07 செப்டம்பர் 2015

உறை பனி உலகில் 7


பனியில் புதைந்தவர்



  நண்பர்களே, சம தளத்தில் நாம் நடக்கும் பொழுது, கண்களை மூடிக் கொண்டே நடப்போமேயானால், நமது பயணம் நிச்சயமாக ஒரே நேர்க்கோட்டில் அமையாது. சற்றே இடது புறமோ அல்லது வலது புறமோ நகர்ந்திருப்போம்.

      சாலைகளோ, அறிவிப்புப் பலகைகளோ இல்லாத, அண்டார்டிகாவில் நடக்கும் பொழுது, சிறிது வழி மாறினாலும், நம் கதி அதோ கதிதான்.


      

தக்ஷின் கங்கோத்ரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, கர்னல் அவர்கள், தம் குழுவினர் ஒவ்வொருவரையும், கண்களைக் கட்டிக் கொண்டு நடக்கச் சொன்னார். நடக்கச் செய்து சுமார் 100 அடி தூரத்திலேயே, அவர்கள் தங்கள், நேர் பாதையினை விட்டு, எவ்வளவு தூரம் விலகுகிறார்கள் என்பதை உணரச் செய்தார்.

       ஆறு மாதங்கள் இருளில் மூழ்கிக் கிடக்கும் பகுதியில் அல்லவா இனி குடியிருந்தாக வேண்டும். எனவே இது ஒரு முக்கியப் பயிற்சி ஆகும்.

      ஆய்வுத் தளத்திற்கு வெளியே இருக்கும் பொழுது, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், பாதை தெரியாது. அச்சமயங்களில், நாம் நேராகத்தான் நடக்கிறோம் என்று எண்ணி நடக்கத் தொடங்கினால், முற்றிலும் மாறுபட்ட திசையில் பயணித்து, ஆபத்துடன் கை குலுக்க வேண்டிய சூழல் உருவாகும்.

      எனவே, பனிக் காற்றில் சிக்கிக் கொண்டால், நடக்கவே வேண்டாம். அங்கேயே உட்கார்ந்து விடுங்கள். பனிக் காற்றில், கொட்டும் பனியில் முழுவதுமான் மூழ்கிப் போகா வண்ணம், அவ்வப்போது இடம் மாறி அமர வேண்டும் என்பதே, கர்னல் அவர்கள், தன் குழுவினருக்கு அளித்த பயிற்சி ஆகும்.


செப்டம்பர் 15ஆம் தேதி அண்டார்டிகாவில் பனிப் புயல் ஆரம்பமானது. நாட்கள் பல கடந்தும் ஓய்வதாகத் தெரியவில்லை.
     

இந்நிலையில்தான், செப்டம்பர் 19 ஆம் நாள், சுதாகர் ராவ் காணாமல் போனார்.

         தகவல் அறிந்த கர்னல், அனைவரையும் ஒன்று கூட்டினார்.

         என் குழு உறுப்பினர்களைக் காப்பது என் பொறுப்பு. நானே செல்கிறேன். பனிப் புயலுள் நுழைந்து தேடுகிறேன் எனக் கிளம்பினார்.
      

  மற்றவர்கள் தடுக்கவே, உறுப்பினர்களிலேயே திருமணமாகாத இளைஞரான ஸ்ரீகுமார் என்பாரை உடன் அழைத்துக் கொண்டார்.

       மருத்துவ முதலுதவிக்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு வேளை சுதாகர் ராவ் அவர்களைத் தேடச் செல்லும் இருவருமே திரும்பி வராவிட்டால், குழுவினை வழி நடத்த, தலைமையேற்க வேண்டியவர் யார் என்பதையும் அறிவித்து விட்டுப் புறப்பட்டார்.

         கதவுகளைத் திறப்பது என்பது இயலாது. காரணம் ஆய்வுத் தளமே பனிக்குள் புதைந்திருந்தது. புகைப் போக்கியைத் தவிர வேறு வழியில்லை.

      இருவரும் ஏணியில் ஏறி, வெளிப்புற ஏணி வழியே இறங்கினார்கள்.

     ஒரு மிகப் பெரிய நைலான் கயிற்றில் தன்னையும், சிறிது இடைவெளி விட்டு ஸ்ரீகுமாரையும் பிணைத்துக் கொண்டார். கயிற்றின் மறு முனையை வெளிப் புற ஏணியில் கட்டினார்.


தன்னிடம் இருந்த கயிற்றை கொஞ்சம் கொஞ்சமாகத் தளர விட்டுக் கொண்டே, ஒவ்வொரு இடமாக, பனியில் தடவிக் கொண்டே இருவரும் நகர்ந்தார்கள்.

        பனிப் புயலின் வேகத்தில் கண்களைக் கூட முழுதாய் திறக்க இயலாத நிலை. 30 நிமிடத் தேடலுக்குப் பின், காலடியில், மிருதுவாய் ஏதோ இடிபட்டது.
                
                                                           தொடரும்