் உள்ளவர்களைப் பார்க்கும் போதுமனம் கனத்துவிடும். அப்படியே இதுவும்!! இவர்களின் பெற்றோருக்கு வணக்கங்கள்! அப்துல்கலாம் அவர்கள் மாமனிதர்!

    --துளசி, கீதா

    பதிலளிநீக்கு
  6. மிக நல்ல தெளிவான விளக்கத்தோடு அருமையான ஒரு பதிவு.

    பதிலளிநீக்கு
  7. இத்தனை விரிவாக இந்தக்
    குறைபாடுக் குறித்துத் தெரியாது
    அருமையாக விரிவாகத் தெளிவாகப்
    பதிவிட்டு அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    புகைப்படங்கள் கூடுதல் சிறப்பு

    பதிலளிநீக்கு
  8. முகப்புத்தகத்தில் நிறைய பதிவுகள் ஐயா அப்துல் கலாம் பற்றி படித்தேன் ஆனால் இங்குதான் கலீலுல்லா வரைந்த படம் அவர் தரவேற்றியது எல்லாம் அறிந்துகொண்டேன் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  9. அற்புதமானப் பதிவு.பள்ளிக்கூடப் பாடங்களில் சேர்க்கும் தகுதி உடையது.
    வாழ்த்துக்கள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. பன்முகம் கொண்ட பல்துறை ஆசானே! நீர் வாழ்க!!
    மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம்.தங்களை கணித ஆசிரியர்? என்றுதாங்க இன்றுவரை எண்ணிக்கொண்டிருந்தேன்.ஆனால் இந்த கட்டுரை வாயிலாக தாங்கள் பன்முகம் கொண்ட பல்துறை ஆசான்! என அறிந்துகொண்டேன்.தங்களது அறிவுப்பணியுடன் தமிழ்ப்பணியும் தொடர வணங்கி வாழ்த்துகிறேன்..என அன்பன்,சி.பரமேஸ்வரன்,அரசுப் பேருந்து ஓட்டுநர்,சத்தியமங்கலம்-ஈரோடு மாவட்டம்.

    பதிலளிநீக்கு
  11. டவுன் சிண்ட்ரோம் பற்றிய விவரங்கள் மனதை பாதிக்கின்றன. அவ்வைப் பாட்டியின் வரிகளை உதடுகள் நன்றியுடன் முணுமுணுக்கின்றன....

    'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.... அதனினும் அரிது.....'

    பதிலளிநீக்கு
  12. டவுன் சிண்ட்ரோம் பற்றி தெரிந்து கொண்டேன். கலிலுல்லா வரைந்த ஓவியம் அருமை.
    திரு . அப்துல்கலாம் அவர்கள் பற்றிய விவரங்கள் படங்கள் எல்லாம் அருமை.
    பகிர்வுக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  13. சாதனை மனிதர் கலாமை நினைவு கூர்வோம் .

    பதிலளிநீக்கு
  14. அருமை ஆசிரியரே...எனது வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  15. நெகிழ்ச்சியான பதிவு. குறைபாட்டைக் கடந்து சாதித்தவர்களை தேடித் தேடி கண்டுபிடித்து அவர்களை உலகுக்கு வெளிப்படுத்துவதிலும், பாராட்டிச் சிறப்பித்ததிலும் அதிக ஈடுபாடு காட்டியவர் மாமனிதர் ஐயா Dr. APJ அவர்கள். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. விளக்கமான,சிறப்பான பகிர்வு.நன்றி

    பதிலளிநீக்கு
  17. சிறப்பான பதிவு. தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  18. அருமையான ஒரு பதிவு

    பதிலளிநீக்கு
  19. மனதைக் கலங்கச் செய்கின்றது பதிவு..

    பதிலளிநீக்கு
  20. குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பலரைப் பார்க்கிறேன் டௌன் சிண்ட்ரோம் மற்றும் ஸ்பாஸ்டிக் என வகைப்படுத்தப்படும் குறைகள் எல்லாம் ஒன்றா.இம்மாதிரிக் குழந்தைகளைப் பொறுமையோடு வளர்க்க வேண்டும் விழிப்புணர்ச்சி தரும்பதிவு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் !

    இறைவன் படைப்பில் இதுவும் ஒன்று
    கலிலுல்லாவின் காலம் வலியுள்ளதுதான்
    இருப்பினும் கலாம் ஐயாவின் கைப்பற்றிய பெருமை
    போதுமாய் இருக்கிறது வாழ்வின் வெற்றிக்கு
    வாழ்த்துகள் கலிலுல்லாவுக்கும் மாமனிதர் கலாமுக்கும்

    தம +1

    பதிலளிநீக்கு
  22. புல்லரித்துப்போகிறது படித்து முடிப்பதற்குள்ளாய்,,,,,/மனித வாழ்க்கையில் எத்தனை எத்தனை இடர்கள்,பிறந்து வளர்ந்து ஆளாவதற்குள்,,,,,,,,இத்தனைக்கும் ஊடாக அவர் படித்து வந்து விழா மேடையில் அமர்ந்தது பெரிய சாதனையே,பாராட்டுவோம்,கலிலுல்லாவை,அவருக்கான காலம் கனிந்து வருகிறது/

    பதிலளிநீக்கு
  23. ஒரு குறைப்பாட்டை கூட நேர்த்தியாக, சரளமாக சொல்ல முடியுமா..வியந்துபோனேன்.

    பதிலளிநீக்கு

  24. டவுன் சிண்ட்ரோம் பற்றி
    வகுப்பு ஒன்ற நடாத்தி முடித்தது போல
    அருமையாக வெளிப்படுத்தி உள்ளீர்
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  25. Empathy is the best medicine for the Down syndrome children. Your write-up is superb.
    Dr A Govindaraju from Canada.

    பதிலளிநீக்கு
  26. கடவுள் மனிதனை படைத்தான்.அவரவர் பாவ புன்னியத்தால் குறைபாடோடு பிறப்பர் என்ற மூட நம்பிக்கை மறைமுகமாக சாடி டவுன் சிண்டரோம் பற்றி சொல்லிய விதம் அருமை..அருமை

    பதிலளிநீக்கு
  27. பிறப்பின் குறைபாடு என்பது நரகவேதனை சிறுமியின் பொறுமை மிகவும் மனதை நெருடுகின்றது. அப்துல்கலாம்பற்றிய மதிப்பு இன்னும் அதிகமாகிறது. மிகவும் சிறப்புமிக்க பகிர்வு.

    பதிலளிநீக்கு
  28. டவுன்சின்ட்ரோம் பற்றி படித்துள்ளேன். தங்கள் பதிவு மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
  29. நல்ல பதிவு.
    மிக்க நன்றி சகோதரா.
    tamil manam - 15
    https://kovaikkothai.wordpress.com/

    பதிலளிநீக்கு
  30. டவுண் சின்ட்ரோம் - அந்த நோயின் கடுமையை அழகாக எழுத்தில் உணரும்வண்ணம் கொண்டுவந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    அப்துல்கலாம் அவர்கள் - மிகுந்த மனித நேயம் கொண்டவர். அவர்களைப்போல் இருப்பவர்கள் கோடியில் ஒருவர் என்று சொன்னால் மிகையாகாது. அவர் மறைந்தபோது, எத்தனை எத்தனை அஞ்சலிப் பதாகைகளை பெங்களூர், கர்னாடகாவில் பல இடங்களில் பார்த்தேன். பொதுவாக கர்னாடகாவில் தமிழ் எதிர்ப்புணர்வு இருக்கும். ஆனால் பார்த்த இடங்களிலெல்லாம் தனிப்பட்ட அஞ்சலி போஸ்டர்கள். அபூர்வப் பிறவி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு