06 மே 2018

இராஜராஜன் விருது




      தென்னம நாடு

      தென்னவன் நாடு

      தஞ்சாவூர், ஒரத்தநாட்டிற்கு அருகில் உள்ள சிற்றூர்.

      பாண்டிய மன்னன் ஒருவன் படையுடன் வந்து, இவ்வூரில் சில காலம் தங்கி இருந்த காரணத்தால் தென்னவன் நாடு என இவ்வூர் அழைக்கப் படுகிறது.

      பாண்டிய மன்னன் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில், ஒரு சிவலிங்கத்தை நிறுவி, பூசைகள் செய்து, உணவு உண்டதன் காரணமாக, இவ்வூரில் இச்சிவலிங்கம் உறையும் கோயில், இன்றும், பாண்டியுண்டான் என்றே அழைக்கப்படுகிறது.


       பல வரலாற்று எச்சங்களை விழுங்கி, பெரும் ஆய்விற்குரியப் நிலப் பகுதியாக விளங்கும், இந்தத் தென்னமநாட்டில், 1993 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றதுதான், இராஜராஜன் கல்வி அறக்கட்டளையாகும்.

      இந்த அறக்கட்டளையில் சார்பில், இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஒன்றும் நடத்தப்பெற்று வருகிறது.

       திரு ப.சாமிநாதன் சேதுராயர் என்பார் இவ்வறக்கட்டளையின் தாளாளராகப் பணியாற்றி வருகிறார்.

       திரு ப.சாமிநாதன் சேதுராயரின் அருமைக்கும் பெருமைக்கும் உரிய புதல்வர் திரு எஸ்.சக்திவேல் அவர்கள், என்னுடன் பணியாற்றும் ஆசிரியரும், எனது நண்பரும் ஆவார்.

       இவரது சீரிய வழிகாட்டலில், ஒவ்வொரு ஆண்டும் , அறக்கட்டளையின் சார்பில், யோகா வகுப்புகளும், மருத்துவ முகாம்களும் நடத்தப்பெற்று வருகின்றன.

        இராஜராஜன் கல்வி அறக்கட்டளையும், இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியும் தொடங்கப்பெற்று கால் நுற்றாண்டு கடந்து விட்டன.
 
       கடந்த 30.4.2018 திங்கட்கிழமை மாலை இராஜராஜன் கல்வி அறக் கட்டளை மற்றும் இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் வெள்ளி விழா சிறப்புடன் கொண்டாடப் பெற்றது.

       வெள்ளி விழாவின் போது, நண்பர் திரு எஸ்.சக்திவேல் அவர்களின் அரும் முயற்சியால்,  திருவள்ளுவர் சிலை ஒன்று திறக்கப் பெற்றது. மேலும் தென்னமநாடு முத்தமிழ் மன்றம் என்னும் தமிழ் அமைப்பு ஒன்றும் தென்னமநாட்டில், தமிழ் காக்க, தமிழ் போற்ற தோற்றம் பெற்றுள்ளது,

        தமிழ் முழக்கம் என்னும் நூலும் வெளியிடப் பெற்றது.

      




மனிதநேயப் பண்பாளர், வழக்கறிஞர் திரு எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்கள், வெள்ளி விழா நிகழ்வுகளுக்குத் தலைமையேற்று, திருவள்ளுவர் சிலையினைத் திறந்து வைத்து, தென்னமநாடு முத்தமிழ் மன்றத்தைத் தொடங்கி வைத்தார்.

தென்னமநாடு முத்தமிழ் மன்றத்தின் சார்பில்,

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள்
வரலாற்று ஆய்வாளர்

முனைவர் எம்.அய்யாவு அவர்கள்,
மேனாள் பதிவாளர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்

திரு மணி.மாறன் அவர்கள்,
தமிழ்ப் பண்டிதர், சரசுவதி மகால் நூலகம்

கரந்தை ஜெயக்குமார்

         ஆம் நண்பர்களே, எனக்கும்

மாமன்னர் இராஜராஜன் விருது
வழங்கப் பெற்றது.

       வெள்ளி விழா நிகழ்வுகளுக்குத் தலைமையேற்ற மனிதநேயப் பண்பாளர் திரு எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்கள், மாமன்னர் இராஜராஜன் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

       நண்பர் திரு எஸ்.சக்திவேல் அவர்களுக்கும், அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கும், தென்னமநாடு முத்தமிழ் மன்ற நிறைவேற்றுக் கழக உறுப்பினர்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்

      விழாவினைத் தொடர்ந்து சின்னஞ்சிறு மழலையர் பங்கு பற்றிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

       விழா நிகழ்வுகளை, இராஜராஜன் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியை செல்வி வினோதினி அவர்கள் திறம்படத் தொகுத்து வழங்கினார்.