16 ஏப்ரல் 2015

பண்ணாராய்ச்சி வித்தகர்


ஆண்டு 1949. தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி, விழா அரங்கு. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மேடையைப் பார்த்தவாறு, மேடையில் நடு நாயகமாய் அமர்ந்திருக்கும், அம் மனிதரைப் பார்த்தவாறு ஆர்வத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

     கருணை பொங்கும் கண்கள். பரந்து விரிந்த நெற்றி. ஒளி வீசிப் பிரகாசிக்கும் முகம். ஒலிப் பெருக்கியின் முன்வந்து, பாடத் தொடங்குகிறார்.

     தமிழிசைப் பாடல்கள் அரங்கு முழுதும் நிரம்பி வழியத் தொடங்குகிறன. மாணவர்கள் அனைவரும், மெய் மறந்து, இவ்வுலகினையே மறந்து, தமிழிசையில் மூழ்கி, புதியதோர் உலகில், காற்றுடன் கலந்து, காற்றோடு காற்றாய் மிதக்கின்றனர்.

     உச்சஸ்தாயியில் பாடிக் கொண்டே சென்றவர், திடீரென்று பாடலை நிறுத்தி, பாடலின் பொருளினை விளக்குகிறார்.

     பாடலின் பொருளினை விளக்கிக் கொண்டே சென்றவர், பொருளினை அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறி முடித்த, அடுத்த நொடி, பாடலினை, விட்ட இடத்தில் இருந்து, அதே உச்சஸ்தாயியில் தொடருகிறார்.

     மாணவர்களுக்குத் தங்கள் காதுகளையே நம்ப முடியவில்லை. இப்படியும் ஒருவரால் பாட முடியுமா?

      கண்களைக்கூட இமைக்க மறந்து, தமிழிசையில் உருகித்தான் போகின்றனர்.

     நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், கல்லூரி முதல்வர், அப்பாடகருக்கு, ரூபாய் முப்பத்து ஐந்தினை, அன்பளிப்பாய் வழங்கி மகிழ்கிறார்.

     ரூபாய் முப்பத்து ஐந்து என்பது, அக்காலத்தில் மிகப் பெரிய தொகை. உண்மைதான், பெரிய தொகைதான்.

     1949 ஆம் ஆண்டில், ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? வெறும் 60 ரூபாய்தான். அப்படியென்றால், 35 ரூபாயில் அரைப் பவுன் நகை வாங்க முடியும். இப்பொழுது புரிகிறதா, ரூ.35 ன் அன்றைய மதிப்பு என்ன என்று.

     கல்லூரியை விட்டு வெளியே வருகிறார், அந்தத் தமிழிசை வித்தகர். எதிரிலே ஒருவர், உடலெல்லாம் வியர்வையால் வழிய வழிய, வெகு வேகமாக, ஓட்டமும் நடையுமாகச் செல்வதைக் காண்கிறார்.

     பார்த்த முகமாக இருக்கிறதே. உற்று நோக்குகிறார். திருவையாறு இசைக் கல்லூரியில், தன்னிடம் இசை பயின்ற மாணவன் அல்லவா இவன். எதற்காக இத்தனை வேகமாகச் செல்கிறான்.

      அம்மாணவனின் பெயரினைக் கூறி அழைக்கிறார். மாணவர் திரும்பிக் குரல் வந்த திசையைப் பார்க்கிறான். அடுத்த நொடி, ஐயா என்று அழைத்தவாரே, ஆசிரியரை நோக்கி ஓடி வருகிறான்.

     என்ன தம்பி, இவ்வளவு வேகமாக எங்கே செல்கிறாய்?

    அம்மாணவனின் கண்கள் கலங்குகின்றன. வார்த்தைகள் வெளி வர மறுக்கின்றன. கண்களைத் துடைத்தவாறே, ஒருவாறு சமாளித்தவாறு, பேசுகிறான்

    திடீரென்று எனது அப்பா இறந்து விட்டார் ஐயா. இறுதிச் சடங்குகளைச் செய்தாக வேண்டும். வீட்டிலோ ஒரு காசு கூட இல்லை. அதனால், இந்த மோதிரத்தை அடகு வைத்துப் பணம் பெறுவதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன்

    மாணவனின் நிலை கண்டு கலங்கியவர், கொஞ்சம் கூட தாமதிக்காமல், ஒரு நொடி கூட யோசிக்காமல், தன் சட்டைப் பையில் இருந்த ரூ.35 ஐயும் எடுத்து, அம்மாணவனுக்குத் தருகிறார்.

     மோதிரத்தை அடகு வைக்காதே. இந்தா, இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு, ஆக வேண்டிய காரியங்களைப் பார்.

     நடுங்கும் கரங்களால், பணத்தைப் பெற்றுக் கொண்ட அம்மாணவன், தனது ஆசிரியரின் பாதம் பணிந்து வணங்கி, தன் வீட்டை நோக்கி  ஓடத் தொடங்குகிறான்.

     மாணவன் ஓடிக் கொண்டிருக்கும் திசையினையே, சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்ற ஆசிரியர், அப்பொழுதுதான் உணருகிறார், தான் திரும்பவும், தன் வீடு செல்வதற்கு, தன்னிடம் ஒரு பைசா கூட இல்லை என்பதை.

     ஆசிரியரின் வீடு எங்கிருக்கிறது தெரியுமா? தஞ்சையில் அல்ல. கும்பகோணத்தில் இருக்கிறது. ஐம்பது கிலோ மீட்டர் தொலைவினைக் கடந்தாக வேண்டும், ஆனால் பேரூந்தில் பயணிக்கத்தான் கையில் காசே இல்லை.

     ஆசிரியர் கலங்கவில்லை. தன் மாணவனுக்குத், தன்னால் இயன்ற உதவியைச் செய்ய முடிந்ததே, என்ற ஓர் மன நிறைவு அவர் முகத்தில் தெரிகிறது.

     நடக்கத் தொடங்குகிறர். நடக்கிறார், நடக்கிறார் 50 கிலோ மீட்டர் தொலைவினையும் நடந்தே கடக்கிறார்.

      நண்பர்களே, இந்த ஆசிரியர் யார் தெரியுமா?


தமிழிசையினையே நேசித்து
சுவாசமாய் சுவாசித்து
தமிழிசைக்காகவே வாழ்ந்து
நாடி, நரம்பு, உதிரம் என
உடலே இசையாய் உருப் பெற்ற, மாமனிதர்

பண்ணாராய்ச்சி வித்தகர்
ஏழிசைத் தலை மகன்
குடந்தை ப.சுந்தரேசனார்.
---

     சங்க இலக்கியப் பாடல்களில் புதைந்து கிடந்த, இசை உண்மைகளை, ஓராண்டு, ஈராண்டு அல்ல, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக, ஆராய்ந்து வெளிப் படுத்திய பெருமைக்குரிய, சுந்தரேசனார், 28.5.1914 இல் சீர்காழியில் பிறந்தார்.

     சீர்காழியில் பிறந்த போதும், கும்பகோணத்திலேயே வாழ்ந்ததால், இவர் பெயருக்கு முன்னால், குடந்தையும், தானே வந்து ஒட்டிக் கொண்டது.

     சுந்தரேசனார் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற போதிலும், தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, வடமொழி என ஐந்து மொழிகளை முற்றாய் அறிந்தவர்.

     1946 ஆம் ஆண்டு, திருக்கொள்ளம் புதூரில் நடைபெற்ற, யாழ் நூல், அரங்கேற்ற விழாவின்போது, விபுலானந்த அடிகளைச் சந்திக்கும் நல் வாய்ப்பினைப் பெற்றார்.

     இதன் பயனாய், விபுலானந்த அடிகளாருடன், மூன்று மாதங்கள் தங்கி, பாலைத் திரிபியலை தெளிவுறக் கற்றுத் தேர்ந்தார்.

     சுவாமி விபுலானந்தரின் மேல் கொண்ட பற்றுதலின் காரணமாக, தன் மூன்றாம் மகனுக்கு, விபுலானந்தன் என்று பெயரிட்டு மகிழ்ந்தார்.

    ஆனாலும் இசை தவிர வேறு அறியா இவரிடத்து, இயற்கை தன் திருவிளையாடலைக் காட்டியதுதான் சோகத்திலும் சோகம்.

     ஆம் இவரது பிள்ளைகள் மூவரில் ஒருவர் கூட, நிலைத்து வாழவில்லை. சிறு வயதிலேயே, இயற்கையோடு இரண்டறக் கலந்து, துயரத்தினை மட்டுமே, தங்களது தந்தைக்குப் பரிசாய் வழங்கினர்.
    

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள், தனது அரிய உழைப்பின் காரணமாக சிலப்பதிகாரம், திருமுருகாற்றுப் படை, தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், பெரிய புராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம் முதலான நூல்களில் பொதிந்துள்ள, இசைக் குறிப்புகளை வெளிக் கொணந்து, இவ்வுலகிற்கு உணர்த்தினார்.

     உலகில் தோன்றிய இசை முறைமைகளுள், முதலில் தோன்றியது, தமிழிசையே எனத் தன் வாழ்நாள் முழுதும் பாடிப் பாடி மெய்ப்பித்தார்.

     தமிழிசையினை மட்டுமே, தன் வாழ்நாள் முழுதும் பாடி மகிழ்ந்த, இவரது குரல் 9.6.1981 இல் காற்றிலே கரைந்து மறைந்தது.

    கடந்த பல நூற்றாண்டுகளாகவே, மறதி என்னும் கொடு நோயின் பிடியில் சிக்கி, உழன்று வரும், தமிழகம், பண்ணாராய்ச்சி வித்தகரை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்தே போனது.

     தமிழகம் மறந்த பண்ணாராய்ச்சி வித்தகரை மீண்டும் எழ வைத்து, அவரது ஓங்காரக் குரலினை, இவ்வுலகு முழுவதும், மீண்டும் ஒலிக்க வைத்திருக்கிறார் ஒரு மீட்பர்.


முனைவர் மு.இளங்கோவன்
தமிழ்ப் பேராசிரியர்
புதுச்சேரி

     புதுச்சேரியில், கல்லூரியில், தமிழ்ப் பேராசிரியர் பணி. கை நிறைய சம்பளம். அன்பார்ந்த மனைவி, பாசமிகு குழந்தைகள்.

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு
என இவர், தன் வாழ்வு நலனை மட்டுமே எண்ணிக் காலம் கழித்திருக்கலாம். செல்வத்தைச் சேர்த்து சேர்த்து, இன்ப வாழ்வு வாழ்ந்திருக்கலாம்.

     ஆனாலும் இவர் மனதில் ஓர் தேடல். தேடல் என்றால் சாதாரணத் தேடலில்லை. மக்களே மறந்துபோன ஒன்றை, மீண்டும் உருவாக்கி, தமிழிசைக்குப் பெருமை சேர்க்க வேண்டும், தமிழைசையைக் காக்க வேண்டும், தமிழிசையை வளர்த்த, பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனாரின், பணியினை, இப்பாரெங்கும் பரப்ப வேண்டும் என்ற ஓர் உன்னத் தேடல்.

தேடிச் சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பம் மிக உழன்று பிறர்
வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவ்ம் யெய்திக் கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின் மாயும்பல
வேடிக்கை மனிதரைப் போல் நானும்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
என்ற மகாகவியின் வார்த்தைகளுக்கு இணங்க வீறு கொண்டு எழுந்தார்.

     ஓராண்டு, இரண்டாண்டல்ல, இருபத்தைந்து ஆண்டுகள் தேடினார், தேடினார், பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலினைத் தேடினார். வானொலி நிலையம், தமிழறிஞர்களின் இல்லங்கள் எனத் தேடித் தேடி அலைந்தார்.

    ஒலி நாடாக்களில் பதிவு செய்யப் பெற்று, மூலையில் முடங்கிக் கிடந்த, பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலினை முதலில் மீட்டெடுத்தார்.

    அடுத்து பண்ணாராய்ச்சி வித்தகரோடு பழகிய, பண்ணாராய்ச்சி வித்தகரை அறிந்த, வயது முதிர்ந்த தமிழறிஞர்களை, இசை ஆர்வலர்களைத் தேடித் தேடிக் கண்டு பிடித்தார்.

     பண்ணாராய்ச்சி வித்தகரோடு பழகிய, பாசமிகு நேசங்களின், அந்நாள் நினைவுகளை, காணொளியாய் காட்சிப் படுத்தினார்.

      முனைவர் மு.இளங்கோவன் அவர்களின், அயரா உழைப்பு, ஓர் ஆவணப் படமாய், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் காந்தக் குரலினை, மீண்டும் காற்றில் தவழச் செய்யும், உலகெங்கும் ஓங்கி ஒலிக்கச் செய்யும்  உன்னதப் படைப்பாய் வெளி வந்துள்ளது.

   

மலேசியாவில் வெளியீட்டு விழா


இலண்டனில் வெளியீட்டு விழா

மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் என இப்பூமிப் பந்தின் பல்வேறு இடங்களில் வெளியிடப் பெற்ற
பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை ப.சுந்தரேசனார்
ஆவணப் படம்
கடந்த 10.4.2015 வெள்ளிக் கிழமை மாலை, திருவையாற்றில் திரையிடப் பெற்றது.

நானும்
நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம்
இருவரும், அன்று மாலை 5.30 மணியளவில், திருவையாறு, திருமஞ்சன வீதி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கக் கட்டிடத்திற்குச் சென்றோம்.

     கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, திருவையாற்றில், ஆண்டு தோறும், தமிழிசை விழாவினை சிறப்புற நடத்திவரும், தமிழ்நாடு நாட்டுப் புற கலைஞர்கள் மாமன்ற, மாநிலத் தலைவர்
புலவர் தங்க.கலியமூர்த்தி அவர்களும்,
தமிழ்ப் பேராசிரியரும்
செம்மொழி இளம் அறிஞர்
விருது பெற்ற
முனைவர் மு.இளங்கோவன் அவர்களும்
முகம் மலர வரவேற்றனர்.
      

பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனாரின் உருவம், கைதேர்ந்த கலைஞர் ஒருவரால், களிமண் சிற்பமாக உருப் பெறும் காட்சியில் தொடஙகுகிறது ஆவணப் படம்.

தொடுதோல் மரீஇய வடுஆழ நோன்அடி
விழுத்தண் டூன்றிய மழுத்தின் வன்கை

பத்துப் பாட்டில், பெரும்பாணாற்றுப் படையில், முல்லை நிலக் கோவலரின் குழலிசையை விளக்கும் பாடல், பண்ணாராய்ச்சி வித்தகரின் காந்தக் குரலில், உரிய பண்ணோடு பாடும் இசைப் பொழிவோடு தொடர்கிறது.

     வித்தகரின் குரல் பின்ன்னியில் ஒலிக்க, மாடுகளை மேய்க்கும் ஆய்ர் குல மகன் ஒருவர், புல்லாங்குழல் இசைக்கும காட்சி, பாடலுடன் ஒன்றிப் பயணிக்கிறது.

     சுந்தரேசனார் படிய இசைப் பாடல்கள், நிழற் படங்கள், அவர் காலத்திய தமிழறிஞர்களின் கருத்துக்கள் என காணொளி விறு விற்றுப்பாய், தொய்வின்றி நகர்கிறது.

      சுந்தரேசனாரின் ஒவ்வொரு பாடலுக்கும் ஏற்ற வகையில், பொருத்தமாய், காட்சிகள் தொடந்த வண்ணம் இருக்கின்றன. கரை புரண்டோடும் காவிரி, திமிறிப் பாயும் கல்லணை, கடற் கரைக் காட்சிகள் என சுந்தரேசனாரின் குரலோடு நடனத்தையும் பின்னிப் பிணைத்து, இரண்டறக் கலந்து, நம்மை ஆடாமல் அசையாமல் இருக்கையிலேயே கட்டிப் போடுகிறது இந்த ஆவணப் படம்.

     சீறிப் பாயும் காவிரியின் ஓட்டத்தில், கட்டுமரம் ஒன்றினை மிதக்க விட்டு, அதன் மீது நடன மங்கை ஒருவரை, பாங்குற நடனமாட வைத்து, மழையைப் போற்றும் வரிகளின்போது, காவிரி நீரினை வணங்கி, அம்மங்கை ஆடும் நடனம் கண்களை விட்டு நீங்காது நிலைத்து நிற்கின்றது.
    

பண்ணாராய்ச்சி வித்தகரின் செம்மாந்த தமிழிசைப் பணியினைப் போற்றும் வகையில், திருத்தவத்துறை இராச கோபுரத்தில், சுந்தரேசனாரின் திருஉருவும் இடம் பெற்றிருப்பதை காணும்போது நெஞ்சம் மகிழ்ச்சியால் விம்முகிறது.

     ஆவணப் படத்தின் நிறைவில், பண்ணாராய்ச்சி வித்தகரின் மறைவுச் செய்தியை, அறியும் போது, ஒலிக்கும் பாடல் இருக்கிறதே, அப்பாடலின் தொணி இருக்கிறதே. அது கல் மனதையும் கரைக்கும் வல்லமை வாய்ந்தது.

இசையின் தனித் தமிழை எங்கும் பரப்பி
வசையின்றிக் காத்த வளவன்
திசைதோறும் பண்ணாய்ந்த பாவாணன்
பாடும் வானம்பாடி கண்ணோய்ந்தான்

யார் இனிமேல் காப்பு
யார் இனிமேல் காப்பு

சுந்தரேசன் பாடும் சொக்கும் தமிழிசையால்
மந்திரப் பண்ணும் மலிந்ததே

என் தமிழை யாரே இனி இசைப்பார்
யாரே சிலம் பொலிப்பார்
யாரே பண்ணாய்வார் இனி

    ஆவணப் படம் நிறைவுற்ற பிறகும், பாடலின் கடைசி மூன்று வரிகள், காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.

என் தமிழை யாரே இனி இசைப்பார்
யாரே சிலம் பொலிப்பார்
யாரே பண்ணாய்வார் இனி


ஆனாலும் ஒன்று மட்டும் உறுதியாய் தெரிகிறது. முனைவர் மு.இளங்கோவன் போன்ற தன்னலமற்ற, தமிழிசை போற்றும் தமிழறிஞர்கள் இருக்கும் வரை
யாவரும் நம் தமிழை இனி இசைப்பர்
என்பது புரிகிறது.

------------------------------------------------------------..
தொடர்புக்கு
முனைவர் மு.இளங்கோவன்

அலைபேசி
94420 29053
95009 40482

 மின்னஞ்சல்
muelangovan@gmail.com



     

71 கருத்துகள்:

  1. காணொளி காண வேண்டும் எனும் ஆவல் பிறக்கிறது ஐயா... முனைவர் மு.இளங்கோவன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.

    அறியமுடியாத தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் அழகிய புகைப்படங்களுடன் பதிவை மெருகேற்றியுள்ளீர்கள் முனைவர் மு.இளங்கோவன் ஐயாவிற்கு வாழ்த்துக்கள் த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. மிகவும் புதிய தகவல்...மிக்க நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  4. வழக்கம் போல அசத்தல் பதிவு தோழர்..
    கலக்குங்க ...
    மாமனிதர் குறித்த அறிமுகத்திற்கு நன்றி
    தம +

    பதிலளிநீக்கு
  5. உள்ளம் உருக்கும் வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனக்கென வாழது
      தமிழிசைக்காக வாழ்ந்தவர்

      நன்றி ஐயா

      நீக்கு
  6. முதலில் பண்ணாராய்ச்சி குடந்தை ப. சுந்தரேசனார் பற்றி முன்னோட்டம்..பிறகு அவரின் புகழ் பரப்பும் பேராசிரியர் மு. இளங்கோவன் அவர்களின் பணி!

    போற்றுவோம் இரு தமிழ் அறிஞர்களையும்.!!

    திக்கெட்டும் பரவட்டும் பண்ணாராய்ச்சி....!!!
    சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்ணாராய்ச்சி திக்கெட்டும் பரவ
      முனைவர் தொடங்கிய முயற்சி வென்றே தீரும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  7. பெரிய மனிதர்களை அறிமுகம் செய்து வரும் தங்களுக்கும் பெரும் குணமே வழமை போல் நல்லதோர் பதிவும் நன்றி !
    தொடர வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  8. Great message.Informations like this inspires the readers and increases the desire firstly to meet such people and secondly motivates them to do such things.well brought out sir.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா16 ஏப்ரல், 2015

    தெரியாத தகவல்
    எல்லோருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  10. முனைவர் மு.இளங்கோவன் போன்ற தன்னலமற்ற, தமிழிசை போற்றும் தமிழறிஞர் வாழும் ஊரில் நானும் பிறந்தேன் என்பதை எண்ணும் போது பெருமையாக உள்ளது.
    அரிய சேவை! அளப்பறியா இன்பத்தை ஈட்டித் தந்தது. வாழ்க! வளர்க!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் ஊரினைச் சார்ந்தவர்தான்
      நன்றி நண்பரே

      நீக்கு
  11. அரிய தகவல்கள். முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் பாராட்டுதல்களுக்குரியவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்களைப் பற்றிய தகவல்கள் அறியாதவை..

      பண்ணாராய்ச்சி வித்தகரின் குரலினை மீட்டெடுத்து - கலைப் பொக்கிஷமாக வழங்கிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..

      அரிய செய்திகளுடன் இனிய பதிவினை வழங்கிய தங்களுக்கு நன்றி..

      நீக்கு
  12. சுந்தரேசனார் அச்சிறுவனுக்கு உதவி செய்துவிட்டு அத்தனை தூரம் நடந்து சென்றதைப் படித்தபோது கண்கள் பனித்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இளகிய மனதிற்கு சொந்தக்காரர் அல்லவா
      நன்றி நண்பரே

      நீக்கு
  13. பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் பற்றிய அறியாத தகவல்கள் அறிந்தேன். முனைவர் மு. இளங்கோவனாரின் சீரிய பணி பாராட்டுக்குரியது. இத்தகு திறமை வாய்ந்தவர்களை நம் நட்பு வட்டம் அறியும் வண்ணம் சிறப்பாய் பகிர்வது உங்களின் தனிச்சிறப்பு! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. சகோ,
    நாளும் புதிதுபுதிதாய் தமிழ் தொண்டாற்றிய தமிழ் ஆர்வலர்களை பதிவேற்றி பார் அறிய செய்யும் தங்கள் பணி போற்றப்பட வேண்டியதே,
    முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய சிறப்பானதொரு பதிவு. விபுலானந்த அடிகளையும் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களையும் பிரித்துப் பார்க்க இயலாது என்று தமிழ் இலக்கிய வகுப்புகளில் பேராசிரியர்கள் சொல்லக் கேட்டு இருக்கிறேன். பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவனது தமிழ்ப்பணி போற்றுதற்குரியது.
    த.ம.8

    பதிலளிநீக்கு
  16. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் என்ற ஒரு நல்லவரையும் வல்லவரையும் பற்றிய சரித்திரத்தினை தங்கள் மூலம் இன்று நன்கு அறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

    முனைவர் திரு மு.இளங்கோவன், தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரி அவர்களின் அரும்பாடு பட்டதோர் தமிழிசைச் சேவைக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  17. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேஸ்வரனாரின் பணி பற்றிய நினைவுகளை மீட்டெடுத்த முனைவர் இளங்கோவனுக்கும் அதை பதிவேற்றிய உங்களுக்கும் பாராட்டுக்கள் சுந்தரேசனார் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன் .

    பதிலளிநீக்கு
  18. பண்ணாராய்ச்சி வித்தகரின் வாழ்க்கை விடயத்தை உலகறிய வைத்த முனைவர் மு.இளங்கோவன் தமிழ்ப் பேராசிரியர் அவர்களுக்கும் இபைபதிவை அளித்து எங்களுக்கும் அறியத்தந்த தங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.

    தமிழ் மணம் காலையில் பிரட்சினையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  19. நல்லதொரு பதிவு பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார் பற்றிய பதிவு....அறிந்திருந்தாலும் தங்களது பதிவு பல தகவல்களைத் தருகின்றது. முனைவர் இளங்கோவனது தமிழ்ப்பணி சீரிய பணி! வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரேசனார் பற்றிய ஆவணப் படத்தை 'யூ டியூப்'பில் வெளியிட்டால் அனைவரும் ரசிக்க முடியுமே ..முனைவர் இளங்கோவன் அவர்கள் ஆவணச் செய்வார் என நம்புகிறேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      தங்களின் கருத்தினை முனைவர் இளங்கோவன் அவர்களிடத்தில் கொண்டு செல்கின்றேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  21. புதிய தகவல் ஐயா.முனைவர் இளங்கோவன் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் . பகிர்வை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. இந்நிகழ்வில் கலந்துகொண்டதை நான் பெரும் பேறாகக் கருதுகின்றேன். நான் எழுதவேண்டிய நினைத்திருந்தவை உள்ளிட்ட பல செய்திகளைத் தங்களது பாணியில் சிறப்பாகத் தந்துள்ளீர்கள். முனைவர் இளங்கோவன் தமிழுக்கும், இசைக்கும் செய்துள்ள பணியானது பாராட்டத்தக்கது. நாம் நேரில் அவரிடம் கண்ட முக்கியமான குணம் ஒரு விநாடியைக் கூட வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்திய பாங்கு. பண்ணாராய்ச்சி வித்தகர் என்ற சொல் ஒவ்வொருவர் மனதிலும் பதியும் வகையில் எந்தவித குறையும் இன்றி நுணுக்கமாக இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளார். இலக்கியம், இசை, இயற்கை என்ற நிலைகளில் தனி ஒரு மனிதராக இருந்து பெருமுயற்சி எடுத்துள்ளார். இனி பண்ணாராய்ச்சி வித்தகர் சுந்தரேசனார் என்ற பெயரை உச்சரிக்கும்போது இயல்பாக முனைவர் இளங்கோவன் அனைவர் மனதிலும் நிற்பார். நம்மால் செய்யவேண்டிய ஒன்று என்னவெனில் இந்த ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் பார்ப்பதோடு, நண்பர்களிடமும் இது பற்றிக் கூறவேண்டியதாகும. ஒவ்வொருவருடைய இல்ல நூலகத்திலும் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். இதனை காலம் விரைவில் உணர்த்தும். இந்நிகழ்விற்காக நாம் திருவையாறு சென்றது, நான் மறக்க முடியாத நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ///ஆவணப்படத்தை ஒவ்வொருவரும் வாங்கிப் பார்ப்பதோடு, நண்பர்களிடமும் இது பற்றிக் கூறவேண்டியதாகும. ஒவ்வொருவருடைய இல்ல நூலகத்திலும் இருக்கவேண்டிய முக்கியமான ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும்.///
      தாங்கள் கூறுவது உண்மைதான் ஐயா
      காலம் முழுதும் காக்க வேண்டிய பொக்கிஷம் இது
      தங்களின் நீண்ட கருத்துரைக்கு
      மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  23. முற்றிலும் அறியாத தகவல். பகிர்வுக்கு நன்றி. இவரைக் குறித்த தகவல்களை வெளிக்கொணர்ந்து ஆவணப்படம் ஆக்கிய முனைவர் இளங்கோவனுக்கும், அது குறித்த தகவலைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  24. தமிழுக்காக வாழ்ந்தவா், இசையை போற்றியவா், வளா்த்தவாின் வரலாற்றை மறந்த தமிழனுக்கு நினைவூட்டிய தங்களுக்கு நன்றி. முற்றிவும் புதிய தகவல்கள், வளா்க உங்கள் தமிழ்த் தொண்டு. பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  25. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை சுந்தரராசனார் அவர்களை பற்றிய ஆவணப் படத்தினை தயாரித்து தமிழுக்கும் தெய்வப்புகழ் சுந்தரராசனார் அவர்களுக்கும் நன்றி செய்த முனைவர் இளங்கோவன் அவர்களை எத்துணைப் பாராட்டினாலும் தகும். இந்த செய்திகளை பதிவிட்டு தங்களின் குழுவைச் சேர்ந்த எங்களுக்கு அறிய செய்த தங்களின் பணியும் ஈடு இணையற்றது. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களின் தொண்டு.

    பதிலளிநீக்கு
  26. உருக்கமான இவ்வளவு செய்திகள் ....!
    உங்களுக்கு எப்படித்தான் கண்படுகிறதோ..?

    உங்கள் வாசிப்பு வியக்க வைக்கிறது கரந்தையாரே!

    தொடருங்கள்.

    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  27. சிறப்பான பணி. முனைவர் அவர்களுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  28. உயர்ந்த மனிதர் குடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய பகிர்வுக்கும், முனைவரின் முயற்சியால் வெளிவந்திருக்கும் ஆவணப்பட அறிமுகத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  29. சுந்தரேசனார் பற்றியபதிவு நெக்குருகசெய்கிறது,நல்ல பதிவு.முனைவர் இளங்கோ அவர்களின் பணியும் பாராட்டுப்பெற்றதாகி/

    பதிலளிநீக்கு
  30. உன்னதமான தமிழ்ப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் அன்னாரின் தொண்டை ஆற்றுப்படுத்தி இன்னுமொரு தனித்தொண்டாற்றியிருக்கும் தங்களுக்கும் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது நண்பரே! - இராய செல்லப்பா, சென்னை.

    பதிலளிநீக்கு
  31. மறந்துகொண்டிருக்கும் மகான்களைப் பற்றிய தங்களின் தேடல் காலத்தால் இன்றியமையாத பணி ஒருவருக்கு உதவி எப்படி செய்யணும் என்பதற்கு உதாரணமாய் இருந்திருக்கிறார் தமிழை உயிராய் காத்திருக்கிறார் பண்ணாராய்ச்சி வித்தகர்..அவரின் பணிகளை உலகுக்கு மீண்டும் உணர்த்தி இருக்கும் முனைவர் மு.இளங்கோவனுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வழமைபோல் தங்கள் பதிவுகள் அருமை தொடர வாழ்த்துக்கள் அந்த ஆவணப்படம் பார்க்க ஆவலாய் உள்ளேன் நன்றி
    தம 17

    பதிலளிநீக்கு
  32. சிறப்பான பதிவு அய்யா!. ஊடகத்தில் கூட இந்த செய்தி, பதிவு செய்யப்படவில்லை.

    முன்பே இதற்கு ஒரு கமெண்ட் செய்திருந்தேன். வரவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊடகங்களில் பண்ணாராய்ச்சி வித்தகரின் ஆவணப் பட செய்தி பதிவு செய்யப்பெறாதது வருந்துதற்கு உரியது ஐயா
      தாங்கள் முன்னரே செய்த கமெண்ட் எதனால் வரவில்லை என்று புரியவில்லை ஐயா
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  33. அரியதோர் தகவலை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா! போற்றுதலுக்குரிய பணி!

    பதிலளிநீக்கு
  34. இருவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  35. good to read history of pannisai sundaranar

    பதிலளிநீக்கு
  36. பாடல்கள் செவிகளில் ஒலிப்பது போலவும் காட்சிகள் கண்முன்னால் இள்ளது போலவும் ஓர் உணர்வு....நன்றி......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு