01 ஆகஸ்ட் 2015

கனவின் நாயகன்

        

 நாள் 30.7.2015 வியாழக் கிழமை காலை 8.00 மணி. இராமநாதபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை. சுப்பையா நகர், நான்கு ரோடு சந்திப்பு.

      நாங்கள் சென்ற மகிழ்வுந்து, காவலர்களால் தடுத்து நிறுத்தப் படுகிறது.


     இதற்கும்மேல் காரில் செல்ல இயலாது. நடந்து செல்லலாம் அல்லது அரசுப் பேருந்தில் செல்லலாம் என்றார்.

     பேருந்து கூட எவ்வளவு தொலைவு செல்லும் என்பது புரியவில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலையின் இருபுறமும் வாகனங்கள், வாகனங்கள், வாகனங்கள்.



சிறு சிறு மகிழ்வுந்துகள், வேன்கள் மற்றும் வாடகைப் பேருந்துகள் என வரிசை இரு மருங்கிலும், முடிவின்றி நீண்டு கொண்டே செல்கிறது. அனைத்து வாகனங்களும், பயணிகள் யாருமின்றி, அனாதைகளாய் நிற்கின்றன.

      இவ்வாகனங்களில் வந்தவர்கள் எல்லாம் நடந்தோ அல்லது அரசுப் பேருந்திலோ பயணத்தைத் தொடர்ந்திருக்க வேண்டும்.

     ஒரு வாகனத்தில் கூட, அரசியல் கட்சியினை வெளிப்படுத்தும் கொடிகள் இல்லை.

     மனதில் ஒருவித பெருமித உணர்வு மெல்ல தலை நீட்டிப் பார்த்தது.

      யார் சொன்னது? தமிழகத்து இளைஞர்கள் எல்லாம், நடிகர்களின், ஆளுயரப் படங்களுக்குப் பாலாபிசேகம் செய்கிறவர்கள் என்று.

      யார் சொன்னது? தமிழகத்து மனிதர்கள் எல்லாம், கண்மூடித் தனமாய், ஏதோ ஒரு அரசியல் கட்சிக்கு, கொடி பிடிப்பவர்கள் என்று.

      தமிழகத்து மக்கள் தொகையில், ஒரு சதவீதத்திற்கும், குறைந்தோர் வேண்டுமானால், பாலாபிசேகம் செய்கிறவர்களாக, கண்மூடி கட்சிகளை ஆராதணை செய்பவர்களாக இருக்கலாம்.

   இதோ பாருங்கள். இளைஞர்கள், இளைஞர்கள். மாணவர்கள், மாணவர்கள். கவலை தோய்ந்த முகத்துடன், நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் சென்று கொண்டே இருக்கிறார்கள்.

     ஆரவாரம் ஏதுமில்லை. வறட்டுக் கூச்சலில்லை. டாஸ்மாக் வாசனை இல்லவே இல்லை. ஆனாலும் மக்கள், வாகனங்களிலும், பேருந்துகளிலும் வந்து இறங்கிய வண்ணம் இருக்கின்றனர்.

    இன்னும் 50 கி.மீ தொலைவு சென்றாக வேண்டும். மகிழ்வுந்தினை, கிடைத்த சிறு இடைவெளியில் நிறுத்தச் சொல்லிவிட்டு, இறங்கி, ஓர் காவலரை அணுகினோம்.

     இந்நிமிடம் வரை, எங்களின் கணிப்புப்படி, மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டோர், அங்கே குவிந்துள்ளனர். நேற்று பிற்பகல் முதல், இவ்விடத்தைக் கடந்து சென்ற, ஒரு வாகனம் கூட, இன்னும் திரும்பி வரவில்லை. இனியும் வாகனங்களை அனுமதித்தால், நிறுத்துவதற்குக் கூட இடம் இருக்காது என்றார்.

     யாரும், யாரையும், வாருங்கள், வாருங்கள் என விளம்பரம் செய்து, கூவி அழைக்கவில்லை.

      ஆனாலும் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

இளைஞர்களே, மாணவர்களே
கனவு காணுங்கள்
என்றாரே.
ஒருவேளை கனவுக் காணத்தான்
கண்மூடிப் படுத்திருக்கிறாரோ.
உறக்கம் கலைந்து எழுந்துவர மாட்டாரா
என்ற ஏக்கத்தை சுமந்த மனதுடன், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் தமிழகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

    அதே ஏக்கம்தானே, தஞ்சையில் இருந்து, எங்களையும், இங்கே அழைத்து வந்திருக்கிறது.

    கடந்த 29.7.2015 புதன்கிழமை மதியம், நண்பரும், பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள், நாளைதான் அரசு விடுமுறை ஆயிற்றே, இராமேசுவரம் செல்வோமா? என்றார்.

     அன்று இரவே புறப்பட்டோம். நண்பர்கள் திரு வெ.சரவணன், திரு க.பால்ராஜ், திரு பா.கண்ணன் மற்றும் நான்.

     எங்களின் முன்னாள் மாணவர் திரு தினேஷ் அவர்களின் மகிழ்வுந்தில் புறப்பட்டோம்
 
   இரவு 2.00 மணியளவில், இராமநாதபுரத்தை அடைந்தோம். வேலவன் விடுதியில் அறை எடுத்தோம்.

     இதோ சுப்பையா நகரில் நின்று கொண்டிருக்கிறோம்.

     ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. ஒரு சின்னஞ் சிறு தீவில், அமைதி தவழும் ஓர் இனிய முகத்தினை, அன்பு முகத்தினை இறுதியாய் காண, ஏறக்குறைய நான்கு இலட்சம் நல் உள்ளங்கள.

      இப்பொழுது செல்வது உசிதமல்ல என்பது தெளிவாய் புரிந்தது. அறைக்குத் திரும்பினோம். அறையில் இருந்த தொலைக் காட்சிப் பெட்டியின் முன் அமர்ந்தோம்.

      பிற்பகலில் அறையில் இருந்து புறப்பட்டோம். எதிர் திசையில் வாகனங்கள், சிறிது கூட இளைவெளியின்றி, திரும்பி வந்த வண்ணம் இருந்தன.

     பாம்பன் பாலத்தில் பயணித்து, அக்கா மடம், தங்கச்சி மடம் கடந்தோம்.

     இதோ பேக்கரும்பு.

       மிகவும் வித்தியாசமான பெயர். இவ்விடத்தில் ஒரு வகை புல் விளையுமாம். இப்புற்கள் காண்பதற்குக் கரும்பினைப் போலவே இருக்குமாம். ஆனாலும் கரும்பு அல்ல. பே என்றால் இல்லை என்று பொருள். எனவே பேக்கரும்பு என்றால், கரும்பு இல்லை என்று பொருளாம். ஒரு புல்லின் பெயர், மண்ணின் பெயராய் மாறியிருக்கிறது.

     இதோ இடது புறத்தில், சவுக்குக் கழிகளால் அமைக்கப்பட்டத் தடுப்பு. அமைதியாய் உள்ளே செல்கிறோம்
    


அடுத்த பிறவி என்று ஒன்று இருக்குமானால், அப்பிறவியிலும், இந்தியனாகவே பிறக்க விரும்புகிறேன் என்று கூறி இந்தியாவிற்குப் பெருமை சேர்த்தவர்,

      இந்திய இளைஞர்களை எல்லாம், கனவு காணச் சொன்னவர். இதோ பூமித் தாயின் மடியில், மீளாத் துயிலில். 

      இப்புனிதர் இங்கு புதைக்கப்படவில்லை. விதைக்கப் பட்டிருக்கிறார்.

ஒரு மனிதர், இயற்கையோடு இரண்டறக் கலக்கும் பொழுது,
அவன் தாய் அழுதால், அவன் ஓர் நல்ல மகன்
அவன் பிள்ளைகள் அழுதால், அவன் ஓர் நல்ல தகப்பன்
அவன் ஊர் அழுதால், அவன் ஓர் உத்தமன்
ஒரு நாடே அழுதால், அவன் ஓர் நல்ல தலைவன்
ஆனால்,
இவருக்காக
இன்று
உலகே
அழுது கொண்டிருக்கிறது.

உலகையே
அழ வைத்தவர்
இதோ, இங்கு மீளாத் துயிலில்.


      நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நம் இறப்பு, ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியவர், புதிய சரித்திரம் படைத்தவர், கோடிக் கணக்கான இளைஞர்களின் உள்ளத்தில், நம்பிக்கை விதையினை விதைத்தவர்,
இதோ
ஒரு விருட்சத்திற்கான
வித்தாய்
மண்ணில் இறங்கியிருக்கிறார்.

கண்மூடி, கரம் கூப்பி நிற்கிறோம்.




கனவு காணச் சொன்னவரே – எங்களுக்கும்
ஒரு கனவு இருந்தது.
வாழ்வில் ஒரு முறையேனும்
ஒரே ஒரு முறையேனும் – தொலைவில்
நின்றேனும்
தங்களைக் கண்ணாரக் காண வேண்டும் – என்ற
ஒரு கனவு இருந்தது.

இன்று உங்களுக்கு
மிக அருகில் நிற்கின்றோம். – சில
அடிகள் தொலைவில் நிற்கின்றோம் - ஆனாலும்
எங்கள் கண்களால்
தங்களைக்
காண இயலவில்லை.

மண்ணுள் விதையாய் நீங்கள்
வெளியே மரம்போல் நாங்கள்.

    பூமியில் இருந்து, ஓர் அதிர்வலை மெல்ல மெல்ல மெலெழும்பி வருவதை உணர முடிந்தது. நாற்புறமும் பார்க்கின்றேன். அனைவருமே அதிர்வலைகளை உணர்ந்தவர்களாய், அமைதியாய், நின்னை விழுங்கிய மண்ணை, தம் கண்களால் விழுங்கியவாறு நிற்கிறார்கள்.

என் இந்தியா
என் இந்தியா
என் இந்தியா
என ஒரு துடிப்பு,
மெல்ல, மெல்ல மெலேழும்பி வருவதை
உணர முடிகிறது.

    அமைதியாய், உன் அருகில், அசைந்தாடும், தேசியக் கொடியினை உற்றுப் பார்த்தவாறே நிற்கின்றோம். தேசியக் கொடியின் அசைவு கூட, உன் உதட்டு அசைவினை ஒத்தவாறே அசைகிறது. உன் உள்ளத்துச் செய்தியினை, காற்றின் பட படப்பில் அசைந்தாடி, கூற முற்படுவது தெரிகிறது.

மாணவர்களே, இளைஞர்களே
விடைபெறுகிறேன்.
நாட்டை முன்னேற்றப் பாதையில்
அழைத்துச் செல்வது
இனி
உங்கள் கடமை.

     துயரம் ததும்பும் முகங்களோடு வந்தவர்கள், ஏதோ ஓர் உள்ளத்து உறுதியோடு வணங்கிக் கலைந்து செல்கிறார்கள்.

தாங்கள் வாழ்ந்த காலத்தில்
நாங்களும்
வாழ்ந்தோம்
என்பதே
எமக்குப் பெருமை.





      

      


81 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரா !

    இப் பகிர்வுக்கு முதலில் நான் தலை வணங்குகின்றேன் !அப்துல் கலாம் போல் ஒருவரை இனி இந்த உலகம் காண்பது கடினம் அவர் இறைவன் படைத்த அற்புதம் !அன்னாரின் ஆன்மா சாந்தி பெறட்டும் .

    பதிலளிநீக்கு
  2. சிலிர்க்க வைத்தது உங்கள் பதிவு. எப்பேர்ப்பட்ட மனிதர்!

    பதிலளிநீக்கு
  3. கனவை நனவாக்குவது நம் ஒவ்வொருத்தரின் முக்கிய கடமை... மனதிற்கு ஆறுதலை தந்தது ஐயா இப்பகிர்வு...

    பதிலளிநீக்கு
  4. கலாமின் இறுதி யாத்திரையில் கரந்தையில் இருந்து நீங்கள் கலந்து கொள்ள விழைந்ததே அம்மகானின் ஈர்ப்புக்கு எடுத்துக் காட்டு. லேட்டாக வந்தாலும் லேட்டெஸ்டாக வந்திருக்கிறீர்கள் உங்களுடன் வந்தது போல் உணருகிறோம்

    பதிலளிநீக்கு
  5. அமரர் அப்துல் கலாம் சொன்ன ஆதர்ச ஆசிரியர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நாங்கள் அறிவோமே! அன்னாரின் இறுதி யாத்திரையில் நீங்கள் கலந்துகொள்ளாமல் போவீர்களா? தூரமும் சூழ்நிலையும் காரணமாக நான் அம்முயற்சி எடுக்கவில்லை. எவ்வளவுதான் தொலைக்காட்சிகளில் நேரலையாகக் கண்டிருந்தாலும், தங்கள் கைவண்ணத்தில் அமரயாத்திரையின் வருணனையைக் காண்கிற பொழுது ஒரு முழுமையை உணர்கிறேன். பாக்கியவான் நீங்கள்! (௨) அறிஞர் அண்ணாவுக்கும் எம்ஜிஆருக்கும் பிறகு, நடுநிலை மாந்தர்கள் கைச்செலவு செய்து தெருவெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து அமரர் கலாமுக்குத் தங்கள் இறுதி மரியாதையைத் தெரிவித்திருக்கும் உன்னதமான காட்சி, நெஞ்சைப் புல்லரிக்கவைத்தது. தேநீர்க்கடையில் சொற்ப ஊதியம் பெரும் தொழிலாளர்கள் கூட பேனர் வைத்திருந்தார்கள். இன்றைய நிலையில், இன்று உயிரோடிருக்கிற எந்த அரசியல்வாதிக்கும் சத்தியமாக இந்த மரியாதை கிடைக்கவே கிடைக்காது! 'புரந்தார்க் கண் நீர்மல்கும் சாவு' இதுவன்றி வேறில்லை. எழுதும்போதே கண்கள் குளமாகின்றன. - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு சிறு சந்து பொந்துகளில்கூட
      பிளக்ஸ்கள் பேணர்கள்
      சுவரொட்டிகள் என அனைவருமே தங்கள் வீட்டு
      துக்கமாகவே எண்ணிணார்கள் என்பதே உண்மை ஐயா
      வணங்குவோம்

      நீக்கு
  6. ஆயிரமாயிரம் இளைஞர்கள் மனதில் நம்பிக்கை விதையை விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  7. ஓயாது ஓடி ஓடி விதை விதைத்தார்!
    போதுமென்று நினைத்து பேய்க்கரும்பு மண்ணில் புதைந்தாரோ!
    எல்லோரிடமும் இனிமையாய் இருந்தவரை
    கலாம் கரும்பை பேய்கரும்பு மண்ணிற்கு பிடித்து விட்டதோ?
    இது என்ன விந்தை? பேய்கரும்பு
    30-07-2015 முதல் அசல் கரும்பாய்
    மாறி இனிக்கிறதே!
    --------------------------------
    கண்ணீருடன்
    -மும்பை சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராமேசுவரம்
      அப்துல்கலாமை
      தன்னுள் வாங்கிப்
      புண்ணியம் தேடிக் கொண்டது நண்பரே

      நீக்கு
  8. மறையாத மாமனிதரோடு உங்கள் பதிவும் மறையாது !வெறும் புகழ்ச்சி அல்ல! உண்மை! கரந்தை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      தங்களின் அன்பிற்குத் தலைவணங்குகிறேன்

      நீக்கு
  9. nantri ayya

    naneelamenkum naympada vuraitha narcinthanaikal nalam payakkum kalam varun kanthuyeeilvai nenjee

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நற்சிந்தனைகள் நலம் பயக்கும் காலம் நிச்சயம் வரும் நண்பரே
      நன்றி

      நீக்கு
  10. வணக்கம் அண்ணா. நெகிழ்வான பதிவு.. கலாம் அவர்கள் நம் மனதில் துடித்துக் கொண்டே இருப்பார்.
    த.ம.+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றென்றும் நிலைத்து நிற்பார் சகோதரியாரே
      நன்றி

      நீக்கு
  11. உங்களது பதிவின் வாயிலாக புனிதப்பயணம் மேற்கொண்ட வகையில் எங்களுக்கு மன நிறைவு. தாங்கள் கூறியதுபோல அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமையே. அவரது அறிவுரைகளில் எதையாவது ஒன்றை நாம் பின்பற்றினாலே போதும். அதுவே அவருக்குச் செய்யும் அஞ்சலி. எனது இல்லத்தில் நூலகம் உருவாகக் காரணம் அவரது அறிவுரைகளே. அவர் எழுதிய கடிதம் எனது இல்ல நூலகத்தில் உள்ளது. அவர் என்றென்றும் தூண்டுகோலாக இருந்து நம்மை மேம்படுத்துவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதே
      நமக்குப் பெருமைதான் ஐயா
      தங்களின் அலுவலல் மேசையில்
      அப்துல் கலாம் அவர்கள் தங்களுக்கு வரைந்த
      கடிதத்தைக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  12. வணக்கம் சகோ,
    தங்கள் பதிவினை அன்றே எதிர்பார்த்தேன்,
    தங்கள் பதிவின் ஒவ்வொரு வார்த்தையும் கண்ணில் நீர் வரவழைக்கும் ,,,,,,

    துயரம் ததும்பும் முகங்களோடு வந்தவர்கள், ஏதோ ஓர் உள்ளத்து உறுதியோடு வணங்கிக் கலைந்து செல்கிறார்கள்.

    இதைத் தான் அவர் விரும்பினார், அந்த உறுதி நமக்கு இருந்தால் நிச்சயம் நாம் முன்னேறுவோம்,
    தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோதரியாரே
      அன்று வந்த அனைவருமே ஏதோ ஓர் உறுதியோடு திரும்பிச் சென்றதை உணர முடிந்தது
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  13. " ஒரு மனிதர், இயற்கையோடு இரண்டறக் கலக்கும் பொழுது,
    அவன் தாய் அழுதால், அவன் ஓர் நல்ல மகன்
    அவன் பிள்ளைகள் அழுதால், அவன் ஓர் நல்ல தகப்பன்
    அவன் ஊர் அழுதால், அவன் ஓர் உத்தமன்
    ஒரு நாடே அழுதால், அவன் ஓர் நல்ல தலைவன்
    ஆனால்,
    இவருக்காக
    இன்று
    உலகே
    அழுது கொண்டிருக்கிறது."

    நெகிழ்ச்சியும் சிலிர்ப்பையும் தந்தது உங்களின் பதிவு! நீங்களும் மாணவர்களுக்கு கல்வியையும் நல்லறிவையும் கற்றுக்கொடுக்கும் பொறுப்பில் இருக்கிறீர்கள். மாமனிதர் கலாம் அவர்களும் மாணவர்களுடைய மனதில் நல்விதைகளைத் தூவிய வண்ண‌மிருந்தார். நீங்கள் அவருக்கு நேரில் சென்று இறுதி வணக்கம் செய்தது தான் எத்தனை பொருத்தம்!

    என் மன அஞ்சலியை நானும் அவருக்கு இங்கே சமர்ப்பிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. ஒரு மாமனிதரை நாம் இழந்திருக்கிறோம்
      ஒவ்வொருஇல்லத்திலும்
      ஏதோ ஓர் துயர் ஏற்பட்டதைப் போன்ற
      உணர்வுதான் மெலெலுகிறது
      அத்தகையதோர் பாதிப்பை ஏற்படுத்தி
      விடைபெற்றிருக்கிறார்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  14. மாமனிதருக்கு மகத்தான அஞ்சலி..
    இன்னும் கலங்கியவாறு இருக்கின்றது மனம்..

    மக்கள் மனங்களில் என்றென்றும் நிறைந்திருப்பார்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் என்றென்றும் நிலைத்து நிற்பார்
      நன்றிஐயா

      நீக்கு
  15. நேரில் சென்ற அனுபவத்தை தருகிறது தங்கள் பதிவு.
    ஒருவேளை காணத்தான்
    கண்மூடிப் படுத்திருக்கிறாரோ
    உறக்கம் கலைந்து எழுந்து வரமாட்டாரா
    அருமை ஐயா

    பதிலளிநீக்கு
  16. தாங்கள் அப்துல் கலாம் ஐயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு - அன்றே - Facebook- ல் வெளிவந்ததைக் கண்டேன்.. ஆனால், தங்கள் பதிவில் கருத்துரையிட வழியில்லாமல் இருக்கின்றது!..

    ஆயினும் பதிவு வெளியாகும் என காத்திருந்தேன்.. நன்றி..

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள ஜெயக்குமார்

    வணக்கம். மேதகு அப்துல கலாம் அவர்கள் இறந்துவிட்டார் என்று செய்திவரிகள் காட்சி வரிகளாக ஓடிய பொழுதிலிருந்து மனம் உடைந்திருக்கிறேன். கடைசிவரை ஒரு மனிதனாகவே இருந்துவிட்டுச் சென்றவரை எத்தகைய பெருமையில் அடைக்கமுடியும். அலைகள் புரளும் கரையில் பிறந்தார் உலகத்தின் அத்தனை மனங்களிலும் இன்று அலையாய் மனத்தின் கரைகளில் மோதிக்கொண்டேயிருக்கிறார். இந்தியாவின் உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு ஒரு சராசரி வறுமையின் பிடியில் சிக்கி வாழும் இந்தியனைப் போலவே வாழ்ந்த மாண்பு யாருக்கு வரும்? நான் வகுப்பு எடுக்க விரும்புகிறேன் என்று குடியரசு தலைவர் பதவிக்குப் பின்னால் அண்ணா பல்கலைகக்ழகத்தில் வகுப்பு எடுக்க வந்தவரின் மனநிலையை எண்ணிப்பாருங்கள். எத்தகைய பதவியில் உயர்ந்தாலும் என் இலக்கு ஆசிரியப்பணிதான் என்கிறபோது இன்றைக்குப் பேருக்குக் கூட பேராசிரியர்களாகத் தகுதிப் படுத்திக்கொள்ளாத சிலர் பேராசிரியர் என்கிற நிலையில் சம்பளத்தை மட்டும் வாங்கி வாழும் நிலையில் கலாம் அவர்களின் வாழ்விலிருந்து இனியாவது அவர்கள் பாடம் கற்கவேண்டும். தேசம் என்றால் நேசம் என்று புதிய பொருளுரைத்தவர் கலாம் அவர்கள். நம்பிக்கையான கனவுகளைக் காணுங்கள் அதனை வென்றெடுங்கள் இந்த மண் பயனுறும் என்று சொன்னதோடு அப்படியே வாழ்ந்தும் காட்டிவிட்டுப் போனவர் கலாம் அவர்கள். ஒரு தேசத்தின் வளப்பம் என்பது விளை வயலில் இல்லை.. விளைகின்ற கல்வியில் இருக்கிறது. மலர்கின்ற சிந்தனையில் இருக்கிறது செய்கின்ற செம்மாந்தச் செயலில் இருக்கிறது அதனைத்தானே கலாம் உரைத்துவிட்டுப் போயிருக்கிறார். படிக்காத பாமரன் தொடங்கி படித்தோர் வரையிலும் யாருமே எந்தத் தூண்டுதலும் இல்லாமல் கண்ணீர் மல்கிக் கசிந்தது ஏன்? அந்தக் கண்ணிர்த்துளிகள் லட்சம் லட்சமாய் இந்த மண்ணில் இன்றுவரை விழுந்துகொண்டேயிருக்கிறதே ஏன்? உங்களின் கார் தடுத்து நிறுத்தப்பட்டு இதுவரை 3 இலட்சம் பேர்கள் சென்றிருக்கிறார்கள் எந்தக் காரும் திரும்பிவரவில்லை என்று காவல்துறை அலுவலர் சொன்னதன் பொருள் என்ன? தாங்கள் வேலவன் விடுதியில் தங்கித் தொடர்ந்து சென்றது ஏன்? எல்லாமும் எல்லாருக்கும் தெரியும். கலாம் என்றால் சங்க இலக்கியத்தில் போர் என்று பொருள். கலாமும் போர்தான் செய்திருக்கிறார். அது அன்பால் செய்த போர். எல்லார் மனத்திலும் அவர் அன்பால் போரிட்டு கண்ணீர்த்துளிகளைக் கடலெனப் பொங்கவிட்டுப் போயிருக்கிறார். அந்த கண்ணீர்த்துளிகளில் உப்பு இல்லை. உணர்விருக்கிறது. அது ஒவ்வொன்று விதையாகப் பரிணமிக்கவேண்டும் என்பதுதானே அவரின் எண்ணக் கிடக்கையாக இருக்கும? அவருக்கு மணிமண்டபம் வேண்டாம் சிலைகள் வடிக்க வேண்டாம். அவர் போட்டுவிட்டுப் போன விதைகளை வளர்த்தெடுங்கள். இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் தகப்பன் நமக்கெல்லாம்..பிள்ளைகள் அவற்றை நிறைவேற்றுவோம்.. அதுதான் அந்த அறிவியலின் அறவியலின் தலைவனுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும். ஒவ்வொருவரும் அவரவர் வேலையில் சரியாக இருந்தால் யாருக்கும் வணக்கம் செலுத்தவேண்டியதில்லை. மாறாக அவரவர் வேலைகளைச் சிதைத்தால் எல்லோருக்கும் வணக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று சொன்னார். பிறப்பு சம்பவமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக இருக்கட்டும் என்று அதற்குச் சிறந்த சான்றாக அவரே சரித்திரமாகி விதைந்திருக்கிறார். கணியன் பூங்குன்றன் சொன்னதுபோல சாதலும் புதுவதன்று. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனாலும் மரணிக்கும் வரை நாம் செய்வது அழியாச் செயல்களாக இருக்கவேண்டும். நன்றி ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு மணிமண்டபம் வேண்டாம் சிலைகள் வடிக்க வேண்டாம். அவர் போட்டுவிட்டுப் போன விதைகளை வளர்த்தெடுங்கள். இந்த தேசத்தின் முதல் குடிமகன் முதல் தகப்பன் நமக்கெல்லாம்..பிள்ளைகள் அவற்றை நிறைவேற்றுவோம்.. அதுதான் அந்த அறிவியலின் அறவியலின் தலைவனுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

      உண்மைதான் ஐயா
      தங்களின் நீண்ட நெடியதொரு கருத்துரை கண்டு நெகிழ்ந்தேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  18. இந்தியா முழுவதும் இரங்கல் தெரிவித்தது இவர் ஒருவருக்கு மட்டுமே இருக்க முடியும். நேரடியாக சென்று வந்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  19. உணர்வும் உள்ளமும் கரைகின்ற பதிவு!

    மாமனிதருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

    பதிலளிநீக்கு
  20. டாக்டர் A.P.J. அப்துல் கலாம் அவர்களுக்கு, கரந்தை ஆசிரியரின் உணர்ச்சிமயமான படங்களுடன் கூடிய பதிவு. என்னால் அங்கு சென்று வர இயலவில்லை.
    த.ம.13

    பதிலளிநீக்கு
  21. முதற்கண் பகிர்விற்கு மிக்க நன்றி.அய்யா அவர்கள் ஒவ்வொரு இளைஞரின் இதயத்திலும் விதையாகிவிட்டார் அரசியலுக்கு அப்பாற்பட்டு 2020-ல் இந்தியா வல்லரசு ஆகும்.கணவு மெய்ப்படும்.

    பதிலளிநீக்கு
  22. கனவு நாயகனின் கனவு வீண் போகாது !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீண் போகக் கூடாது என்பதே அனைவரின் கனவாகிவிட்டது
      நன்றி நண்பரே

      நீக்கு
  23. அவரைக் காண தஞ்சையில் இருந்து இராமேஸ்வரம் சென்று வந்ததையும்... மாமேதை விதைக்கப்பட்ட இடத்தின் போட்டோக்களோடு உங்கள் சொல்லாடல் மிகுந்த கட்டுரை கண்டு மகிழ்ச்சி...
    இந்த முறை ஊருக்கு வரும் போது ராமேஸ்வரம் செல்ல வேண்டும்... அப்துல்கலாமைப் பார்க்க...

    பதிலளிநீக்கு
  24. மனிதர் மரிக்கையில் அழுவதும் பின் தொழுவதும் இயல்பே ஆனால் அய்யா அவர் கனவை மட்டும் தரவில்லை.
    கல்வியையும்,
    சுயநலமில்லா அரசியலையும்,
    அணுவின் ஞானத்துடன் , இந்திய அரசியல் வானில் சுயநலமற்ற அரசியல் பற்றி மாணவர்களுக்கு மட்டுமல்ல...! அரிப்பெடுத்த அரசியல்வியாதிகளை வரிசையில் நிற்க வைத்து தரிசனம் தந்த(ஐ) பெரியார். அதன் மூலமாவது அறிவு வந்தால் நலமே.

    பதிலளிநீக்கு
  25. நம் பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் நம் இறப்பு, ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று கூறியவர் மட்டுமல்ல; அதன்படி வாழ்ந்து காட்டிய உலகம் போற்றும் பெரியவர்.
    அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?
    http://eluththugal.blogspot.com/2015/07/blog-post_28.html

    புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
    http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  26. தாமதத்திற்கு மன்னிகவும். உணர்வு பூர்வமான பதிவு.ஐயா, பாமரர் முதல் படித்தவர் வரை அவர் மேல் வைத்திருந்த அன்புதான் இப்படி வெளிப்பட்டுள்ளது. இப்படிப் பட்ட மனிதரை எப்படிக் காண்போம் இனி ?

    பதிலளிநீக்கு
  27. மாமனிதரை இழந்துவிட்டோம்... அவரின் பொன்மொழிகள் வார்த்தையிலிருந்து உதிர்ந்ததல்ல... அவரின் வாழ்க்கையின்று பிறந்தது... அதனால்தான் என்னவோ பட்டிதொட்டி எங்கும் மக்கள் மீளாத்துன்பத்தில் ஆழ்ந்தனர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலாமின் இழப்பு
      ஒவ்வொரு குடும்பத்தின் தனிப்பட்ட இழப்பாகும்
      நன்றி நண்பரே

      நீக்கு
  28. நல்ல ஒரு மனிதரை இழந்துவிட்டோம் கனவு மெய்ப்பட தொடர்ந்து உழைப்போம். நெகிழ்ச்சியான பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  29. Excellent way of presentation.Kalam had lived a full life with self demonstrative performances.He lived as he preached.In teaching a teacher must activate all the five senses of students.Kalam had done that not only for the student community but for the entire nation.He went into 360 rooms Rashtapathi Bhavan with two suit cases and while vacating he came out with the same two suit cases.Presidents in the past thoroughly ran sacked the Bhavan and a shamelfull president now demanding fuel for her personal vehicle.compare this with the flower bedded sand doune at Peikkarumbu of Ramesvaram
    well done Mr.Jayakunar.

    பதிலளிநீக்கு
  30. அவரின் கனவை நிறைவேற்றுவதே நாம்
    அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்/

    பதிலளிநீக்கு
  31. என்றும் மாணவ உள்ளங்களில் வாழும் மாமனிதர்
    சரியாகச்சொன்னீர்கள் அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதே பெருமை.

    பதிலளிநீக்கு
  32. பதிவு படித்து நெகிழ்ந்து விட்டேன் நண்பரே....
    த.ம.21

    பதிலளிநீக்கு
  33. என் இந்தியா
    என் இந்தியா
    என் இந்தியா
    என ஒரு துடிப்பு,
    மெல்ல, மெல்ல மெலேழும்பி வருவதை
    உணர முடிகிறது.

    ஆம் நண்பரே, உங்கள் பதிவை வாசித்தப் பிறகு இல்லை இல்லை சுவாசித்தப் பிறகு என்னாலும் உணர முடிகிறது.

    பதிலளிநீக்கு
  34. தாமதத்திற்கு மன்னிக்கவும் நெகிழ்வான நேரம் தங்களும் கலந்து கொ ண்டது சிறப்பே. அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்ற பெருமையாவது கிட்டிற்றே நமக்கு. மாணவ நெஞ்சங்களில் என்றும் வாழ்வார் இனி ! நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  35. சிறப்பானதொரு பதிவு..

    பதிலளிநீக்கு
  36. நேர்மையும் எளிமையும் நிறைந்த ஒரு மனிதர் உலக மக்களின் உள்ளங்களில் எப்படி இடம் பிடிப்பார் என்பதற்கு அய்யா அப்துல் கலாமே சாட்சி. நாம் நம் வாழ்வில் கண்ட உன்னத தலைவர். அவரை வணங்குகிறேன்.
    த ம 23

    பதிலளிநீக்கு
  37. நெகிழவைக்கும் பதிவு. நாங்கள் வாராக்குறையைத் தீர்த்துவைத்தது தங்கள் அனுபவப் பகிர்வு. நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  38. தாமதமாக உங்களது இந்த அழகிய பதிவிற்கு வருகை. மன்னிக்கவும் நண்பரே! இத்தகைய மேதகு ஒரு ஆசிரியரை இனி காண இயலுமா? விஞ்ஞானிதான், அறிவாளிதான், குடியரசுத் தலைவர்தான்..என்றாலும் இவற்றிற்கு எல்லாம் மேலான நல்ல மனித நேயம் மிக்க உயர்ந்த ஆசிரியர் அல்லவா அவர்! நம் எல்லோரது மனதிலும் மட்டுமல்லாது, பாமர மக்களின் இதயத்திலும் விதையை ஊன்றி இருக்கின்றாரே! ஆசிரியர்தானே! உன்னதமான ஆசிரியர்! எவ்வளவு கற்றுத் தந்திருக்கின்றார் இந்த சமுதாயத்திற்கு!
    நீங்கள் சென்று வந்தமை மிகவும் பெருமையாக இருக்கின்றது. வார்த்தைகள் இல்லை. நீங்கள் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் காணும் போது, விதை ஊன்றப்பட்டுவிட்டது அதுவும் ஆழமாக என்பது தெரிகின்றது. இன்றைய மாணவர்கள் நிச்சயமாக நல்ல விருஷமாக வருவார்கள் என்பது தெள்ளத் தெளிவு. நாமும் அந்தப்பணியை மேற்கொள்வோம்..கலாம் அவர்கள் விட்டுச்சென்றதை நாமும் தூவுவோம்...! நாளைய பாரதம் நல்லதோர் பாரதமாக, ஊழலற்ற ஒரு பாரதமாக, கல்வியில் மேன்மை பொருந்திய பாரதமாக உலக அரங்கில் தலை நிமிர்ந்து பட்டொளி வீசும் பாரதமாக மேன்மை பெறட்டும்.!

    அருமையான உணர்வு பூர்வமான பதிவு நண்பரே! சல்யூட்!

    பதிலளிநீக்கு
  39. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    மவுனமான புரட்சி என்ற வார்த்தைகளுக்கு என் வாழ்நாளில் முழு அர்த்தத்தை நம்முடைய இராமேஸ்வரம் சென்ற பயணத்தில் உணர்ந்து கொண்டேன். தமிழெகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் பாகுபாடு ஏதுமின்றி சுவரொட்டிகளும், ஃபிளக்ஸ்களும் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு அச்சகங்களில் அச்சிடப்பட்டன. ரொட்டிக் கடையில் வேலை பார்க்கும் ஏழு நல் உள்ளங்கள் தங்களுடைய முடியை காணிக்கை செலுத்தினார்கள். ஏழு இலட்சம் பேர் இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் இராமேஸ்வரம் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இத்தனை மக்கள் திரண்டிருந்தும் ’பாரத மாதா கீ ஜே ’ என்ற குரலோசைத் தவிர வேறொரு சத்தமில்லை. எங்கும் அமைதியான மனங்களுடன் மக்கள் வெள்ளம்.
    கிரிக்கெட் போட்டி நடைபெறும் நாட்களில் போட்டியை காண வீடுகளில் மக்கள் இருப்பதால் சென்னை உட்பட்ட நகரங்களில் கூட்ட நெரிசல் குறைவாக இருக்கும் நிலை நாம் அறிவோம். ஆனால் 30.07.2015 அன்று தமிழக நகரங்கள் அனைத்தும் (சென்னை ரங்கநாதன் தெரு உட்பட) வெறிச்சோடி கிடந்ததை அறிந்தபொழுது நம் மக்களின் மீதும் நினைவில் வாழ் முன்னாள் குடியரசுத் தலைவர் மீதும் பல மடங்கு மதிப்பு உயர்ந்தது. தங்களுடனும் நண்பர்கள் திரு.பா.கண்ணன், திரு.கா.பால்ராசு ஆகியோருடன் பயணித்த அந்த இரண்டு நாட்கள் என் வாழ் முழுவதும் ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மகிழுந்து ஓட்டிய என் சகோதரியின் மகன் திரு.தினேஷ்பாபு அவர்களின் பணியும் மறக்க முடியாததாக அமைந்தது.
    நாம் திரு,கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய நேரத்தில் 7 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் 400 மி.லி. காலியான குடிநீர் பாட்டிலில் சமாதி அருகே உள்ள மண்ணையும் பூவினையும் நிரப்பிய காட்சியை நாம் கண்டபொழுது நம் கண்கள் கலங்கியதை நம் கண்கள் அறியும்.
    இது போன்ற பல நிகழ்வுகள் தமிழகமெங்கும், இந்தியாவெங்கும், ஏன் உலகமெங்கும் நடந்தன. அனைத்தும் ஒருவருக்கே. ஏனெனில் அவர்தான் மனிதராக பிறந்து மனிதராகவே வாழ்ந்து மறைந்தவர், ஒரு விஞ்ஞானி என்றோ ஒரு கல்லூரியின் முதல்வர் என்றோ ஒரு பெரிய நாட்டின் விண்வெளி மையத்தின் தலைவர் என்றோ ஒரு முன்னாள் குடியரசுத் தலைவர் என்றோ மனதில் ஏற்றிக் கொள்ளாமல் அனைவருக்கும் அன்பு பாராட்டும் சக மனிதராகவே ஆசிரியர்களை மரியாதை செய்யும் மாண்புமிகு மாணவராகவே வாழ்ந்து உடல் துறந்து நம் மனதில் குடியேறிவிட்டார்.

    பதிலளிநீக்கு
  40. இந்தியா முழுவதும் ஒரு மனதாக அஞ்சலி செலுத்தியதில் இருந்து கலாம் அவர்களின் நல் உள்ளமும், அவரின் மங்காத புகழும் என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடியது என்பதை உலகே அறிந்து கொண்டது. என்றென்றும் அனைவர் மனதிலும் நிலைத்து நிற்பார்!

    பதிலளிநீக்கு
  41. அந்த ஆபூர்வமான மனிதர் போன்ற தலைவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தான் தோன்றுவார்கள் ....உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு