27 ஏப்ரல் 2017

மேதையின் வகுப்பறையில்



     ஆண்டு 1904.

     காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கும் எழில் மிகு கல்லூரி.

     கரை புரண்டு ஓடும் காவிரி

     கல்லூரிக்குச் செல்வதற்கு ஒரே வழி தோணி.

     தோணியில் மிதந்து பயணித்தால்தான், கல்லூரி மண்ணில் கால் பதிக்கலாம்.

      காவிரியில் தண்ணீர் இல்லாத காலம் எனில், சுட்டுப் பொசுக்கும் மணலில், கால்கள் நோக நோக நடந்தாக வேண்டும்.

      மொத்தத்தில் தண்ணீர் இருந்தாலும், இல்லாவிட்டாலும், கல்லூரியை அணுகவே, பெரு முயற்சி செய்தாக வேண்டும்.


      அப்படித்தான் படித்தார்கள், அக்காலத்தில்.

      ஆயினும் பெருமைமிகு கல்லூரி.

      தென்னகத்தின் கேம்ப்பிரிட்ஜ்.

       1854 ஆம் ஆண்டு, தஞ்சை ராணியார் வழங்கிய நிலத்தைக் கொண்டு, அதிலிருந்த கட்டடத்தில் தொடங்கப் பெற்றக் கல்லூரி.

       1871 இல் கட்டடங்கள் சீர் செய்யப் பெற்று, விரிவும் படுத்தப்பெற்றக் கல்லூரி.

       மையத்தில் ஓங்கி உயர்ந்து நிற்கும் ஒரு மணிக் கூண்டு.



       மணிக் கூண்டின், உச்சிக்குச் செல்ல, ஒரு சிறு வாயில்.

       குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும்.

       ஒரு மிகச் சிறிய வட்ட வடிவிலான, சுழன்று சுழன்று மேல செல்லும் படிகள்.

       தரைத் தளம் வரை நீண்டு தொங்கும் ஒரு பெரிய முறுக்குக் கயிறு.

      மணிக் கூண்டின் இருபுறமும் வகுப்பறைகள்.

      காவிரி ஆற்றைக் கடந்து, குளிர்ந்து வீசும், தென்றல் காற்றுத் தழுவும் வகுப்பறைகள்.

       வரிசை வரிசையாய் சிறிய அளவிலான, உத்திரங்களை அடுக்கி, அதன்மேல் பலகைகளைப் படுக்க வைத்து, அதற்கும் மேல், சிறிய சிறிய செங்கற்களை அடுக்கி, சுண்ணாம்புக் காரை கொண்டு பூசி, அமைக்கப்பட்ட, அந்தக் கால மேல் தளம்.

       எவ்வளவு வெயில் அடித்தாலும், குளிர்ச்சியை மட்டுமே, வகுப்பறைக்குள், வாரி வாரி வழங்கும் ஒட்டுக் கட்டடம்.

       வகுப்பறைகளை ஒட்டி, தென் புறமும், வட புறமும் நீண்டு செல்லும் வராண்டா,

       நடைப் பாதை

        வரிசை வரிசையாய் மரத் தூண்கள்.

     


மரத் தூண்களின் நடுவில் நாற்புறமும், கண்களைக் கவரும் சிற்பங்கள்.

      தூண்களில் மட்டுமல்ல, அண்ணாந்து பார்த்தால், பெரு உத்திரங்களிலும் சிற்பங்கள்.

       ரசித்து ரசித்து, செதுக்கிச் செதுக்கி உருவாக்கிய கட்டடம்.

       இக் கட்டடத்தினை, ஆற்றில் இருந்து நெருங்குவோமானால், மணிக் கூண்டிற்கு வலது புறம் உள்ள, முதல் அறைதான், அந்த மாணவரின் வகுப்பறை.

      F.A படிப்பிற்கான வகுப்பறை

      அக்காலத்தில் பி.ஏ., பி.எஸ்ஸி., எல்லாம் கிடையாது.

       F.A

       First Arts

      தமிழ், ஆங்கிலம், கணிதம், கிரேக்க ரோமானிய வரலாறு, அறிவியல் என அனைத்துப் பாடங்களையும் படித்தாக வேண்டும்.

     இம்மாணவனோ, வகுப்பறையின் கடைசி வரிசையில் அமைதியாய் அமர்ந்திருப்பான்.

     எந்த ஆசிரியர் வருகிறார், என்ன பாடம் நடத்துகிறார் என்பதை எல்லாம், ஒரு போதும், இம்மாணவன் கவனித்ததே இல்லை.

     மடியில் ஒரு கணிதப் புத்தகத்தை வைத்துக் கொண்டு, அதிலுள்ள கணக்குகளின் நினைவலைகளிலேயே மிதந்து கொண்டிருப்பான்.

     மனதிற்குப் பிடித்த ஒரே பாடம், கணிதம், கணிதம், கணிதம்.

     கணிதத்தைத் தவிர, மற்ற அனைத்துப் பாடங்களிலும், தோல்வி ஒன்றினையேத் தழுவிய, மாணவன் அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     நம் நாட்டுக் கல்வி அமைப்பால், படிக்காத மாணவன் என முத்திரைக் குத்தப்பெற்று, உதவித் தொகை நிறுத்தப்பெற்று, வகுப்பறையில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட, மேதை அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     தமிழ் நாட்டின் அறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று, ஒதுக்கிப் புறந் தள்ளிய மாமேதை அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     

படிக்க வழியின்றி, கல்லூரிக் கட்டணம் செலுத்தவும் வழியின்றி, கால் போன போக்கில் நடந்து, பசித்த வயிற்றுடன், கல்லூரியை விட்டு மட்டுமல்ல, வீட்டை விட்டே ஓடினாரல்லவா, ஒரு மேதை,  அம் மாமேதை அமர்ந்திருந்த வகுப்பறை இது.

     

       கல்லூரியின் பெயர்

      அரசுக் கலைக் கல்லூரி, கும்பகோணம்

      அம் மாணவரின் பெயர்

      

         இராமானுஜன்

       சீனிவாச இராமானுஜன்

       கணித மேதை சீனிவாச இராமானுஜன்

---

       கடந்த 21.4.2017 வெள்ளிக் கிழமை காலை 11.00 மணியளவில், நானும் நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களும்,

       அ ந் த   வ கு ப் ப றை யி னு ள்   நி ற் கி றோ ம்.

        உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்க்கின்றது.

        கணித மேதை சீனிவாச இராமானுஜன அமர்ந்திருந்த பெருமை மிகு வகுப்பறை.

         இன்று யாருக்கும் பயன்படாமல் பூட்டியே கிடக்கிறது.

------



சில நாட்களுக்கு முன்னர், முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களைச் சந்தித்தபோது, கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று, இராமானுஜன் படித்த வகுப்பறையினைப் பார்த்து வந்தேன். மிகவும் பழுதுபட்ட நிலையில் இருக்கிறது.

       வகுப்பறையினுள் சென்று பார்க்க இயலவில்லை.

       கூடிய விரைவில் சென்று பார்த்துவிடுங்கள். இல்லையேல் பார்க்க இயலாமலே போய்விடலாம் என்றார்.

       அன்று முதல், மனதில் ஒரு உந்துதல்.

       விரைவில் சென்று பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

       கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் கலைக் கல்லூரியில் பணியாற்றும், நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களிடம், கும்பகோணம் செல்ல வேண்டுமே என்றேன்.

       நாளையே போகலாமே என்றார்.

       நண்பர் திரு கே.பால்ராஜ், கரந்தைக் கலைக் கல்லூரியில், ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வருபவர்.

       தமிழ் நாடு தனியார் கல்லூரிகள் அலுவலர் சங்கத்தின் மண்டலப் பொருளாளர்.

         கல்லூரிக் கல்வித் துறையில், தஞ்சாவூர் மாவட்ட, இணை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும், கண்காணிப்பாளர் திரு செந்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.

        திரு செந்தில் அவர்கள், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் பர்சார்  திரு ஜெயகாந்தி அவர்களிடம் பேசி ஆவண செய்தார்.

       நானும், நண்பர் திரு கே.பால்ராஜ் அவர்களும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று திரு ஜெயகாந்தி அவர்களைச் சந்தித்தோம்.

        மகிழ்வோடு வரவேற்றார்.

      திரு ஜெயகாந்தி அவர்கள், அன்றுதான் பதவி உயர்வு பெற்று, பர்சார்  ஆக பொறுப்பேற்றுள்ளார் என்பதை அறிந்தோம். வாழ்த்துக்களைத் தெரிவித்தோம்.

        திரு ஜெயகாந்தி அவர்கள், எங்களுக்கு இனிப்பு வழங்கியதோடு, கணிதத் துறைத் தலைவர் அவர்களை, அலைபேசியில் அழைத்து, அறிமுகப் படுத்தினார்.

       கணிதத் துறைத் தலைவர், கணிதத்தில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வரும், ஆய்வு மாணவர் திரு குணசீலன் என்பவரிடம், கணித மேதை பாடம் பயின்ற, வகுப்பறையின் திறவுகோலைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
      

இதோ, கணித மேதை சற்றேறக்குறைய ஒரு வருடம் மாணவராய் அமர்ந்திருந்த வகுப்பறையில், நெஞ்சில் ஒருவித படபடப்போடு நிற்கின்றோம்.

      ஒரு நூற்றாண்டிற்கும் முன், பயன்பாட்டில் இருந்த மர இருக்கைகள்.

       ஒவ்வொரு இருக்கையாய் தொட்டுப் பார்க்கிறேன்.

       இதோ இந்த கடைசி வரிசையில்தான், இராமானுஜன் அமர்ந்திருக்க வேண்டும்.
      


இருவரும் மெல்ல அமர்ந்தோம்.

       இராமானுஜன் சுவாசித்தக் காற்று, இன்னும் இவ்வறையில் தேங்கி இருக்குமல்லவா?

       இராமானுஜன் சுவாசித்து வெளியிட்டக் காற்று, மெல்ல மெல்லத் தழுவுவதைப் போன்ற ஒரு உணர்வு.

       எத்தனை நாள் பசித்த வயிற்றுடன், ஒரு வேளை உணவிற்கும் வழியின்றி, தவித்துப் போய், இந்த இருக்கையில் அமர்ந்திருப்பார்.

       முப்பத்து இரண்டு ரூபாய் கட்டணம் கட்ட வழியின்றி, எத்துனை வேதனையோடு, இவ்வகுப்பறையினை விட்டு வெளியேறி இருப்பார்.

        நினைக்கவே நெஞ்சம் கலங்குகிறது.


மாணவராய், இந்தியக் கல்வி முறையுடன் போரிட்டுப் போரிட்டு, இராமானுஜன் தோற்றுப் போன போர்க் களம், இந்த வகுப்பறை.

       எனது மகன் கணிதத்தில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பாருங்கள், மிக மிக அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளான், அதற்காகவாவது, அவனுக்குக் கல்வி உதவித் தொகை தாருங்கள், என இராமானுஜனின் தாய் கோமளத்தம்மாள், கண்கள் கலங்க, அழுது மன்றாடித் தோற்றுப் போன இடம் இந்த வகுப்பறை.

        கோமளத்தம்மாளின் அழுகுரல், வகுப்பறை முழுவதும் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டே இருப்பதைப்  போன்ற ஒரு அதிர்வினைச் செவிகள் உணருகின்றன.




இராமானுஜனை ஓட ஓட, ஊரை விட்டே துரத்தி விட்ட வகுப்பறை, இன்று, இராமானுஜன் பயின்ற வகுப்பறை என்ற விளம்பரப் பலகையுடன், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறது.

        விசித்திரமான உலகம்.

         மெல்ல இருக்கையில் இருந்து எழுந்தோம்.

         வகுப்பறையின் முன் இருக்கையில், தடித்த அட்டையுடன் கூடிய நான்கு நோட்டுப் புத்தகங்கள்.






The Lost Note Books

இராமானுஜனின் தொலைந்து போன நோட்டுப் புத்தகங்கள்.

இராமானுஜனின் மறைவிற்குப் பின் கண்டு பிடிக்கப்பட்ட நோட்டுகள்.

     பள்ளிப் பருவத்தில் இருந்தே, தான் கண்டுபிடித்த கணக்குகளை, தேற்றங்களை, சூத்திரங்களை, இராமானுஜன் தன் கைப்பட எழுதி வைத்த நோட்டுகள்.

     நான்கு தொகுதிகள்.

     சென்னைப் பல்கலைக் கழகமோ, இந்திய அரசோ கூட, வெளியிட முன் வராத நிலையில், டாடா ஆராய்ச்சி நிறுவனம், தன் செலவில் வெளியிட்ட, இராமானுஜனின் தொலைந்து போன நோட்டு புத்தகங்கள்.

      பக்கத்துக்குப் பக்கம் இராமானுஜனின் அழகிய கையெழுத்து, எங்களைப் பார்த்துச் சிரித்தது.

       பக்கம் பக்கமாய்ப் புரட்டித் தடவிப் பார்த்தேன்.

        இராமானுஜன் உயிரோடு இருந்தவரை, இந்த வகுப்பறை மட்டமல்ல, தமிழ்நாடே, இராமானுஜனின்  அருமையினை, பெருமையினை, திறமையினை, அறியவோ உணரவோ முன் வரவேயில்லை.

        ஆங்கிலேயர்கள்தான் இராமானுஜனை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

        ஆனால்.

        இராமானுஜன் இறந்த பிறகும், கடல் கடந்து சென்று விட்டார், குல வழக்கத்தை மீறி விட்டார், என்று குற்றம் சுமத்தி, அவரின் சொந்த சமுகமே, அவரது இறுதிச் சடங்கினைக் கூட புறக்கணித்ததுதான் வேதனையிலும் வேதனை,

        

         கணிதத்தை மட்டுமே நேசித்து

         கணிதத்தை மட்டுமே சுவாசித்த
         மாமேதை
         காச நோயின் பிடியில் சிக்கி, எப்படி மெல்ல மெல்ல உருக்குலைந்தாரோ, அப்படியே, அவர் பயின்ற வகுப்றையும், மெல்ல மெல்ல சீர் குலைந்து வருகிறது.

          அவர் பயின்ற வகுப்பறை மட்டுமல்ல, அக் கட்டடம் முழுவதுமே, சிதிலமடைந்து வருகிறது.

          இராமானுஜனைத்தான் நம்மால் காப்பாற்ற இயலவில்லை.

          இராமானுஜன் பயின்ற வகுப்பறையினைக் கூடவா நம்மால் காப்பாற்ற முடியாது.

          வேதனையோடு வெளியே வந்தோம்.



     


       

29 கருத்துகள்:

  1. கணித மேதையோடு பேசிக் கதைத்த அனுபவத்தையும் கல்லூரி பருவ நினைவுகளையும் கண்முன்னே நிறுத்தியுள்ளீர். அருமையான பதிவு ஐயா

    பதிலளிநீக்கு
  2. இராமானுஜன்...பிறப்பிலிருந்து இறப்பு வரை நடந்த முக்கிய செய்திகளை தந்த விதம் அருமை !

    3௦௦வது பதிவுக்கு வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு
  3. படிக்க படிக்க வேதனையாக இருக்கிறது நண்பரே விசித்திரமான உலகம்தான்

    த.ம. செல்லில் இடமுடியவில்லை

    பதிலளிநீக்கு
  4. மாமனிதர் இராமானுஜம் அவர்கள் மேல் சாதி என்பதால் இன்றைய அரசியலும் புறக்கணித்ததுவோ?..

    அவர் பயின்ற வகுப்பறையின் மீது கூடவா காழ்ப்புணர்வு?..

    மனம் வேதனையடைகின்றது..

    பதிலளிநீக்கு
  5. கணித மேதையின் வகுப்பில் நீங்கள். படிக்கும்போதே மனதுக்குள் மகிழ்ச்சி....

    300-வது பதிவு. ஒவ்வொன்றுமே சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. கணிதமேதை சீனிவாச இராமானுசம் அவர்கள் கணிதம் பயின்ற் கும்பகோணம் கல்லூரி வகுப்பறையையும் அவரது தாயாரின் நெஞ்சை உருக்கும் வேண்டுகோளையும் ஒளிப்படங்களோடு பதிவிட்டுள்ள பாங்கிற்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. மிக மிக அருமையான மாமேதை பற்றிய அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  8. அந்தக் காலத்தில் பீஏ பிஎஸ்ஸி எல்லாம் கிடையாது FA Fine arts . அந்தக் காலத்தில் பீஏ இருந்தது என் தந்தை படித்தது பிஏ. பள்ளி இறுதிப் படிப்பு முடிந்ததும் faculty of arts எனும் எஃப் ஏ இருந்தது அதன் பின்னர் இண்டெர்மீடியட் எனும் இரண்டாண்டு படிப்பு வந்தது இவை எல்லாம் இன்றைய பியு சியின் முன்னோடிகள்

    பதிலளிநீக்கு
  9. மேலே அதற்கு பின்னர் அதற்குப் பதிலாக இண்டர் மீடியட் என்னும் இரண்டாண்டு படிப்பு வந்தது என்ற் இருந்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  10. மாமேதையின் வகுப்பறையை நேரில் கண்ட உணர்வு.

    300 - வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. முதலில் 300 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முத்துக்கள் அரிதாகவே கிடைக்கும். உங்கள் ஒவ்வொரு பதிவும் ஓர் முத்து. ராமானுஜம் குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி. ஏற்கெனவே அறிந்தவை எனினும் கல்லூரியின் படங்களோடு பார்த்ததில்லை. நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அறியாத தகவல்கள் கும்பகோணம் கலைக்கல்லூரி பற்றிய பகிர்வு.

    பதிலளிநீக்கு
  13. மனம்க சியவைத்த கட்டுரை. அடியேன் 7 ஆண்டுகள் சுற்றிச்சுற்றிவந்த வகுப்பறைகள். தியாகராச செட்டியார், தமிழ்த்தாத்தா நினைவுகளும் சேர்ந்து. ஜெயக்குமார் கொடை வளர்க.

    பதிலளிநீக்கு
  14. உலகறிய செய்தமைக்கு கோடானுகோடி நன்றிகள்...
    மரியாதைக்குரிய ஐயா,
    வணக்கம்.தங்களது பணியில் இந்தப்பதிவு மிக மிக உச்சத்தில் கொண்டு சேர்க்கிறது.ராமானுஜன் என்ற மாமேதையின் வரலாற்றினை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.நவீன வசதிகளைப்பெற்றுள்ள இன்றைய காலத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் அறிய வேண்டிய பதிவுங்க..

    பதிலளிநீக்கு
  15. நண்பரே, நானும் விரைவில் சென்று அந்த மாமேதை பயின்ற வகுப்பறையை கண்டு வருகின்றேன். தங்களின் இந்தக் கட்டுரை என்னை அழ வைத்துவிட்டது. பொதுவாகவே இந்த தமிழ் சமூகம், உயிரோடு இருக்கும்வரை அறிவார்ந்த சான்றோரை கண்டு கொள்ளவே மறுக்கிறது. நாம் நல்லோரையும் சாதனையாளரையும் அடையாளம் கண்டு போற்றுவோம். மாமேதைக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். நல்லதொரு பதிவினை வழங்கிய என் இனிய நண்பராகிய தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    நட்பின் வழியில்
    சோலச்சி
    புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  16. நண்பரே, நானும் விரைவில் சென்று அந்த மாமேதை பயின்ற வகுப்பறையை கண்டு வருகின்றேன். தங்களின் இந்தக் கட்டுரை என்னை அழ வைத்துவிட்டது. பொதுவாகவே இந்த தமிழ் சமூகம், உயிரோடு இருக்கும்வரை அறிவார்ந்த சான்றோரை கண்டு கொள்ளவே மறுக்கிறது. நாம் நல்லோரையும் சாதனையாளரையும் அடையாளம் கண்டு போற்றுவோம். மாமேதைக்கு என் வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன். நல்லதொரு பதிவினை வழங்கிய என் இனிய நண்பராகிய தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    நட்பின் வழியில்
    சோலச்சி
    புதுக்கோட்டை

    பதிலளிநீக்கு
  17. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பார்கள். சிங்கம் போன்ற எழுத்தாளர்களும் சற்றே குறைந்த எண்ணிக்கையில்தானே எழுதுவார்கள்! முன்னூறு என்பது நல்ல எண்ணிக்கையே. மொக்கைப் பதிவுகள் எழுதினால் சீக்கிரம் அதிக எண்ணிக்கையை அடைந்து விடமுடியும். அதுவா முக்கியம்! Content is King - என்பதுதான் இணையத்தின் சட்டம். அந்த சட்டப்படி நீங்கள் அதிகமாகவே பணியாற்றி இருக்கிறீர்கள். மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள்!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  18. தாய் கோமளவள்ளியின் அழுகுரல் ....ஏதோ செய்கிறது நம்மை.
    நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு
  19. நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்,
    பொதுவாகவே ஒன்று சொல்கிறார்கள்,
    முதல் பெஞ்ச் மாணவன் பாடத்தைப்படிக்கிறான்,
    கடை பெஞ்ச் மாணவன் வாழ்க்கையை கற்கிறான் என,
    அதுபோலவே புந்தள்ளபட்டவரின் மனோ நிலை
    எப்பொழுதுமே முன் வருவதைப்பற்றியே
    யோசிக்கும் என்பார்கள்.அதை மெய்பிக்கிற பதிவு,

    பதிலளிநீக்கு
  20. 300 வது பதிவு இன்னும் 3000 த்தை எட்ட வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. 300-வது பதிவு , வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  22. வணக்கம்.

    முதலில் தங்களின் 300 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்.

    இந்தப் பதிவை வெளியிட்டபோதே அலைபேசியில் படித்துவிட்டேன்.

    அதானல் கருத்திட முடியவில்லை.

    தமிழ் எழுத்துலகில் வசீகர எழுத்து கைவரப் பெற்றவருள் நீங்கள் ஒருவர் என்று ஓரளவு தமிழ் நூல்களை வாசிக்கிறவன் என்ற முறையில் என்னால் துணிந்து கூற முடியும்.

    உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.

    விரும்பித் தொடர்கிறேன் ஐயா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  23. 300வது பதிவிற்கு வாழ்த்துகள்
    சோகமான பதிவு..
    நல்ல தகவல்கள் நன்றி
    தமிழ் மணம் - 6
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    ஐயா
    அறியாத தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா படித்த போது மனம் கலங்கியது
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு