18 ஆகஸ்ட் 2015

உறை பனி உலகில்

    நண்பர்களே, வணக்கம். நலம்தானே.

     நாமெல்லாம் பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். அடுத்த ஊருக்குச் சென்றிருப்போம், அடுத்த மாநிலத்திற்குச் சென்றிருப்போம், நம்மில் சிலர் அடுத்த நாட்டிற்கும் சென்றிருப்போம்.

     நாம் மேற்கொண்ட பயணங்களின் எல்லை குறுகியது. காலமும் குறுகியது.

    ஆனால் இவரோ, கடலிலேயே 12,000 கிமீ பயணித்து, உலகின் தென் துருவமாம் அண்டார்டிகாவில், முழுதாய் 480 நாட்களைச் செலவிட்டிருக்கிறார்.

     நினைக்கும் போதே, உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்கின்றன அல்லவா?



உண்மையும், நேர்மையும்,
உடல் வலுவும், உள்ளத்து உறுதியும் மிக்க
இவர்தான்,
கர்னல் பா.கணேசன்.

      கர்னல் அவர்களைப் பற்றி இருமுறை வலைப் பூவில் எழுதியும் இருக்கிறேன்.

     நண்பர்களே, இவரை ஒரு முறை, ஒரே ஒரு முறை மட்டுமே, சன்னா நல்லூரில் சந்தித்து இருக்கின்றேன்.

     மடை திறந்த வெள்ளமாய், கொட்டும் அருவியாய் இவர் பேசிய பேச்சுக்களைக் கேட்ட பொழுது எனக்குள் ஒரு வியப்பு. வியப்பு மட்டுமல்ல, ஓர் சந்தேகமும் மெல்ல என்னுள் எட்டிப் பார்த்தது.
இவர் இராணுவ வீரரா
அல்லது
தமிழ்ப் பேராசிரியரா?

      ஆம். தேவாரத்தையும், திருவாசகத்தையும் தன் மூச்சு போல், நொடிக்கு ஒரு முறை உச்சரிக்கும் நற்றமிழ் மனத்தினர் இவர்.


தனது அண்டார்டிகா அனுபவங்களை,
வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்
என்னும் பெயரில், அழுகுத் தமிழில
ஓர் அற்புத நூலாக வெளியிட்டிருக்கிறார்.

இவர் ஒரு கைதேர்ந்த எழுத்தாளரும் ஆவார். சற்றேறக்குறைய பத்து நூல்களின் ஆசிரியர் இவர்.

     இந்நூலைப் படித்த நாள் முதலாய், என் நெஞ்சில் ஓர் ஏக்கம். இந்நூலினைப் பற்றி எழுத வேண்டும், எழுதியே ஆக வேண்டும் என மனதில் ஓர் ஏக்கம்.

     பிறகு ஓர் எண்ணம் மெல்ல, மெல்ல உதித்தது. நூலினைப் பற்றி எழுதுவதை விட, இந் நூலினையே, ஒரு குறுந் தொடராய், எழுதினால் என்ன என்று.

    என் விருப்பத்தை வெளியிட்டபோது, கர்னல் அவர்கள், சற்றும் தாமதியாது, அந்நொடியே தன் இசைவினையும் மகிழ்வோடு வழங்கினார்.

     கர்னல் அவர்களின் நூலின் பக்கங்களில் நுழைந்து, அவருடனேயே, அண்டார்டிகா நோக்கி, மீண்டும் ஓர் பயணத்தை, பயணித்துப் பார்ப்போமா நண்பர்களே.

வாருங்கள், நண்பர்களே வாருங்கள்
உறை பனியில் 480 நாட்கள்
இவர் வாழ்ந்த வாழ்க்கையை,
ஒரு சில நிமிடமேனும்
நாமும்
வாழ்ந்து பார்ப்போம்




உறை பனியில் உறைந்தவர்

ஆண்டு 1912. சனவரி 17. பிற்பகல் 3.00 மணி. உலகின் தென் துருவம். அண்டார்டிகா. எங்கு பார்த்தாலும் பனி, பனி, பனி. மிகப் பெரும் பனிப் பாலைவனம்.

    ராபர்ட் பால்கன் ஸ்காட். ஒரு ஆங்கிலேய கடற்படை அதிகாரி. தென் துருவத்தில் காலடி பதிக்கும் முதல் மனிதன் என்ற பெருமையினைப் பெற்றிட வேண்டும் என்பதற்காக, மேற்கொண்ட அயரா முயற்சியின் பயனாய், இதோ, தென் துருவத்தில் நிற்கிறார்.

    
ரால்ட் ஆமுண்ட்சன்
ஆனாலும் அவருக்கு முன்பே, நார்வே நாட்டின் தேசியக் கொடி அங்கு பறந்து கொண்டிருக்கிறது. ரால்ட் ஆமுண்டசன் என்பவர் ஏற்றிய கொடி, பனிக் காற்றில் படபடத்துக் கொண்டிருக்கிறது.

ராபர்ட் பால்கன் ஸ்காட் தன் குழுவினருடன்
முதல் மனிதராக இல்லாவிட்டால் என்ன? என் பயணம் வெற்றி. தன் நாட்டுக் கொடியை ஏற்றுகிறார். உடன் வந்த நால்வருடன் இணைந்து, ஐவருமாய் தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.

    அப்பொழுது மெதுவாக, மிக மெதுவாகத்தான் காற்று வீசத் தொடங்கியது. பனிக் காற்று. நேரம் செல்லச் செல்ல, பனிக்காற்றின் வேகமும் கூடியது. பனிக் காற்று பனிப் புயலாய் உருவெடுத்து, பெரும் வேகத்தோடு, தென் துருவத்தையே புரட்டிப் போட்டது.

    ஐவரும் பனிப் புயலில் மெல்ல மெல்ல முன்னேறி நடக்கத் தொடங்கினர். இன்னும் 67 கி.மீ தொலைவு பயணித்தாக வேண்டும்.

    பனிப் புயலில் தொடர்ந்து நடக்க இயலாத நிலை. கொண்டு வந்த உணவுப் பொருளோ, வேகமாய் தீர்ந்து கொண்டே இருக்கிறது. பனிப் புயலோ இவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கிறது.

   ஐவரில் ஒருவரான ஓட்ஸ் என்பார், தென் துருவத்தில் இருந்து புறப்பட்ட 21வது நாளில், பிப்ரவரி 18 இல் இறந்தே போனார்.

    பனியிலேயே அவரைப் புதைத்து விட்டு நடந்தனர். பனிப் புயலோ விட்டபாடில்லை. பல மாதங்கள் ஆனாலும் விடாமல் தொடரும் புயலாய் இப்புயல் மாறிப்போனது.

     ஈவன்ஸ் என்பார் ஓர் நாள் திடீரென்று மற்றவர்களை விட்டு விட்டு, பனிப் புயலினுள் தனித்து ஓடத் தொடங்கினார். தனது உடல் நிலை மோசமாகவே, மற்றவர்களுக்கு சுமையாய் மாறிவிடக் கூடாது, என்னும் எண்ணத்தில், பனிப் புயலினுள் ஓடிப் போய் தற்கொலையே செய்து கொண்டார்.

     மீதமிருப்பதோ மூவர். பனிப் புயலோ ஓய்ந்த பாடில்லை. உணவோ வேகமாய் குறைந்து, குறைந்து, கடைசியில் தீர்ந்தும் போய்விட்டது.

     இன்னும் 11 கி.மீ தொலைவு நடந்தால் போதும், உணவும், தங்குமிடமும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது. ஆனாலும் நடக்க இயலவில்லை.

     பசியின் கொடுமையால், கை கால்களைக் கூட அசைக்க இயலாத நிலை. மெல்ல மெல்ல இவர்களது உடல், தன் செயற்பாடுகளை, ஒவ்வொன்றாக நிறுத்தத் தொடங்கியது.

    தன் உடலில் மீதமுள்ள வலு அனைத்தையும் திரட்டி, ஸ்காட் தனது நாட் குறிப்பை பையில் இருந்து வெளியே எடுத்தார். எழுது கோலைத் திறந்து, நடுங்கும் கரங்களால், மெதுவாக மிக மெதுவாக எழுதத் தொடங்கினார்.


We shall stick it out to the end. but we are getting weaker.
Of course, and the end cannot be far.
It seems a pity, but I do not think I can write more.
Last entry
For God’s sake Look after our people.

என்னால் எதுவும் எழுத முடியவில்லை.
நாங்கள் பட்டினியால் இறக்கிறோம் என்பது எவ்வளவு வேதனை.
எங்கள் மக்களைக் காப்பாற்றுங்கள்.

   ஸ்காட் தனது நாட்குறிப்பில் எழுதிய நாள் மார்ச் 29, 1912. அன்றே மீதமிருந்த மூவரும் இறந்து போனார்கள்.
                                 ---

      ஆண்டு 1987. மே மாதம் 7 ஆம் நாள். ஜம்மு காஷ்மீர் இராணுவ முகாம். கர்னல் கணேசன் அவர்கள், அன்று வந்த அலுவலகக் கடிதங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    ஒரு சாதாரணத் தோற்றத்தில் ஓர் கடிதம். இராணுவத் தலைமையகத்தில் இருந்து வந்த கடிதம். பிரித்தார், படித்தார். படித்த அடுத்த நொடி பிரமித்தார்.

    ஒரே ஒரு பக்கக் கடிதம். ஆனால் எவ்வளவு பெரிய செய்தி. இக்கடிதம் தன் வாழ்வினையே புரட்டிப் போடும் செய்தியினை அல்லவா, சுமந்து வந்திருக்கிறது.

இந்தியத் தென் துருவ பயணக் குழுவின் துணைத் தலைவராகவும், தென் துருவ ஆராய்ச்சித் தளமாகிய, தக்ஷின் கங்கோத்ரியின் தலைவராகவும் கர்னல் கணேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார்.

தொடரும்.


62 கருத்துகள்:

  1. அருமை விறுவிறுப்பான தொடக்கம்.
    ஒரு சாதனைப் பயணம் பற்றிஅறிய ஆவல் தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  2. என்னுடன் ஹைதிராபாத்தில் எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றியவர் பாவாடை.ராமமூர்த்தியவர்கள்
    பின்னர் ஸ்டேட் வங்கியில் சேர்ந்து எ.ஜி எம் மாக ஓய்வு பெற்றார். சிறந்த எழுத்தாளர்ர் பெரியாரின் சீடர். "சங்கமித்ரா " என்ற பெயரில் "விடுதலை " யில் எழுதுவார் . அவருடய தம்பி பெயர் பா கணெசன். ராணுவத்தில் பணியாற்றியதாக நினைவு .அவர்தானா இவர் ? ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  3. படிக்கும் போதே உடம்பு சில்லிடுகிறதே :)

    பதிலளிநீக்கு
  4. தொடருங்கள்.

    ஆவலுடன் படிப்பேன்.

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே படிக்கப் படிக்க பிரமிப்பும், ஆச்சர்யமும், ஆனந்தமுமாய் இருக்கிறது தொடர்கிறேன்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. தொடருவேன்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. அருமையானத் தொடர்
    தொடர்வதில்மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம்
    வாழ்த்துக்களுடன்..

    பதிலளிநீக்கு
  8. நண்பர, விறுவிறுப்பான தொடக்கம். Sitting on edge of the seat suspense அது போல..

    பதிலளிநீக்கு
  9. கர்னல் கணேசனைப் பற்றி முன்பொரு பதிவில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தற்போது தொடர் எழுதுவதறிந்து மகிழ்ச்சி. கடிதத்தைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு

  10. உண்மையும், நேர்மையும்,
    உடல் வலுவும், உள்ளத்து உறுதியும் மிக்க தொடருக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான ஆரம்பம் நண்பரே!
    தொடருங்கள். சாதனை மற்றும் சாகச பயணத்தை அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்.
    தமிழ்மணத்தில் நுழைய 7

    பதிலளிநீக்கு
  12. தொடர்க!
    தொடருகிறோம்.

    தொடர்க!
    தொடருகிறோம்.
    நன்றி கரந்தையாரே!
    நட்புடன்,
    புதுவை வேலு
    த ம +

    பதிலளிநீக்கு
  13. அருமையான ஒரு கர்னல், எழுத்தாளரைப் பற்றி அறியத் தந்தீர்கள் ஐயா...
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  14. ஆஹா, உடல் வலிமையும் மனத்திண்மையும் சேர்ந்து நடத்திய ஒரு வாழ்க்கை நாடகம் தொடராய் மலரப் போகிறது. ரசிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. ரசனையின் தொடக்கம். தொடர்ந்து வாசிக்க ஆவலுடன் உள்ளேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா
      ஞானாலயா விழாவில் தங்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்வினை அளித்தது ஐயா

      நீக்கு
  16. தென் துருவம் பற்றிப் படிக்கும்போதே உடம்பு சிலிர்க்கின்றது..

    பதிலளிநீக்கு
  17. பா. கணேசன் பற்றி நீங்கள் முன்பு எழுதியதாக நினைவு. இல்லையா நண்பரே! இப்போது தொடராக..ஆஹா சில் சில் உறையவைக்கும் தொடர்...தொடர்கின்றோம்....ஆர்வத்துடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்னல் அவர்களைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கின்றேன் நண்பரே
      இத் தொடர் அவரது பயணத்தைப் ப்ற்றி
      நன்றி நண்பரே

      நீக்கு
  18. ஸ்காட்டுடன் பயணித்த உணர்வை தந்தது பதிவு! தொடர்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  19. மீண்டும் உங்கள் பதிவில் கர்னல் கணேசன். அவர் எழுதிய நூல் பற்றிய குறுந்தொடர், புதுமையான அறிவிப்பு. தொடர்ந்து வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ஆரம்பத்தில் சொன்ன, உறைபனியில் ராபர்ட் பால்கன் ஸ்காட் பட்ட துயரங்கள் ‘உண்மை மனிதனின் கதை’ என்ற ரஷ்ய நாவலை (உண்மை சம்பவம்) நினைவு படுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்டார்டிகா பயணம் பற்றிய கர்னல் அவர்களின் நூல் 200 பக்கங்களை உடையது ஐயா
      பல்வேறு தகவல்களை பக்கமெங்கும் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பார்
      அவர் எழுதிய நூலில் குறைந்தது ஒரு பத்து சதவீதத்தை மட்டுமே எழுத எண்ணியுள்ளேன் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  20. வணக்கம்
    ஐயா
    சாதனை மிக்க மனிதர் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா த.ம13

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  21. மிகவும் சிறப்பான பதிவு தொடருங்கள் தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  22. நார்வே பக்கத்து நாடாச்சே தோழர். நம்மாளு பயணித்த தூரம் அதிகமாச்சே

    பதிலளிநீக்கு
  23. உறைந்து போனேன்!!!ராபர்ட் பால்கன் மற்றும் ரால்ட் ஆமுண்டசன் பற்றிய தகவல் பிரம்மிக்க வைத்தது ....கர்னல் காவியம் தொடர்கிறேன் அய்யா.... நன்றி////

    பதிலளிநீக்கு
  24. பா.கணேசன் பற்றி தாங்கள் முன்பே பதிவிட்ட நினைவும் வந்ததது. சாதனையாளரை சந்தித்தீர்கள் அடடா அவர் சொற்பொழிவை வேறு கேட்டிருக்கிறீர்கள் இன்னும் சூப்பர்.
    தொடருங்கள் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. கர்னல் கணேசனையும் அவர் சாதனைகளையும் குறித்து ஏற்கெனவே படித்திருந்தாலும் உங்கள் கோணத்திலிருந்து படிக்கவும் ரசனையாகவே உள்ளது. தொடருங்கள், காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    கர்னல் திருமிகு.பா.கணேசன் அவர்களைப் பற்றிய தொடரின் ஆரம்பமே ஹாலிவுட் படத் துவக்க காட்சியினைப் போன்று அசத்தலாக இருக்கிறது. அடுத்த பதிவிற்கு ஏக்கத்தை ஏற்படுத்தியது அற்புதம்.

    பதிலளிநீக்கு
  27. நீங்கள் தொடர்வீர்கள்;நானும் தொடர்ந்தே ஆக வேண்டும்.அருமை

    பதிலளிநீக்கு
  28. அறிய ஆவல் தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  29. சிலிர்க்க வைக்கின்றன, கட்டுரையின் தகவல்கள்!

    'உறை பனி உலகில்' 2~ஆம் பகுதியை எதிர்பார்க்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  30. சிறப்பான தொடக்கம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  31. ஆகா! இதைப் படிக்கத் தாமதித்துவிட்டேனே
    தொடர்கிறேன் அண்ணா

    பதிலளிநீக்கு
  32. அப்பாடா படித்து முடித்தாச்சு வாக்கும் போட்டாச்சு இனி அடுத்தது

    நாளைக்கு வேலை இன்றே முடித்திடணும்
    எல்லாம்

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு